ஞாயிறு, 19 மார்ச், 2023

சங்கீதம் 6

 



இது தாவீதால் எழுதப்பட்ட ஒரு சங்கீதம். இது எப்போது எழுதப்பட்டது எனும் குறிப்பு இல்லை. இது அப்சலோமின் கிளர்ச்சியின் போது ஒரு வேளை இயற்றப்பட்டிருக்கலாம். இந்த சங்கீதம் எழுதப்பட்ட காலத்தில், தாவீது வயது முதிர்ந்தவராகவும், நோய்வாய்ப்பட்டவராகவும், ராஜ்யத்தின் அனைத்து சிக்கலான பொறுப்புகளையும் நேரிடையாக கையாள முடியாத கடினமான சூழலிலிருந்தார் எனத் தெரிகிறது. 

அந்த காலங்களில் ''அப்சலோமின் சாதுரியமான பேச்சுக்கள்'' இஸ்ரவேலர்களின் இதயங்களைக் கவரும் வகையிலிருந்தது. ஒரு ஆட்சித் தலைவராக, தாவிது தோல்வியடைந்த சூழல் நிலவியது (2 சாமு. 15:1-6). ஆகவே இந்த சங்கீதம் தாவீதுடைய ஆட்சியின் இறுதிக் காலத்தின் போது எழுதப்பட்டிருக்கக் கூடும். அப்போது அவர் எதிரிகளால் சூழப்பட்டிருந்தார். அத்துடன் நோய்வாய்ப்பட்டு சுகவீனத்துடனும் இருந்தார்.

"என் எலும்புகள் நடுங்குகிறது. என் ஆத்துமா வியாகுலப்படுகிறது," எனும் வசனத்தை வாசிக்கும் போது, அவரது வேதனை நிறைந்த சூழல் வெளிப்படுகிறது. அவர் கர்த்தரின் கருணைக்காகக் கதறுகிறார். உறுதியாக மரணத்தை எதிர்கொள்ளப் போகிறோம் எனும் மனநிலையிலிருந்தார். இந்த சங்கீதத்தில் 'மரணம்', 'பாதாளம்' எனும் வார்த்தைகளை தாவீது உருவகங்களாகப் பயன்படுத்தப்படவில்லை (வ. 5). அவரது உண்மையான சொந்த அனுபவத்தையே சொல்கிறார். 

நெகினோத் என்றால் "கம்பிகள் கொண்ட இசைக் கருவிகள்" ஆகும். ஷெமினித் என்றால் "எட்டாவது" என்றும் பொருள்படும். இது இசைக்கப்படும் கருவியின் கம்பிகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாக இருக்கலாம். சங்கீதம் 12ன் தலைப்பிலும் ''ஷெமினித்தென்னும் எண்ணகரம்'' எனும் குறிப்பைக் காணலாம். இது ஒரு வழக்கமான மெல்லிசையின் குறிப்பாகவோ, அல்லது ஆண்களின் தாழ்ந்த குரலிசை (Lower Octave) ஆகவும் இருக்கக் கூடும் (1 நாளா. 15:21).

இந்த சங்கீதம் ஆண்டவரிடம் பாவ அறிக்கை செய்து, ஒப்புரவாகும் ''தபசு கால சங்கீதம் (Penitential Psalms)" என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விதம் ஏழு சங்கீதங்கள் உள்ளது (சங். 6, 32, 38, 51, 102, 130, 143). 

இவற்றின் மையக் கருத்து; ''ஆண்டவர், தமது பிள்ளைகள் வாழ்க்கை ஒழுங்கு படுத்தப்பட விரும்புகிறார்''. அதன் பொருட்டு, அவர்கள் சில துயரமான சூழல்களைக் கடந்து செல்லவும், வேதனைகளை அனுபவிக்குப்படியாகவும்  அனுமதி அளிக்கிறார். இந்த சங்கீதங்களைத் தியானிப்பதன் வழியாக, நம் பாவங்களை அறிக்கையிட்டு, இறைவனிடம் நெருங்கிச் சேர இயலும். 

கடினமான சூழலிலிருந்து விடுபட்டு, அமைதியை நோக்கி, விசுவாசத்துடன், முன்னேறும் கடினமான படி நிலைகளை, தமது சொந்த அனுபவத்திலிருந்து இந்த சங்கீதத்தில் தாவீது வெளிப்படுத்துகிறார்.

சிட்சை (வ. 1–3):

தாவீது ''கர்த்தாவே'' (யெகோவா), எனும் ஆண்டவரது உடன்படிக்கையின் பெயரை, எட்டு முறை சொல்லி அழைக்கிறார்.

இதன் முதல் வசனத்தை, தாவீது சங். 38:1ல் மீண்டும் நினைவு கூறுவதைக் காணலாம். எரேமியாவும் இதே விதமாக, ''கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்'' என ஜெபிப்பதை வாசிக்கலாம் (எரே. 10:24 ). 

சிட்சை என்பது, ஒரு நீதிபதி கோபத்தால் நிறைந்து வழங்கும் தண்டனை போன்றது கிடையாது, மாறாக, அது அன்பு நிறைந்த ஒரு தகப்பன், தனது பிள்ளைகள், ஒழுக்கத்துடன் வாழவும், அவர்கள் முதிர்ச்சியடைவதற்கு  உதவும் படியாகவும், அளிக்கும்  சிறந்ததொரு பயிற்சி (வெளி. 3:19). பொதுவாகப் பெற்றோர்கள் தங்களது கீழ்ப்படியாத பிள்ளைகளைத் தண்டிக்கின்றனர். பிறகு அவர்களை எச்சரித்து வழி நடத்துகின்றனர். கர்த்தரும் தமது பிள்ளைகள் வழி தவறி நடக்கும் போது இடைப்படுகிறார். அவர்கள் வாழ்வில், துயரமான சூழலை அனுமதிக்கிறார். அதன் வழியாக அவர்களைக் கண்டித்து உணர்த்தி சீர் செய்கிறார் (எபி. 12:5-6; நீதி. 3:11-12). சில சமயங்களில், நாம் எதிர் கொள்ள இருக்கும் கடினமான சூழல்களுக்கு தயார்ப்படுத்தவும், கர்த்தர் நம்மைப் பயிற்றுவிக்கிறார். இது ஒரு விளையாட்டு வீரரைப் பந்தயத்தில் வெற்றி பெறத் தகுதி அளிக்கும் பயிற்சி போன்றது.

தாவீது, கர்த்தர் தன் மீது கோபமாக இருப்பதாக நினைத்தார். ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டிய தேவையில்லை. உண்மையில் அவர் எதிரிகள் (வச. 7, 10), மற்றும் தீயவர்களால் (வச. 8) சூழப்பட்டிருந்தார். அவரது உடல் நோயுற்று பலவீனமாக இருந்தது. ஆன்மாவில் கலங்கித் தவித்தார். இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளும்போது, ​​கர்த்தர் தன்னை கைவிட்டதாக அவர்  உணர்ந்த காரணத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். கர்த்தர் தனது முதுகை  இலக்காக வைத்து அம்பை எய்தது போல எண்ணினார்.

"பெலனற்று, வியாகுலம், கலங்கிய" என்று பொருள்படும் "Bahal" எனும் எபிரேய வார்த்தையை தாவீது மூன்று முறை பயன்படுத்தினார் (வ. 2, 3, 10). இது King James version-ல்  "Vex" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில், ''Vex'' என்கிற வார்த்தை இன்று இருப்பதை விட மிகவும் ஆழமான பொருள் நிறைந்ததாக இருந்தது. பழைய ஏற்பாட்டினை  கிரேக்க மொழியில் மொழிபெயர்த்தவர்கள் ''Taraso'' எனும் கிரேக்க வார்த்தையை இதற்குப் பயன்படுத்தினர். இது யோவான் 12:27 இல் "இப்போது என் ஆத்துமா கலங்குகிறது" என எழுதப்பட்டுள்ளது. இதே வார்த்தை ''மரணத்துக்கேதுவான துக்கம்'', எனவும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது (மத். 26:38; மாற். 14:34). 

இது ஒருவர் தனது தகுதிக்கும் மிஞ்சி அனுபவித்துக் கொண்டிருக்கும் வலியை உணர்த்தும் சொல். ஆனாலும், அந்த வேதனையைத் தாங்குவதற்குத் தேவையான பலத்திற்காக, இரக்கம் மிகுந்த கர்த்தரை நோக்கி  மன்றாடினார் (சங். 103:13-14). கர்த்தர் தமக்கு விரைவாக உதவும்படி வேண்டினார். அதற்கு அவர் மிகவும் தகுதியானவர்.

“எது வரைக்கும் ஆண்டவரே?” என்கிற வேதனை மிகுந்த கேள்வி சங்கீதத்தில் 16 முறை திரும்பத் திரும்பக் கேட்கப்படுகிறது (6:3; 13:1-2; 35:17; 62:3; 74:9-10; 79:5; 80:4; 82:2; 89:46; 90:13; 94:3). இந்த கேள்விக்கான பதில், "நான் கற்றுக் கொடுக்க விரும்பும் பாடத்தை நீங்கள் கற்றுக் கொள்ளும் வரை'' எனலாம். ''நான் உங்களை ஒழுங்கு படுத்துவேன்; அது நீங்கள் செய்ய வேண்டிய வேலைக்கு, உங்களைத் தகுதிப்படுத்தும்'' எனக் கர்த்தர் சொல்கிறார்.

கர்த்தர் நம்மை ஒழுங்கு படுத்தும் போது; ​​நாம் அதை வெறுக்க முடியும், எதிர்க்கலாம், அவர் சமூகத்தை விட்டு விலகி ஓடலாம், அல்லது அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியலாம். கர்த்தர் விரும்புவது முழுமையான சமர்ப்பணத்தையே.

பாதாளத்தின் பயனற்ற தன்மை (வ. 4–5):

கர்த்தர் தமது முகத்தைத் திருப்பி, தன்னைக் கைவிட்டது போலத் தாவீது  உணர்ந்தார். ஆகவே அவர் ஆண்டவரை நோக்கி, ''திரும்பும் கர்த்தாவே'' என  ஜெபித்தார் (வ. 4). 

அவர் தேவனது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார். ஒவ்வொரு யூதரும், கர்த்தர் "இரக்கமுள்ளவர், கிருபையுள்ளவர்" என்பதை அறிந்திருந்தார்கள் (யாத். 34:6-7). ஆகவே தனக்கு இரங்கி, மரணத்திலிருந்து தன்னை  காப்பாற்றும்படியாக  ஜெபித்தார். 

மேலும் தாவீது, தன்னை மரணமடைய ஒப்புக் கொடுப்பதன் மூலம் என்ன லாபம்? என கர்த்தரை வினவினார் (சங். 30:8; 88:10-12.) எசேக்கியா ராஜாவும், மரணத்திலிருந்து விடுதலைக்காக ஜெபித்தபோது, இதேவிதமான அணுகுமுறையைப் பயன்படுத்தினார் (ஏசா. 38:18-19). 

5வது வசனத்தில் சொல்லப்படும் ''பாதாளம்'' என்பது, "கல்லறை'' அல்லது ''இறந்தவர்கள் வசிக்கும் இடம்" இதைக் குறிப்பிடுகிறது. இங்கு பிந்தைய பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றிய தெளிவான வெளிப்பாடு பழைய ஏற்பாட்டுக் காலங்களில், மக்களுக்கு உறுதியாக வெளிப்படுத்தப் படவில்லை (2 தீமோ. 1:10). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட  உயிர்த்தெழுதலின் உபதேசம் அப்போது தீர்க்கமாக இல்லை. இருப்பினும் மரணத்திற்குப் பின்னர், தம் மக்களுக்காக, கர்த்தர் ஆயத்தம் செய்து வைத்திருக்கிறதைக் குறித்து சில மங்கலான வெளிப்பாடுகள் வேதத்தில் உள்ளன (சங். 16:9-11; 17:15; 49:14-15). மரித்த ஒரு மனிதனால், ஆண்டவரைப் போற்றவோ அல்லது அவருக்குச் சேவை செய்யவோ முடியாது என்பதே அப்போதைய வெளிப்பாடு. ஆகவே தாவீது தனது ஆவி பாதாளத்தில், இறைவனுக்காக என்ன செய்ய முடியும்? என்று கேட்டார். கர்த்தர் அவரை விடுவித்து வாழ வைப்பதே நன்மையானது. தாவிது செய்ய வேண்டிய பணிகள் பல இன்னமும் உள்ளது.

விரக்தி (வ. 5–7):

நாம் ஒரு காலை சங்கீதத்திலிருந்து (3:5), மாலை சங்கீதத்திற்கும் (4:8), பின்னர் மீண்டும் ஒரு காலை சங்கீதத்திற்கும் (5:3) சென்று வந்தோம். இப்போது மறுபடியுமாக, மற்றொரு மாலை சங்கீதம் (6:6). 

ஆனால் முந்தைய சங்கீதங்களில், கர்த்தர் தாவீதுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுத்தார். மன அமைதியும் இருந்தது. ஆனால் இங்கே, ராஜா பயத்தினாலும், வலியினாலும் தூங்காமல் கண்ணீருடன் இருப்பதைக் காண்கிறோம்.  அவர் பெருமூச்சுடன் முனகுவதும், தவிப்பதும், ஏக்கத்துடன் களைத்துப்போய் அழுது கொண்டே படுக்கையில் வெகுநேரம் கழிப்பதுமாக இருக்கிறார். "நான் என் படுக்கையில் தலையணையைக் கண்ணீரால் நனைக்கிறேன்" (வ. 6, சங். 38:9-10). 

நோயிலிருந்து குணமடையத் தூக்கம் மிக முக்கியமானது (யோவான் 11:11-12). ஆனாலும் தாவீதிற்கு துன்பத்தால் தூக்கம் போனது. தூக்கமின்மை அவரது உடல் நிலைமையை மேலும் மோசமாக்கியது. தாவீதின் பலவீனமான உடல் நிலை, அவரது கண்களின் குழி விழுந்த தன்மையால் வெளிப்பட்டது (வ. 7; 1 சாமு. 14:27, 29). நம் கண்களைப் பார்த்து, நம் உடலின் ஆரோக்கிய நிலையைப் பற்றி மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியும் என்பது ஆச்சரியமானது.

ஒரு தெய்வீக ஆன்மீகத் தலைவர் இப்படிக் கூறினார்; "கிறிஸ்தவர்கள் தாங்கள் அனுபவிக்கும் வலி, வேதனை மற்றும் நோய், அவர்களைக் கர்த்தரிடம் நெருக்கமாகக் கொண்டு வந்ததாகச் சொல்கின்றனர். ஆனால் என் விஷயத்தில் அது எப்போதும் நடக்காது." இந்த வார்த்தை என்னை ஊக்கப்படுத்தியது! 

என்னுடைய சொந்த அனுபவம் மற்றும் சபை ஊழியப் பணியிலிருந்தும், நோய், வேதனை, வலி இவை ஒன்று நம்மைக் கர்த்தரிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும், அதே சமயம் அவரை விட்டு விலகிப் போகவும் வைக்கும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். கர்த்தரிடம் வைக்கும் விசுவாசம் தான் இதைத் தீர்மானிக்கிறது. 

நாம் தேவனிடத்திற்கு மனம் திரும்பி, அவரை நோக்கி ஜெபித்து, அவருடைய வாக்குத்தத்தங்களை நினைவு கூர்ந்து, அவரை விசுவாசித்தால், அப்போது அவருடைய கிருபை நம்முடைய தேவைகளுக்குப் போதுமானதாக இருப்பதைக் காண்போம் (2 கொரி. 12:9). கர்த்தர் நாம் கேட்பதை, நாம் விரும்பும் போது செய்யாமல் இருக்கலாம். ஆனால், அவர் நமக்கு எது தேவையோ அதைச் செய்து, நாம்  அவருடைய நாமத்தை மகிமைப்படுத்த உதவுவார். 

நாம் கேட்க வேண்டிய கேள்வி எல்லாம், "ஆண்டவரே, நான் எப்போது இந்த துயர சூழலிருந்து வெளியேறுவேன்?" என்பதல்ல, "ஆண்டவரே, இந்த சூழலிருந்து நான் எதைக் கற்றுக் கொள்ள முடியும்?" என்பதே.

விடுதலை தரும் மகிழ்ச்சி (வ. 8–10):

இந்த இறுதிப் பகுதியில், திடீரென துன்பத்திலிருந்து மகிழ்ச்சிக்கு ஒரு ஆச்சரியமான மாற்றம் நிகழ்கிறது. மற்ற சங்கீதங்களிலும் இது போல் ஒரு திடீர் மாற்றம் காணப்படுகிறது (22:22; 56:10; 69:30). தாவீது ஜெபித்த சில காலத்திற்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டதா அல்லது உடனடியாக ஏற்பட்டதா என்பது முக்கியமல்ல. ஆனால் அவர் தனது உடலில் குணமடைந்தார். அவரது இதயத்திலும் மனதிலும் அமைதியையும் உணர்ந்தார். இது மிக முக்கியம். 

ஒருவேளை எதிரிகள் பின்வாங்கி இருக்கலாம், அல்லது முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டனர் எனும் செய்தி அவருக்குக் கிடைத்திருக்கலாம். மிக முக்கியமானது, 'கர்த்தர் தனது அழுகையின் சத்தத்தைக் கேட்டார்'' என்பதை தாவீது அறிந்திருந்தார். அவரது சூழ்நிலைகள் உடனடியாக மாறாமல் இருக்கலாம், ஆனால் தனது இதயத்தில் கடவுளின் பிரசன்னத்தை  உணர்ந்தார். கர்த்தர் அவருடைய அழுகையையும் வேண்டுதல்களையும் கேட்டு, அவரது ஜெபத்தை ஏற்றுக்கொண்டார். 

தாவீது, இந்த அனுபவத்தைக் கர்த்தரை மகிமைப்படுத்தப் பயன்படுத்தினார். இந்த விடுதலையின் செய்தியைத் தனது எதிரிகளுக்குச் சாட்சியாக அறிவித்தார். அது அவர்களுக்கு எப்படித் தெரிவிக்கப்பட்டது என்பது தெரியாது; ஆனால் நடந்த காரியங்களுக்காகக் கர்த்தரைக் கனப்படுத்த அவர் விரைந்தார். 

வசனங்கள் 8-10 இல் உள்ள வார்த்தைகள் ஒரு மறைபொருளாக இருக்கலாம். இது அவரது எதிரிகளுக்குச் சொல்லப்பட்டது. அங்கு அவர்கள் இல்லை. ஆனால் இந்த வசனங்களைக் கேட்கும் அல்லது படிக்கும் மக்களுக்கு, அது அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். 

தாவீது வெட்கம் அடைவார் என அவரது எதிரிகள் கூறினர். ஆனால் அவர்களின் கணிப்பு தோல்வியடைந்தது. இறுதியில் அவர்களே வெட்கமடைந்தனர். தோற்கடிக்கப்பட்டனர். 

"அக்கிரமச் செய்கை காரர்களே, என்னை விட்டு அகன்று போங்கள்" என்ற தாவீதின் வார்த்தையை. ஆண்டவராகிய  கிறிஸ்தும் குறிப்பிட்டார். (மத்தேயு 7:23; லூக்கா 13:27). இதுவே தீயவர்களுக்குச் சொல்லப்படும் இறுதித் தீர்ப்பாகத் தோன்றுகிறது.

Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக