அத்தியாயம் இரண்டு: யாக்கோபு 1: 2-4
சோதனைகளைச் சாதனைகளாக மாற்று.
“வாழ்க்கை உங்களுக்கு எலுமிச்சையைத் தந்தால், எலுமிச்சை சாற்றை உருவாக்குங்கள்!” (When life hands you lemons, make lemonade) என்று எழுதப்பட்ட வாசகத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்.
அந்த வாசகத்தைப் பயிற்சி செய்வதை விட, அதைப் பார்த்துப் புன்னகைப்பது எளிதானது. ஆனால் அது சொல்லும் அடிப்படைத் தத்துவம் உண்மை.
உண்மையில், இது வேதத்தின் கோட்பாடு. வேதாகமம் முழுவதும் தோல்வியை வெற்றியாகவும், சோதனையைச் சாதனையாகவும் மாற்றிய பலரது வாழ்க்கை சரித்திரத்தை வாசிக்கலாம். அவர்கள் சோதனை சூழலில் சிக்கி விழுந்து பலியாவதற்குப் பதிலாக, அதை விசுவாசத்துடன் எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்று சாதனையாளர்களாக மாறினர். இன்று நாமும் அதே வித வெற்றி அனுபவத்தைப் பெறலாம் என்று யாக்கோபு சொல்கிறார்.
வெளியிலிருந்து வரும் சோதனைகள் (யாக். 1:1-12), அல்லது உள் மனதின் இச்சைகளினால் எழும்பும் சோதனைகள்(யாக்கோபு 1:13-27); சோதனைகள் எந்த வடிவிலிருந்தாலும், கிறிஸ்துவ விசுவாசத்தில் நிலைத்திருப்பதன் மூலம் நாம் வெற்றியை அனுபவிக்க முடியும். இந்த வெற்றியின் விளைவு ஆன்மீக முதிர்ச்சி.
நாம் சோதனைகளை வெற்றியாக மாற்ற வேண்டுமெனில், நான்கு கட்டாய விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என யாக்கோபு அறிவுறுத்துகிறார்:
1. சந்தோஷமாக எண்ணுங்கள் - Count (யாக்.1:2),
2. பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து - Know (யாக். 1:2),
3.நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி - Let (யாக். 1:4),
4. கேட்கக்கடவன் - Ask (யாக். 1: 5).
அல்லது, இதை வேறு விதமாக விளக்கிச் சொல்வதானால், சோதனைகளில் வெற்றி பெறுவதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு அத்தியாவசிய மன நிலைகள் தேவையாக உள்ளன:
1. மகிழ்ச்சியான மனப்பான்மை - A Joyful Attitude,
2. புரிந்துகொள்ளும் மனம் - An Understanding Mind,
3. விருப்பத்துடன் சரணடைதல் - A Surrender Will,
4. நம்ப விரும்பும் இதயம் - A Heart that wants to Believe.
1. மகிழ்ச்சியான மனப்பான்மை- (A Joyful Attitude-1:2):
உங்கள் மனம் ஒரு காரியத்தை ஆராய்ந்து, அதில் எதை மதிப்பு மிக்கதாக ஏற்றுக் கொள்ளுகிறதோ, அந்த மனப்பாங்கே அந்தச் செயலை எவ்விதம் அணுகுவது என்பதையும் முடிவு செய்கிறது.
உதாரணமாக, உங்களது மகளின் பொதுத் தேர்வும், மிக நெருங்கிய உறவினரது திருமணமும் ஒரே தேதியில் வந்தால் அந்த காரியத்தை எவ்விதம் அணுகுவீர்கள்? எதை மதிப்புமிக்க தாக கருதுகிறீர்களோ, அதற்கே முன்னுரிமை தருவீர்கள் அல்லவா!
உங்கள் முடிவு தெளிவாக இருந்தால், உங்கள் மனமும் மகிழ்வுடன் இருக்கும்.
இரண்டாம் வசனத்தைக் கவனியுங்கள்;
"நீங்கள் பலவகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது" என உள்ளது.
இங்கு ''சோதனைகளில் உள்ளாகினால்'' என இல்லை. அதன் பொருள், விசுவாச வாழ்வில், சோதனைகள் நிச்சயம் வரும். அதைச் சந்திக்க ஆயத்தமாக இருக்க வேண்டும்.
ஒரு விசுவாசி, தனது கிறிஸ்தவ வாழ்க்கை துயரங்களற்று, எப்போதும் மிக இனிமையாகவே இருக்கும் என்று எதிர்பார்த்தால், அவர் நிஜ வாழ்க்கையில் மிகப் பெரும் அதிர்ச்சியை உண்மையில் சந்திப்பார்.
ஆகையால் தான் கிறிஸ்து தம் சீடர்களை இவ்விதமாக எச்சரித்தார்,
"உலகில் உங்களுக்குத் துன்பங்கள் உண்டு" (யோவான் 16:33).
பவுலும் அவ்விதமாகவே, புதிதாகச் சபையில் இணைந்த விசுவாசிகளின் உள்ளத்தை உறுதிப்படுத்தி,
"நாம் பல வேதனைகள் வழியாகவே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்" என்று கூறினார் (அப். 14:22).
நாம் கர்த்தருடைய"அடைக்கலம்" பெற்ற மக்கள் மட்டுமல்ல, அவரால் "சிதறடிக்கப்பட்ட'' மக்களும் ஆவோம். எப்போதும் நாம் நினைத்த வண்ணமாகவே எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகையால் சோதனைகளை எதிர் கொள்ள, அதை வெற்றிகரமாக மேற்கொள்ள நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
உலகில் உள்ள அனைவருக்கும் சில சோதனைகள் பொதுவானவை: நோய், விபத்துகள், ஏமாற்றங்கள், உயிரிழப்புகள்.., அவை .
நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதால், வேறு பிற சோதனைகளையும் எதிர் கொள்ள நேரிடும்.
சாத்தான் நம்முடன் சண்டையிடுகிறான். உலகம் நம்மை எதிர்க்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு விசுவாச போராட்டம்.
பேதுரு தனது முதல் நிருபத்தில் இதை வலியுறுத்தினார்:
''அன்புக்குரியவர்களே, துன்பத் தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதோ எதிர்பாரதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள்" (1 பேதுரு 4:12).
"சோதிக்கப்படும்போது" என்ற சொற்றொடர், முட்டாள்தனமாகச் செயல்படுவதால் ஏற்படும் விபத்தைக் குறிக்கவில்லை. அதை "சந்திப்பீர்கள், ஆகவே எதிர் கொள்ளத் தயாராகுவீர்" எனும் எச்சரிக்கை வாசகமாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கிறிஸ்தவர் நிச்சயமாகத் தனது கவனக் குறைவால் சோதனைகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது.
"Divers" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம் "பல்வேறு வித வண்ணமயமான" எனப் பொருள்படும். பேதுரு அதே வார்த்தையை 1 பேதுரு 1:6-ல் பயன்படுத்தினார் -
"இப்போது சிறிது காலம் நீங்கள் பலவகைச் சோதனைகளால் துயருற வேண்டி இருப்பினும்"
வாழ்க்கையில் நேரிடும் சோதனைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல; அவை நெசவாளர் அழகிய விரிப்பைச் செய்வதற்குப் பயன்படுத்தும் பல வகையான வண்ண நூல்களைப் போன்று பல வடிவங்களில் வரும்.
கர்த்தர் வாழ்க்கையில் பல விதமான வண்ணங்களைக் கலந்து, அழகிய அனுபவங்களை உருவாக்குகிறார். அதன் இறுதி வடிவம் அவரது மகிமைக்கு ஒரு அழகான விஷயம்.
நானும் என் மனைவியும் ஒருமுறை உலகப் புகழ் பெற்ற நெசவாளர் ஒருவரைச் சந்தித்தோம். அங்கு ஆண்களும், பெண்களும் தறியில் வேலை செய்வதைப் பார்த்தோம். நெய்யப்பட்ட விரிப்புகளின் அடிப்பகுதி அழகாக இல்லை என்பதை நான் கவனித்தேன். அதன் வடிவங்கள் தெளிவற்று இருந்தன. நூலின் முனைகள் தளர்வாகத் தொங்கின.
அப்போது எங்கள் வழிகாட்டி, "தவறான பக்கத்தைப் பார்த்து தொழிலாளியின் வேலையை அல்லது துணியின் வடிவ நேர்த்தியை மதிப்பிடாதீர்கள்" என்று கூறினார்.
அதே போல, வாழ்க்கையின் தவறான பக்கத்தையே நாம் பார்க்கிறோம்; முடிக்கப்பட்ட வடிவத்தை இறைவன் மட்டுமே பார்க்கிறார். இன்று நாம் பார்ப்பதிலிருந்து, அவருடைய திட்டங்களை மதிப்பிட வேண்டாம். அவரது பணி இன்னும் முடியவில்லை!
வசனம் 3ல், நாம் தியானிக்கும் முக்கிய சொல் எண்ணுங்கள் (Count). இது ஒரு நிதி பரிவர்த்தனைச் சொல். இதன் பொருள் "மதிப்பிடு". பிலிப்பியர் 3ம் அதிகாரத்தில் பவுல் இச் சொல்லைப் பலமுறை பயன்படுத்தினார்.
பவுல் ஒரு கிறிஸ்தவராக மாறிய போது, அவர் தனது வாழ்க்கையை மறு மதிப்பீடு செய்து, புதிய இலக்குகளையும் முன்னுரிமைகளையும் அமைத்தார். கிறிஸ்துடனான அவரது அனுபவத்தின் வெளிச்சத்தில், அவர் முன்பு முக்கியமாகக் கருதிய விஷயங்கள் எல்லாம் "குப்பையாக" மாறியது.
இதன் பொருள், வாழ்க்கையில் சோதனைகளை எதிர்கொள்ளும்போது, கர்த்தர் நமக்காக என்ன செய்கிறார் என்பதன் வெளிச்சத்தில் சோதனைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். அப்போது அதன் மதிப்பை உணர்வோம்.
ஒரு அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவர் சோதனைகளின் மத்தியில் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்பதை இது விளக்குகிறது: அவர் மிகவும் மதிப்புமிக்க விஷயங்களுக்காக வாழ்கிறார்.
நம்முடைய கர்த்தரும், சிலுவையின் பாடுகளை முழு மனதுடன் ஏற்க முடிந்தது, ஏனெனில்
"அவர் தமக்கு முன்பாக வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை நினைக்காமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபக்கத்தில் வீற்றிருக்கிறார்." (எபி. 12:2).
அவருடைய அந்த மகிமையை ஒரு நாள் சபையோடு பகிர்ந்து கொள்வார்.
நாம் எதை மதிப்புமிக்கது என முடிவு செய்கிறோமோ, அவைகளே நமது மதிப்பீடுகளைத் தீர்மானிக்கின்றன (Lives for the things that matter most. Our values determine our evaluations).
நற்பண்புகள் அடைவதை விட, சுகமான வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், சோதனைகள் நம்மை வருத்தப்படுத்தும்.
ஆன்மீக வளர்ச்சியை விடப் பொருள் மற்றும் உலக மதிப்புகளை நாம் பெரிதாக நினைத்தால், சோதனைகளை மகிழ்ச்சியாக இருக்காது.
நிகழ்காலத்தின் மகிழ்ச்சி மட்டுமே போதும், எதிர்காலத்தைக் குறித்த கவலை இல்லை என வாழ்ந்தால், சோதனைகள் நமக்கு இனிப்பாக அல்ல, கசப்பானதாக இருக்கும்.
பக்தன் யோபுவுக்கு இதைக் குறித்த சரியான கண்ணோட்டம் இருந்தது,
"ஆயினும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைப் புடமிட்டால், நான் பொன்போல் துலங்கிடுவேன்" (யோபு 23:10).
எனவே, சோதனைகள் வரும்போது, உடனடியாக இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். மகிழ்ச்சியான மனப்பான்மையைக் கடைப்பிடியுங்கள். கவலையற்று இருப்பது போல் பாசாங்கு செய்ய வேண்டாம். சுய மனோவசியத்தில் (Hypnosis) அதை மேற்கொள்ள முயற்சி செய்ய வேண்டாம்.
அந்த சோதனைகளை விசுவாச கண்களால் வெறுமனே உற்றுப் பாருங்கள். ஒரு காரியத்தை நீங்கள் பார்க்கும் மனப்பாங்கு, அதன் முடிவைத் தீர்மானிக்கிறது. ஒரு செயலை மகிழ்ச்சியுடன் முடிக்க, மகிழ்ச்சியுடன் தொடங்குங்கள்.
இவை படிப்பதற்கு நன்றாக உள்ளது, "ஆனால், நடைமுறை வாழ்வில், சோதனைகளுக்கு மத்தியில் எப்படி மகிழ்ச்சியோடு இருப்பது?" என்று கேட்கலாம். அதற்குத் தேவைப்படும் மனநிலை குறித்து இரண்டாவது பகுதி விளக்குகிறது.
2. புரிந்துகொள்ளும் மனம்-(An Understanding Mind-1:3):
சோதனைகளை எளிதாக எதிர்கொள்வது எப்படி?
அவை தரும் அனுபவங்களிலிருந்து எவ்விதம் பயனடைவது ?
இது போன்ற கேள்விகளுக்கான பதில் எத்தனை கிறிஸ்தவர்களுக்குத் தெரியும்?
முதலில் சோதனைகள் குறித்த சில அடிப்படை உண்மைகளை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
a. நம்பிக்கை எப்போதும் சோதிக்கப்படுகிறது (Faith is always tested).
கடவுள் ஆபிரகாமை விசுவாசத்தால் வாழ அழைத்தார். ஆபிரகாம் கீழ்ப்படிந்து பின்பற்றினார். ஆனாலும் கர்த்தர் ஆபிரகாமைச் சோதித்தார். ஏனெனில், அவரது விசுவாசத்தை வலிமைப்படுத்துவதற்காகச் சோதித்தார்.
ஆபிரகாம் வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு போராட்டத்தையும் தியானித்துப் பாருங்கள். அவர் ஒவ்வொரு சோதனையைக் கடக்கும் போதும் ஒரு ஆசீர்வாத வாக்குத்தத்தை சுதந்தரித்துக் கொள்வதைக் காணமுடியும்.
விசுவாச கீழ்படிதல்: ஆதி 12:4-6, ஆசீர்வாதம் 12:7
விசிவாச கீழ்படிதல்: ஆதி 13:5-12, ஆசீர்வாதம் 13:13-17
விசுவாச கீழ்படிதல்: ஆதி 14:21-24, ஆசீர்வாதம் 15:1-6
விசுவாச கீழ்படிதல்: ஆதி 17:1-19, ஆசீர்வாதம் 21:1-8
விசுவாச கீழ்படிதல்: ஆதி 22:1-10, ஆசீர்வாதம் 21:11-18
நம்மிடம் உள்ள சிறந்த பண்புகளை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக, நம் வாழ்வில் கர்த்தர் சோதனையை அனுமதிக்கிறார்.
நம்மிடம் உள்ள மோசமான தன்மைகளை வெளிப்படுத்தச் சாத்தான் நம்மைப் பாவ இச்சையால் தூண்டுகிறான்.
ஆக நாம் மீண்டும் பிறந்திருக்கிறோமா? என்பதை விசுவாசத்தின் பரீட்சைகள் நிரூபிக்கிறது.
b. சோதனை நம்மை மேம்படுத்த அருளப்படுகிறது. நம்மை வீழ்த்துவதற்கு அல்ல (Testing works for us, not against us).
முயற்சி என்ற வார்த்தையை "அங்கீகரித்தல்" என்றும் மொழிபெயர்க்கலாம். அதை நன்றாகப் புரிந்துகொள்ள பேதுரு மீண்டும், நமக்கு உதவுகிறார்:
"அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்" (1 பேதுரு 1:7).
ஒரு தங்க ஆய்வாளர் சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட தாது மாதிரியைப் பரிசோதகர் ஆய்வகத்திற்குக் கொண்டு வந்து பரிசோதிக்கிறார். அந்த மாதிரி தூண்டின் மதிப்பு சொற்பமாகவே இருக்கும். ஆனால் அதற்கு ஒப்புதல் அளித்தவுடன், அந்த தாது சுரங்கத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கை—பல மில்லியன் பண மதிப்புடையதாக அந்த சுரங்கத்தை மாற்றுகிறது! அந்த ஒரு சான்றிதழ், அவர் ஒரு தங்கச் சுரங்கத்தின் அதிபதி என உறுதியளிக்கிறது.
நமது விசுவாசமும் கர்த்தரால் அங்கீகாரமாக்கப்படும் போது அது மிக விலையேறப்பற்றது. ஏனென்றால் அந்த அங்கீகாரம் நம்முடைய விசுவாசம் உண்மையானது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆகச் சோதனைகள் விசுவாசிக்கு உதவி செய்கின்றன. அவை அவருக்கு எதிராக அல்ல.
பவுல் கூறுவது;
"மேலும், கர்த்தரிடம் அன்பு கூர்பவர்களுக்கு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியானவர் அனைத்தையும் நடத்துகிறார்" (ரோமர். 8:28).
மேலும்,
"நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை. அவை சிறிது காலம்தான் நீடிக்கும். ஆனால் அவை ஈடு இணையற்ற மாட்சியை விளைவிக்கின்றன. அம்மாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும்.” (2 கொரி. 4:17).
c. சரியாகப் பயன்படுத்தப்படும் சோதனைகள் முதிர்ச்சியடைய நமக்கு உதவுகின்றன (Trails rightly used help us to mature).
சோதனைகளை அனுமதிப்பதன் மூலமாக, கர்த்தர் நம் வாழ்வில் எதை உருவாக்க விரும்புகிறார்?
பொறுமை, சகிப்புத்தன்மை, கடினமான சூழலை எதிர்த்துத் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் திறன். (Patience, Endurance & Persistence).
“அது மட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் பொறுமையோடு மன உறுதியும், மன உறுதியால் பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று அறிந்து, துன்பங்களிலும் மேன்மை பாராட்டுகிறோம்” (ரோமர். 5:3-4).
பொறுமை என்பது எதிர் வினையாற்றப் பயந்து, சூழ்நிலைகளை அப்படியே ஏற்றுக்கொள்வது அல்ல, மாறாகத் துன்பம் மற்றும் சிரமங்களைத் தைரியமாக விடாமுயற்சியுடன் எதிர்கொள்ளும் மன உறுதியைக் குறிக்கிறது.
முதிர்ச்சியடையாதவர்கள் எப்போதும் பொறுமையற்றவர்கள்; முதிர்ந்த மக்கள் பொறுமையாகவும், விடாமுயற்சியுடனும் இருப்பார்கள்.
பொதுவாக நம்பிக்கையும் பொறுமையும் ஒன்றாக இருப்பது போல் பொறுமையின்மையும், அவநம்பிக்கையும் இனைந்தேச் செல்கின்றன.
பொறுமை மற்றும் விசுவாசம் குறித்து வேதம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
"இவ்வாறு நீங்கள், தளர்ச்சிக்கு இடம் கொடாது, விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் வாக்குத்தத்தங்களை உரிமைப்பேறாகப் பெற்றவர்களைப் போல வாழுங்கள்" (எபி. 6:12).
"நீங்கள் தேவனுடைய திருவுளத்தை நிறைவேற்றிய பின், வாக்குத்தத்தத்தைப் பெறுவதற்கு, உங்களுக்குப் பொறுமை தேவை" (எபி. 10:36).
"விசுவாசிக்கிறவன் பதற்றமடைய மாட்டான்" (ஏசா. 28:16).
நாம் பொறுமையுடன் செயல்புரியக் கர்த்தர் விரும்புகிறார், ஏனென்றால் அதுவே மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும் பெறுவதற்குரிய முக்கிய திறவுகோலாக இருக்கிறது.
ஒரு சிறு குழந்தை பொறுமையைக் கற்கவில்லை என்றால், அதனால் வேறு எதையும் அதிகம் கற்க முடியாது. ஒரு விசுவாசி கர்த்தருக்காகக் காத்திருக்கக் கற்றுக்கொண்டால், தேவன் அவனது வாழ்வில் பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.
ஆபிரகாம், கர்த்தரின் நேரத்துக்குக் காத்திராமல், அவசரமாக முடிவெடுத்து ஆகாரை மணந்து, தன் வீட்டிற்குள் மிகுந்த துக்கத்தைக் கொண்டுவந்தார் (ஆதி. 16). மோசே, கர்த்தரைச் சார்ந்திராமல், தம்முடைய சுய வலிமையால் ஒரு மனிதனைக் கொன்றார். அதனால் அவர் பொறுமையைக் கற்றுக்கொள்ள நாற்பது ஆண்டுகள் ஆடுகளுடன் செலவிட வேண்டியிருந்தது (யாத். 2:11). பேதுரு, தனது பொறுமையின்மையில் கிட்டத்தட்ட ஒரு மனிதனைக் கொலை செய்யவும் துணிந்தார் (யோவான் 18:10-11).
நம் வாழ்வில் பொறுமை மற்றும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள ஒரே வழி, கர்த்தர் அனுமதிக்கும் சோதனைகள் ஏற்றுக் கொள்வது தான்.
வேத புத்தகத்தைப் படிப்பது, வேத பாடத்தை ஆராய்ந்து கற்பது, ஒரு பிரசங்கத்தைக் கேட்பது அல்லது பிரார்த்தனை செய்வது.., இவை போன்ற செயல்கள் மூலம் மட்டுமே பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையை அடைய முடியாது. இவற்றோடு நாம் வாழ்க்கையின் சிரமங்களைக் கடந்து செல்ல வேண்டும். கர்த்தரை நம்பி, அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும். இதன் விளைவாக நம்மில் பொறுமை மற்றும் நற்பண்புகள் உருவாகும்.
இதைப் புரிந்து கொண்டால், நாம் சோதனைகளை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும். சோதனைகள் நமக்குள்ளும், நமக்கும் என்ன செய்யும் என்பதை நாம் அறிந்து இருந்தால், அதன் இறுதி முடிவு கர்த்தருக்கு மகிமையைக் கொண்டுவரும். திருமறையைத் தியானிப்பது, பொறுமையில் வளர உதவுகிறது எனும் உண்மையை இந்த வேதபகுதி விளக்குகிறது (ரோமர் 15:4).
ஆபிரகாம், யோசேப்பு, மோசே, தாவீது மற்றும் நம் ஆண்டவர் வாழ்வில் நிகழ்ந்த சோதனைகளைப் பற்றி நாம் வாசிக்கும்போது, சோதனைகளில் கர்த்தருக்கு ஒரு நோக்கம் இருப்பதை நாம் உணர்கிறோம். நாம் அவரை விசுவாசிக்கும் போது கர்த்தருடைய நோக்கங்கள் நம் வாழ்வில் நிறைவேறும்.
கர்த்தருடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளும் மனதுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஒரு புத்தியற்ற விசுவாசியைச் சாத்தானால் தோற்கடிக்க முடியும், ஆனால் திருமறையைத் தியானித்து கர்த்தரின் நோக்கங்களைப் புரிந்து கொள்ளும் விசுவாசியை அவனால் ஒருபோதும் வெல்ல முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக