சனி, 15 ஏப்ரல், 2023

யாக்கோபு 1: 13-16

அத்தியாயம்: 3 

சபலங்களை எவ்வாறு கையாள்வது?

(How to Handle Temptations?) - (யாக் 1: 13-16).

ஒரு முதிர்ச்சியடைந்த நபர் சோதனைகளில் பொறுமையுடன் இருப்பார். சோதனைகள் வெளியிலிருந்து நம்மைத் தாக்கும் துயர அனுபவங்களாக இருக்கிறது. சில வேளைகளில் அவை மனதுக்குள் நிகழும் சபலங்களினாலும் ஏற்படுகிறது. 

சோதனைகள் (Tests & Trails) மற்றும் மனதில் நிகழும் சபலங்கள் (Temptations) எவ்வாறு ஏற்படுகின்றன?

i. சோதனைகள் (Tests & Trails); இறைவனால் அனுமதிக்கப்பட்டதால் வருகிறது. 

ii. சோதனைகள் (Temptations); மனதில் ஏற்படும் சபலங்களினாலும் வருகிறது. இவை சாத்தானால் தொடுக்கப்படும் தூண்டுதலால் நிகழலாம். 

iii. சில சோதனைகள் (Due to our own attitudes) ; நமது வீழ்ச்சியடைந்த மன இயல்பு ஊக்குவிக்கப்பட்டதால் வரக்கூடும். 

யாக். 1:13-18 வரை அடங்கிய இந்தப் பகுதியில், யாக்கோபு விளக்குவது சாத்தானால் தூண்டப்பட்ட மனதின் உள்ளே நிகழும் சபலங்களினால் ஏற்படும் சோதனைகள் (Temptations) ஆகும். 

ஏன் யாக்கோபு சோதனைகள் (Tests & Trails) மற்றும் சபலங்கள் (Temptations) என இவ்விரண்டையும், ஒன்றின் பின்பு ஒன்றாக வரிசைப் படுத்தி விளக்கி எழுதியுள்ளார்? 

"சோதனைகள் மற்றும் மன சபலங்களுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன?" 

இந்தக் கேள்விக்கான பதில் மிக எளிமையானது: நாம் கவனமாக விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால், வெளியிலிருந்து வரும் சோதனைகள் உள்ளுக்குள் நிகழும் மன சபலங்களாக மாறலாம். 

ஆகவே தான் யாக்கோபு எச்சரிக்கிறார், ''என் பிரியமான சகோதர சகோதரிகளே, மோசம் போகாதிருங்கள்.''

சோதனை வேளைகளில், நம்முடைய சூழ்நிலைகள் கடினமாக மாறும் போது நாம் என்ன செய்கிறோம்?

கர்த்தருக்கு  விரோதமாக முறுமுறுப்பது, அவருடைய அன்பைக் கேள்விக்கு உள்ளாக்குவது, அவருடைய சித்தத்தை எதிர்ப்பது என நமது மன சலனங்கள் வெளிப்படுவதைக் காணலாம். 

இந்த கட்டத்தில் மனதில் விரக்தி ஏற்படுகிறது. அந்த சோர்வான சூழலிருந்து தப்பித்து ஓட விரும்புகிறோம்.அப்போது சாத்தான் ஒரு பொய்யான காரணத்தைச் சொல்லும்படி மனதைத் தூண்டி, அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறான். அந்த வாய்ப்பு தான் மனதில் ஏற்படும் சபலம். இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

திருமறையில் இந்த உண்மைக்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆபிரகாம் கானானுக்கு வந்த போது அங்கே பஞ்சம் இருப்பதைக் கண்டார். அவரால் ஆடு  மாடுகளைப் பராமரிக்க முடியவில்லை. உண்மையில் இது சோதனையான ஒரு  தருணம். இது அவர் கர்த்தரை விசுவாசிப்பவர் என்பதை நிரூபிக்க ஒரு நல்வாய்ப்பாக இருந்தது; ஆனால் ஆபிரகாமோ, அந்த சோதனையால் சோர்வடைந்து, மன சலனப்பட்டு எகிப்துக்குப் போனார். பின்னர்  ஆபிரகாமைக் கீழ்ப்படிதல் மற்றும் ஆசீர்வாதத்தின் பாதைக்குத்  திரும்பக் கொண்டுவர, கர்த்தர் அவரைச் சிட்சிக்க வேண்டியிருந்தது.

இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு நேரிட்ட சோதனைகள், முறுமுறுக்கும் வெறுப்பு உணர்வுகளாக வெளிப்பட்டது. அவர்கள் கர்த்தருக்கு எதிராக கலகம் செய்தனர். அடிக்கடி தேவனைச் சோதித்தனர். 

அவர்கள் எகிப்திலிருந்து விடுதலையான உடன், குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தவித்தனர். மூன்று நாட்கள் நீரின்றி வனாந்தரத்தில் நடந்து சென்றனர். தண்ணீரைக் கண்டு பிடித்தபோது, அது மிகவும் கசப்பாக இருந்தது. அவர்களால் குடிக்க முடியவில்லை. அவர்கள் முறுமுறுத்து கர்த்தரைக் குறை சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்கள் தங்கள் சோதனையை உள் மனதில் ஏற்பட்ட சலனத்தினால் முறுமுறுப்பாக மாற்றித் தோல்வி அடைந்தனர்.

நமக்கு வெளியிலிருந்து வரும் சோதனைகள், மன சலனங்களாக / சபல உணர்வுகளாக மாறலாம். ஆனால், நாம் மனதில் ஏற்படும் சபல உணர்வுகளுக்கு அடிபணிந்து வீழ்வதைக் கர்த்தர் நிச்சயமாக விரும்பவில்லை. சலனங்கள் தரும் அனுபவங்கள் வழியாகப் படிப்பினை பெற்று, ஆவிக்குரிய முதிர்ச்சியை அடையும்படி, கர்த்தர் அவற்றை அனுமதிக்கிறார்.  

நாம் கர்த்தரது அடைக்கலம் பெற்ற பிள்ளைகள் மாத்திரம் அல்ல; அவரால் சிதறடிக்கப்பட்ட மக்களும் கூட. எனவே தான் யோசேப்பைப் போல, இத்தகைய கடினமான சூழல்கள், சபலங்கள் தரும் அனுபவங்கள் இவற்றைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். அதுவே நாம் முதிர்ச்சியடைய உதவுகிறது. 

மனம் எதிர் கொள்ளும் சபல உணர்வுகளை வெல்ல வேண்டுமெனில், மூன்று உண்மைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என யாக்கோபு இந்த பகுதியில் கற்றுத் தருகிறார். அவற்றுள் முதலாவது:

1. கர்த்தரின் நியாயத் தீர்ப்பைக் கவனியுங்கள் – Consider God’s Judgment (1:13-16):

ஒருவரை அச்சப் படுத்தி அதன் வழியாக கற்றுக் கொடுப்பது என்பது எதிர்மறை அணுகு முறையாக இருக்கலாம். ஆனால் இதுவும் தேவையான ஒன்றே, அத்துடன் மிக முக்கியமானதும் ஆகும். 

"ஒரு செயலை செய்யும் முன்பாக, எதிர்காலத்தில் அதன் விளைவு எப்படியாக முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்த்துச் செயல்படுங்கள்." என யாக்கோபு சொல்கிறார். பாவம் எங்கே முடிகிறது - மரணத்தில்!

மனதில் சபலங்கள் ஏற்படும் போது, இந்த சோதனைகள் தேவனிடமிருந்து வருகிறது என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் தேவன் தீமையின் தூண்டுதலுக்கு எவரையும் உள்ளாக்குவதில்லை. எவரையும் தீய எண்ணங்களை உருவாக்கிச் சோதிப்பதுமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் உள்ளத்தில் எழும் சொந்தத் தீய விருப்பத்தினாலேயே சோதனைக்கு உள்ளாகின்றனர். தீய உணர்வுகள் மீது உள்ள ஆசை அவர்களைக் கவர்ந்து, மயக்கித் தன் வசப்படுத்துகிறது. யாக். 1:13.

ஆகையால், மனதில் எழும் சபல உணர்வுகளுக்காகக் கர்த்தரைக் குறை கூறாதீர்கள். அவர் எல்லாவிதமான சலனங்களையும் கடந்தவர். மிகப் பரிசுத்தமானவர். அவர் நம் மீது வைக்கும் அன்பின் மிகுதியால் இத்தகைய சோதனைகளை அனுமதிக்கிறார். கர்த்தர் ஆபிரகாமைச் சோதித்தது போல் நம்மையும் சோதிக்கிறார் (ஆதி. 22); ஆனால் அவர் ஒருபோதும் இழிவான சபலங்களினால் நம்மைச் சோதிப்பவர் இல்லை. நாம்தான் சோதனையின் சந்தர்ப்பங்களை, சபலங்களாக மாற்றுகிறோம்.  

மனதில் ஏற்படும் சபல உணர்வுகளை எப்படிப் புரிந்து கொள்வது? 

சபலம் என்பது, ஒரு நல்ல செயலை தவறான வழியில் நிறைவேற்ற முயல்வதாகும். வேத வார்த்தைகள் சொல்லும் வழிக்கு மாறான வழியில் நடக்க முயல்வது. 

தேர்வில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற விரும்புவது தவறா? நிச்சயமாக இல்லை, ஆனால் பார்த்து எழுதியோ அல்லது ஆள் மாறாட்டம் செய்தோ நீங்கள் தேர்வரை ஏமாற்றி உயர்ந்த மதிப்பெண் பெற்றால், நீங்கள் பாவம் செய்தீர்கள். 

ஒரு நல்ல காரியத்தை (தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெறுவது), மோசமான வழியில் நிறைவேற்ற விரும்புவது (ஏமாற்றுவதற்கான தூண்டுதல் மூலமாக) தவறான வழியில் செல்வதாகும். 

சாப்பிடுவது தவறில்லை, ஆனால் அதற்காக உணவைத் திருடிச் சாப்பிட நினைத்தால், நீங்களே இழிவான மன சபலத்துக்கு உள்ளாகுகிறீர்கள்.

நாம் பாவத்தை ஒரு முறை நிகழும் செயலாக நினைக்கிறோம் (A single act). ஆனால் கர்த்தர் அதை ஒரு செயல்முறையாகப் பார்க்கிறார் (Process).

ஆதாம் ஒரு பாவச் செயலைச் செய்தார், ஆனால் அந்தச் செயல் முழு மனித இனத்தின் மீதும் பாவத்தையும், மரணத்தையும், நியாயத்தீர்ப்பையும் கொண்டு வந்தது. 

பாவம் மூன்று விதமான செயல் நிலைகள் வழியாக வளர்ச்சியடைந்து இறுதியாக, ஆவிக்குரிய மரணத்தை ஏற்படுத்துகிறது என யாக்கோபு விவரிக்கிறார்.

A. தீய விருப்பம் (Desires of Evil ), 

B. வஞ்சகம் (Deception),

C. கீழ்ப்படியாமை (Disobedience),

D. மரணம் (Death).

A. தீய நாட்டம், சுய இச்சை - Desires of Evil: (வச. 14).

அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். யாக். 1:14

இச்சை என்கிற வார்த்தை எல்லாவிதமான ஆசைகளையும் குறிக்கிறது. அதை வெறும் பாலியல் உணர்வுகள் சார்ந்த விருப்பங்கள் என மட்டுப்படுத்திப் புரிந்து கொள்ளக் கூடாது. 

நமது மனதில் எழும் ஆசை உணர்வுகள் இயல்பானவை. அது இறைவனால் நமக்கு அருளப்பட்டவை. அந்த விருப்பங்களில் பாவம் கிடையாது. இந்த ஆசை உணர்வுகள் இல்லாமல், நாம் செயல்பட முடியாது. பசி ஏற்படவில்லை என்றால் நாம் சாப்பிட மாட்டோம். தாகம் ஏற்படவில்லையெனில் தண்ணீரைக் குடிக்க மாட்டோம். உணவும், நீரும் இல்லை என்றால் அது இறப்பை வருவிக்கும். உழைத்த பின்னர் உடலில் களைப்பு ஏற்படவில்லை என்றால், நாம் ஒருபோதும் ஓய்வெடுக்காது உழைப்போம். இறுதியில் தளர்ச்சி அடைவோம். ஆண், பெண் உறவும் இயல்பான ஆசை தான்; அது இல்லையெனில் மனித இனம் தொடர முடியாது.

அப்படியெனில் இச்சை என்பது எது? 

இயல்பாக எழும் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்கு, வேத வார்த்தைகளுக்கு விரோதமான வழிகளில் செய்து அடைய விரும்பும் போது தான் அது இச்சையாகிறது. நாமும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம். 

சாப்பிடுவது இயல்பானது; ஆனால் பெருந்தீனி பாவம். தூக்கம் இயல்பானது; ஆனால் சோம்பல் பாவம். கணவன் மனைவி உறவு பரிசுத்தமானது. ஆனால் பலரோடு உறவு கொள்வது பாவம்.

''திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும்; காமுகரும் விபசாரத்தில் ஈடுபடுவோரும் தேவனின் தீர்ப்புக்கு ஆளாவர்” (எபி. 13:4). 

சிலர் இந்த இயல்பான ஆசைகளை முற்றுமாக மறுப்பதன் மூலம் அல்லது அவற்றைத் தீவிரமாக அடக்க முற்படுவதன் மூலம் "ஆன்மீகவாதியாக" மாற முயற்சி செய்கிறார்கள். ஆனால் இது அவர்களை இயல்பான மனிதத் தன்மையற்றவர்களாக மாற்றுகிறது. 

கொதிகலனில் உள்ள நீராவியின் சக்தி ஒரு இயந்திரத்தை இயக்க உதவுவது போலவே, இந்த அடிப்படை ஆசைகள் நமது வாழ்க்கையை இயக்குகிறது. நீராவி உற்பத்தி ஆகவில்லையெனில், உங்களுக்குச் சக்தி கிடைக்காது. அதே சமயம் நீராவியின் சக்தியை அதன் இஷ்டத்துக்குச் செயல்பட அனுமதித்தால், இயந்திரத்திற்கு அழிவு நேரிடும். 

வெற்றிக்கான ரகசியம் நிலையான மனதைத் தாக்கும் சபல உணர்வுகளைக் கண்காணிப்பதிலும், அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் உள்ளது. 

தேவைகள் ஆசைகளாக இருந்தால், விருப்பங்கள் வேலைக்காரனாக இருக்கும். பேராசைகள் விருப்பமாகும் போது, அவை எஜமானர்களாக மாறிவிடுகின்றன.

ஆசைகள் நம்முடைய ஊழியர்களாக இருக்க வேண்டும். ஒரு போதும் நம்முடைய எஜமானர்களாக இருக்க அனுமதிக்கக் கூடாது. இதை நாம் இயேசு கிறிஸ்தின் வார்த்தைகளில் நிலைத்திருப்பதன் மூலம் செய்யலாம்.

B. வஞ்சகம் (Deception):

மனதைத் தடுமாறச்செய்யும் எந்தவொரு தீய சபல எண்ணங்களும், நமக்கு முதலில் சோதனையாகத் தோன்றாது; அவை எப்போதும் இயல்பாகக் காணப்படுவதை விட அதிக கவர்ச்சிகரமானதாகத் தோன்றும். 

யாக்கோபு வஞ்சகத்தை விளக்குவதற்கு உலக வழக்கிலிருந்து இரண்டு எடுத்துக் காட்டுகளைப் பயன்படுத்தினார். முதலாவது ''சிக்குண்டு'' என்பது மீன்களைப் பிடிக்கப் பயன்படுத்தப் படும் தூண்டில் பொறி; "ஒரு கொக்கியை உபயோகித்து இரையைத் தூண்டுவது" என்று பொருள்.    

இரண்டாவதாக ''இழுக்கப்பட்டு'' என அவர் குறிப்பிடுவது மிருகங்கள் அல்லது பறவைகளைப் பிடிக்க விரிக்கப்படும் வலை. கிரேக்க மொழியில் வசீகரிப்பது அல்லது கவர்ந்து இழுப்பது என்பதாகும்.

வேட்டைக்காரர், மீன் பிடிப்பவர்கள், தங்கள் இரையைக் கவர்ந்து ஈர்க்கவும், அவற்றைப் பிடிக்கவும் வலையை, தூண்டிலைப் பயன்படுத்துகின்றனர். எந்தவொரு பறவையும் வேண்டுமென்றே வலையில் இறங்கப் போவதில்லை, அதுபோல எந்தவொரு மீனும் வெளியரங்கமாகத் தெரியும் கொக்கியைக் கடிக்காது. தானியங்கள் வலையை மறைக்கிறது. புழுக்கள் கொக்கியை மறைக்கிறது. 

மனதில் எழும் சபலங்கள், நமது இயற்கையான ஆசைகளைத் தூண்டி, ஈர்த்து, மயக்கும் தூண்டில்கள் ஆகும். அந்த தூண்டிலின் ஈர்ப்புக்கு மயங்கி, அதன் ஆசைக்கு இணங்கினால், இறுதியில் துக்கத்தையும், தண்டனையையும் விளைவிக்கும் என்கிற உண்மையை அவைகள் மறைக்கிறது. 

உணவு என்பது இயல்பான தேவை. தூண்டிலில் வைக்கப்படும் புழு, பரப்பி வைக்கப்படும் தானியங்கள், இவை தரும் சுவை எனும் சபல உணர்வால் கவர்ந்திழுக்கப்பட்டு மீன்களும், பறவைகளும் சிக்கி மடிகின்றன. 

"யோர்தானின் நன்கு நீர் நிறைந்த சமவெளியை" பார்க்கவில்லை என்றால் லோத்து சோதோமை நோக்கி நகர்ந்திருக்க மாட்டார் (ஆதி. 13:10). 

தாவீது, அடுத்தவரின் மனைவியை இச்சித்த போது; அவர் ஒரு துணிச்சலும் உண்மையும் நிறைந்த வீரனின் கொலை (உரியா) - குழந்தையின் பிறப்பு- மரணம் (பத்சேபாவின் மகன்) - தனது மகள் கற்பழிப்பு (தாமார்) - தமது மகன்கள் கொல்லப்படுதல் (அதோனியா, அப்சலோம்); போன்ற சோகமான விளைவுகளை அறிந்திருந்தால் அவர் ஒருபோதும் விபச்சாரம் செய்திருக்க மாட்டார். 

ஆனால், கவர்ச்சிகரமான தூண்டிலில் உள்ள இரை, விரிக்கப்பட்ட வலையின் மீதுள்ள தானியம் நம்மைப் பாவத்தின் விளைவுகளைப் பார்க்க விடாமல் தடுக்கிறது.

இதற்கு எவ்விதம் தப்பிப் பிழைப்பது?

நம் மனது வேதத்தின் வார்த்தைகளால் நிறைந்திருந்தால் தூண்டிலுக்கும், வலைக்கும் நீங்கலாகித் தப்பிக்க முடியும்.

ஆண்டவராகிய இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, அவர் எப்போதும் வேதத்தின் வார்த்தையின் அடிப்படையில் சோதனையை ஜெயித்தார். 

அவர் சந்தித்த மூன்று சோதனைகளையும், "வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது" என்று பதிலளித்து வெற்றி பெற்றார். 

மனிதக் கண்ணோட்டத்தில், பசியைப் போக்கக் கற்களை அப்பங்களாக மாற்றுவது விவேகமான செயல்; ஆனால் ஆண்டவரின் பார்வையில் அவ்விதம் அல்ல. 

ஆகையால் இயேசு கிறிஸ்து 

"மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல; தேவனின் வாயிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தையாலும் பிழைப்பான் என வேதத்தில் எழுதியுள்ளதே'' என்றார். (மத் 4:4/உபா:8:3).

இப்போது சாத்தான் வேத வசனத்திலிருந்து ஆண்டவரைச் சோதித்தான்;

"நீர் தேவனுடைய குமாரன் என்றால் கீழே குதியும்; ஏனெனில் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று வேதத்தில் எழுதியுள்ளது"ன அவரிடம் சொன்னான் (மத் 4:6/சங் 91:11-12).

இயேசு சாத்தானிடம்: 

"உன் தேவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியுள்ளதே" எனப் பதிலளித்தார் (மத் 4:7/உபா 6:16).

மறுபடியும் சாத்தான் அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும், மகிமையையும் அவருக்குக் காண்பித்து அவரிடம், 

"நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்" என்றான் (மத் 4:8-9).

அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து, 

"அகன்று போ, சாத்தானே, 'உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து வணங்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக' என்று வேதத்தில் எழுதியுள்ளது" என்றார் (மத் 4:10/உபா 6:13).

நீங்கள் வேதத்தை அறிந்தால், உங்களால் தூண்டிலைக் கண்டுபிடித்து அதைத் தீர்க்கமாகச் சமாளிக்க முடியும். இதுதான் ‘நாங்கள் தரிசித்து அல்ல, விசுவாசத்தால் நடக்கிறோம்’ என்பதாகும் .

C. கீழ்ப்படியாமை – Disobedience (வச. 15).

இப்போது நாம் உணர்ச்சிகள் (தீய நாட்டம்-Evil Desires) மற்றும் புத்தி (வஞ்சகம்-Deception) ஆகியவற்றைக் கடந்து, மிக முக்கியமான பாடமான, உள் மன விருப்பத்திற்குக் கீழ்ப்படிவதை (Will Determination) கற்றுக் கொள்வதை  நோக்கி நகர்கிறோம். 

பாவத்திற்குச் சிக்குவதை, வலையை விரித்து வேட்டையாடப்படுதல் மற்றும் தூண்டில் மூலமாக மீனைப் பிடித்தல் என்கிற உதாரணங்கள் மூலம் விளக்கிய யாக்கோபு, இப்போது பாவத்துக்கு இணங்கும் அடுத்த நிலையை, ஒரு கர்ப்பம் தரிக்கும் செயலாக மாற்றி விவரிக்கிறார். 

பாவத்தின் உருவகமாகக் கர்ப்பமாகுதலை வேதம் அடிக்கடி சுட்டிக் காண்பிக்கிறது (யோபு 15:35; ஏசா. 33:11; 59:4, 13; யாக்கோபு 1:13-15). ஏனெனில் பாவம் உள சம்மதம் (Approval of the Will) இல்லாமல் நிகழ்வதில்லை.

தீய ஆசை தூண்டிலில் உள்ள புழுவை உண்பதற்கான ஒரு ஆர்வத்தை உருவாக்குகிறது. நம் உள சித்தம் அதை அங்கீகரிக்கிறது. அதைச் செயல்படுகிறது. அதன் விளைவாகப் பாவம் பிறக்கிறது. நாம் உணர்ந்தோமோ இல்லையோ, அதில் சிக்குண்டு மாட்டிக் கொள்கிறோம். குழந்தை பிறந்தது, அது முதிர்ச்சியடையும் வரை காத்திருங்கள்!

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது உணர்வுகள் அடிப்படையில் செயல் புரிவதல்ல அது நமது உள விருப்பத்தின் (Will Determination) தீர்மானத்தில் நிகழ்வது. “வேதத்தை வாசிக்க எனக்கு நேரமில்லை” அல்லது, "ஜெபக் கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு மனமில்லை." என விசுவாசிகள் சொல்வதை நான் அடிக்கடி கேட்கிறேன். உண்மையில் அதில் அவர்களுக்கு விருப்பமில்லை. 

குழந்தைகள் உணர்ச்சிகளின் அடிப்படையில் செயல்படுகிறார்கள், ஆனால் முதிர்ச்சியடைந்தவர்கள் மன விருப்பத்தின் தீர்மானங்கள் எதைச் சரி என உணர்த்துகிறதோ அதன் அடிப்படையில் செயல்படுகிறார்கள். 

அவர்கள் மனதில் சரியானது என அறிந்ததால் அதைச் செய்கிறார்கள்; உணர்ச்சிகளைச் சார்ந்து அல்ல. 

முதிர்ச்சியடையாத கிறிஸ்தவர்கள் ஏன் எளிதில் சோதனையில் விழுகிறார்கள் என்பதன் காரணத்தை இது விளக்குகிறது: அவர்கள் தங்கள் உணர்வுகள் அடிப்படையில் முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறார்கள். 

சபலங்களை எதிர் கொள்வதில் நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் உள விருப்பத்தை (Will Determination) கட்டுக்குள் வைத்துப்  பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாகக் கர்த்தர் உங்கள் வாழ்க்கையைத் தீர்க்கமானதாகக் கட்டுப்படுத்துவார். 

"ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்." (பிலி. 2:13).

D. மரணம்-Death (வச. 15).

கீழ்ப்படியாமை வாழ்க்கையில் ஆசீர்வாதத்தை அல்ல; மரணத்தையே கொண்டு வருகிறது. பாவம் முதிர்ச்சியடையப் பல ஆண்டுகள் ஆகலாம், ஆனால் அது முதிர்ச்சியடையும் போது, அதன் விளைவு மரணம். 

பாவச் செயல்களைச் செய்தால், அதன் விளைவாக இறுதியில் ஏற்படவிருக்கும் அழிவை மனக் கண்களால் கண்டு கொள்ள முடிந்தால், மனதில் எழும் சபலங்களுக்கு நாம் அடிபணியாமல் இருக்க அது நம்மை ஊக்குவிக்கும். தேவனுடைய வார்த்தையை மட்டும் விசுவாசித்து வாழ்பவருக்கே இது சாத்தியம்.

"பொல்லாதவர் சாகிறது எனக்கு எவ்வளவேனும் விருப்பமோ? அவர்கள் தம் வழிகளினின்றும் திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் பிரியம்? என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்" (எசே.18:23).

கர்த்தர் நம்மை நேசிப்பதால், இரட்சகரைக் கிருபையாகத் தந்து இந்த விலையேறப் பெற்ற மீட்பை ஈவாக நமக்கு அளித்துள்ளார். 

பாவம் வளர்ச்சியடைந்து மரணத்தை விளைவிக்கும்  இந்த நான்கு படி நிலைகளும் முதலாவது நிகழ்ந்த ஆதாம், ஏவாள் பாவத்தில் மிகச் சரியாகச் சித்தரிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன (ஆதி. 3). 

ஏவாளின் ஆர்வத்தைக் கூட்டி, அவளைக் கவர்ந்திழுக்க ‘தேவர்களைப் போல இருப்பீர்கள்’ எனும் தூண்டிலைச் சர்ப்பம் பயன்படுத்தியது: 

"நீங்கள் அதை உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும்; நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்” (ஆதி. 3:5). 

அறிவைப் பெறுவது தவறா? கனியை உண்பதில் என்ன தவறு? "மரத்தின் கனிகள் பார்வைக்கு நல்லது'' என்று ஏவாள் பார்த்தாள். அவளுடைய ஆசை தூண்டப்பட்டது (ஆதி. 3:6). 

2 கொரிந்தியர் 11:3-ல் சர்ப்பம் ஏவாளை ஏமாற்றியதை பவுல் விவரித்தார்:

"ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தாலே ஏவாளை வஞ்சித்தது போல, நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டுக் கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும் தூய்மையையும் இழந்து விடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன்." 

சாத்தான் தந்திரக்காரன் (Satan A Deceiver), அவன் எப்போதும் மனதை ஏமாற்ற முயல்கிறான். 

தடை செய்யப்பட்ட மரத்தின் கனி நல்லது, இனிமையானது, அதை உண்பது அவளுக்குப் புத்திசாலித்தனமாக இருக்கும் என்பவை, சாத்தான் ஏவாளுக்குப் பயன்படுத்திய தூண்டில். அவள் தூண்டிலைப் பார்த்தாள், ஆனால் கர்த்தருடைய எச்சரிக்கையை மறந்துவிட்டாள்: 

"நீ அதை உண்ணும் நாளில் சாகவே சாவாய்" (ஆதி. 2:17). 

ஏவாள் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் மரத்தின் பழங்களை எடுத்துச் சாப்பிட்டாள். பின்னர் அதை அவள் தன் கணவனிடம் பகிர்ந்து கொண்டாள். ஆதாமும் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. ஆதாம் நேரிடையாக வஞ்சிக்கப்படவில்லை, ஆனால் கண்களை விரித்து அதை இச்சித்து பாவம் செய்ததால், அவரது பாவமே மனித இனத்தைச் சோகத்தில் ஆழ்த்தியது (ரோ. 5:12-21; 1 தீமோ. 2:12-14). 

ஆதாம் மற்றும் ஏவாளுக்கு உடனடியாக ஆவிக்குரிய மரணம்  நேரிட்டது (தேவ பிரசன்னத்தை இழந்தனர்). இறுதியில் அது சரீர மரணத்தையும் ஏற்படுத்தியது. 

ஆதாமின் காரணமாக எல்லா மனிதர்களும் மரணமடைகின்றனர் (1 கொரி. 15:21-22). இயேசு கிறிஸ்து இல்லாமல் மரிக்கும் நபர் நித்திய மரணத்தை அனுபவிப்பார் (வெளி. 20:11-15). 

ஆகவே, நீங்கள் சபலத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையின் போதெல்லாம், உங்கள் கண்களைத் தூண்டிலிலிருந்து விலக்கி, பாவத்தின் இறுதி விளைவுகளைப் பார்க்கும் படி, உங்களது கண்கள் முன்னோக்கிப் பார்க்கட்டும்.

ஆண்டவரின் இறுதி தீர்ப்பு. 

"பாவத்துக்குக் கிடைக்கும் கூலி மரணம்; மாறாக தேவன் கொடுக்கும் அருகொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு. (ரோமர் 6:23).


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.
படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

யாக்கோபு 1: 4–12

அத்தியாயம் இரண்டு: யாக்கோபு முதல் அதிகாரம் தொடர்ச்சி- 1: 4-12 



சரணடைந்த மனம் - A Surrender Will (1:4, 9–11):

கர்த்தர் நம்மில் நற்பண்புகளை உருவாக்க வேண்டுமெனில், அதற்கு நாம் விருப்பத்துடன் ஒத்துழைக்க வேண்டும். அவர் வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிய மறுத்து எதிர்த்தால், அவர் நம்மை சிட்சித்து கீழ்ப்படிதலை கற்றுத் தருகிறார். நாம் கீழ்ப்படிந்து நடந்தால், நமக்கென்று அவர் வைத்திருக்கும் தமது திட்டத்தை, நம்முடைய வாழ்வில் நிறைவேற்றுகிறார். 

ஆண்டவர் தமது படைப்புகள் அனைத்தும் முழுமை பெற்றதாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். அவைகள் ஒருபோதும் அறைகுறையாக இருக்க விரும்புவதில்லை. அவைகள் அனைத்தும் தரமானதும், முழுமையானதாகவும் இருக்க விரும்புகிறார். இப் பிரபஞ்சத்தின்  துவக்கத்தில், தாம் படைத்த அனைத்தையும் கண்டு திருப்தியாகி, அவைகளைப் பார்த்து நல்லது எனச் சொன்னார். 

இரட்சிக்கப்பட்ட மனிதர்கள் முதிர்ச்சி நிறைந்தவர்களாக வாழ வேண்டும் என்பதே கர்த்தரின் எதிர்பார்ப்பு. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்; ஒரு குழந்தை வளர்ச்சியடையாது, எப்போதும் சிறு மழலையாகவே செயல் புரிந்தால், அது பெற்றவர்களுக்கு எவ்வளவு சோகத்தைத் தரும். 

ஆம், குழந்தைகள் வளர வேண்டும். அந்த வளர்ச்சியின் பாதையில் அவர்கள் தனித்து செயல் புரிய வேண்டும். அது கடினமான ஆபத்து நிறைந்த பயணம் தான். ஆனாலும் அவர்கள் அடையும் வெற்றியைக் காணும் போது அது பெற்றோருக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகிறது. உண்மையில், குழந்தைகள் வளர்ந்து பொறுப்புடன் செயல்படுவதைப் பார்த்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

இருந்த போதிலும் பல கிறிஸ்தவர்கள் தங்களுக்கு நேரிடும் வாழ்க்கையின் சோதனைகளிலிருந்து விலகி ஓடி, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இதன் விளைவாக அவர்கள் ஒருபோதும் வளர்ச்சி அடைவதில்லை. "சிறு பிள்ளைகள்" "இளைஞர்கள்" ஆக வளர வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். மேலும் "இளைஞர்கள்" "தந்தைகளாக" ஆக முதிர்ச்சி அடைய வேண்டும் எனவும் விரும்புகிறார் (1 யோவான் 2:12-14). 

ஒரு முழுமையான கிறிஸ்தவ வாழ்க்கையின் வளர்ச்சி படிநிலைகளில், திரியேக தேவன் நிறைவேற்றும் மூன்று பணிகளை பவுல் கோடிட்டுக் காட்டி உள்ளார் (எபே. 2:8-10). 

முதலில், கிறிஸ்து நமக்காகச் செய்யும் வேலை (Christ does for us-Salvation); அது இரட்சிப்பு. 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தம்மையே  சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்து இந்த பரிகாரத்தை நிறைவேற்றி முடித்தார். நாம் அவரை விசுவாசித்தால், அவர் நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்கிறார். 

இரண்டாவதாக, ஆவியானவர் நமக்குள்ளாகச் செய்யும் வேலை (The Holy Spirit does in us-Sanctification); பரிசுத்தமாக்குதல். 

கர்த்தர் நம் மனதில் நற்குணங்களை உருவாக்குகிறார். அதனால் நாம் நற்செயல்கள் செய்ய உந்தப்படுகிறோம். தொடர்ந்து நற்செய்கைகள் செய்வதன் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிறிஸ்தின் சாயலுக்கு ஒப்பாக மாறுகிறோம். ஆம், நாம் அவருடைய கையினால் உருவாக்கப்படும் படைப்பாக வளர்கிறோம்.

"தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார்." (ரோமர் 8:29). 

மூன்றாவதாக, கர்த்தர் நம் மூலம் செய்வது (God does through us-Service); சேவை.

நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் நற்செயல்கள் செய்வதற்காகப் படைக்கப்பட்டு இருக்கிறோம். ஆனால் நாம் சேவை புரிவதற்கு முன்பாக, முதிர்ச்சி அடைய வேண்டும் எனக் கர்த்தர் விரும்புகிறார். அவர் நம் மூலமாக முழுமையாகச் செயல்படுவதற்கு, நம்மில் கிறிஸ்துவின் பண்புகள் உருவாக வேண்டும். 

ஆபிரகாமுக்கு வாக்களிக்கப்பட்ட மகனைக் கொடுப்பதற்கு முன், கர்த்தர் இருபத்தைந்து ஆண்டுகள் அவரை பல கடினமான பாதைகள் வழியாக நடத்தி உருவாக்கினார். யோசேப்பின் வாழ்க்கையில் கர்த்தர் பதின்மூன்று ஆண்டுகள் செயல்பட்டு அவரை உருவாக்கினார். யோசேப்பு எகிப்தின் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு முன்பாக பல்வேறு கடினமான சோதனைகளுக்கு அவரை உட்படுத்தினார். இஸ்ரவேலரை நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் வழி நடத்த ஏதுவாக, மோசேயை என்பது வருடங்கள் தயார் செய்தார். நம்முடைய கர்த்தரும், தம்முடைய சீடர்களுக்கு மூன்றரை ஆண்டுகள் பயிற்சி அளித்து அவர்களை அப்போஸ்தலர்களாக உருவாக்கினார். 

ஆனாலும், கர்த்தர் நம் சம்மதமின்றி நம்மில் செயல்பட விரும்புவதில்லை. அவர் ஒவ்வொரு மனிதருக்கும் அந்த தெரிந்தெடுக்கும் சுயாதீனத்தை (Freedom of Choice) அளித்துள்ளார். ஆகக் கர்த்தர் நம்மில் செயல்புரிய, நமக்கு முழுமையாகச் சரணடைவதற்கு விருப்பம் இருக்க வேண்டும். ஒரு முதிர்ச்சி அடைந்த நபர் கர்த்தரின் திருவுள விருப்பத்துக்கு எதிராக வாதிடுவதில்லை; மாறாக, அவர் அதை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்கிறார், மகிழ்ச்சியுடன் அர்ப்பணித்துக் கீழ்ப்படிகிறார். 

"மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு, வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவர்களாயிராமல் கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள். " (எபே. 6:6). 

சரணடைவதற்கு விருப்பங்கள் இல்லாமல், சோதனைகளை எதிர் கொள்ள முயன்றால், முதிர்ச்சி அடைந்த பெரியவர்களாக அல்ல, முதிர்ச்சியடையாத குழந்தைகளைப் போலவே நாம் முடிவடைவோம். 

யோனா தீர்க்கதரிசி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நினிவேயில் புறஜாதிகளுக்குப் பிரசங்கிக்கும்படி கர்த்தர் யோனாவுக்குக் கட்டளையிட்டார். யோனா அதற்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டார். அவர் நினிவே செல்வதற்குப் பதிலாக தர்சுவை நோக்கி கப்பலில் பயணம் செய்தார். ஆனாலும், யோனா தீர்க்கதரிசியைத் தனது பணியை ஏற்றுக்கொண்டு செய்வதற்காகக் கர்த்தர் மீனின் வயிற்றில் வைத்து யோனாவிற்கு பாடம் கற்பித்தார். ஆனாலும், யோனா கர்த்தருக்கு இதயப்பூர்வமாகக் கீழ்ப்படியவில்லை. அவர் இந்த முதிர்ச்சியடையும் அனுபவத்தில் வளரவில்லை.

எவ்வாறு யோனாவைக் குறித்து இவ்விதமான முடிவுக்கு வர முடியும்? 

ஏனென்றால், யோனா தீர்க்க தரிசன புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில், அவர் ஒரு முதிர்ச்சியடையாத குழந்தையைப் போல எரிச்சல் அடைகிறார்! கர்த்தர் நினிவேவை அழிப்பார் என்ற நம்பிக்கையில் ஊருக்கு வெளியே அமர்ந்து  காத்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை. அப்போது அவர் ஒரு குழந்தையைப் போலப் பொறுமையிழந்து, சூரியன், உஷ்ணமான காற்று, ஆமணக்கு செடி, பூச்சி, மற்றும் கர்த்தர் என அனைத்தின் மீதும் எரிச்சலுடன் குமுறிக் கொண்டிருக்கிறார். 

ஒரு குழந்தை முதிர்ச்சியை நோக்கி வளர ஏதுவாக, அதன் தாய் செய்யும் முதன் முதலான செயல், அதற்குப் பாலூட்டுவதை நிறுத்துவது ஆகும். அது ஒரு கடினமான கட்டம். 

தனது தாய் பாலூட்டுவதை நிறுத்தும் போது, ​​​​அக் குழந்தை தனது தாய் தன்னை இனி  நேசிக்கவில்லை எனவும், எல்லாமே அதற்கு எதிராக நடக்கிறது என்றும், அதன் பிஞ்சு மனதில் உறுதியாக நம்புகிறது. 

உண்மையில், பாலூட்டுதலை நிறுத்துதல் என்பது குழந்தை முதிர்ச்சி மற்றும்  தனது சுதந்திரத்தை நோக்கி நகரும் ஒரு வளர்ச்சி நிலையாகும். அது குழந்தைக்கு மிகத் தேவையானதும், நல்லதும் கூட! 

சில சமயங்களில் கர்த்தர், தம் குழந்தைகளை அவர்களின் குழந்தைத்தனமான பொம்மைகளைச் சேகரிக்க விரும்பும் முதிர்ச்சியற்ற மனப்பான்மையிலிருந்து விலக்கிடக் கடினமான பாதைகளில் நடத்துகிறார்.

தாவீது இந்த காட்சியைச் சங்கீதம் 131:2-ல் சித்திரிக்கிறார்: 

"தாயின் பால் மறந்த குழந்தையைப் போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணிணேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப் போல் இருக்கிறது" (சங். 131:2). 

குழந்தைத்தனமான காரியங்களிலிருந்து நம்மை விலக்கி வைக்கக் கடவுள் சோதனைகளைப் பயன்படுத்துகிறார். ஆனால் நாம் அப்போதும் அவரிடம் சரணடையவில்லை என்றால் தொடர்ந்து முதிர்ச்சியற்றவர்களாகவே இருந்து விடுவோம். 

யாக்கோபு இந்த கருத்தை விளக்க இரண்டு வெவ்வேறு வகையான கிறிஸ்தவர்களைச் சுட்டி காண்பிக்கிறார் (யாக்1:9-11): ஒருவர் ஏழை மற்றவர் பணக்காரர். 

இந்த இரு பிரிவு மக்களிடையே வெளிப்படையாக, பணம் மற்றும் சமூக அந்தஸ்து வித்தியாசம், உண்மையான பிரச்சனைகளாக இருந்தன (யாக் 2:1-7, 15-16; 4:1-3, 13-17; 5:1-8  பார்க்கவும்). ஆனால் கர்த்தரின் சோதனைகள் நாம் எந்த நிலையில் வாழ்ந்தாலும், சம நிலைப்படுத்தி முதிர்ச்சியோடு வாழ  உதவும் வழியைக் கற்றுத் தருகின்றன. 

ஒரு ஏழை தனக்குச் சோதனை வரும்போது, கர்த்தர் அதை அனுமதிக்கிறார் என ஏற்றுக் கொண்டு, அவருக்கு அருளப்படும் வழி நடத்துதல் மற்றும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் மகிழ்ச்சி அடைய வேண்டும். 

அது போல ஒரு ஐசுவரிய வானுக்குச் சோதனை வரும்போது, ​​தேவன் தாம் அதை அனுமதிக்கிறார் என ஏற்றுக் கொண்டு, கிறிஸ்தில் அவருக்கு அருளப்பட்ட ஐசுவரியங்கள் ஒருபோதும் வாடிப்போகவோ, மங்கவோ முடியாது என உணர்ந்து கர்த்தர் நடத்தும் வழிகளில் ஆறுதல் அடைய வேண்டும். 

வேறுவிதமான வார்த்தைகளில் கூறுவதென்றால், வாழ்க்கையின் சோதனைகள் மூலம் கர்த்தர் உங்களை அழைத்துச் செல்வது உங்கள் பொருள் வளங்களை நோக்கி அல்ல; அது உங்கள் ஆவிக்குரிய வளங்கள். 

இதுவரை யாக்கோபிடமிருந்து நாம் மூன்று பின்பற்ற வேண்டிய கட்டாய பாடங்களை கற்றுக் கொண்டோம்: 

1. சோதனைகளை நான் மகிழ்ச்சியான மன நிலையுடன் அணுக வேண்டும்.

2. சோதனைகள், நான் முதிர்ச்சியடைய அருளப்படுகிறது எனப் புரிந்து கொள்ளும் மனம் வேண்டும்.

3.  சோதனை காலங்களில் என்னில் நற்பண்புகள் உருவாகக் கர்த்தரிடம் நான் முழு விருப்பத்துடன் சரணடைய வேண்டும். 

அவர் நான்காவதாக ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார். நாம் ஞானத்திற்காக ஜெபிக்க வேண்டும். 

கேள்—ஒரு விசுவாசமுள்ள இதயம் (1:5–8):

இந்த நிருபத்தில் யாக்கோபு குறிப்பிடும் விசுவாசிகள் அவர்களுடைய ஜெப வாழ்க்கையில் சிக்கல்களைக் கொண்டிருந்தனர் (யாக்கோபு 4:1-3; 5:13-18). 

நம் வாழ்வில் சோதனைகள் தரும் துயரங்களை அனுபவிக்கும் சூழலில், கர்த்தரிடம் எதைக் கேட்டு ஜெபிக்க வேண்டும்? 

யாக்கோபு கற்றுத் தருகிறார்: கர்த்தரிடம் ஞானத்திற்காக வேண்டுதல் செய்யுங்கள். 

ஞானத்தைப் பற்றி யாக்கோபு நிருபத்தில் சொல்ல நிறைய இருக்கிறது (யாக்கோபு 1:5; 3:13-18). யூத மக்கள் ஞானத்தை விரும்பினர். நீதிமொழிகள் புத்தகம் அதற்குச் சாட்சியாக இருக்கிறது. 

அறிவு என்பது விஷயங்களைப் பிரித்துப் பார்க்கும் திறன் என்றும், ஞானம் என்பது அவற்றை ஒன்றிணைக்கும் திறன் என்றும் ஒருவர் கூறினார். அறிவை சரியாகப் பயன்படுத்துவது ஞானம். 

அவர் மானிடர்க்குக் கூறினார்; ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்; தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு. (யோபு 23:23)

நாம் அனைவரும் படித்த முட்டாள்களைக் குறித்து அறிவோம். அவர்கள் சிறந்த கல்விப் பட்டங்களைக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களால் வாழ்க்கையில் எளிமையான முடிவுகளை எடுக்க முடியாது. நான் ஒரு முறை ஒரு இறையியல் கல்லூரி வளாகத்தில் ஒரு திறமையான பேராசிரியரைச் சந்தித்தேன். அவர் இரண்டு தொப்பிகளை அணிந்திருந்தார்! 

சோதனைகளைச் சந்திக்கும்போது நமக்கு ஏன் ஞானம் தேவை? 

ஏன் பலம், அல்லது கிருபை, அல்லது விடுதலையைக் கேட்கக்கூடாது? 

ஞானம் நமக்கு இருந்தால் சோதனைகள், நாம் முதிர்ச்சியடையக் கர்த்தர் கொடுக்கும் வாய்ப்புகள் என உணருவோம். அந்த வாய்ப்புகளை வீணடிக்க மாட்டோம். இந்த காரணத்திற்காகத் தான் நமக்கு ஞானம் தேவைப்படுகிறது. 

சோதனை சூழ்நிலைகள், நமது நன்மைக்காகவும், கர்த்தரின் நாம மகிமைக்காகவும் நாம் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள, ஞானம் நமக்கு உதவுகிறது. 

என்னுடன் பணிபுரியும்  ஒரு திறமையான செயலர் தமது வாழ்வில் பெரும் சோதனைகளைச் சந்தித்துக் கொண்டிருந்தார். முதலில் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது கணவரும் பார்வை இழந்தார். பின்னர் அவரது கணவர் நோயின் தீவிரத்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் ஒருவேளை  இறந்துவிடக்கூடும் என நாங்கள் எதிர்பார்த்தோம்.  

அடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் அவரை தேவாலயத்தில் சந்தித்தேன். அப்போது அவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று உறுதியளித்தேன்.

"நீங்கள் கர்த்தரிடம் எனக்கு எதைத் தரும்படியாக ஜெபிக்கப் போகிறீர்கள்?" என அந்த பெண் கேட்டார். 

அவருடைய கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது. "உங்களுக்கு உதவவும், உங்களைப் பலப்படுத்தவும் நான் ஆண்டவரிடம் ஜெபிக்கிறேன்" எனப் பதில் அளித்தேன்.

“அதற்கு மிக்க நன்றி. நான் அதைப் பாராட்டுகிறேன், ஆனால் இன்னும் ஒரு காரியத்திற்காக நீங்கள் எனக்காக ஜெபிக்க விரும்புகிறேன். 

இந்த சோதனையின் வழியாக நான் கடந்து செல்லும் இந்த வேளையில், கர்த்தர் எனக்கு கற்றுக் கொடுக்க விரும்பும் பாடங்களையெல்லாம் நான் வீணாக்கி விடாமல் இருக்கத் தேவையான ஞானம் எனக்குக்  கிடைக்கப் பிரார்த்தியுங்கள்!”

அந்த சகோதரிக்கு யாக்கோபு 1:5ன் அர்த்தம் என்னவென்று தெரியும். 

யாக்கோபு என்ன கேட்க வேண்டும் (ஞானம்) என விளக்கியது மட்டுமல்லாமல், அதை எப்படிக் கேட்க வேண்டும் என்பதையும் விவரித்தார். 

ஞானத்தை நாம் விசுவாசத்தோடு  கேட்க வேண்டும். நாம் பயப்பட வேண்டிய தேவையில்லை, ஏனென்றால் கர்த்தர் நமது ஜெபத்திற்குப் பதில் அளிக்க ஆயத்தமாக இருக்கிறார். இதற்காக அவர் நம்மை ஒருபோதும் கடிந்து கொள்ள மாட்டார்! 

''அவர் அதிக கிருபை அளிக்கிறார்" (யாக்கோபு 4:6). நாம் வேண்டிக் கொள்ளும்போது மேலும், மேலும், மேலும் அதிக ஞானத்தையும் தருகிறார். 

ஆனால் ஜெபத்திற்கு மிகப்பெரிய எதிரி அவிசுவாசமே.

யாக்கோபு, சந்தேகப்படும் ஒரு விசுவாசியைக் கடல் அலைகளுடன் ஒப்பிடுகிறார். ​​அவை ஒரு நொடி மேலேயும், அடுத்த வினாடி கீழுமாக எழும்பி விழுபவை. 

அலைகளை நம்ப முடியாது என்பதை ஹவாயில் விடுமுறையிலிருந்தபோது உணர்ந்தேன். கடலோரத்தில் ஒரு பாறையில் அமர்ந்து அலைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். பின்னர் சற்று ஓய்வாகத் திரும்பி அமர்ந்து அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும் சூரிய ஒளிக் கதிர்களை ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தீடிரென எனக்குப் பின்னால் ஒரு சத்தம் கேட்டது. யார் நெருங்குகிறார்கள் என்று திரும்பிப் பார்த்தேன். அடுத்த நொடி  ஒரு பெரிய அலை என்னை மூழ்கடித்து நனைத்துச் சென்றது! 

ஒரு போதும் அலைகளை பாராது  திரும்பி அமர்ந்து விடாதீர்கள் - அவை கீழே அமர்ந்தது போலக் காணப்படும், அடுத்த நொடியில் மேலே எழும்பிச் சீறி வரும்.

இதுவே "இரு மனதுள்ள மனிதனின்" அனுபவம். அவர் மனதில் ஒரு நொடி விசுவாசம் கூறுகிறது, "ஆம்!" என, ஆனால் அடுத்த நொடி "இல்லை!" எனும் அவநம்பிக்கை.

"ஆம்!" ஒரு நிமிடம், அடுத்து கணம் "இல்லை!" 

பேதுரு இயேசுவை நோக்கி கடல் மீது நடந்து செல்லும்போது, அவிசுவாசத்தால் அலைகளில் மூழ்கினார் . இயேசு அவரிடம், "அற்ப நம்பிக்கை கொண்டவனே, நீ ஏன் சந்தேகப்பட்டாய்?" என்று கேட்டார் (மத். 14:22-33). 

பேதுரு, அலைகளின் மீது நடக்கத் தொடங்கிய போது, ​​விசுவாசத்துடன் தனது கண்களை கிறிஸ்துவின் மீது வைத்திருந்தார். ஆனால் பெருங்காற்று மற்றும் அலைகளால் அவரது மனம் திசை திருப்பப்பட்டபோது, ​​​​அவர் விசுவாசத்துடன் நடப்பதை நிறுத்திவிட்டார். அடுத்த நொடி மூழ்கத் தொடங்கினார். அவரது இரு மன எண்ணங்களால் கிட்டத்தட்ட மூழ்கிவிட்டார்.

பல கிறிஸ்துவர் அலைகள் மீது அலைக்கழிக்கப்படும் மரத்தக்கைகளை போல இரு வித அனுபவங்களோடு வாழ்கின்றனர்: ஒரு நிமிடம் மேலே, அடுத்த நிமிடம் கீழே. 

இந்த வகையான முன்னும் பின்னுமாக வீசப்படும் வாழ்க்கை முறை முதிர்ச்சி இன்மைக்குச் சான்றாகும். பவுல் இது போன்றதொரு கருத்தை எபேசு சபை மக்களுக்குப் போதித்தார்: 

“ஆகவே, இனி நாம் குழந்தைகளைப்போல் இருக்கக் கூடாது. மனிதருடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் தவற்றுக்கு வழி நடத்தும் ஏமாற்று வழிகளையும் நம்பி, அவர்களுடைய போதனைகள் என்னும் காற்றால் அடித்துச்செல்லப்பட்டு அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக்கூடாது." (எபேசியர்4:14).

விசுவாசமும், ஒன்றுபட்ட இருதயமும் நமக்கு இருந்தால், நாம் தைரியத்துடன் கேட்கலாம்; கர்த்தர் நமக்குத் தேவையான ஞானத்தைத் தருவார். 

நினைவில் கொள்ளுங்கள்: உறுதியற்ற தன்மையும் முதிர்ச்சியற்ற தன்மையும் ஒன்றாக இனைந்தேச் செல்கின்றன. 

யாக்கோபு இந்த பகுதியை ஒரு ஆசீர்வாதத்துடன் முடிக்கிறார்; "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்" (யாக்.1:12). 

பாருங்கள்; அவர் மகிழ்ச்சியுடன் தொடங்கி (யாக்.1:3) ஆசீர்வாதத்துடன் முடிக்கிறார். 

ஒரு செயலைச் செய்யத் துவங்கும் முன்னர், நாம் எவ்வித மனப்பாங்குடன் அந்த செயலை செய்ய வேண்டும் என அணுகுகிறோமோ, அதுவே அந்த செயலின் முடிவைத் தீர்மானிக்கிறது. 

வேதம் சோதனைகளை மகிழ்ச்சியுடன் பொறுமையாகச் சகித்துக் கொள்பவர்களுக்கு ஒரு கிரீடத்தை உறுதியளிக்கிறது என்பது ஒரு பெரிய ஊக்கமாகும். பவுல் தனது நிருபங்களில் தடகள விளையாட்டுப் போட்டிகளின் உதாரணங்களை அடிக்கடி பயன்படுத்தினார். இங்கே யாக்கோபும் அவ்வாறே விளக்குகிறார். 

சோதனைகளைச் சகித்துக்கொள்வதால், ஒரு பாவி இரட்சிக்கப்படுகிறான் என்று அவர் சொல்லவில்லை. சோதனைகளைச் சகித்துக்கொள்வதன் மூலம் ஒரு விசுவாசிக்கு வெகுமதி கிடைக்கும் என்று அவர் கூறுகிறார்.

ஒரு விசுவாசிக்குச் சோதனைகளுக்குப் பின்னர் எவ்விதமான வெகுமதி அளிக்கப்படுகிறது? 

முதலாவதாக, கிறிஸ்துவின் நற்பண்புகள் அவரில் உருவாகி வளர்ச்சி அடைகின்றது. இதுவே எல்லாவற்றையும் விட முக்கியமானது. 

அடுத்ததாக, அவரது நற்குணங்கள் நிறைந்த வாழ்க்கை மூலம் கர்த்தருக்கு மகிமையைக் கொண்டு வருகிறார். 

இறுதியாக, ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்து திரும்பி வரும்போது அவர் ஜீவ கிரீடத்தை வெகுமதியாகப் பெறுகிறார். 

முதலில் சிலுவை, பின்னர் கிரீடம். முதலில் துன்பம், பிறகு மேன்மை. 

வாழ்விலிருந்து சோதனைகளை நீக்குவதன் மூலம் கர்த்தர் நமக்கு உதவுவதில்லை, ஆனால் துயரங்கள் வழியாக நம்மைச் சீர் செய்வதன் மூலம் உயர்வடையச் செய்கிறார். 

சாத்தான் நம்மை அழிக்கச் சோதனைகளைப் பயன்படுத்த விரும்புகிறான், ஆனால் தேவன் நம்மைக் கட்டியெழுப்ப  அவற்றைப் பயன்படுத்துகிறார். 

யாக் 1:12 இல், யாக்கோபு ஒரு மிக முக்கியமான வார்த்தையைப் பயன்படுத்தினார்: அன்பு. 

ஆண்டவரை ''நம்புகிறவர்களுக்கு” அல்லது “ கீழ்ப்படிகிறவர்களுக்கு” ​​கர்த்தர் வாக்களித்த ஜீவகிரீடம் அருளப்படும் என்று அவர் எழுதவில்லை. ஆனால் ''அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட'' எனக் குறிப்பிடுகிறார்.

யாக்போபு ஏன் அன்பைப் பயன்படுத்தினார்? ஏனென்றால், இந்தப் பகுதியில் நாம் கடைப்பிடிக்க வலியுறுத்தும் ஒவ்வொரு கட்டாய பாடங்களுக்குப் பின்புலமாக இருந்து நம்மைச் செயல்புரியத் தூண்டுவது ஆண்டவர் மீது நமக்கு இருக்கும் அன்பு. 

சோதனைகளை எதிர்கொள்ளும்போது நமக்கு ஏன் மகிழ்ச்சியான மனப்பான்மை இருக்கிறது? ஏனென்றால் நாம் ஆண்டவரை நேசிக்கிறோம், அவர் நம்மை நேசிக்கிறார், அவர் நமக்குத் தீங்கு செய்யமாட்டார். 

நமக்கு ஏன் புரிந்துகொள்ளும் மனம் இருக்கிறது? ஏனென்றால், அவர் நம்மை நேசிக்கிறார். சோதனைகளின் உண்மையான நோக்கத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார், அதற்குப் பதிலாக நாம் அவரை நேசிக்கிறோம். 

நமக்கு ஏன் ஆண்டவரிடம் சரணடைவதில் விருப்பம்? ஏனென்றால் நாம் அவரை நேசிக்கிறோம். அன்பு இருக்கும் இடத்தில் சரணாகதியும் கீழ்ப்படிதலும் இருக்கும். 

நமக்கு ஏன் விசுவாசமுள்ள இதயம் இருக்கிறது? ஏனென்றால், அன்பும் நம்பிக்கையும் ஒன்றாக இனைந்தே செல்கிறது.

நீங்கள் ஒருவரை நேசிக்கும்போது, ​​​​அவரை நம்புகிறீர்கள். நீங்கள் உறுதியாக நம்புபவர்களிடம் உதவி கேட்கத் தயங்க மாட்டீர்கள். 

யாக்கோபு நாம் பின்பற்றக் கொடுத்த கட்டாய பாடங்களுக்குப் பின்னால் இருந்து நம்மை இயக்கும் சக்தி ஆண்டவர் மீது நமக்கு இருக்கும் அன்பு. 

நாம் கர்த்தரை நேசித்தால், எண்ணுவது, அறிவது, விடுவது, கேட்பது போன்றவற்றைக் கேட்பதில் நமக்கு எப்போதும் பிரச்சனைகள் இருக்காது. 

இதில் மற்றொரு காரணியும் மறைந்துள்ளது: அன்பு நம்மை இறைவனுக்கு உண்மையாக வாழ வைக்கும். 

மனதில் இரட்டை எண்ணம் கொண்ட நபர் ஒரு துரோகம் செய்யும் கணவன் அல்லது மனைவி போன்றவர். அவர் இறைவனையும் உலகத்தையும் நேசிக்க விரும்புகிறார் (யாக். 1:8). உங்கள் மனதில் உண்மை இல்லையென்றால் விசுவாசத்தில் நிலைநிற்க முடியாது.

''இருமனமுள்ளவர்களே!" “பரிசுத்தமாக்குங்கள்” (யாக். 4:8)  என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “கற்பில் நிலைத்திருங்கள்” என்பதாகும். இரு மனமுள்ளவன் எனக் குறிப்பது ஒரு துரோக காதலனின் படம்.

ஆகவே யாக்கோபு அறிவுறுத்துகிறார், "உங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்துங்கள். 

பாலூட்டுவதை நிறுத்த விரும்பும் தாயின் மன நிலையை மீண்டும் தியானிக்கத் திரும்புவோம். 

தன் தாயை நேசிக்கும் குழந்தை, தன் தாய் தன்னை நேசிக்கிறாள் என்று உறுதியாக நம்பும் குழந்தை, தனக்கு அளிக்கப்படும் தாய்ப்பாலை அவள் நிறுத்தினாலும் அது தனது நன்மைக்கே என உண்மையாக விசுவாசித்து வளர ஆரம்பிக்கும். 

கர்த்தரை நேசிக்கும் ஒரு கிறிஸ்தவர், கர்த்தரும் அவரை நேசிக்கிறார் என்பதை அறிந்தவர். ஆண்டவர் சோதனைகளை அவர் வாழ்வில் அனுமதிக்கும் போது அவர் வீழ்ச்சியடைய மாட்டார். அவர் தேவனின் அன்பில் பாதுகாப்பாக இருக்கிறார். அவருக்கு இரு மனம் கிடையாது. அவர் இரு விதமான எண்ணங்கள் கொண்டவர் இல்லை. அவர் இறைவனையும் உலகத்தையும் நேசிக்க முயல்வதில்லை. 

லோத்து இருமனம் கொண்டவர்; சோதனைகள் வந்தபோது, ​​அவர் படுதோல்வி அடைந்தார். ஆபிரகாம் ஆண்டவரின் நண்பர்; அவர் தேவனை நேசித்தார் மற்றும் அவரை விசுவாசித்தார். சோதனைகள் வந்தபோது, ​​ஆபிரகாம் வெற்றிபெற்று விசுவாசத்தில் முதிர்ச்சியடைந்தார். 

ஆண்டவர் சோதனைகளை அனுப்புவதன் நோக்கம் ஒரு விசுவாசி முதிர்ச்சியடைய வேண்டும் என்பதே. 

"பொறுமை அதன் பரிபூரண வேலையாக இருக்கட்டும், கர்த்தர் வேறு எதையும் விரும்பவில்லை. அவைகள் பரிபூரணமாகவும், முழுமையடையவும் விரும்புகிறார்." 

சார்லஸ் பி. வில்லியம்ஸ் மொழிபெயர்ப்பு அதை வரைபடமாகச் சொல்கிறது: 

"சகிப்புத்தன்மை உங்களில் முழுமையாக உருவாகும் போது, அது நீங்கள் முற்றிலுமாக வளர்ச்சியடைவதற்கும், பரிபூரணமான முதிர்ச்சி நிலையை அடைவதற்கும் உங்களைத் தகுதிப்படுத்தும்." 

அந்த முதிர்ச்சி நிலையை அடைய நீங்கள் விரும்பினால், கிறிஸ்துவின் மீதுள்ள அன்புடன்; எண்ணுங்கள், அறிந்து கொள்ளுங்கள், சரணடையுங்கள், கேளுங்கள்.


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,