ஞாயிறு, 30 ஜூலை, 2023

யாக்கோபு 4: 13-17

 அத்தியாயம் பத்து.

முன்னோக்கித் திட்டமிடுங்கள்.

(Plan Ahead)



 

கர்த்தருக்கு எதிராகப் போர் புரிவதைப் பற்றிப் பேசத் துவங்கி, தேவனது சித்தத்துக்குக் கீழ்ப்படிவதன் அவசியதைக் வலியுறுத்தி இந்த நான்காம் அத்தியாயத்தை யாக்கோபு நிறைவு செய்தார். இந்த இரண்டு கருப்பொருள்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. 


ஒரு விசுவாசி தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படியாமல், அதற்கு எதிராகப் போர் புரியும் போது, அவர் சமாதானத்தை உருவாக்குபவராக இல்லாமல், பிரச்சனை செய்யும் மனிதராக மாறுகிறார்.  


லோத்து சோதோமுக்கு இடம் பெயர்ந்ததால் தன் குடும்பத்திற்குள் பிரச்சனையை ஏற்படுத்தினார். தாவீது விபச்சார பாவம் செய்து தன் குடும்பத்துக்கும், தேசத்துக்கும் தொல்லை கொடுத்தார். கர்த்தரது சித்தத்திற்கு யோனா கீழ்ப்படியவில்லை. அதனால் கடல் கடும் கொந்தளிப்படைந்தது. அதில் சிக்கிய புறஜாதியைச் சேர்ந்த கப்பல் மாலுமிகளுக்குக் கடலே கல்லறையாக மாறும் சூழல் உருவானது.

 

இதில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு நிகழ்வையும் ஆராய்ந்து பார்த்தால், அவர்களது மனப்பாங்கு (Attitude), விருப்பம் (desire), செயல்பட்ட விதம் (Action), ஆகியவை கர்த்தரின் விருப்பத்திற்கு எதிராகப் போர் புரியும் வகையிலிருந்தது.  

 

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் கர்த்தர் ஒரு சிறந்த திட்டத்தை வைத்துள்ளார். இது வெளிப்படையான உண்மை. அவர் ஞானத்தின் தேவன். ஆகவே நம் வாழ்வில் எது நடக்க வேண்டும், அவை எப்படி நடக்க வேண்டும், அது எப்போது  நிகழ வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் அன்பின் தெய்வம்,  எனவே தனது குழந்தைகளுக்கு எது மிகச் சிறந்ததோ அதையே தருபவர். கர்த்தரின் விருப்பம் என்பது அவரது அன்பின் கருணைக்குச் சான்று, ஆனால் பல கிறிஸ்தவர்கள் அப்படி நினைப்பதில்லை. அவரது விருப்பப்படி செய்வதை ஒரு கசப்பான மருந்தாகப் பார்க்கிறார்கள்.

 

ஒரு வாலிபர் மாநாட்டில் இளைஞரொருவர் சற்று குழப்பம் நிறைந்தவராய் என்னிடம் வந்து,


"நான் என் உயிரையும் கர்த்தருக்காகக் கொடுப்பேன், ஆனாலும் எனக்குப் பயமாக இருக்கிறது" என்றார்.


"நீங்கள் எதற்காகப் பயப்படுகிறீர்கள்?".


"கர்த்தர், ஆபத்து நிறைந்த ஒன்றைச் செய்யச் சொல்வாரோ என நான் பயப்படுகிறேன்!"


எனது பதில்: கர்த்தருடைய சித்தத்தைச் செய்வதால் வாழ்க்கையில் ஆபத்து என ஒன்று நிச்சயமாக ஏற்படாது, ஆனால் அவரது விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்டால், உறுதியாக அது ஆபத்தானதுஎந்த இடத்தில் கர்த்தர் உங்களை வைத்திருக்க விரும்புகிறாரோ, அதுவே இந்த உலகில் உங்களுக்கான மிகச் சிறந்த பாதுகாப்பான இடம். 


சில வருடங்களுக்கு முன்பு, என்னுடைய சொந்த ஊழிய பாதையில் ஒரு கடினமான நேரத்தை நான் கடந்து சென்று கொண்டிருந்தேன். அது ஒரு விடுமுறைக் காலம். இது கர்த்தருடைய சித்தம் தானா? என என்னை நானே கேள்விக்குள்ளாக்கிய சூழல் நிலவியது. நான் சங்கீதப் புத்தகத்தைத் தியானித்துக் கொண்டிருந்தேன். ஆண்டவர் எனக்கு சில உறுதியையும், ஊக்கத்தையும், தரும்படியாக ஜெபித்துக் கொண்டு இருந்தேன். அப்போது ​​அந்த விண்ணப்பத்திற்குச் சங்கீதம் 33:11 பதிலாக இருந்தது:


கர்த்தருடைய ஆலோசனை நித்திய காலமாகவும், அவருடைய இருதயத்தின் எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலை நிற்கும்’’.


''கர்த்தரது சித்தம் அவரது இருதயத்திலிருந்து புறப்பட்டு வருகிறது, அவருடைய விருப்பம் அவரது அன்பின் வெளிப்பாடு. ஆகையால் அவரது சித்தத்தைச் செய்வதற்கு நான் பயப்பட வேண்டியது இல்லை!" என எனக்குள் சொல்லிக்கொண்டேன்.


கர்த்தரின் விருப்பத்தை நேசித்து அதன்படி வாழ்வது, எத்தனை பெரிய ஆசீர்வாதம் என்பதைப் புரிந்து கொண்டது, என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.


இந்த திருமறைப் பகுதியில், கர்த்தரின் விருப்பத்தைச் செய்வதில் ஒரு விசுவாசி வெளிப்படுத்தும் மூன்று விதமான அணுகுமுறைகளை யாக்கோபு சுட்டிக்காட்டினார். அவற்றில் ஒன்று மட்டுமே சரியானது. அது ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனக்குள்ளாக வளர்த்துப் பின்பற்ற வேண்டிய ஒன்று.

 

1. கர்த்தரின் விருப்பத்தை அலட்சியம் செய்தல் - Ignoring God’s will (4:13–14, 16)

 

தமது சபையில் உள்ள பணக்கார வணிகர்களுக்காக இந்த பகுதியை யாக்கோபு எழுதியிருக்கலாம். அவர்கள் தங்களது வணிக ஒப்பந்தங்களைப் பற்றி விவாதித்து, எதிர்கால திட்டங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசியிருக்கக் கூடும். அவர்கள் கர்த்தரின் சித்தத்தை நாடியதாகவோ அல்லது சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்காக ஜெபித்ததாகவோ எந்த வித குறிப்புகளும் இல்லை. அவர்கள் தங்களது சொந்த வழி முறைகளைப் பின்பற்றி அதன் வழியாக, தாங்கள் திட்டமிட்ட இலக்கை எத்தனை முறை அடைந்தோம் எனக் கணக்கிட்டு, தங்கள் வாழ்க்கையின் வெற்றியை அளவிட்டார்கள்.


இதன் அடிப்படையில் யாக்கோபு நான்கு வாதங்களை முன்வைத்தார். அது கர்த்தரின் விருப்பத்தை அலட்சியம் செய்வதால் வரும் முட்டாள்தனத்தை உணர்ந்து கொள்ள உதவுகிறது. 


வாழ்க்கை சிக்கலானது – The complexity of life (வ. 13).

 

வாழ்க்கைக்குள் அடங்கி இருக்கும் அனைத்து சம்பவங்களையும் சிந்தித்துப் பாருங்கள்: இன்று -  நாளை (Today-Tomorrow), வாங்குவது – விற்பது (Buying-Selling), லாபம் பெறுவது - அதை இழப்பது (Getting gain-Loss), இங்குச் செல்வது - அங்குச் செல்வது (Going here- Going There) எனும் நிகழ்வுகளால் ஆனது..


அது உறவுகள் மற்றும் ஊர்கள் (Relationships & Places), செயல்பாடுகள் மற்றும் குறிக்கோள்கள் (Activities  & Goals), நாட்கள் மற்றும் வருடங்களால் (Days & years) நிறைந்தது.


நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளிலும் பல முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். இவற்றுள் கர்த்தரின் சித்தத்தைச் செய்வதைத் தவிர, மற்ற முடிவுகள் அனைத்தும் ஒரு புதிர். அந்த முடிவுகள் வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரியாது.


உண்மையில் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய சித்தத்தைச் செய்ய முற்படும்போது, உங்களது ​​வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக மாறத் தொடங்குகிறது. 


உங்களைச் சுற்றியுள்ள இந்த நிதர்சன உலகம் கூட புதிய அர்த்தத்தைப் பெறுகிறது. உங்கள் வாழ்க்கையில் எளிமை (simplicity), இசைவுத்தன்மை  (harmony) உருவாகி, அது தன்னடக்கத்தையும் (poise), நம்பிக்கையையும் (confidence), உருவாக்குகிறது. நீங்கள் இனி புதிரான, அச்சுறுத்தும் பிரபஞ்சத்தில் வாழவில்லை. "இது என் தந்தையின் உலகம்!" என்று நீங்கள் பாடி மகிழலாம்.


வாழ்க்கை நிச்சயமற்றது – The uncertainty of life (வ. 14a).

 

இந்தக் கூற்று நீதிமொழிகள் 27:1-ஐ அடிப்படையாகக் கொண்டதுL


“நாளைய தினத்தைக் குறித்து பெருமை பாராட்டாதே; ஒரு நாள் என்ன கொண்டு வரும் என்று உனக்குத் தெரியாது."

 

இந்த சபையின் தொழிலதிபர்கள் ஒரு முழு வருடத்திற்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தார்கள், ஆனால் தங்களது அடுத்த நாளில் என்ன நிகழும் என்பதைக் கூட முழுமையாக அவர்களால் அறிந்து கொள்ள முடியாது! அவர்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் பேசினார்கள் என்பதைப் பாருங்கள்: “நாங்கள் செல்வோம். ஒரு வருடம் தங்குவோம். வாங்கி விற்று லாபம் ஈட்டுவோம்”. அவர்களின் இந்த மனப்பாங்கு (attitude) லூக்கா 12:16-21 இல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறிய உவமையில் உள்ள செல்வந்தனை நமக்கு நினைவூட்டுகிறது. அந்த மனிதனுக்கு மகத்தான விளைச்சல் கிடைத்தது; அவரது களஞ்சியங்கள் மிகவும் சிறியதாக இருந்தன; ஆகவே அவர் பெரிய களஞ்சியங்களை உருவாக்க முடிவு செய்தார். அதுவே தனது எதிர்காலத்திற்கு அதிக பாதுகாப்பு என நினைத்தார். பின்பு அவர் தனது ஆத்துமாவிடம், ‘ஆன்மாவே, நீ பல வருடங்களாக நிறையப் பொருட்களைச் சேமித்து வைத்திருக்கிறாய்; இளைப்பாறி, புசித்து, குடித்து, களி கூறு” எனச் சொன்னார் (லூக்கா 12:19).


இந்த மனிதனின் பெருமைக்குக் கர்த்தரின் பதில் என்ன? "மதிகேடனே, இந்த இரவில் உன் ஆத்துமா உன்னிடமிருந்து எடுக்கப்பட்டால்" (லூக்கா 12:20).


வாழ்க்கை கர்த்தருக்கு நிச்சயமற்றது அல்ல, ஆனால் அது நமக்கு நிச்சயமற்றது. 


நாம் அவருடைய சித்தத்தின்படி வாழும்போது தான் நாளைய தினத்தைக் குறித்து நம்பிக்கையுடன் இருக்க முடியும், ஏனென்றால் அவர் நம்மை வழி நடத்துகிறார் என்பதை அறிவோம்.


வாழ்க்கை குறுகியது – The brevity of life (v. 14b).

 

வேதத்தில் மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொல்லப்படும் கருப்பொருள்களில் இதுவும் ஒன்று. இது மிக முக்கியமானது. 


நமக்கு வாழ்க்கை நீண்டதாகத் தோன்றுகிறது, அதை ஆண்டுகளில் அளவிடுகிறோம், ஆனால் நித்தியத்துடன் ஒப்பிடுகையில், வாழ்க்கை ஒரு புகை. 


யாக்கோபு, இந்த உதாரண விளக்கக் காட்சியை யோபின் புத்தகத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்தினார். வாழ்க்கை மிகக் குறுகியது என்பதை விளக்க யோபுவின் புத்தகத்தில் பல உருவகங்கள் சித்தரித்திருப்பதை நம்மால் காண முடியும்.

  •  "என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவை விட வேகமானவை" (யோபு 7:6).
  •  "மேகம் பறந்து போகிறது போல" (யோபு 7:9).
  •  "பூமியில் நமது நாட்கள் ஒரு நிழல்" (யோபு 8:9).
  • "இப்போது என் நாட்கள் அஞ்சற்கார் ஓட்டத்திலும் வேகமானவை" (யோபு 9:25), இது செய்திகளை அரசனிடம் அறிவிக்க விரைந்து ஓடிய அரச சேவகர்களைக் குறிக்கிறது.
  • "வேகமாய் ஓடும் கப்பல்களைப் போலவும், இரையின் மேல் பாய்கிற கழுகைப் போலவும் கடந்து செல்கிறது" (யோபு 9:26).
  • "பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு; வருத்தமோ மிகுதி. மலர்போல் பூத்து அவர்கள் உலர்ந்து போகின்றனர்; நிழல்போல் ஓடி அவர்கள் நிலையற்றுப் போகின்றனர். (யோபு 14:1-2).

நாம் ஒவ்வொரு பிறந்தநாளையும் ஆண்டுகளை அளவாக வைத்து அதைக் கணக்கிடுகிறோம், ஆனால் நம் நாட்களை எண்ணும் படியாகக் கர்த்தர் சொல்கிறார் (சங். 90:12). 

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நாளின், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நம்மால் நிச்சயத்துடன் செயல் புரிய முடியும். அந்த நாட்களும் மிக விரைவாக விரைந்து செல்கின்றன.

ஆக நம் வாழ்க்கை காலம் மிகக் குறுகியதாக இருப்பதால், வாழ்க்கையை வெறும் பொழுது போக்காகச் செலவு செய்யக்கூடாது. இந்த உண்மை புரிந்தால், குறுகிய வாழ்க்கையை நாம் நிச்சயமாக வீணடிக்க விரும்ப மாட்டோம். ஆகவே நமது நேரங்களை நித்தியமான விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டும். 

கர்த்தர் தம்முடைய சித்தத்தை அவருடைய வார்த்தையின் வழியாக வெளிப்படுத்துகிறார். ஆனாலும் பெரும்பாலான மக்கள் திருமறையின் போதனைகளை அலட்சியம் செய்கிறார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நம்மை வழி நடத்தக்கூடிய கட்டளைகள் (precepts), கொள்கைகள் (principles) மற்றும் வாக்குறுதிகளை (Promises) திருமறை வழியாகக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அந்த தேவனுடைய வார்த்தையை உணர்ந்து அதற்குக் கீழ்ப்படிவதே வெற்றிக்கான உறுதியான வழி (யோசு. 1:8; சங். 1:3).

மனித இயலாமைThe frailty of man (வச. 16).

"இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மை பாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மை பாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது".


மனிதன் பெருமையுடன் பேசுவது அவனது பலவீனத்தை மட்டுமே மறைக்கிறது. "மனிதன் முன்மொழிகிறான் ஆனால் கர்த்தர் அதை நிராகரிக்கிறார்" என்று தாமஸ் எ கெம்பிஸ் எழுதினார். இதை சாலொமோன் தான் முதலில் கூறினார்: "சீட்டு மடியில் போடப்படும்; காரிய சித்தியோ கர்த்தரால் வரும்" (நீதி. 16:33).


மனிதனால் எதிர்கால நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது. அவனுக்கு எதிர் காலத்தைப் பார்க்கும் ஞானமோ, அல்லது அதைக் கட்டுப்படுத்தும் சக்தியோ கிடையாது. அவன் பெருமை பேசுவது பாவம்; அது அவனை இறைவனாக்குகிறது. கர்த்தரின் விருப்பத்தைச் செய்யாமல், அதை மக்கள் புறக்கணிப்பது எவ்வளவு முட்டாள்தனம். இது ஒரு வழிகாட்டும் வரைபடம் இல்லாமல் இருண்ட காடுகளின் வழியாகச் செல்வதற்கு ஒப்பானது. அல்லது திசைகாட்டி இல்லாமல் கொந்தளிப்பான கடல் வழியாகக் கப்பலைச் செலுத்துவது போன்றது.


நாங்கள் கென்டக்கியில் உள்ள மம்மத் குகைக்குச் சென்றபோது, ​​சுரங்கப்பாதைகள் எங்களுக்குப் பிரமை ஏற்படுத்தியது. அப்போது விளக்குகள் அணைக்கப்பட்டது. அடர்ந்த இருள் எங்களைச் சூழ்ந்தது. அது "பிரசங்க பீட பாறை (Pulpit Rock)" என்கிற இடம். அப்போது சுற்றுப்பயணத்தின் வழிகாட்டி ஓர் ஐந்து வார்த்தை பிரசங்கம் செய்தார்: "உங்கள் வழி காட்டுனருக்கு நெருக்கமாக இருங்கள் (stay close to your guide)." அது உண்மையில் நல்ல ஆலோசனை!

 

2. கர்த்தரின் விருப்பத்தை மீறுதல் – Disobeying God’s Will (4:17)

 

இந்த சபையின் மக்கள் கர்த்தரின் விருப்பத்தை அறிந்திருக்கிறார்கள், ஆனால் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் மனது இல்லை. இந்த மனப்பாங்கு கர்த்தரின் விருப்பத்தை அலட்சியப் படுத்துவதை விட அதிக பெருமையை வெளிப்படுத்துகிறது; ஏனெனில் அவர்கள் மனதில் கர்த்தரிடம் கூறுவது,


‘’நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீர் எதிர்பார்ப்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் இதைக் குறித்து உம்மை விட எங்களுக்கு அதிகம் தெரியும்!


"அவர்கள், நீதியின் வழியை அறிந்த பின்பும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்தக் கட்டளையை விட்டு விலகுவதை விட, அதை அவர்கள் அறியாமல் இருந்திருந்தால், அது அவர்களுக்கு நலமாயிருக்கும்" (2 பேதுரு 2:21).   


கர்த்தரின் சித்தத்தை அறிந்தவர்கள் ஏன் வேண்டுமென்றே அதற்குக் கீழ்ப்படிவதில்லை? ஏற்கனவே ஒரு காரணத்தை நான் பரிந்துரைத்துள்ளேன்: அது பெருமை. "தான் தான் தனது வாழ்க்கையின் எஜமானன், தனது ஆன்மாவின் தலைவன்" என்று மனிதன் பெருமை பேச விரும்புகிறான். தன்னால் எதையும் செய்ய முடியும் என்று எண்ணும் அளவுக்கு அவன் பல அற்புதங்களைச் செய்துவிட்டான்.


மற்றொரு காரணம், கர்த்தரது சித்தத்தின் தன்மையை (Nature of God’s will) பற்றிய அவனது அறியாமை. கர்த்தரின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம் என்பது போல் அவன் செயல்படுகிறான். 


உண்மையில், கர்த்தரின்  சித்தத்தைச் செய்வது என்பது ஒரு தெரிவு அல்ல; அது கடமை (Not an option; it is an obligation). நாம் "விருப்பப்பட்டால் அதைக் கடைப் பிடிக்கவோ அல்லது விட்டுவிடவோ" முடியாது.


அவர் படைப்பாளர், நாம் படைப்புகள்.  நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் இரட்சகர். நாம் அவருடைய பிள்ளைகள். அவர் ஆண்டவர். நாம் அவரது வேலையாட்கள். ஆகவே அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். கர்த்தரின் விருப்பத்தை இலேசாக எடுத்துக் கொள்வது என்பது நம் வாழ்வில் அவரது  தண்டனையை அழைப்பதாகும்.


கர்த்தரின் விருப்பத்தின்படி வாழ்வது துன்பத்திற்கான ஒரு சூத்திரம் எனும் தவறான எண்ணம் பலருக்கு உள்ளது, ஆனால் உண்மை இதற்கு நேர் மாறானது! இறைவனின் விருப்பத்தை மீறுவதே துன்பத்திற்கு வழிவகுக்கும். திருமறையும், பல மனிதர்களின் அனுபவங்களும் இந்த உண்மைக்குச் சாட்சி. கீழ்ப்படியாத ஒரு கிறிஸ்தவர் இந்த வாழ்க்கையின் கஷ்டத்திலிருந்து தப்பிப்பது போல் தோன்றினாலும், அவர் கர்த்தரை எதிர்கொள்ளும்போது என்ன பதில் சொல்வார்?


““எந்த வேலைக்காரன் தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்து, தன்னை ஆயத்தப்படுத்தாமலும், அவருடைய சித்தத்தின் படியும் செய்யாமலும் இருக்கிறானோ, அவன் பல அடிகளால் அடிக்கப்படுவான். ஆனால், அறியாமல், அடிகளுக்குப் பாத்திரமானவற்றைச் செய்தவன், சில அடிகளால் அடிக்கப்படுவான்" (லூக்கா 12:47-48).

 

தேவ சித்தத்தை நன்கு அறிந்தும், வேண்டுமென்றே அதற்குக் கீழ்ப்படியாத கிறிஸ்தவர்களுக்கு என்ன நடக்கும்? 


அவர்கள் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் வரை தங்கள் அன்பான பிதாவால் தண்டிக்கப்படுகிறார்கள் (எபி. 12:5-11). விசுவாசி என்று கூறப்படும் ஒருவர் தவறு செய்தும் தண்டிக்கப்படாவிட்டால், அவர் உண்மையில் மீண்டும் பிறக்கவில்லை, மாறாகப் போலியானவர் என்பதற்கு அதுவே சான்றாகும்.


ஒரு விசுவாசி தவறு செய்யும் போது அவர் தண்டிக்கப்பட்டால், கர்த்தர் அவர் மீது அன்பாக இருக்கிறார் என்பதற்கு அதுவே ஆதாரமாகும். கர்த்தர் அவரை வெறுக்கிறார் என நாம் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பூமிக்குரிய தகப்பர்களாகிய நாம் நம் பிள்ளைகள், உயர்ந்த நிலை அடைய, மதிப்பு மிக்கதொரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகக் கண்டித்து நாம் சொல்லும் படி கீழ்ப்படிந்து நடக்கக் கட்டளையிடுகிறோம். அது போல, நம்முடைய பரலோகத் தகப்பனும் நம்மை நேசிப்பதால், தவறு செய்தால் தண்டித்து நம்மை வழி நடத்துகிறார். 


கர்த்தரின் சிட்சை எனும் வாழ்க்கை பாடம் கடினமாக இருந்தாலும், நாம் அவருடைய பிள்ளைகள் என்கிற அந்த உண்மை ஆறுதலைத் தருகிறது.


கர்த்தரின் சித்தத்தைச் செய்யாமல் அவரது வார்த்தையை மீறுவதால் பரலோக வெகுமதிகளை இழக்கும் அபாயமும் உள்ளது. 1 கொரிந்தியர் 9:24-27ல், பவுல் விசுவாசியைக் கிரேக்கப் பந்தயங்களில் ஓடுபவர்களுடன் ஒப்பிட்டார். அவர்கள் கிரீடத்தைப் பெறுவதற்கு, விளையாட்டின் விதி முறைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். எதாவது ஒரு போட்டியாளர் விதிகளை மீறியதாகக் கண்டு பிடிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். 1 கொரிந்தியர் 9:27 இல் பவுல் பயன்படுத்தும் ‘’ஆகாதவனாய் போகாதபடி (castaway)’’ என்ற வார்த்தை இரட்சிப்பை இழந்து போவீர்கள் எனக் கூறவில்லை, மாறாக வெகுமதியை இழந்து போவீர்கள் (Disqualified) என எச்சரிக்கிறது. உங்கள் "தகுதியை இழப்பீர்கள்" என்பது ஒரு நல்ல மொழிபெயர்ப்பாக இருக்கும்.


இன்று தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியாமல் வாழ்வது நமக்கு ஒரு பெரிய குற்றமாகத் தோன்றவில்லை, ஆனால் கர்த்தர் திரும்பி வந்து நம்முடைய செயல்களை நியாயம் தீர்க்கும் போது அது எவ்வளவு பெரிய இழப்பு எனப் புரியும் (கொலோ. 3:22-25).

 

3. கர்த்தருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிதல் – Obeying God’s Will (4:15)

 

"ஆண்டவருக்குச் சித்தமானால்" என்பது ஒரு உண்மையான விசுவாசியின் உதடுகளிலிருந்து வெளிப்படும் வெறும் சடங்கான வெற்றுப் பேச்சல்ல: அது அவரது இதயத்தின் மாறாமல் இருக்கும் நிலையான மனப்பான்மை ஆகும்.


"என்னை அனுப்பியவரின் சித்தத்தின்படி செய்து, அவருடைய பணியை முடிப்பதே எனது உணவு" என்றார் இயேசு (யோவான் 4:34).


பவுல் தனது கடிதங்களில், எதிர் கால திட்டங்களைத் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது பெரும்பாலும் ‘’கர்த்தருக்குச் சித்தமானால்’’ எனக் குறிப்பிட்டார் (ரோ. 1:12; 15:30; 1 கொரி. 4:19; 16:7). 


கர்த்தரின் விருப்பத்தின் படி செய்வதை, ஒரு சங்கிலியால் கட்டப்பட்ட சிறைக்கைதி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு செய்வதைப் போலக் கருதி பவுல் செய்யவில்லை; மாறாக, அது அடைக்கப்பட்ட கதவுகளைத் திறந்து அவரை விடுவித்த ஒரு திறவுகோலாகக் கருதினார்.   


இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரு ஒழுங்கு விதியின்படி இயங்குகின்றன. நாம் இந்த சட்டங்களுடன் ஒத்துழைத்து, அவற்றைக் கடைப்பிடித்தால், பிரபஞ்சம் நம்முடன் இணைந்து செயல்படுகிறது. நாம் இந்த சட்டங்களை எதிர்த்துப் போராடி, அவற்றை மீறி செயல் பட்டால், பிரபஞ்சம் நமக்கு எதிராக வேலை செய்யும். உதாரணமாக, சில இயற்பியல் சட்டங்கள் விமானம் பறப்பதை நிர்வகிக்கின்றன. ஒரு விமானத்தை வடிவமைக்கும் போது அந்த விதிகளைக் கடைப்பிடித்து விமானத்தைப் பொறியாளர் உருவாக்குகிறார். அதை ஓட்டுவதில் இருக்கும் நியமங்களை விமானி கடைப்பிடிக்கிறார். அதனால் அந்த விமானத்தின் பெரிய இயந்திரம் சரியாகச் செயல்படுவதைக் கண்டு இருவரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் அவர்கள் அந்த விமானத்தை நிர்வகிக்கும் அடிப்படை சட்டங்களை மீறினால், விளைவு விபத்து. உயிர் மற்றும் பண இழப்பு ஆகும்.


நம் வாழ்வுக்கான கர்த்தரின் விருப்பம் என்பதை, பிரபஞ்சம் இயங்குவதற்கு அவர் உருவாக்கிய சட்டங்களுடன் ஒப்பிடலாம், அந்தச் சட்டங்கள் பொதுவானவை, ஆனால் இதில் விதிவிலக்கும் உண்டு: நம் வாழ்விற்காகத் திட்டமிட்டுள்ள அவரது விருப்பம் நமக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான இரண்டு வாழ்க்கை திட்டமிடப்படவில்லை.


ஆனால், எல்லா கிறிஸ்தவர்களுக்கும் உண்மையாகக் கடைப்பிடிக்க வேண்டிய சில பொதுவான பண்புகள் உள்ளன. 

  • நம்மை அவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பது கர்த்தரின் விருப்பம் (2கொரி. 8:5).
  • நாம் பாலியல் அசுத்தங்களுக்கு விலகி வாழ வேண்டும் என்பது கர்த்தரின் விருப்பம் (1தெச. 4:3).
  • எல்லா விசுவாசிகளும் கர்த்தருக்குள் சந்தோஷப்பட, ஜெபிக்க, நன்றி சொல்ல வேண்டும் (1தெச. 5:16-18).

திருமறையில் உள்ள ஒவ்வொரு கட்டளையும், விசுவாசிகள் கீழ்ப்படிந்து பின்பற்றுவதற்காகக் கொடுக்கப்பட்ட கர்த்தரின் சித்தத்தின் ஒரு பகுதியாகும், அவை கண்டிப்பாகக் கடைப் பிடிக்கப்பட வேண்டும். 


ஆனால் கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் ஒரே விதமாக வேலை செய்வதற்கு அழைப்பதில்லை, அல்லது அதே வரங்களையும் ஊழியத்தையும் பயன் படுத்துவதில்லை. கர்த்தரின் சித்தம் நம் ஒவ்வொருவருக்கும் "பிரத்தியேகமானது"!


கர்த்தரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு நாம் சரியான மனப்பான்மையைக் கொண்டிருப்பது முக்கியம். சிலர் கர்த்தரின் சித்தத்தைச் செய்வது என்பதைக் கடினமான குளிர்ந்த இயந்திரத்தை இயக்குவதற்கு ஒப்பாக நினைக்கிறார்கள். கர்த்தர் இயக்கத்தைத் தொடங்குகிறார், ஆனால் அதைச் சீராகச் செயல்பட வைப்பது நம் கையில் உள்ளது. நாம் ஏதாவது ஒரு காரியத்தில் அவருக்குக் கீழ்ப்படியாமல் போனால், இயந்திரம் செயலிழந்துவிடும், அதனால் வாழ்நாள் முழுவதும் கர்த்தரின் விருப்பத்திற்குப் புறம்பாகச் செயல்படுவோம். கர்த்தரின் விருப்பம் குளிர்ந்த கடினமான இயந்திரம் அல்ல, ஆனால் அதே சமயம் அது தானியங்கி விற்பனை இயந்திரத்திலிருந்து குளிர்பானத்தைப் பெறுவது போன்று எளிமையான வழியில் தீர்மானிப்பதும் அல்ல.


கர்த்தரின் சித்தத்தைச் செய்வது என்பது ஆண்டவருக்கும், விசுவாசிக்கும் இடையே உள்ள ஒரு உயிர்ப்பான உறவு


விசுவாசி ஆண்டவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாத போது இந்த உறவு முறிக்கப்படுவதில்லை, ஏனென்றால் தந்தை தனது குழந்தையை இன்னும் நேசிக்கிறார். அவர் கடினமாக சிட்சிக்க வேண்டியிருந்தாலும் கூட விட்டு விலகாமல் உடன்  இருக்கிறார். கர்த்தரின் விருப்பம் செய்வதை ஒரு குளிர்ந்த இயந்திரத்துடனான உறவாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அதை ஒரு பாதுகாப்புடன் வளரும் உயிருள்ள உடலாகப் பார்க்க விரும்புகிறேன். 


என் உடலில் உள்ள ஒரு உறுப்பில் ஏதேனும் பாதிப்பு இருந்தாலும் கூட, நான் உடனே இறந்து விட மாட்டேன். அந்த பாதிக்கப்பட்ட உறுப்பு மீண்டும் சரியாக வேலை செய்யும் வரை உடலின் மற்ற பாகங்கள் அதை ஈடுசெய்கிறது. வலி உள்ளது; பலவீனமும் உள்ளது; ஆனால் அதற்காக மரணம் நேரிட வேண்டும் எனும் அவசியம் இல்லை.


நீங்களும் நானும் கர்த்தரின் விருப்பத்தைச் செய்வதிலிருந்து விலகுவது எல்லாவற்றிற்குமான தீர்வாகாது. நாம் கஷ்டப்படுகிறோம். அது உண்மை. ஆனால் உடலின் ஒரு பகுதியின் செயலிழப்பை மற்ற உறுப்புகள் ஈடுசெய்வது போல, கர்த்தர் நம்மைத் தம் விருப்பத்திற்குத் திரும்பக் கொண்டுவர நம் மீது ஆளுகை செய்து நம்மைச் சரிசெய்கிறார். இது ஆபிரகாம், யோனா போன்ற தேவ மனிதர்கள் வாழ்வில் தெளிவாக விளக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்.


கர்த்தரின் சித்தத்தைச் செய்வதற்குக் கீழ்ப்படிந்து, அதன் படி வாழும் விசுவாசியின் உறவு தொடர்ந்து வளரும் ஒரு அனுபவம். முதலில், நாம் அவருடைய சித்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் (அப் 22:14). அவரது விருப்பத்தைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. நாம் கீழ்ப்படியத் தயாராக இருந்தால், அதை அவர் வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார் (யோவான் 7:17). 


"கீழ்ப்படிதல் என்பது ஆவிக்குரிய அறிவின் ஓர் அவயம் (obedience is the organ of spiritual knowledge)" என்று கூறப்படுகிறது. இது உண்மைதான். வெற்று ஆர்வம் உள்ளவர்கள் அல்லது அலட்சியமாகக் கவனக்குறைவுடன் இருப்பவர்களுக்கு, கர்த்தர் தமது சித்தத்தை வெளிப்படுத்தாமல், மனப்பூர்வமாக அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியத் தயாராக இருப்பவர்களுக்கே அதை வெளிப்படுத்துகிறார்.


ஆனால் நாம் கர்த்தருடைய சித்தத்தில் சிலவற்றை அறிந்து கொள்வதோடு நின்று விடக்கூடாது. "அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலும், சகல ஞானத்தினாலும், ஆவிக்குரிய அறிவினாலும் நிரப்பப்பட வேண்டும்" என்று அவர் விரும்புகிறார் (கொலோ. 1:9).


சில குறிப்பிட்ட விஷயங்களில் தேவ சித்தத்தைத் தெரிந்து கொள்ள விரும்புவதும் சில விஷயங்களில் அவருடைய சித்தத்தைப் புறக்கணிப்பதும் தவறு. நம் வாழ்வில் உள்ள ஒவ்வொரு பகுதிகளும் கர்த்தருக்கு முக்கியமானது. நம் வாழ்வின் அனைத்துப் பகுதிகளுக்கும் அவரிடம் ஒரு திட்டம் உள்ளது.


தேவ சித்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் (எபே. 5:17). இங்குதான் ஆவிக்குரிய ஞானம் தேவைப் படுகிறது. ஒரு குழந்தைக்குத் தனது தந்தையின் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும், ஆனால் அதை ஏன் விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கக் கூடும். குழந்தைக்கு "என்ன" எதிர்பார்க்கிறார் எனத் தெரியும் ஆனால் "எதற்காக" எதிர்பார்க்கிறார் எனத் தெரியாது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் "சினேகிதர்கள்" என்ற முறையில், கர்த்தர் எதற்காக அப்படிச் செய்கிறார் என்பதை அறியும் பாக்கியம் நமக்கு இருக்கிறது (யோவான் 15:15).


"அவர் மோசேக்குத் தம்முடைய வழிகளையும், இஸ்ரேல் புத்திரருக்குத் தமது கிரியைகளையும் அறிவித்தார்" (சங். 103:7).


கர்த்தர் என்ன செய்கிறார் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்திருந்தார்கள், ஆனால் அவர் அதை ஏன் செய்கிறார் என்பதை மோசே மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது. நாம் தேவனுடைய சித்தத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் (ரோமர் 12:2). அந்த கிரேக்க வினைச்சொல்லின் அர்த்தம் "அனுபவத்தால் நிரூபிப்பது". கர்த்தருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்வதன் மூலம் அதை அனுமானிக்கக் கற்றுக்கொள்கிறோம். 


கர்த்தருக்கு நாம் எவ்வளவு அதிகமாகக் கீழ்ப்படிகிறோமோ, அவ்வளவு எளிதாக எதற்காக அதைச் செய்ய விரும்புகிறார் என்பதையும் கண்டுபிடிக்க முடியும். இது நீச்சல் கற்றுக் கொள்வது அல்லது இசைக்கருவியை வாசிப்பது போன்றது. இறுதியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை "உணர்வுப்பூர்வமாக அனுபவிப்பீர்கள்". 


அது உங்கள் வாழ்வின் இரண்டாவது இயல்பாகி விடுகிறது.

 

“எனது வாழ்க்கைக்கான கர்த்தரின் விருப்பத்தை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது?” என்று தொடர்ந்து கேட்கும் மக்கள், தாங்கள் ஒருபோதும் கர்த்தருடைய சித்தத்தைச் செய்ய முயற்சி செய்யவில்லை என்று அனைவருக்கும் அறிவிக்கின்றனர். 


நீங்கள் உங்களுக்குத் தெரிந்த கர்த்தரின் விருப்பத்தைச் செய்யத் தொடங்குங்கள், அதை நிறைவேற்றும் போது, நீங்கள் அடுத்துச் செல்ல வேண்டிய பாதைக்கான வழியை அவர் காண்பிப்பார். கர்த்தரின் விருப்பம் என்ன என்பதை நீங்கள் கற்று, அதை அனுபவத்தின் மூலம் நிரூபிக்கிறீர்கள். இதனால் வெற்றி தோல்வி இரண்டையும் கற்றுக் கொள்கிறோம். "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்" (மத். 11:29). கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தவை, அதைப் பின்பற்றி நடப்பது, இந்த இரண்டையும் இணைத்து ஒன்றாக நடக்க நுகம் நம்மை அறிவுறுத்துகிறது.


இறுதியாக, தேவ சித்தத்தை இதயத்திலிருந்து மனப்பூர்வமாக நாம் செய்ய வேண்டும் (எபே. 6:6). 


யோனா கர்த்தரின் சித்தத்தை அறிந்தார் (ஒரு அடித்த பிறகு), கர்த்தரின் விருப்பத்தைச் செய்தார், ஆனால் அதை அவர் தனது இதயத்திலிருந்து செய்யவில்லை. கோபமான தீர்க்கதரிசி உண்மையாகக் கர்த்தரை நேசிக்கவில்லை, நினிவே மக்களை நேசிக்கவில்லை என்பதை யோனா 4 சுட்டிக்காட்டுகிறது. அவர் இன்னொரு முறை அடிபடாமல் இருக்கக் கர்த்தரின் சித்தத்தைச் செய்தார்!  


கொடுப்பதைப் பற்றி பவுல் சொன்னது தேவ சித்தத்தைச் செய்வதற்கும் பொருந்தும்: "கட்டாயத்தினாலும்,  ஆதாயத்திற்காகவும் அல்ல, மகிழ்ச்சியுடன் கொடுப்பவரையே தேவன் விரும்புகிறார்" (2 கொரி. 9:7). Grudgingly என்றால் "தயக்கத்துடன், வலியுடன்" என்று பொருள். கர்த்தருடைய சித்தத்தைச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. வேறு வழியில்லாமல் என்பதைக் குறிப்பது தான் "கட்டாயத்தினாலும்" என்ற வார்த்தை. இந்த மக்கள் கீழ்ப்படிகிறார்கள் ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை. அதைச் செய்ய வேண்டும், அவர்கள் விரும்புவதால் அல்ல. அவர்களின் இதயம் அதில் இல்லை.

 

மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம் கடமையில் மகிழ்ச்சி அடைவதே. கடமை மகிழ்ச்சியாக மாறினால், சுமைகள் ஆசீர்வாதங்களாக மாறும்.

 

"நான் பரதேசியாய்த் தங்கும் விட்டிலே உமது நியமங்கள் எனக்கு கீதங்களாயின" (சங். 119:54).

 

நாம் கர்த்தரை நேசிக்கும்போது, ​​அவருடைய சட்டங்கள் எனக்குப் பாடல்களாக மாறும். நாம் அவருக்குச் சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். 


நாம் கர்த்தருக்கு மனமுவந்து சேவை செய்யாமல், வேண்டா வெறுப்பாகச் செய்தால், அவருடைய வேலையை நிறைவேற்றலாம், ஆனால் ஆசீர்வாதத்தை இழக்க நேரிடும். அது கூலிக்காக மாரடித்தது போல இருக்கும். அது ஊழியம் அல்ல, ஆனால் நாம் கர்த்தருடைய சித்தத்தை இதயத்திலிருந்து மனப்பூர்வமாகச் செய்யும்போது, ​​அது எவ்வளவு கடினமான பணியாக இருந்தாலும், நாம் மகிழ்ந்து மன நிறைவுடன் இருக்கிறோம்.


கர்த்தருடைய சித்தத்தை அறிந்து கொள்வதில் அல்லது அதை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தால், அது இறைவனுடனான நமது உறவை நிரந்தரமாகப் பாதிக்கும் என்று ஒருபோதும் நினைக்கக்கூடாது. நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவருடைய மன்னிப்பைப் பெறலாம் (1 யோவான் 1:9). தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால், கர்த்தரை நேசிக்கும் இதயம், அவருடைய சித்தத்தைச் செய்வது, அவருடைய பெயரை மகிமைப்படுத்த உண்மையாக விரும்புவது.


கர்த்தரின் விருப்பத்தைச் செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கும்?

  •  நீங்கள் இயேசு கிறிஸ்துவுடன் ஆழமான கூட்டுறவை அனுபவிக்கிறீர்கள் (மாற்கு 3:35).
  • கர்த்தரின் சத்தியத்தை அறிந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கிடைக்கும் (யோவான் 7:17).
  • உங்கள் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கும் (1 யோவான் 5:14-15).
  • தேவன் விரும்புவதைச் செய்யும் மனிதனோ என்றென்றும் வாழ்கிறான் (1 யோவான் 2:15-17).
  • நிச்சயமாக, இயேசு கிறிஸ்துவின் வருகையில் வெகுமதியை எதிர்பார்க்கலாம் (மத். 25:34).

கர்த்தரின் சித்தத்தைச் செய்வதில், இந்த மூன்று மனப்பான்மைகளில் எது உங்களிடம் உள்ளது?

  •  உங்கள் தினசரி திட்டங்களையும், முடிவுகளையும் எடுக்கும்போது கர்த்தரின் விருப்பத்தை முற்றிலும் புறக்கணிக்கிறீர்களா?அல்லது
  • நீங்கள் கர்த்தரின் சித்தத்தை அறிந்திருந்தும், அதற்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்களா?

இந்த இரண்டு அணுகுமுறையும் தவறானது. இதைக் கடைப் பிடிப்பவரின் வாழ்க்கையில் துக்கத்தையும் அழிவையும் மட்டுமே அது கொண்டு வரும்.

 

ஆனால் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து, அதை நேசித்து, கீழ்ப்படிகிற கிறிஸ்தவர்கள் கர்த்தரின் ஆசீர்வாதத்தை அனுபவிப்பார். அவரது வாழ்க்கை எளிதாக இருக்காது, ஆனால் அது புனிதமாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்.

 

அவருடைய உணவே தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதாக இருக்கும் (யோவான் 4:34); அது அவர் உள்ளத்தின் பிரியமானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும் (சங். 40:8).

 

 

Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

சனி, 22 ஜூலை, 2023

யாக்கோபு 4: 1-12

 அத்தியாயம் ஒன்பது:

போர்களை எப்படி முடிப்பது?

How to End Wars?


"விஸ்கர்ஸ் போர் (War of the Whiskers)" அல்லது "ஓகன் பக்கெட் போர் (War of the Oaken Bucket)" குறித்து எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா?" ஜென்கின்ஸ் போர் ('War of Jenkins' Ear) குறித்து? இவை தேசங்களுக்கு இடையே நடந்த உண்மையான போர்கள். பெரும்பாலான வரலாற்று புத்தகங்களில் அவற்றைக் குறித்துப் படிக்கலாம். 

உலக அமைதி அமைப்புகள், அணு குண்டுகளின் அச்சுறுத்தல்,ஒப்பந்தங்கள், இவை யாவும் இருந்த போதிலும், போர் என்பது வாழ்க்கையின் நிதர்சனம். இன்று நாடுகளுக்கு இடையே மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஏதாவது ஒரு வகையான போர் நிகழ்கிறது - வாகனத்திற்கு எரி வாயு நிரப்பும் நிலையத்தில் பணிபுரிபவர்களுடன் கூட! 

இந்த தியானப் பகுதியில் போரின் முக்கியமான காரணம் எது எனும் கருப்பொருளைப் பற்றி யாக்கோபு விவாதித்தார். உலகில் மூன்று விதமான ஆவிக்குரிய போர்கள் நடக்கின்றன என்றும், இந்தப் போர்களை எதிர்த்து எப்படி வெற்றி பெறுவது என்றும் இந்தப் பகுதியில் விளக்கி உள்ளார்.

1. ஒருவருக்கு விரோதமாக மற்றவர் சண்டையிடுதல் - At War with Each Other (4:1a, 11–12):

"உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதனாலே வருகிறது?" 

கிறிஸ்தவ விசுவாசிகள் மத்தியில் போர்கள்! 

"இதோ, சகோதரர் ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லதும், எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதுமாய் இருக்கிறது!" (சங். 133:1). 

நிச்சயமாக, சகோதர சகோதரிகள் அன்புடனும் நல்லிணக்கத்துடனும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும், ஆனால் பெரும்பாலும் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. லோத்து தனது மாமா ஆபிரகாமுடன் சண்டையிட்டார் (ஆதி. 13). அப்சலோம் தனது தந்தை தாவீதுக்கு எதிராக ஒரு போரை உருவாக்கினார் (2 சாமு. 13-18). ஆண்டவருடைய சீடர்கள் கூட ராஜ்யத்தில் யார் பெரியவர் என்று வாதிட்டு கர்த்தருக்குப் பிரச்சினைகளை உருவாக்கினர் (லூக்கா 9: 46-48). 

சில ஆதி திருச்சபையின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்த்தால், சபை விசுவாசிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததைக் காண முடிகிறது. கொரிந்து சபையின் விசுவாசிகள் சபைக் கூட்டங்களில் ஒருவரோடு ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர் (1கொரி. 6:1-8; 14:23-40). கலாத்திய சபை விசுவாசிகள் ஒருவரையொருவர் "கடித்து பட்சித்தனர்" (கலா. 5:15). எபேசு சபையில் ஆவிக்குரிய ஒற்றுமையை வளர்க்க பவுல் அறிவுறுத்த வேண்டியிருந்தது (எபே. 4:1-16). அவருக்குப் பிரியமான பிலிப்பு சபையிலும் கூட பிரச்சினைகள் இருந்தன: இரண்டு சகோதரிகள் ஒருவரோடு ஒருவர் இணைந்து செல்ல முடியவில்லை (பிலி. 4:1-3). பரிசுத்தமான விசுவாசிகளுக்கிடையே கூட பல்வேறு வகையான கருத்து வேறுபாடுகள் இருந்தது என யாக்கோபு குறிப்பிட்டார்.

வர்க்கப் போர்கள் - Class Wars (2:1–9).

இது கால காலமாக இவ்வுலகில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையில் நிகழும்  நீண்ட நெடிய போர். பொதுவாகப் பணக்காரன் பிறர் கவனத்தை ஈர்க்கிறார், ஏழை புறக்கணிக்கப்படுகிறான். பணக்காரன் மதிக்கப்படுகிறார், ஏழை இழிவாக நடத்தப்படுகிறார். ஆனால், திருச்சபையும் கூட தனது மதிப்பீடுகளைக் குழப்பிக் கொண்டு, பணத்தை வைத்து ஒருவரை மதிப்பது, ஏழைகளைப் புறக்கணிப்பது அல்லது அவர்களை நிராகரிப்பது எவ்வளவு துயரமானது. ஒரு தேவாலயத்தில் ஐக்கியம் என்பது ஆடை மற்றும் பொருளாதார நிலை போன்ற வெளிப்புற விஷயங்களை வைத்துத் தீர்மானிக்கப்பட்டால், அந்த தேவாலயம் கர்த்தரின் விருப்பத்திற்குப் புறம்பாகச் செயல்படுகிறது.

பணியிட போர்கள் - Employment Wars (5:1–6).

ஏழையைக் கட்டுப்படுத்தவும், வருத்தப்படுத்தவும் பணக்காரர்களுக்கு அதிகாரம் உள்ளது. பல தொழிலாளர்களுக்கு அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கூலி உரிய நேரத்தில் தரப்படுவது இல்லை. அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நியாயமான கூலி கிடைப்பதில்லை. இன்றைக்கும் கூட பல தொழிலாளர் இயக்கங்கள், அரசாங்க சட்டங்கள் இருந்த போதிலும், ஒரு நல்ல வேலையைப் பெறுவது என்பது பலருக்கு மிகக் கடினமாக இருக்கிறது. அவர்கள் செய்யும் வேலைக்கு அளிக்கப்படும் வருமானம் குறைவாக உள்ளது.

திருச்சபை சண்டைகள் - Church Fights (1:19-20; 3:13-18).

சபையில் உள்ள பதவிகளை அடைவதற்காக விசுவாசிகள்  ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் போரில் ஈடுபட்டதையும், அவர்களில் பலர் போதகர்களாக, தலைவர்களாக இருக்க விரும்பியதையும் யாக்கோபு குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தேவ வார்த்தையை வாசித்தனர், கேட்டனர், இருந்த போதிலும் அதன் விளைவாக அவர்களது வாழ்வில் எந்தவொரு மாற்றம் அல்லது சீர்திருத்தம் நிகழவில்லை, மாறாக அவர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் சச்சரவு, வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். ஒவ்வொருவரும் தமது கருத்துக்கள் மட்டுமே சரியானவை என்று நினைத்தார்கள். அவர்களது வழிகள் மட்டுமே சரியான வழிகள் என  வாதிட்டனர். அவர்களது ஆராதனை கூடுகையை ஆவிக்குரிய அர்ப்பணிப்பு அல்ல, சுயநல லட்சியங்களே ஆட்சி செய்தது.

தனிப்பட்ட போர்கள் - Personal Wars (4:11-12).

பரிசுத்த விசுவாசிகள், ஒருவருக்கு ஒருவர் விரோதமாகத் தீமைகளைப் பேசினர். ஒருவரையொருவர் நியாயந்தீர்த்தனர். இங்கே, மீண்டும், நாவு தவறாகப் பயன்படுத்தப் படுவதைக் காண்கிறோம். கிறிஸ்தவர்கள் அன்பினால் நிறைந்து உண்மையைப் பேச வேண்டும் (எபே. 4:15); போட்டி மற்றும் காழ்ப்புணர்ச்சி உணர்வில் பிறரைக் குறித்த தீய விமர்சனங்களைப் பேசக்கூடாது. ஒரு சகோதரன் அல்லது சகோதரியைப் பற்றிய உண்மையைப் பேசுவது தீங்கு விளைவிப்பதாக இருந்தால், அதை அன்போடு மறைத்து, அதைக் குறித்து மீண்டும் பேசக் கூடாது (1 பேதுரு 4:8). அவர் பாவம் அல்லது தவறு செய்திருந்தால், தனிப்பட்ட முறையில் அவரிடம் சென்று அவரை மீண்டும் சீர்திருத்த முயல வேண்டும் (மத். 18:15-19; கலா. 6:1-2). 

சபை மக்கள் ஒரு வேளை பாவம் செய்திருந்தால் அவர்களைச் சீர்படுத்த முனைவது அல்லது மதிப்பிடு செய்வதை யாக்கோபு தடை செய்யவில்லை. கிறிஸ்தவர்களுக்கு ஆராய்ந்து பார்க்கும் அறவுணர்வு இருக்க வேண்டும் (பிலி. 1:9-10), ஆனால் கர்த்தரைப் போல் நியாயத்தீர்ப்பை அவர்கள் மீது வழங்கக்கூடாது. நாம் முதலில் நமது சொந்த வாழ்க்கையை ஆராய்ந்து மதிப்பிட வேண்டும், பின்னர் மற்றவர்களைச் சீர்படுத்துவதற்கு உதவ முயல வேண்டும் (மத். 7:1-5). ஒரு குற்ற வழக்கின் எல்லா உண்மைகளையும், ஒருபோதும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. அவர்களது இருதயத்தில் மறைந்து இருக்கும் நிச்சயமான நோக்கங்களை, நம்மால் அறிய முடியாது. ஆக ஒரு விசுவாசியைப் பற்றி தீமையாகப் பேசுவதும், நிச்சயமற்ற ஆதாரங்கள் மற்றும் இரக்கமற்ற நோக்கங்களின் அடிப்படையில் நியாயந்தீர்ப்பது தவறாகும். அது அவருக்கு எதிராகவும், கர்த்தருக்கு எதிராகவும் பாவம் செய்வதற்கு ஒப்பாகும். நாம் நீதிபதிகளாக இருக்க அழைக்கப்படவில்லை; கர்த்தர் மட்டுமே நீதிபதி. அவர் பொறுமை உடையவர். புரிந்து கொள்ளக் கூடியவராகவும் இருக்கிறார்; அவருடைய நியாயத் தீர்ப்புகள் நீதியும் பரிசுத்தமுமானவை; நாம் அவரிடமே விஷயத்தை விட்டு விடலாம். 

பரிசுத்த விசுவாசிகள் ஒருவருக்கொருவர் போரிடுவது துரதிருஷ்டவசமானது. தலைவருக்கு எதிராகத் தலைவர், தேவாலயத்திற்கு எதிராகத் தேவாலயம், கூட்டுறவுக்கு எதிராகக் கூட்டுறவு. ஆக இந்த உலகத்தின் மக்கள் கிறிஸ்தவ மதப் போர்களைப் பார்த்து, "இதோ, அவர்கள் ஒருவரையொருவர் எப்படி வெறுக்கிறார்கள்!" என விமர்சிக்கின்றனர். ஆகவே தான், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்விதமாக ஜெபித்ததில் ஆச்சரியமில்லை,

அவர்கள் அனைவரும் ஒன்றாயிருக்கவும்; பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலும், நான் உம்மிலும் இருக்கிறது போல அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக் கொள்ளுகிறேன்” (யோவான் 17:21).

நாம் ஒருவருக்கு விரோதமாக மற்றவர் போரிடுவதற்கு என்ன காரணம்? நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; அதே இரட்சகரை நம்புகிறோம்; அதே பரிசுத்த ஆவியானவரால் வாழ்கிறோம் - பின்னர் எதற்காக ஒருவருக்கு விரோதமாக மற்றவர் இன்னும் சண்டையிடுகிறோம்? 

இந்த கேள்விக்கான விடையை யாக்கோபு அடுத்ததாக விளக்குகிறார். அது நமக்குள்ளாக அனுதினம் நடந்து கொண்டிருக்கும் இரண்டாவது போர்!!

அக யுத்தம் - At War with Ourselves (4:1b–3):

“உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் ஏற்பட என்ன காரணம்? உங்கள் அவயங்களில் போர் செய்கிற இச்சைகளினால் உண்டானதல்லவா?" (யாக் 4:1). திருச்சபையில் சண்டைகள் உருவாகுவதற்கு, நம் உள்ளத்தில் நிகழும் போர்களும் காரணமாக இருக்கிறது! "உங்கள் இருதத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள். சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய் சொல்லாதீர்கள். வைராக்கியமும் விரோதமும் இருக்கும் இடத்தில் கலகமும் எல்லா தீய செயல்களும் இருக்கும்" (யாக்கோபு 3:14, 16). 

பாவத்தின் சாராம்சம் சுயநலம். ஏவாள் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை, ஏனென்றால் அவள் மரத்தின் கனியைச் சாப்பிட்டு தேவனைப் போல ஞானமடைய விரும்பினாள். ஆபிரகாம் தன் மனைவியைப் பற்றிப் பொய் சொன்னார், ஏனென்றால் அவர் சுயநலத்துடன் தன் உயிரைக் காப்பாற்ற விரும்பினார் (ஆதி. 12:10-20). எரிகோவின் இடிபாடுகளிலிருந்து சில தடைசெய்யப்பட்ட கொள்ளைகளைச் சுயநலத்துடன் எடுத்ததால், ஆகான் இஸ்ரேலுக்குத் தோல்வியை ஏற்படுத்தினான் (யோசு. 7). “அவனவன் தன் தன் வழியில் போனோம்” (ஏசா. 53:6). 

பெரும்பாலும் நமது மதச் சண்டைகளை “ஆன்மிகம்” என்கிற போர்வையில் மறைக்கிறோம். நாம் மோசேயின் மனைவியைப் பற்றிக் குறை கூறி முறையிட்ட மிரியம் மற்றும் ஆரோனைப் போன்றவர்கள், ஆனால் அவர்கள் உண்மையில் மோசேயின் அதிகாரத்தைக் கண்டு பொறாமை கொண்டவர்கள் (எண். 12). அல்லது நாம் பரலோக ராஜ்யத்தில் சிறப்பான சிம்மாசனங்களைக் கேட்ட யாக்கோபு மற்றும் யோவானைப் பின்பற்றுகிறோம். ஆனால் நாம் உண்மையில் விரும்பியது இன்றைய அங்கீகாரம் (மாற்கு 10:35-45). இந்த இரண்டு சுயநல ஆசையின் நிகழ்வுகளால் ஏற்பட்ட விளைவு கர்த்தருடைய மக்களிடையே சிட்சை மற்றும் பிளவு. மிரியத்தின் பாவம் இஸ்ரேலின் முன்னேற்றத்தை ஒரு வாரம் முழுவதும் தடுத்து நிறுத்தியது! 

சுயநல ஆசைகள் ஆபத்தானவை. அவை தவறான செயல்களுக்கு இட்டுச் செல்கின்றன ("நீங்கள் கொலை செய்கிறீர்கள், நீங்கள் சண்டையிடுகிறீர்கள், யுத்தம் செய்கிறீர்கள்," யாக் 4:2). இவை தவறான ஜெபத்திற்கும் இட்டுச் செல்கின்றன ("நீங்கள் ஜெபம் செய்தும் அதைப் பெறவில்லை, ஏனென்றால் நீங்கள் தவறான உள்நோக்கத்துடன் கேட்கிறீர்கள். உங்கள் தகாத இச்சைகளை நிறைவேற்ற விரும்பி விண்ணப்பம் செய்தீர்கள்” (யாக். 4:3). நம்முடைய ஜெப நோக்கம் தவறாக இருக்கும்போது, நமது முழு கிறிஸ்தவ வாழ்க்கையும் தவறாகும். ''ஜெபத்தின் நோக்கம் பரலோகத்தில் மனிதனின் சித்தத்தை நிறைவேற்றுவதல்ல, மாறாகப் பூமியில் கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றுவதே'' என அருமையாகச் சொல்லப்பட்டது. 

"பிறர் பொருளை இச்சையுடன் விரும்பாது இருப்பாயாக" என்பது கர்த்தரின் பத்து கட்டளைகளில் கடைசியாக உள்ளது, ஆனால் அதை நாம் மீறும் போது, மற்ற ஒன்பது கட்டளைகளையும் அது உடைக்கச் செய்யும்! பிறரது பொருளை அடைய விரும்பும் பேராசை ஒரு நபருக்கு விரோதமாகப் பொய்களைச் சொல்லவும், கொலை செய்யவும், அவனது பெற்றோரை அவமதிக்கவும், விபச்சாரம் செய்யவும், மேலும் ஏதோ ஒரு விதத்தில் கர்த்தரின் தார்மீக சட்டங்கள் அனைத்தையும் மீறச் செய்யலாம். சுயநல வாழ்வு மற்றும் சுயநல பிரார்த்தனை எப்போதும் போருக்கு வழிவகுக்கும். மனதின் உள்ளே போர் நடந்தால், இறுதியில் அது வெளியே போராக வெடித்து வெளிப்படும். 

சுயநல ஆசைகளால் நிறைந்து, தங்களை இருதயத்துக்குள் சமாதானமின்றி சண்டையிடுபவர்கள் எப்போதும் மகிழ்ச்சி இல்லாதவர்கள். அவர்கள் ஒரு போதும் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்க மாட்டார்கள். அவர்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக, தங்களுக்குக் கிடைக்காத ஆசீர்வாதங்களைப் பற்றிக் குறை கூறுகிறார்கள். அவர்களால் மற்றவர்களுடன் நெருங்கிப் பழக முடியாது, ஏனென்றால் அவர்கள் எப்போதும் மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள். அவர்கள் தங்களது வாழ்க்கையை அழகானதாக்கும் அந்த "மாயமான இல்லாத ஒன்றை" எப்பொழுதும் தேடுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களது சொந்த இதயங்களில் பிரச்சனை இருக்கிறது. 

சில சமயங்களில் நம்முடைய உண்மையான ஆசைகளை மறைப்பதற்கு ஜெபத்தை ஒரு ஆடையாகப் பயன்படுத்துகிறோம். "ஆனால் நான் அதற்காக ஊக்கமாக ஜெபித்தேன்!" இது ஒரு கிறிஸ்தவர் பயன்படுத்தக்கூடிய மிகப்பெரிய சாக்குகளில் ஒன்றாக இருக்கலாம். கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்ற ஜெபிப்பதற்குப் பதிலாக, அவர் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தருக்கே சொல்கிறோம். நாம் சொன்னதை அவர் செய்யவில்லை என்றால் கோபப்படுகிறோம். இறுதியில் கர்த்தர் மீதான இந்த கோபம் பரவுகிறது. அதனால் தேவ மக்கள் மீது கோபப்படுகிறோம். கர்த்தர் மீதான தங்கள் வெறுப்பைச் சபையின் சக உறுப்பினர்கள் மீது  வெளிப்படுத்திய புனிதர்களால் ஒன்றுக்கு மேற்பட்ட சபைப் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் தங்கள் சொந்த இதயங்களை மட்டுமே பார்த்து, அங்கு நடக்கும் மன போராட்டங்களைப் பார்த்தால், பல ஆலயங்கள் அல்லது குடும்பப் பிரச்சனைகள் தீர்க்கப்படும். 

நாம் ஒற்றுமையாகச் செயல்படும்படி கர்த்தர் நம்மை உருவாக்கினார்; நம் மனம், உணர்ச்சிகள் மற்றும் உள சித்தம் இணைந்து செயல்பட வேண்டும். நாம் நமது உள் மனதுடன் போரிடுவதற்கான காரணத்தை யாக்கோபு கூறினார், அதன் விளைவாக, நாம் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் சண்டை இடுகிறோம்.

கர்த்தருடன் போர் - At War with God  (4:4–10):

நமக்கு நிகழும் புறம் மற்றும் அகம் சார்ந்த ஒவ்வொரு போருக்கும் அடிப்படைக் காரணம், கர்த்தருக்கு எதிரான செயல்படும் நமது மனக் கிளர்ச்சியே. படைப்பின் தொடக்கக் காலத்தில், படைப்புகளுக்கிடையே சரியான இணக்கத்தை நீங்கள் காணலாம், ஆனால் பாவம் உலகில் வந்தது, அது மோதலுக்கு வழிவகுத்தது. பாவம் என்பது அக்கிரமம் (1 யோவான் 3:4), அக்கிரமம் என்பது கர்த்தருக்கு எதிரான கலகம். 

ஒரு விசுவாசி தேவனுக்கு எதிராக எப்படி போரை அறிவிக்கிறார்? அவர் ஆண்டவரது எதிரிகளுடன் நட்பாக இருப்பதன் மூலம்!! 

 யாக்கோபு மூன்று எதிரிகளை அடையாளம் கண்டு அதற்குப் பெயரிட்டார், நாம் ஆண்டவருடன் சமாதானமாக இருக்க விரும்பினால், அவைகளுடன் எந்த சூழலிலும் உறவு பாராட்டக்கூடாது.

உலகம் - The World (வச. 4).

"உலகம்" என யாக்கோபு குறிப்பிடுவது, கர்த்தருக்குப் பயந்து அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படியாத மனித சமுதாயத்தைக் குறிக்கிறது. இந்த சமுதாயத்தில் உள்ள பல அமைப்புகள் கிறிஸ்துவுக்கும், கர்த்தருக்கும் எதிரானது. ஆபிரகாம் கர்த்தரின் நண்பர் (யாக்கோபு 2:23); லோத்து உலகத்தின் நண்பனாக இருந்தார். இறுதியில் லோத்து ஒரு போரைச் சந்திக்க நேரிட்டது, ஆபிரகாம் அவரைக் காப்பாற்ற வேண்டியிருந்தது (ஆதி. 14). 

இந்த வேத ஆய்வின் 4வது அத்தியாயத்தில் நான் சுட்டிக்காட்டியுள்ளபடி, ஒரு கிறிஸ்தவர் படிப்படியாக உலகத்துடன் உறவு கொள்கிறார். முதலாவதாக, "உலக சிநேகம்" ஏற்படுகிறது (யாக். 4:4). இது உலகத்தை "கண்டு கொள்வதால்" விளைகிறது (யாக். 1:27). அதனால் நம் வாழ்வின் செயல்களுக்கு உலகத்தின் அங்கீகாரத்தை எதிர்  பார்க்கிறோம். உலக நட்பு உலகத்தில் உள்ளவற்றில் அன்பு கூற வழிவகுக்கிறது (1 யோவான் 2:15-17), மேலும் இது நாம் உலகத்துடன் ஒத்த வேஷம் போட்டு வாழும்படி வாழ்வை எளிதாக்குகிறது (ரோமர் 12:2). ஆக்கினை தரும் முடிவுகள் உலகத்தால் கண்டனம் செய்யப்படுகிறது (1 கொரி. 11:32), நம் ஆத்துமாக்களின் இரட்சிப்பு "அக்கினியில் அகப்பட்டுத் தப்பியது" போல இருக்கும் (1 கொரி. 3:11-15). 

உலகத்துடனான நட்பு விபச்சாரத்துடன் ஒப்பிடப்படுகிறது. விசுவாசி "கிறிஸ்துவை மணந்தவர்" (ரோமர் 7:4). அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும். இந்த நிருபத்தை வாசிக்கும் யூத கிறிஸ்தவருக்கு “ஆவிக்குரிய விபச்சாரம்” என்கிற காட்சிக்குத் தெளிவான பொருள் புரியும். ஏனெனில் யூதாவின் பாவங்களைக் கண்டித்து உணர்த்த எசேக்கியேல், எரேமியா மற்றும் ஓசியா போன்ற தீர்க்கதரிசிகள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினர் (எரே. 3:1-5; எசேக். 23; ஓசியா. 1-2). பிற தேசங்களின் பாவ வழிகளைப் பின்பற்றி, அவர்களது தெய்வங்களை வணங்குவதன் மூலம், யூதா தேசம் தன் தேவனுக்கு விரோதமாக விபச்சாரம் செய்தது. 

உலகம் கர்த்தரின் எதிரி. உலகத்தின் நண்பனாக இருக்க விரும்புகிறவர் தேவனின் நண்பராக இருக்க முடியாது. அவர் மாம்ச இச்சைகளை நிறைவேற்றுவதற்காக வாழ்ந்தால் அவரும் ஆண்டவருடன் இணைந்து இருக்க முடியாது, ஏனெனில் இது இரண்டாவது எதிரி என யாக்கோபு கூறினார்.

மாம்ச இயல்பு - The Flesh (வ. 1, 5).

"மாம்சம்" என்பது ஆதாமிடமிருந்து பெற்ற பழைய இயல்பு (ஜென்ம சுபாவம்), அந்த பாவ சுபாவம் நம்மை ஆள்கிறது. மாம்சம் என்பது உடல் அல்ல. உடல் பாவம் அல்ல; உடல் நடுநிலையானது. பரிசுத்த ஆவியானவர் கர்த்தரை மகிமைப்படுத்தும் படி இந்த உடலைப் பயன்படுத்தலாம் அல்லது மாம்ச சுபாவத்திற்கு உடல் அடிபணிந்து பாவத்திற்குச் சேவை செய்ய உதவலாம். ஒரு பாவி கிறிஸ்தை ஏற்றுக் கொண்டு அவரது வார்த்தைக்கு அடிபணியும் போது, அவன் உள்ளுக்குள் ஒரு புதிய சுபாவ இயல்பைப் பெறுகிறான், ஆனால் பழைய ஜென்ம இயல்பு நீக்கப்படவோ அல்லது சீர்திருத்தப்படவோ இல்லை. இந்த காரணத்தினால் எப்போதும் உள்ளே ஒரு சண்டை நிகழ்கிறது: "பாவ சுபாவம் ஆவிக்கு விரோதமானதை விரும்புகிறது. ஆவி பாவ சுபாவத்திற்கு முரணானதை விரும்புகிறது. அவைகள் ஒன்றுக்கு விரோதமாக மற்றது முரண்படுவதால், நீங்கள் விரும்பியதைச் செய்ய முடிவதில்லை” (கலா. 5:17). இதைத்தான் யாக்கோபு "உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகள்" (யாக். 4:1) என்று குறிப்பிட்டார். 

மாம்ச சுபாவ இச்சைகளை நிறைவேற்றுவதற்காக வாழ்வது என்பது நமக்குள் வாழும் தேவனது பரிசுத்த ஆவியை துக்கப்படுத்துவதாகும். 

"நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறாரென வேத வாக்கியம் வீணாகச் செல்லுகிறது என்று நினைக்கிறீர்களா?" (யாக். 4:5). உலகம் பிதாவாகிய கர்த்தருக்கு எதிரியாக இருப்பது போல, மாம்ச சுபாவம் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரி. ஒரு கணவனும் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் புனிதமான விட்டுக் கொடுக்க விரும்பாத பொறாமை அன்பைப் போல இருக்கிறது. நமக்கு உள்ளாக வாசம் செய்யும் ஆவியானவர் கர்த்தருடனான நமது உறவை விட்டுக் கொடுக்க விரும்பாத பொறாமையுடன் பாதுகாக்கிறது. கர்த்தரின் அன்பிற்கு எதிராக நாம் பாவம் செய்யும்போது ஆவியானவர் துக்கப்படுகிறார். 

பழைய மாம்ச சுபாவத்தைப் பிரியப்படுத்த வாழ்வது என்பது கர்த்தருக்கு எதிராகப் போரை அறிவிப்பதாகும். "மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை" (ரோமர். 8:7). மாம்ச சுபாவம் மனதைக் கட்டுப்படுத்த அனுமதிப்பது என்பது கர்த்தருடனான ஐக்கியத்தின் ஆசீர்வாதத்தை இழப்பதாகும். ஆபிரகாமுக்கு ஆவிக்குரிய சிந்தை இருந்தது; அவர் தேவனுடன் நடந்து சமாதானத்தை அனுபவித்தார். லோத்துக்கு மாம்ச சிந்தை இருந்தது; அவர் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் போரை அனுபவித்தார். "மாம்ச சிந்தை மரணம்; ஆவிக்குரிய சிந்தை ஜீவனும் சமாதானமும் ஆகும்" (ரோமர்.8:6).

பிசாசு - The Devil (வச. 6–7).

உலகம் தந்தையுடன் முரண்படுகிறது; மாம்ச சுபாவம் பரிசுத்த ஆவிக்கு எதிராகப் போராடுகிறது; பிசாசு தேவனுடைய குமாரனை எதிர்க்கிறான். பெருமை என்பது சாத்தானின் பெரும் பாவம். அது பரிசுத்த விசுவாசிகளுக்கும், நமது இரட்சகருக்கும் எதிரான அவனது போரில் மிக முக்கிய ஆயுதங்களில் ஒன்றாகும். நாம் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்; நாம் பெருமைப்பட வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். "நீங்கள் தேவனைப் போல் இருப்பீர்கள்" என்று சாத்தான் ஏவாளுக்கு வாக்குறுதி அளித்தான், அவள் அவனை நம்பினாள். ஒரு புதிய விசுவாசி ஆவிக்குரிய தலைமைத்துவத்தின் இடங்களில் வைக்கப்படக்கூடாது, "அவன் இறுமாப்படைந்து பிசாசின் நிந்தனைக்கு ஆளாகாதபடிக்கு" (1 தீமோ. 3:6). 

நாம் அவருடைய கிருபையைச் சார்ந்திருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் ("ஆனால் அவர் அதிக கிருபையைத் தருகிறார்"), பிசாசு நாம் நம்மைச் சார்ந்து செயல் பட வேண்டும் என்று விரும்புகிறான். "உங்களை நீங்களே உயர்த்திக் கொள்" என போதிக்கும் ஆன்மீக நிறுவனங்களின் குரு சாத்தான். விசுவாசிகளது சுய மேன்மையை (Ego) ஊதிப் பெருக்கி, அவனவன் தன் தன் சொந்த வழியில் நடக்க ஊக்குவிப்பதில் சாத்தான் மகிழ்ச்சி அடைகிறார். சாத்தானின் திட்டங்களைப் பற்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எச்சரித்த போதிலும், பேதுரு சாத்தானின் கண்ணியில் விழுந்து, தன் வாளை உருவி, தேவனுடைய சித்தத்தை தன் சொந்த வழியில் நிறைவேற்ற முயன்றான். சாத்தான் விஷயங்களைக் குழப்புவதில் விற்பன்னர்! 

இன்று நமது தேவாலயங்களில் உள்ள பிரச்சனைகளில் ஒன்று, அதிகமான பிரபல ஊழியர்கள் இல்லை. சபைகளில் கர்த்தரின் மகிமைக்கு மிகக் குறைந்த இடமே மிச்சமிருக்கும் அளவுக்குக் கிறிஸ்தவ ஊழியர்கள் உயர்த்தப்படுகிறார்கள். மனிதன் தன்னைப் பற்றி பெருமை கொள்ள எதுவும் இல்லை. நம்மில் எந்த நன்மையும் இல்லை (ரோமர். 7:18), ஆனால் நாம் கிறிஸ்தை நம்பும் போது, அவர் நமக்குள் அந்த "நல்ல சுபாவத்தை" வைக்கிறார், அது நம்மை அவருடைய பிள்ளைகளாக ஆக்குகிறது (2 தீமோ. 1:6, 14).

இங்கே, கர்த்தரிடமிருந்து நம்மைத் திசை திருப்பி பிரிக்க விரும்பும் மூன்று எதிரிகள் உள்ளனர்: உலகம், மாம்சம் மற்றும் பிசாசு. நம்முடைய பழைய பாவ வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப் பட்டாலும் இந்த எதிரிகள் இன்னும் மீதமாக எஞ்சி இருக்கிறார்கள் (எபே. 2:1-3). கிறிஸ்து அவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார், ஆனால் அவர்கள் இன்னும் நம்முடன் போராடித் தாக்குகிறார்கள். அவர்களை நாம் எவ்வாறு மேற்கொண்டு வெற்றி பெற முடியும்?  நாம் எப்படி ஆண்டவரின் நண்பர்களாகவும், உலகம், மாம்ச சுபாவம், பிசாசு இவற்றின் எதிரிகளாகவும் இருக்க முடியும்? போருக்குப் பதிலாக அமைதியை அனுபவிக்க விரும்பினால் நாம் பின்பற்ற வேண்டிய மூன்று அறிவுரைகளை யாக்கோபு வழங்கினார்.

தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள் - Submit to God (வச. 7).

இந்த வார்த்தை ஒரு இராணுவச் சொல்லாகும், இதன் பொருள் "உங்கள் சரியான தரவரிசையில் நில்லுங்கள்." ஒரு சிறு பூச்சி தளபதியைப் போலச் செயல்படும்போது, சிக்கல் இருக்கப் போகிறது! நிபந்தனையற்ற சரணாகதி ஒன்றே முழுமையான வெற்றியை அளிக்கும். வாழ்க்கையின் ஏதேனும் ஒரு பகுதியில், கர்த்தருக்குப் பிரியம் இல்லாததை செய்ய நாம் ஆசைப்பட்டால், நமது வாழ்வில் எப்போதும் சண்டைகள் இருக்கும். அர்ப்பணிப்பு இல்லாத கிறிஸ்தவர்கள் ஏன் தங்களுடன் அல்லது மற்றவர்களுடன் இணைந்து வாழ முடியாது என்பதை இது விளக்குகிறது. 

எபேசியர் 4:27-ல் பவுல் எச்சரித்தார், “பிசாசுக்கு இடங்கொடாமல் இருங்கள். தேவனுக்கு எதிராகப் சாத்தான் போரிட வேண்டும் என்றால் அவன் காலூன்ற நம் வாழ்வின் ஒரு ஓரத்திலாவது அவனுக்கு ஒரு இடம் தேவை. நாம் அந்த சிறிய இடத்தை அவனுக்குக் கொடுக்கிறோம். பிசாசை எதிர்ப்பதற்கான ஒரே வழி கர்த்தருக்கு அடிபணிவதாகும்.  

தாவீது ராஜா பத்சேபாவுடன் விபச்சாரம் செய்து, அவளுடைய கணவனைக் கொன்ற பிறகு, கிட்டத்தட்ட ஒரு வருட காலம் தனது பாவங்களை மறைத்தார். அவருக்கும் கர்த்தருக்கும் இடையே போர் நடந்தது. ஒரு நாள் தாவீது அதை அறிக்கை செய்தார் (சங். 32, 51ஐ வாசித்துப் பாருங்கள்). கர்த்தருடன் போரிடத் தாவிது செலுத்திய அதிக விலையைக் கண்டறியவும். கடைசியாகத் தேவனுக்கு அடிபணிந்தபோது, தாவீது சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவித்தார். இதையும் அவர் சங்கீதம் 32 மற்றும் 51ல் பதிவு செய்தார். சமர்ப்பணம் என்பது விருப்பத்தின் செயல்; அது, "என்னுடைய சித்தம் அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று கூறுகிறது.

தேவனிடத்தில் சேருங்கள் - Draw near to God (வச. 8).

இதை எப்படிச் செய்வது? நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய சுத்திகரிப்புக்காகக் கேட்பதன் மூலம். “பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்தப்படுத்துங்கள்; இருமனம் கொண்டவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். “பரிசுத்தப்படுத்து” என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “கற்புடன் இருத்தல்” என்பதாகும். இது யாக்கோபு 4:4 இல் உள்ள "ஆவிக்குரிய விபச்சாரம்" என்ற சிந்தனைக்கு இணையாக உள்ளது. 

டாக்டர். ஏ. டபிள்யூ. டோசர் தனது புத்தகம் ஒன்றில், "நெருக்கத்தில் பிரதிபலித்தல் (Nearness is likeness)" என்ற தலைப்பில் ஒரு ஆழமான கட்டுரையை எழுதியுள்ளார். நாம் எவ்வளவு அதிகமாகக் கர்த்தரைப் போல் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு நாம் கர்த்தருக்கு நெருக்கமாக வாழ்கிறோம். நான் என் வாசிப்பு அறையில் மடியில் என் சியாமி பூனையுடன் அமர்ந்த் இருக்கலாம், என் மனைவி சமையலறையில் இருபது அடி தூரத்தில் தள்ளி இருக்கலாம், ஆனால் பூனை என்னைப் போலல்லாததால் பூனையை விட நான் என் மனைவிக்கு நெருக்கமாக இருக்கிறேன். எனக்கும் பூனைக்கும் பொதுவானது மிகவும் குறைவு. 

கர்த்தர் கிருபையுடன் நம்மை நெருங்குகிறார் ஆனால், நாம் பாவத்தைக் கையாளும் போது அது அவரை நம்மை விட்டு விலக்கி தூரத்தில் வைத்திருக்கும். அவர் நம்மை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை; அவர் நம் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இரு மனம் கொண்ட கிறிஸ்தவர் ஒருபோதும் கர்த்தரிடம் நெருங்க முடியாது. மீண்டும், ஆபிரகாமும் லோத்தும் நினைவுக்கு வருகிறார்கள். ஆபிரகாம் கர்த்தரிடம் "நெருங்கி வந்து" சோதோமைப் பற்றிப் பேசினார் (ஆதி. 18:23), லோத்து கர்த்தரிடமிருந்து விலகி சோதோமிற்குள் சென்று அவரது ஆசீர்வாதத்தை இழந்தான்.

கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப்படுங்கள் - Humble yourselves before God (வ. 9-10).

வெளிப் பார்வைக்கு அடிபணிவது போலக் காணப்பட்டு, ஆனால் உள் மனதில் தாழ்மை இல்லாமல் இருப்பது சாத்தியம். கர்த்தர் பெருமையின் பாவத்தை வெறுக்கிறார் (நீதி. 6:16-17). ஒரு பெருமையுள்ள விசுவாசி தன்னை தாழ்த்தும் வரை அவரை கர்த்தர் தண்டிப்பார். பாவத்தைப் பற்றி மிக இலகுவாகக் கருதும், ஏன் சிரித்துக் கடந்து செல்லக்கூடிய போக்கு நம்மிடம் உள்ளது (“உங்கள் சந்தோஷம் சஞ்சலமாக மாறட்டும்”). பாவம்கொடூரமானது. உண்மையான மனத் தாழ்மையின் ஒரு அடையாளம், அந்த பாவத்தின் கொடூரத்தை எதிர் கொள்வதும், நம்முடைய கீழ்ப்படியாத தன்மையைக் கையாள்வதும் ஆகும். 

"தேவனே நருங்குண்டதும், உடைந்து நொறுங்கியதுமான இருதயத்தை, நீர் புறக்கணித்து வெறுக்கமாட்டீர்" (சங். 51:17). 

சில சமயங்களில், ஒரு விசுவாசி, “ஆ கர்த்தாவே, என்னைத் தாழ்த்தும்!” என்று ஜெபிப்பதைக் கேட்கிறோம். இப்படி பிரார்த்தனை செய்வது மிக ஆபத்தானது. அதற்குப் பதிலாக, நாம் கர்த்தருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, பாவங்களை அறிக்கையிட்டு, அவற்றை நினைத்து அழுது, அவைகளை விட்டு விலகுவது மிகவும் நல்லது. "ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நான் நோக்கிப் பார்ப்பேன்" (ஏசா. 66:2). “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, மனவருத்தத்துடன் உள்ள நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” (சங். 34:18). 

நாம் இந்த மூன்று அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்தால், கர்த்தர் நம்மை நெருங்கிச் சுத்தப்படுத்திவார். மன்னிப்பார். போர்கள் நிறுத்தப்படும்! நாம் கர்த்தருடன் போரில் ஈடுபட மாட்டோம், எனவே நம்முடனும் போரில் ஈடுபட மாட்டோம். இதன் பொருள் நாம் மற்றவர்களுடன் போரில் ஈடுபட மாட்டோம். 

“நீதியின் கிரியை சமாதானமும்; நீதியின் விளைவு என்றென்றும் உறுதியும், அமைதியும், சுகமுமாக இருக்கும்” (ஏசா. 32:17).

உங்கள் வாழ்க்கையின் நிர்வாகத்தை அவர் தோள்களில் வைத்து விடுங்கள். அவர் உங்கள் வாழ்க்கையின் சமாதான இளவரசராக ஆகட்டும் (ஏசா. 9:6).


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

சனி, 8 ஜூலை, 2023

யாக்கோபு 3: 13-18

 அத்தியாயம் எட்டு:

ஞானத்தை அடைவது எங்கனம்?

Where to Get Wisdom?


யூத மக்களுக்கு ஞானத்தை அடைவது மிக முக்கியமான காரியம். அறிவு இருந்தால் மட்டும் போதாது, அந்த அறிவை சரியாகப் பயன்படுத்த ஞானம் அவசியமானது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்

இவ்வுலகின் மிகச் சிறந்த புத்திசாலிகள், கிட்டத்தட்ட மேதைகளாக இருந்தவர்கள் கூட, தமது வாழ்க்கையின் அன்றாட மிக எளிய பணிகளைக் கூட தனித்துச் செய்ய இயலாது தவித்திருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்களால் கடினமான கணினி சூத்திரங்களை நிரல் படுத்த முடியும், ஆனால் தங்கள் சொந்த வாழ்க்கையைத் திறம்பட நிர்வகிக்க முடியாது! ஆக அறிவு வேறு, ஞானம் வேறு.

ஞானம் என்பது அனுபவம், அதன் மூலம் அடையும் அறிவு, சரீர சிற்றின்பத்தை விடப் பட்டறிவு பேசும் மெல்லிய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து செயல்படும் புத்தி ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. 

ஞானமே முக்கியம். ஞானத்தைச் சம்பாதி. ஆகவே, ஞானத்தைப் பெற உனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் பயன்படுத்து. அப்போது நீ ஞானத்தை அடைவாய்” (நீதி. 4:7). 

சபையில் போதகர்களாக உபதேசிக்க விரும்பிய விசுவாசிகளுக்கு யாக்கோபு எச்சரித்தார் (யாக் 3:1). ஏனெனில் சபையில் விசுவாசிகள் முன்பாக நின்று வெறும் ஆவேச வார்த்தைகள் பேசுவது மட்டும் போதாது; அவர்களுக்கு எவ்வகையிலாவது பயன்படும் நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டும். இங்குதான் ஆவிக்குரிய ஞானம் தேவைப்படுகிறது. 

அறிவு விஷயங்களைப் பிரித்து, ஆராய்ந்து பார்க்க உதவுகிறது, ஆனால் ஞானமானது விஷயங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புப் படுத்தி, குறிப்பாக வேதத்தின் சத்தியங்களை அன்றாட வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்து, புரிந்து கொள்ள உதவுகிறது. 

பல நல்ல கருத்துக்களைச் சொல்லும் போதகர்களையும், ஆசிரியர்களையும் நாம் அனைவரும் கேள்விப் பட்டிருக்கிறோம், ஆனால் அவர்களிலும் கூட பலர், கர்த்தருடைய இதயத்தின் சத்தத்தைக் கேட்காமல், தேவசத்தியத்தை அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்திப் பேசத் தவறி விடுகிறார்கள். யாக்கோபு எழுதியது இந்த வகையான "ஞானம் இல்லாத வெற்று அறிவு" குறித்தே. 

இந்த தியான பகுதியில், உண்மையான ஞானம் மற்றும் தவறான ஞானம் குறித்து மூன்று எதிரெதிர் அம்சங்களை, அதன் வேறுபாடுகளை யாக்கோபு விளக்கி உள்ளார்.

I. தோற்றுவாய் வேறுபாடுகள் (Contrast in Origin - 3:15, 17)

உண்மையான ஞானம் உன்னதத்திலிருந்து வருகிறது. தவறான ஞானம் கீழிருந்து வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறைவனிடம் இருந்து வரும் ஒரு "பரலோக ஞானம்" உள்ளது. தேவனிடமிருந்து வராத, "மனிதனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தவறான உலக ஞானமும்" உள்ளது. ஒரு வேளை உலக ஞானம் சில நேரத்தில் எவ்வளவு வெற்றிகரமாகத் தோன்றினாலும் கூட,  இறுதியாகக் கர்த்தரிடமிருந்து வராத எதுவும் தோல்வியில் தான் முடிவடையும்.

திருமறையில் மனித ஞானத்தின் முட்டாள்தனத்திற்குப் பல எடுத்துக் காட்டுகள் உள்ளன.

பாபேல் கோபுரத்தின் கட்டுமானம். அது ஒரு புத்திசாலித்தனமான செயலாகத் துவங்கியது, ஆனால் இறுதியில் தோல்வியிலும், குழப்பத்திலும் முடிவடைந்தது (ஆதி. 11:1-9). 

கானானில் பஞ்சம் வந்தபோது, ஆபிரகாம் எகிப்துக்குச் செல்ல தீர்மானித்தது அந்த நேரத்தில் புத்திசாலித்தனமான தீர்வாகத் தோன்றியது, ஆனால் முடிவு வேறு விதமாக இருந்தது (ஆதி. 12:10 20). 

இளம் தாவீது, கோலியாத்துடன் போரிட முன் வந்த போது, அவனுக்குத் தனது சொந்த கவசத்தை அணிவிப்பது புத்திசாலித்தனம் என்று சவுல் ராஜா நினைத்தார், ஆனால் கர்த்தரின் திட்டம் வேறுவிதமாக இருந்தது (1 சாமு. 17:38). 

திரளான மக்கள் கூட்டத்தின் உணவுத் தேவையை, அவர்களே பூர்த்தி செய்யும்படியாக, அந்த இடத்தை விட்டு அனுப்பிவிடுவது தான் புத்திசாலித்தனம் என்று சீடர்கள் நினைத்தார்கள்; ஆனால் சில அப்பங்களையும், மீன்களையும் எடுத்து திரளான மக்களுக்கு இயேசு உணவளித்தார். 

அப்போஸ்தலர் 27 இல் "ரோமானிய கப்பல் பயண நிபுணர்கள்" பவுலின் ஆலோசனைக்கு  உடன்படாமல், அந்த துறைமுகத்தை விட்டு வெளியேறி ரோமுக்குப் பயணம் செய்வது தான் புத்திசாலித்தனம் என்று நினைத்தனர்,  ஆனால் தொடர்ந்து வந்த கடும் புயல் நிபுணர்களின் ஆலோசனையை விடத் தேவ மனிதனது ஞானம் தான் சிறந்தது என்பதை நிரூபித்தது. அதனால் அவர்கள் வருத்தப்பட்டார்கள். துயரமான வாழ்க்கை அனுபவத்தை அடைந்தார்கள்!

மனித ஞானம் எங்கிருந்து தோன்றுகிறது? இந்த ஞானம் பரத்திலிருந்து இறங்கவில்லை, மாறாகப் பூமிக்குரிய ஆசை, சிற்றின்ப மோகம், தீய தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய இச்சைகளிலிருந்து புறப்படுகிறது (யாக். 3:15). ஆக விசுவாசிக்கு மூன்று எதிரிகள் உள்ளனர்: உலகம் (கீழ்ப்படியாமை), மாம்ச இச்சை (உடலும், உள்ளமும் விரும்புபவற்றைச் செய்வது) மற்றும் சாத்தான் (ஆகாயத்து அதிகாரப் பிரபு), (எபே. 2:1-3). இந்த எதிரிகளை "லௌகிக சம்பந்தம், ஜென்ம சுபாவம், பேய்த்தனம்" என்ற சொற்களால் யாக்கோபு சுட்டிக் காட்டுகிறார்.

"இந்த உலகத்தின் ஞானம்" என ஒன்று உள்ளது (1 கொரி. 1:20-21). உலக அறிவையும், உலக ஞானத்தையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்த உலகில் ஏராளமான அறிவு உள்ளது. நிச்சயமாக; நாம் அனைவரும் அதன் மூலம் பயனடைகிறோம், ஆனால் அதில் ஞானம் வெளிப்படவில்லை. மனிதன் பிரபஞ்சத்தின் இரகசியங்களைத் திறக்கிறான், ஆனால் அவற்றைக் கொண்டு எப்படிச் செயல்படுவது என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஏறக்குறைய அவன் கண்டுபிடிக்கும் அல்லது திட்டமிடும் அனைத்தும் அவனுக்கு எதிராகவேத் திரும்புகின்றன. 

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே, ஹென்றி டேவிட் தோரோ எச்சரித்தார், நாங்கள் "மேம்பட்ட வழிமுறைகள் வழியாக, மேம்படுத்தப்படாத நோக்கங்களை அடைகிறோம் (Improved means to unimproved ends)".

நான் பேருந்தில் அல்லது பெருநகர் ரயிலில் பாஸ்டன் நகரத்திற்குள் செல்லும் போதெல்லாம்,  ஒரு பிரபல சீன அறிஞரை மகிழ்விக்கும் மனிதரை அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. அவர் தனது ஆசிய நண்பரை ரயில் நிலையத்தில் சந்தித்து சுரங்கப்பாதைக்கு விரைந்தார். அவர்கள் சுரங்கப்பாதை நிலையம் வழியாக ஓடுகையில், அவர் தனது விருந்தினரிடம், “இந்த ரயிலை ஓடிப் பிடித்தால், மூன்று நிமிடங்களை மிச்சப்படுத்துவோம்!” என்று மூச்சிரைத்தார். அதற்குச் சீன தத்துவஞானி பொறுமையாக , "நாம் சேமிக்கும் அந்த  மூன்று நிமிடங்களில் என்ன முக்கியமான காரியத்தைச் செய்ய வேண்டும்?"

உலகம் அதன் ஞானத்தால் கர்த்தரை அறியவில்லை. அந்த ஞானத்தால் கர்த்தரின் நற்செய்தியை நிராகரிக்கிறது. 

"அழிந்து போகிறவர்களுக்குச் சிலுவையைப் பற்றிய உபதேசம் பைத்தியமாகத் தோன்றுகிறது" (1 கொரி. 1:18). 

இவ்வுலக ஞானத்தில் மயங்கும் எவரும், 1 கொரிந்தியர் புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்களைப் படித்து, கர்த்தருடைய ஞானத்தையும், மனித ஞானத்தையும் பற்றி பவுல் எவ்வளவு விரிவாகச் சொல்லியிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். 

மனிதனின் ஞானம் கர்த்தரின் பார்வைக்குப் பைத்தியமாக இருக்கிறது (1 கொரி. 1:20), கர்த்தரின் ஞானம் மனிதனுக்குப் பைத்தியமாகத் தோன்றும் (1 கொரி. 2:14). 

மனிதனின் ஞானம் காரண காரியங்களை ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவிலிருந்து வருகிறது. கர்த்தரின் ஞானம் தேவ வெளிப்பாட்டால் ஆவியிலிருந்து தோன்றுகிறது (1 கொரி. 2:10). 

மனிதனின் உலக ஞானம் ஒன்றுமில்லாமல் அவமாகப் போகும் (1 கொரி. 1:19), கர்த்தருடைய ஞானம் என்றென்றும் நிலைத்திருக்கும்.

உலகம் கர்த்தரிடமிருந்து விலகியதால், அது தன் ஞானத்தை இழந்து விட்டது. மனிதனின் ஒவ்வொரு அறிவு முன்னேற்றமும், பிரச்சனைகளை மேலும், மேலும் பெரிதாக்குகிறது. 

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தத்தைப் பற்றிய அறிவே அறிவு” (நீதி. 9:10).

"அவர்கள் கண்களுக்கு முன்பாக தேவபயம் இல்லை" (ரோமர். 3:18).

இந்த தவறான உலக ஞானத்திற்கு மற்றுமொரு ஆதாரம் உள்ளது: அது "சிற்றின்ப மோகம்", அதாவது ஜென்ம சுபாவம். கிரேக்க வார்த்தையான ''Psukikos,''  இது ''Psuke'' எனும் வேர்ச் சொல்லிருந்து வந்தது. அதன் பொருள் "உயிர்" அல்லது "ஆன்மா". நமது ஆங்கிலச் சொல்லான சைக்காலஜி (Psychology) இதிலிருந்து தான் உருவானது. 

1 கொரிந்தியர் 2:14 இல்; 15:44, 46, "Psukikos - ஆன்மா" என்பதற்கு நேர்மாறாக "ஜென்ம சுபாவம்" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. யூதா 19 இல் இது "ஜென்ம சுபாவத்தார்" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கர்த்தரால் அருளப்பட்ட தெய்வீக இயல்புக்கு மாறாக, மனிதனுக்குள் குடி கொண்டு இருக்கிற வீழ்ந்து போன பாவ இயல்பைப் பற்றிய முக்கிய குறிப்பாக இது இருக்கிறது. கர்த்தரின் தேவ பிரசன்னத்திலிருந்து முற்றிலும் விலகி மனிதனின் இயல்பில் தோன்றும் ஒரு ஞானம் உள்ளது.

ஆனால் இந்த “கீழிருந்து வரும் ஞானம்” தீய தன்மைகளை உள்ளடக்கியது. ஒருவேளை இதன் சிறந்த மொழிபெயர்ப்பு "பேய்த்தனம்". ஆதியாகமம் 3 இல் சாத்தான் ஏவாளை வெற்றிகரமாக ஏமாற்றியதிலிருந்து தொடங்கி, முழு திருமறையிலும் இந்த "சாத்தானின் ஞானம்" தேவ ஞானத்திற்கு எதிராகப் போராடும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது. 

கர்த்தரைப் போல் அவள் இருப்பாள் எனச் சொல்லி  சாத்தான் ஏவாளை நம்ப வைத்தான். அந்த மரம் அவளைப் புத்திசாலியாக்கும் என்று சொன்னான். அந்த நிகழ்விலிருந்து, தொடர்ந்து மக்கள் சாத்தானின் பொய்களை நம்பி, தாங்களே கடவுள்களாக மாற முயன்றனர் (ரோமர் 1:18-25). சாத்தான் தந்திரமானவன்; அவன் பழைய பாம்பு! 

கர்த்தரின் ஞானத்தை நீங்கள் அறியாவிட்டால், உங்களைக் கவர்ந்து, குழப்பமடையச் செய்ய வைக்கும் யுக்தி சாத்தானிடம் உள்ளது.

பூமிக்குரிய ஆசை, சிற்றின்ப மோகம் மற்றும் பிசாசின் தீய தன்மைகள் இவற்றை உள்ளடக்கிய ஞானத்திற்கு மாறாக, யாக்கோபு "பரத்திலிருந்து வரும் ஞானத்தை" குறித்து விவரித்தார் (யாக். 3:17). 

"நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி ஜோதிகளின் பிதாவினிடத்த்திலிருந்து இறங்கி வருகிறது" (யாக். 1:17). 

கிறிஸ்தவர் தனக்குத் தேவையான அனைத்திற்கும் பரலோகத்தை நோக்கிப் பார்க்கிறான். 

நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது (பிலி. 3:20),.

நம்முடைய தந்தை பரலோகத்தில் இருப்பது போல (மத். 6:9). 

நம்முடைய பொக்கிஷங்கள் பூமியில் அல்ல, பரலோகத்தில் உள்ளன (மத். 6:19). 

நாம் உன்னதத்திலிருந்து மறுபடியுமாகப் பிறந்தவர்கள் (யோவான் 3:1-7). 

இயேசு கிறிஸ்துவை நம்பிய விசுவாசியின் வீடு பரலோகத்தில் உள்ளது (யோவான் 14:1-6).

நம்முடைய நம்பிக்கை பரலோகத்தில் உள்ளது. நமது பாசத்தையும் கவனத்தையும் மேலானவற்றின் மீது வைக்கிறோம், பூமிக்குரிய விஷயங்களில் அல்ல (கொலோ. 3:1-4). 

கிறிஸ்தவர்களின் ஞானம் என்ன? அவர் இவ்வுலகின் தத்துவங்களை நோக்குகிறாரா? இல்லை! முதலாவது, இயேசு கிறிஸ்துவை அறிவதே நமது ஞானம், நீதி, பரிசுத்தம், மீட்பு (1 கொரி. 1:24, 30). 

இயேசு கிறிஸ்துவில் "ஞானம் மற்றும் அறிவின் அனைத்து பொக்கிஷங்களும் அடங்கியிருக்கிறது" (கொலோ. 2:3). 

உண்மையான ஞானத்தை நோக்கிய முதல் படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வது.

தேவனுடைய வார்த்தையே நமது ஞானமும் கூட. “இதோ, நான் உங்களுக்கு நியமங்களையும் நியாயங்களையும் கற்பித்தேன்.… ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு செய்யுங்கள்; இதுவே ஜாதிகளின் பார்வையில் உன் ஞானமும் விவேகமுமாயிருக்கிறது” (உபா. 4:5-6). 

வேதவசனங்கள் நம்மை "இரட்சிப்புக்கு ஞானமுள்ளவர்களாக" ஆக்க வல்லது (2 தீமோ. 3:15).

விசுவாச ஜெபத்தின் மூலம் நாம் ஞானத்தை அடைகிறோம். உங்களில் ஒருவருக்கு ஞானம் குறைவாக இருந்தால், அவர் கர்த்தரிடம் கேட்கட்டும் என்று யாக்கோபு 1:5 குறிப்பிடுகிறது. 

கர்த்தரின் பரிசுத்த ஆவியானவர் "ஞானம் மற்றும் தெளிவையும் நமக்கு அளித்து பிதாவை வெளிப்படுத்துகிறார் (எபே. 1:17). நாம் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து ஜெபிக்கும்போது, அவர் நம்மை ஞானமான பாதைகளில் வழிநடத்துகிறார்.

உண்மையான ஆவிக்குரிய ஞானத்தின் தோற்றுவாய் கர்த்தர். வேறு எந்த மூலத்திலிருந்தும் நீங்கள் ஞானத்தைப் பெறுவது சிக்கலைக் கேட்பதாகும். உலக ஆசை, மாம்ச இச்சை, பிசாசின் வேலையைப் பூர்த்தி செய்யும் உலக ஞானத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை. கர்த்தரிடமிருந்து உங்கள் ஞானத்தைப் பெறுங்கள்!

II. வெளிப்படும் பண்புகளில் மாறுபாடு (Contrast in Operations - 3:13–14, 17)

கர்த்தர் அருளும் ஞானம் உன்னத்திலிருந்து வருகிறது. ஆகவே ''பூமிக்குரிய ஆசை, சிற்றின்ப மோகம், பிசாசின் தீய தன்மைகள்" மீது நாட்டம் தரும் உலக ஞானத்திலிருந்து அது வேறுபட்ட வழியில் செயல்படுகிறது. இவ்விரண்டு ஞானங்களும்  முற்றிலும் வேறுபட்ட இரண்டு இடங்களிலிருந்து தோன்றுவதால், அவை எதிரெதிர் வழிகளில் தான் செயல்பட வேண்டும்.

தவறான ஞானத்தின் அடையாளங்கள் என்ன?

கசப்பான வைராக்கியம் - பொறாமை (Envy - வ.14).

இந்த வார்த்தைக்குள் சுயநல நோக்கம், பொறாமை என்ற உணர்வுகள் அடங்கி உள்ளது. இதை யாக்கோபு 3:1 உடன் இணைத்துப் பாருங்கள். விசுவாசிகள் ஆவிக்குரிய மதிப்புமிக்க பதவிகளை அடைவதை லட்சியமாகக் கொண்டு இருக்க வேண்டாம் என்று யாக்கோபு எச்சரித்தார். 

உலக ஞானம் கூறுகிறது, “உன்னை நீயே உயர்த்திக்கொள்'. நீங்கள் மற்ற மனிதர்களைப் போலவே நன்றாக இருக்கிறீர்கள், ஒருவேளை அவர்களை விடச் சிறப்பாக இருக்கலாம்! அதிக சத்தம் எழுப்பி அழும் குழந்தைக்குத் தான் பால் கிடைக்கும்''. வருந்தத்தக்க வகையில், கர்த்தருடைய ஜனங்களிடையேயும் சுயநலம், உலகப்பிரகாரமான முன்னேற்றம் அடைய வேண்டும் எனும் ஆசை அதிகமாக உள்ளது. பரலோக ராஜ்யத்தில் யார் பெரியவர் என்று அப்போஸ்தலர்கள் கூட சண்டை போட்டனர்.

ஆவிக்குரிய வைராக்கியம் என்ற போர்வையில் சுயம் (ego) பயணம் செய்வது மிக எளிது. மனிதர்கள் தங்களைப் புகழ்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக மதச் சடங்குகளை, பாரம்பரியங்களை பரிசேயர்கள் பயன்படுத்தினார்கள் (மத். 6:1-18).  

நல் வைராக்கியம் (சங்கல்பம்) தேவை. நாம் கர்த்தருடைய காரியங்களில் வைராக்கியமாக இருக்க வேண்டும், ஆனால் அதே சமயம் நம்முடைய நோக்கங்கள் கர்த்தருக்குப் பிரியானவையாக இருப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த உலகத்தின் ஞானம் மனிதனை உயர்த்துகிறது, ஆனால் கர்த்தரின் மகிமையைத் திருடுகிறது. 

1 கொரிந்தியர் 1:17ல், பவுல் கர்த்தரின் ஞானம் மற்றும் இந்த உலகத்தின் ஞானத்தைப் பற்றி விவாதித்தார், மேலும் கர்த்தர் எப்படிச் செயல்படுகிறார் என்பதையும் விளக்கினார்: 

"மாம்சமான எவனும் அவர் முன்னிலையில் பெருமைப் பாராட்டக்கூடாது" (1 கொரி. 1:29). 

மகிமைப்படுகிறவன் கர்த்தருக்குறித்தே மேன்மை பாராட்டக்கடவன்” (1 கொரி. 1:30) என்ற அறிவுரையுடன் இந்த பகுதியை முடித்தார்.

கர்த்தருக்காக நாம் பாராட்டும் வைராக்கியம் ஆவிக்குரியதா அல்லது மாம்சமா? 

மற்றவர்கள் வெற்றி பெறும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோமா அல்லது இரகசியமாகப் பொறாமையும், விமர்சனமும் உள்ளதா? 

மற்றவர்கள் தோல்வியடையும் போது நாம் கவலையாக உணர்கிறோமா அல்லது மகிழ்ச்சி அடைகிறோமா? 

உலகத்தின் ஞானம் சபைக்குள் வரும்போது, ​​மாம்சப் பிரயோகம் பெருமளவில் இருக்கிறது. மனிதனது பெயர் மகிமைப்படுகிறது. எச்சரிக்கையுடன் இருங்கள்!

விரோதம் (Strife - வ.14 ).

இந்த வார்த்தைக்கு "குழு ஆவி (party spirit)" என்று பொருள். ஒரு அரசியல்வாதி வாக்குகள் பெறுவதற்காகப் பிரச்சாரம் செய்வதை விவரிப்பதற்கு, இந்த வார்த்தை கிரேக்கர்களால் பயன்படுத்தப்பட்டது. 

உலக ஞானம் கூறுகிறது, உங்களால் முடிந்த அளவு ஆதரவைப் திரட்டுங்கள்! தேவாலயத்தில் உள்ளவர்களிடம் கேளுங்கள்! அவர்கள் எந்த பக்கம் நிற்கிறார்கள்?, ''உங்களுக்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா?" தனது மகிமையைத் தேடும் இத்தகைய ஆவி தேவாலயத்தில் போட்டியையும், பிளவையும் மட்டுமே நிச்சயமாக உருவாக்குகிறது. “சண்டையாலோ, வீண் பேச்சினாலோ எதுவும் செய்ய வேண்டாம்; ஆனால் மனத்தாழ்மையில் ஒவ்வொருவரும் தங்களைவிட [முக்கியமான] சிறந்தவர்களாக மதிக்கட்டும்” (பிலி. 2:3).

பெருமை பேசுதல் (Boasting - வ.14).

கர்வம் பெருமை பேச விரும்புகிறது. மனித ஞானத்தை விடப் பெருமை எதுவும் இல்லை. கர்த்தருக்கு மகிமை செலுத்தும் படியாகத் தேவ ஆசீர்வாதங்களைச் சாட்சி பகர வழி உள்ளது, ஆனால் மனிதர்களுக்குப் புகழைக் கொடுக்கும் அணுகுமுறையும் உள்ளது. விசுவாசிகளிடையே பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பாராட்டுக் கொள்ளும் போக்கைப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது. 

2 கொரிந்தியர் 10 ல், பவுல் தனது ஊழியத்தைப் பற்றி உயர்த்திப் பேச வேண்டிய கட்டாயத்திலிருந்தபோது, ​​​​கர்த்தருக்கு மகிமையைக் கொடுப்பதில் மிகக் கவனமாக இருந்தார். “நிச்சயமாக, தங்கள் சொந்தச் சாட்சிகளை எழுதிய பரிசுத்தவான்கள் போன்ற அதே நிலையில் நம்மைச் சேர்த்துக் கொள்ளவோ ​​அல்லது அவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கவோ நாம் துணியக்கூடாது! 

அவர்கள் செய்ததெல்லாம், அவர்களுடைய சொந்த தர நிலைகள் அல்லது தங்கள் சொந்த வட்டத்திற்குள் உள்ள ஒப்பீடுகள் மூலம் தங்களை தாங்களே அளவிடுவதுதான், ஆனால் அது துல்லியமான மதிப்பீட்டை உருவாக்காது, நீங்கள் உறுதியாக இருக்கலாம்” (2 கொரி. 10:12).

கர்த்தரின் ஞானம் செயல்படும் போது, ​​பணிவு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வைத் தூண்டி செயல் படுகிறது. எல்லா மகிமையையும் கர்த்தருக்கே அளிக்க வேண்டும் என நீங்கள் விரும்புவீர்கள். பிற கிறிஸ்தவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்க உங்களுக்கு விருப்பமில்லை, ஏனென்றால் நீங்கள் கிறிஸ்துவை மட்டுமே பார்க்கிறீர்கள் - மேலும் அவருடன் ஒப்பிடுகையில், நாம் அனைவரும் செல்ல வேண்டிய தூரம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது!

வஞ்சகம் (Deceit - வ.14 ).

"உண்மைக்கு எதிராகப் பொய் சொல்லாதே." யாக்கோபு வரிசைப் படுத்தியதைப் புரிந்து கொள்வது கடினமாக இல்லை. 

முதலாவதாகச் சுயநல நோக்கம். அது குழுவை உருவாக்கும். பின்னர் போட்டி மனப்பான்மை மற்றும் விரோதத்திற்கு வழிவகுக்கும். "குழு வெற்றி பெற" நாம் பெருமை பேசுவதை நாட வேண்டும். பொதுவாகப் பெருமை பேசுவதில் பல பொய்கள் உள்ளடங்கி உள்ளது! 

ஒரு மனிதனின் வாழ்க்கையை இறைவன் செய்தித்தாள் குறிப்புகளில் படிக்கவில்லை; அதை அவனது இதயத்தில் வாசிக்கிறான். 

"ஆகையால், கர்த்தர் வருமளவும், காலத்திற்கு முன்பாக எதையும் நியாயந்தீர்க்காதீர்கள், அவர் இருளின் மறைவானவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவார், இருதயத்தின் ஆலோசனைகளை வெளிப்படுத்துவார்; (1கொரி 4:5).

உண்மையான ஆன்மீக ஞானத்தின் அத்தாட்சிகளுக்குத் திரும்புவது என்னே ஒரு நிம்மதி.

சாந்தம் (Meekness - வ.13).

சாந்தம் பலவீனம் அல்ல; அது ஒருவர் தன்னை தானே கட்டுப்படுத்தும் சக்தி. சாந்தகுணமுள்ளவர் சுயநலத்துடன் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள மாட்டார். இந்த  கிரேக்க வார்த்தை கால் உடைந்த குதிரையைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது, அதனால் அந்த குதிரையின் சக்தி அதன் கட்டுப்பாட்டிலிருந்தது. சாந்தகுணமுள்ளவன் கர்த்தரின் மகிமையை மட்டுமே தேடுகிறான், மனிதர்களின் புகழைப் விரும்புவதில்லை. சாந்தம் என்பது ஆவியின் கனி (கலா. 5:23); அதை மனிதனால் உற்பத்தி செய்ய முடியாது. சிலர் சாந்தமானவர் எனத் தவறாக நினைக்கும் தவறான பணிவு உள்ளது, ஆனால் அது போலியானது.

"ஞானத்திற்குரிய சாந்தம்" என்ற சொற்றொடர் சுவாரஸ்யமானது (யாக்.3:3). சாந்தம் என்பது சக்தியைச் சரியாகப் பயன்படுத்துதல், ஞானம் என்பது அறிவை சரியாகப் பயன்படுத்துதல். இவை இரண்டும் இணைந்து ஒன்றாகச் செல்கின்றன. 

உண்மையான ஞானமுள்ள நபர் தனது அன்றாட வாழ்வில் தான் கர்த்தரின் குழந்தை என்பதைக் காட்டுவார். அணுகுமுறையும் செயலும் ஒன்றாகச் செல்கின்றன (Attitude and action go together).

தூய்மை (Purity - வ.17).

"தூய்மை" என்பது முதலாவதாகப் புனிதத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. கர்த்தர் பரிசுத்தமானவர்; ஆதலால் மேலிருந்து வரும் ஞானம் தூய்மையானது. இந்த வார்த்தையின் பின்னணியில் உள்ள நோக்கம் "கற்பு, அசுத்தத்திலிருந்து விடுபட்டது." 

யாக்கோபு இந்த வார்த்தையை மீண்டும் யாக். 4:8-ல் பயன்படுத்தினார் - "உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்" அல்லது, "உங்கள் இருதயங்களைத் தூய்மைப்படுத்தவும்." 

கர்த்தரின் ஞானம் வாழ்க்கையின் தூய்மைக்கு நம்மை வழி நடத்துகிறது. மனிதனின் ஞானம் பாவத்திற்கு வழி நடத்தும். 

ஒரு ஆன்மீக தூய்மை உள்ளது, அது இறைவனுடன் ஏற்படும் தூய்மையான உறவால் விளைகிறது (2 கொரி. 11: 3). ஒரு நபரை ஆவிக்குரிய விபச்சாரியாக மாற்றும் உலகியல் உள்ளது (யாக். 4:4).

சமாதானம் (Peace - வ.17).

மனிதனின் ஞானம் போட்டி, விரோதம் மற்றும் போருக்கு வழிவகுக்கிறது (யாக். 4:1-2); ஆனால் கர்த்தரின் ஞானம் அமைதிக்கு வழிவகுக்கிறது. இது புனிதத்தின் அடிப்படையிலான சமாதானம், சமரசத்தின் அடிப்படையில் அல்ல. எத்தனை பெரிய விலை கொடுத்தாலும், தேவ சமாதானத்தை வாங்க முடியாது. தேவாலயத்தின் தூய்மையை விடத் தேவாலயத்தின் அமைதி முக்கியமானது அல்ல. தேவாலயம் தூய்மையாகவும், கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகவும் இருந்தால், அமைதி இருக்கும். 

"நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றென்றும் அமைதியும் நிச்சயமுமாயிருக்கும்" (ஏசா. 32:17). 

பாவங்களைத் துடைத்து, அவைகள் இல்லை என்று பாசாங்கு செய்வதன் மூலம் தேவாலயம் ஒருபோதும் அமைதி பெற முடியாது. மனிதனின் ஞானம் கூறுகிறது, “பாவத்தை மறை! விஷயங்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்! ” கர்த்தரின் ஞானம் கூறுகிறது, "பாவத்தை ஒப்புக்கொள்,அறிக்கை செய். தேவ சமாதானம் விஷயங்களை இணைத்து ஒன்றாக வைத்திருக்கும்!"

இனிமையாக (Gentleness - வ. 17).

மத்தேயு அர்னால்ட் இதை "இனிமையான நியாயம் (Sweet reasonable)" என்று அழைக்க விரும்பினார். இது சமரசம் இல்லாத மிதமான தன்மை, பலவீனம் இல்லாத மென்மை என்ற பொருளைக் கொண்டுள்ளது. மென்மையான நபர் வேண்டுமென்றே சண்டைகளை ஏற்படுத்துவதில்லை, ஆனால் அமைதியைக் காக்கும் பொருட்டு அவர் உண்மையைச் சமரசம் செய்வதில்லை. கார்ல் சாண்ட்பர்க் விவரித்தார் ஆபிரகாம் லிங்கன் "மிருதுவான இரும்பு மனிதர் (Velvet Steel)". இது மென்மையின் நல்ல விளக்கம்.

இணக்கம் (Compliance - வ.17).

கர்த்தரின் ஞானம் ஒரு விசுவாசியை, பிறர் ஏற்றுக் கொள்ளக்கூடியவராக, அவருடன் இணைந்து பயணிக்க, ஒன்றாக வேலை செய்ய விருப்பமானவராக அவரை மாற்றுகிறது. மனித ஞானம் ஒருவரைக் கடினமானவராக, பிடிவாதம் பிடித்தவராக மாற்றுகிறது. 

இணக்கமான நபர் ஒரு கேள்வியின் அனைத்து விதமான பதில்களையும் கேட்கத் தயாராக இருக்கிறார், ஆனால் அதே வேளை அவர் தனது சொந்த நம்பிக்கைகளைச் சமரசம் செய்து கொள்ள மாட்டார். அவர் மாற்றுக் கருத்துடன் உடன்படாதவராக இருந்தாலும், இணக்கமானவர்.

 "கேட்பதற்குத் துரிதமானவர், பேசுவதற்குப் பொறுமையானவர், கோபத்திற்குத் தாமதமானவர்" (யாக். 1:19). பிடிவாதம் என்பதை உறுதியான நம்பிக்கை என்றும், அவர்கள் தங்கள் சொந்த வழியில் நடப்பவர்கள் எனப் பலர் நினைக்கிறார்கள். கர்த்தருடைய ஞானம் செயல்படும் போது, ​​ஆண்டவர் வெளிப்படுத்தும் அனைத்தையும் கேட்கவும், சிந்திக்கவும், ஜெபிக்கவும், கீழ்ப்படியவும் முழு மனதுடன் தயாராக இருக்க வேண்டும். "வற்புறுத்தலுக்கு உடன்படாத இணங்குதல்" என்பது இந்த வார்த்தையின் மற்றொரு மொழிபெயர்ப்பு.

கருணை (Mercy - வ.17).

"இரக்கத்தாலும்" என்பது, கர்த்தரின் ஞானத்தைப் பின்பற்றுபவர் கருணையால் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படுகிறார் எனப் பொருள். 

"உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்" (லூக்கா 6:36). 

கர்த்தர் தம்முடைய கிருபையால் நமக்குத் தகுதி அற்றதை தந்தருளியுள்ளார், நாம் தகுதி உடையதை இரக்கப்பட்டுக் கொடுப்பதில்லை. நல்ல சமாரியன் பற்றிய நமது ஆண்டவரின் உவமை இரக்கத்தின் அர்த்தத்தை விளக்குகிறது (லூக்கா 10:25-37). ஒரு சமாரியன் யூத அந்நியரைப் பராமரிப்பது கருணையின் செயலாகும். கர்த்தரின் சித்தத்தைச் செய்வதன் மூலம் கிடைக்கும் ஆசீர்வாதத்தைத் தவிர, வேறு எதுவும் அந்த சமாரியன் பெற முடியாது. பாதிக்கப்பட்டவராலும் அவருக்கு எதுவும் திருப்பிச் செலுத்த முடியாது. அதுதான் கருணை.

நற்கனி (Good fruits - வ. 17)

விசுவாசமாக இருப்பவர்கள் பலனளிக்கிறார்கள். கர்த்தரின் ஞானம் வாழ்வை வெறுமையாக்காது; அதை முழுமையானதாக ஆக்குகிறது. ஆவியானவர் தேவனுடைய மகிமைக்காக அதிக கனிகளை உற்பத்தி செய்கிறார் (யோவான் 15:1-16 ஐப் பார்க்கவும்). லூக்கா 10:25-37 இல் உள்ள நியாய சாஸ்திரி, நித்திய ஜீவனைக் குறித்து விவாதிக்கத் தயாராக இருந்தார், ஆனால் அவர் அண்டை வீட்டாராக இருந்து மற்றவருக்கு உதவ விரும்பவில்லை. கர்த்தரின் ஞானம் நடைமுறைக்குரியது; அது வாழ்க்கையை மாற்றுகிறது. கர்த்தரின் மகிமைக்கு ஏதுவான நல்ல செயல்களை உருவாக்குகிறது.

அலைபாயாத மனம்- பட்சபாதமில்லாதது (Decisiveness - வ.17)

இந்த வார்த்தை அலைபாயாத தீர்க்க மனதைக் குறிக்கிறது. இது "ஊசலாடும் மனதிற்கு" எதிரானது (யாக். 1:6). நீங்கள் உலக ஞானத்தின் மீது சார்ந்திருக்கும் போது, ​​உங்கள் மனதை மாற்ற அல்லது ஒரு புதிய கண்ணோட்டத்திலிருந்து பார்க்க, ஒரு பக்கத்திலிருந்தும் மற்றொரு பக்கத்திலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்படுவீர்கள். ஆனால் கர்த்தரின் ஞானம் உங்களிடம் இருக்கும் போது, ​​நீங்கள் தடுமாற வேண்டியதில்லை; உங்களால் தீர்க்கமாக இருக்க முடியும். பயப்பட மாட்டீர்கள். ஏனெனில் மேலிருந்து வரும் ஞானம், உன்னதத்தின் வல்லமையைக் கொண்டு வருகிறது.

மாயமற்றது - நேர்மை (Sincerity - வ.17).

புதிய ஏற்பாட்டில் "மாய்மாலம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம் "முகமூடி அணிந்தவர் அல்லது நடிகர்" எனும் பொருள்படும். மனிதனின் உலக ஞானம் செயல்படும் போது, ​​நேர்மை இன்மை மற்றும் பாசாங்குத்தனம் இருக்கலாம், ஆனால் கர்த்தரின் ஞானம் செயல்படும் போது, ​​அன்புடன் சத்தியத்தைப் பேசும் திறந்த தன்மையும், நேர்மையும் இருக்கும் (எபே. 4:14-15). கர்த்தருடைய விசுவாசிகள் பாசாங்கு செய்து மறைத்துப் பேசுவதை எங்குக் கண்டாலும், அது இந்த உலகத்தின் ஞானம் அவர்களின் வாழ்க்கையை ஆளுகிறது என்பதை உறுதியாக நீங்கள் நம்பலாம். "மத அரசியல்" என்பது கர்த்தருக்கு அருவருப்பானது. "நம்பிக்கை என்பது சூழ்ச்சி செய்யாமல் வாழ்வது."

கர்த்தரின் ஞானம் செயல்படுவதற்கும், உலக ஞானம் செயல்படுவதற்கும் இடையே மிகவும் வித்தியாசம் உள்ளது. ஆலய பொறுப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் யாக்கோபு எழுதியவற்றின் வெளிச்சத்தில் தங்கள் சொந்த வாழ்க்கையையும், அவர்களின் ஊழியங்களையும் மதிப்பீடு செய்வது ஆசீர்வாதமானதாக இருக்கும். உள்ளூர் தேவாலயம் ஒரு அமைப்பாக இருந்தாலும், சமயச்சார்பற்ற வணிகங்களை வெற்றிபெறச் செய்யும் "(மாடிசன் அவென்யூ - Madison Avenue)" முறைகளை அது சார்ந்திருக்க முடியாது. கர்த்தரின் வழிகளும், எண்ணங்களும் நம்மை விட மிக உயர்ந்தவை! 

நாங்களோ உலகத்தின் ஆவியை அல்ல, தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவற்றை அறியும் படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றிருக்கிறோம்” (1 கொரி. 2:12).

III. வெளிப்படும் விளைவுகளில் மாறுபாடு (Contrast in Outcomes - 3:16, 18)

ஒன்றின் ஆரம்பம் அதன் முடிவைத் தீர்மானிக்கிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல்! உலக ஞானம் உலக விளைவுகளை உண்டாக்கும்; ஆவிக்குரிய ஞானம் ஆன்மீக கனிகளைத் தரும்.

உலக ஞானம் சிக்கலை உருவாக்குகிறது (வச. 16). பொறாமை, சண்டை, குழப்பம், தீய செயல்கள். அந்தச் சபையில் கர்த்தர் செயல்பட்டதாகத் தெரியவில்லை. யாக்கோபு 4 இல், விசுவாசிகளிடையே இருந்த "போர்களையும் சண்டைகளையும்" குறித்துப் பேசுகிறார். 

தவறான சிந்தனை தவறான வாழ்க்கையை உருவாக்குகிறது. உலகம் இப்படிப்பட்ட குழப்பத்தில் இருப்பதற்கு ஒரு காரணம், மனிதர்கள் கர்த்தரின் ஞானத்தை ஏற்க மறுத்ததே ஆகும்.

இங்கு "கலகம் (வ.16)" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைக்கு "நிலையற்ற தன்மையிலிருந்து உருவாகும் சீர்கேடு" என்று பொருள். இதே வார்த்தை யாக்கோபு 1:8 இல் "நிலையற்றது" என்றும், யாக். 3:8 இல் "அடங்காதது" என்பவற்றுடன் தொடர்புடையது. நீங்கள் 2 கொரிந்தியர் 12:20ஐ வாசித்தால், ஒரு குழப்பம் நிறைந்த சபை எப்படி இருக்கும் என்பதற்கான விளக்கத்தைப் பெறுவீர்கள். கடைசி நாட்களில் உலகத்தில் ஏற்படவிருக்கும் கட்டுக்கடங்காத கலவரங்களைப் பற்றி விவரிக்க ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார் (லூக்கா 21:9).

பொறாமை, போட்டி, கட்சி மனப்பான்மை - ஆகிய இவை அனைத்தும் குழப்பத்திற்குப் பங்களிக்கின்றன. இந்த உண்மைக்கு  ஆதியாகமம் 11 இல் உள்ள பாபேல் கோபுர கட்டுமானம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. மனிதனின் பார்வையில், கோபுரத்தைக் கட்டுவது ஒரு புத்திசாலித்தனமான விஷயம், ஆனால் தேவனது பார்வையில், இந்த திட்டம் முட்டாள்தனமானது மற்றும் பாவமானது. முடிவு? கலகமும் குழப்பமும். இன்றும் கூட, "பாபேல்" என்ற சொல்லை "குழப்பம்" என்று அர்த்தப்படுத்துகிறோம்.

குழப்பம் "ஒவ்வொரு தூர் செயல்களுக்கும்" களம் அமைக்கிறது (யாக். 3:16). இங்கே தூர் செயல் என்றால் "பயனற்றது, கணக்கில்லை" என்று பொருள். இது 1 கொரிந்தியர் 3:12-ல் உள்ள “மரம், வைக்கோல், தாளடி” ஆகியவற்றை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த உலக ஞானத்தில் செயல்படும் ஒரு ஊழியம் மிகப் பெரியதாகவும் வெற்றிகரமானதாகவும் தோன்றலாம், ஆனால் நியாயத்தீர்ப்பு நாளில் அது எரிந்து போக கூடும். "ஆகையால், நேரத்திற்கு முன் எதையும் நியாயந்தீர்க்காதீர்கள்" (1 கொரி.4:5). சிமிர்னாவில் உள்ள தேவாலயம் தன்னை ஏழை என்று நினைத்தது, ஆனால் அது பணக்காரரானது என்று கர்த்தர் கூறினார்; லவோதேக்கியாவிலுள்ள "பணக்கார தேவாலயம்" ஏழை என ஆண்டவரால் அறிவிக்கப்பட்டது (வெளி. 2:9; 3:14-22).

நமது உள்ளூர் தேவாலயங்களில் நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், தேவ வார்த்தையின் மூலம் ஊழியங்களை அளவிடுவது மனிதர்களின் உலக ஞானத்தால் அல்ல. 

கிறிஸ்தவர்களிடையே பல சண்டைகள், தேவாலயத்தில் பல பிளவுகள், தூய்மையின்மை மற்றும் அமைதி இல்லாதது, இவை எல்லாம் ஏதோ ஒரு தவறு நிகழ்கிறது என்று நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. ஒருவேளை அந்த "ஏதோ" என்பது கர்த்தரின் ஞானம் இல்லாததாக இருக்கலாம்.

தேவ ஞானம் ஆசீர்வாதத்தைத் தருகிறது (God's blessing produces blessing - வ. 18). 

நீதியின் கனிகள்; யாக்கோபு இந்த வார்த்தையை மீண்டும் பயன்படுத்தினார். மனிதன் உருவாக்கும் பலன்களுக்கும், கர்த்தர் அளிக்கும் கனிகளுக்கும் இடையில் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது

கனிகள் என்பது ஓர் உயிரின் விளை பொருளாகும். பழங்களுக்கு உள்ளே மேலும் அதிக கனிகளை உருவாக்கும் மரங்களுக்கான விதைகள் உள்ளன. பொதுவாக விதைதான் விதைக்கப்படுவது, ஆனால் யாக்கோபு இங்குக் கனியானது சமாதானத்தைக் கடைப் பிடிப்பவர்களாலே விதைக்கப்படுகிறது என்கிறார். நாம் கர்த்தர் நமக்கு அளிக்கும் பலனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, ​​அவர்கள் அதில் உண்டு திருப்தி அடைகிறார்கள். பின்னர் அவர்களும் பலனைத் தருகிறார்கள்.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது விதைத்து அறுவடை செய்யும் வாழ்க்கை. ஒவ்வொரு வாழ்க்கையும் விதைத்து அறுவடை செய்யும் வாழ்க்கை. நாம் விதைப்பதைத்தான் அறுவடை செய்கிறோம். கர்த்தருடைய ஞானத்திற்குக் கீழ்ப்படிகிற கிறிஸ்தவர் நீதியை விதைக்கிறார், பாவத்தை அல்ல; அவர் அமைதியை விதைக்கிறார், போரை அல்ல. நாம் வாழும் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையில் நீதியையும் அமைதியையும் கொண்டு வரவும் இறைவனது பெயர் உயர்த்தப்படவும் உதவுகிறது.

நாம் எப்படியாக இருக்கிறோமோ, அப்படித் தான் வாழ்கிறோம், எப்படி வாழ்கிறோமோ அதைத்தான் விதைக்கிறோம். ஆக நாம் எதை விதைக்கிறோம் என்பதை நாம் வாழும் வாழ்க்கையேத் தீர்மானிக்கிறது. 

நாம் கர்த்தரின் ஞானத்தில் வாழ்ந்தால், நீதியையும் அமைதியையும் விதைத்து, கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம். நாம் மனிதனது உலக ஞானத்தில் வாழ்ந்தால், பாவத்தையும், கலகத்தையும் விதைத்து, "குழப்பத்தையும், எல்லா தூர்ச் செயல்களையும்" அறுவடை செய்வோம்.

நாம் கர்த்தரின் சபையில் ஒரு பிரச்சனையாக இருப்பது நல்லதல்ல. கர்த்தர் வெறுக்கும் பாவங்களில் "சகோதரர்களிடையே விரோதத்தை" விதைப்பது ஒன்று (நீதி. 6:16-19ஐ வாசித்துப் பார்க்கவும்). 

லோத்து உலக ஞானத்தைப் பின்பற்றி, ஆபிரகாமின் குடும்பத்தில் கஷ்டத்தைக் கொண்டுவந்தான்; ஆனால் ஆபிரகாம் கர்த்தரின் ஞானத்தைப் பின்பற்றி அங்கு அமைதியைக் கொண்டுவந்தார். லோத்தின் முடிவு "ஒன்றுக்கும் பயனற்ற செயல்களுக்கு" வழிவகுத்தது. சோதோம் மற்றும் கொமோராவின் அழிவில் அவர் அடைந்த அனைத்தும் எரிந்து சாம்பலாயின. கர்த்தரின் ஞானத்தில் ஆபிரகாம் பல முடிவுகளை எடுத்ததால், அது அவருடைய சொந்த வீட்டாருக்கும், இறுதியில் முழு உலகத்திற்கும் ஆசீர்வாதங்களை அடைவதற்கு வழிவகுத்தது (ஆதி.13ஐ வாசித்துப் பார்க்கவும்).

ஞானத்தைக் கண்டடைகிறவன் பாக்கியவான், புத்தியைப் பெறுகிறவன் பாக்கியவான்” (நீதி. 3:13).


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.