சனி, 19 ஆகஸ்ட், 2023

யாக்கோபு 5: 7-12

 அத்தியாயம் பன்னிரண்டு 

பொறுமையின் சக்தி.

(The Power of Patience).


"நீடிய பொறுமையுடன் இருங்கள்" என்று யாக்கோபு எழுதிய போது, துன்பத்தில் வேதனைப்படும் விசுவாசிகள் குறித்த ஆழ்ந்த கவலை அவர் மனதிலிருந்தது. இந்த கடிதத்தின் தொடக்கத்தில் இதுவே அவருடைய அறிவுரை (யாக் 1:1-5). கடிதம் நிறைவு பெறும் போதும் இதுவே அவரது அறிவுரை. 

இந்த உலகில் நிகழும் எல்லா தவறுகளையும் கர்த்தர் சரி செய்யப் போவதில்லை.  ஆக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வருவார் எனக் காத்திருக்கும் விசுவாசிகளான நாம், இத்தகைய கடினமான சூழல்களை எதிர்பார்த்து பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும். 

இந்த தியானப் பகுதியில் கர்த்தருடைய வருகையை மூன்று முறை யாக்கோபு நமக்கு நினைவூட்டினார் (யாக் 5:7-9). இது கிறிஸ்தவர்கள் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியம் (தீத்து 2:13). இந்த வாழ்க்கையில் எல்லாம் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும் என நாம் எதிர்பார்க்கக்கூடாது. "உலகில் உங்களுக்கு உபத்திரவம் இருக்கும்" (யோவான் 16:33). ''அதிக உபத்திரவத்தின் வழியாய் நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்'' என பவுல் விசுவாசிகளிடம் நினைவுபடுத்தினார் (அப். 14:22). இயேசு திரும்பி வரும்வரை நாம் கஷ்டங்களையும் மனவேதனைகளையும் பொறுமையுடன் சகிக்க வேண்டும். 

யாக்கோபு பொறுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்து விளக்குவதற்கு இரண்டு வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தினார். யாக். 5:7-8, 10 வசனங்களில் அவர் நீடிய பொறுமை என எழுதினார். அதன் பொருள் காலம் கருதாது (long-tempered) காத்திருக்கும் மனப்பான்மை. 

யாக். 5:11 வசனத்தில் சகிப்புத்தன்மை (endurance) மற்றும் பொறுமை (Patience). என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதன் பொருள், "பொறுத்துக் கொள்ளுதல்" மற்றும் மன அழுத்தம் மிகுந்த சூழ்நிலையிலும் சகிப்புத்தன்மையுடன் இருப்பதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

பொறுமை என்றால் "நீங்கள் ஓடிப்போக வேண்டும் என விரும்பும் இடத்தில் அமைதியாகக் காத்திருப்பது". 

பல கிரேக்க அறிஞர்கள் ''நீடிய பொறுமை" என்பது பெரும் துயரத்தை அனுபவித்த விசுவாசிகளை, இன்னும் சற்று பொறுமையோடு காத்திருக்க அழைக்கிறது என்றும், "சகிப்புத்தன்மை" என்பது அப்போது நிலவிய சூழ்நிலைகள், கடினமான நிலைமைகளில் தேவைப்படும் பொறுமையைக் குறிக்கிறது என்றும் நினைக்கிறார்கள்.

ஆனால், கர்த்தர் திரும்பி வருவதற்காகக் காத்திருக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம் பதில் அளிக்க வேண்டிய முக்கியமான கேள்வி எதுவென்றால், 

இத்தகைய பொறுமை நிறைந்த சகிப்புத்தன்மையுடன் எப்படி வாழ்வது? 

இந்த அவசியமான கேள்விக்கு, நாம் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையுடன் வாழ ஊக்கமளிக்கும் மூன்று உதாரணங்களை யாக்கோபு பதிலாகக் கொடுத்தார்.

விவசாயி - The Farmer (5:7–9):

ஒரு மனிதனுக்குப் பொறுமை இல்லை என்றால், அவர் விவசாயியாகாமல் இருப்பது நல்லது. ஒரே இரவில் எந்தப் பயிரும் விளைந்து விடாது (ஒருவேளை களைகளைத் தவிர). வானிலையின் மீது எந்த விவசாயிக்கும் கட்டுப்பாடு இல்லை. அதிக மழை பெய்தால் பயிர் அழுகலாம். அதிக வெயிலால் கருகிவிடலாம். உறைபனி பயிரை அழித்துவிடும். ஒரு  விவசாயி நல்ல வானிலையே எதிர்பார்த்து , நீடிய பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்! அவர் விதை விதைத்து அதன் விளைச்சலுக்காகப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். பயிர்கள் வளர காலம் தேவை. 

நமக்கு இலையுதிர் மாதங்களில் யூத விவசாயிகள் உழுது விதைப்பார்கள். "ஆரம்ப மழை" மண்ணை மென்மையாக்கும். "பிந்தைய மழை" வசந்த காலத்தின் துவக்கத்தில் (நமது பிப்ரவரி-மார்ச்) வந்து அறுவடையை முதிர்ச்சியடைய உதவும். விவசாயி தான் விதைத்த விதை, கனிகளை உற்பத்தி செய்வதற்காகப் பல வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

அவர்  ஏன் விருப்பத்துடன் இவ்வளவு காலம்  காத்திருந்தார்? ஏனெனில் விளையும் கனிகள் "மதிப்புமிக்கது" (யாக் 5:7). அறுவடைக்குக் காத்திருப்பது மதிப்பு மிக்கது தான். "நாம் தளர்ந்து போகாதிருந்தால், ஏற்ற காலத்தில் அறுப்போம்" (கலா. 6:9). “ஏனெனில், பூமி தானாகவே பயிர்களை விளைவிக்கிறது; முதலில் துளிர், பின்னர் தண்டு, அதன் தலையில் முதிர்ந்த தானியம். பயிர் முதிர்ந்தவுடன், உடனடியாக அவர் அறுவடை செய்கிறார், ஏனென்றால் விளைந்து முதிர்ச்சி ஆகிவிட்டது" (மாற்கு 4:28-29).

ஒரு ஆன்மீக அறுவடையை எதிர்பார்க்கும் "ஆவிக்குரிய விவசாயியாக’’ கிறிஸ்தவரை யாக்கோபு சித்தரித்தார். 

"நீங்களும் நீடிய பொறுமையோடு இருந்து, உங்கள் இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்" (யாக். 5:8). 

நம் இதயம் நிலம். கர்த்தரின் வார்த்தை "விதை" (லூக்கா 8:11). மண்ணுக்குப் பல பருவங்கள் இருப்பது போல் ஆவிக்குரிய வாழ்வுக்கும் பல பருவங்கள் உண்டு. சில நேரங்களில், நம் இதயங்கள் குளிர்ச்சியாகவும், "குளிர் காலமாகவும்" மாறும். கர்த்தர் விதையை நடுவதற்கு முன் "அவற்றை உழுகிறார்" (எரே. 4:3). விதைக்கப்பட்ட விதைகளுக்கு அவர் தண்ணீர் தருகிறார். அவை வளர்வதற்குச் சூரிய ஒளியையும், மழையையும் அனுப்புகிறார். ஆகையால் நாம் அறுவடைக்காகப் பொறுமையாகக் காத்திருக்க இருக்க வேண்டும். 

வாழ்க்கை பயணம் கடினமாக இருக்கும்போது பொறுமையுடன் சகிப்பதற்கான ரகசியம் இதுதான்: கர்த்தர் வாழ்வின் கனிகளை நம்மில் விளையச் செய்கிறார். 

பயிர் செழித்து வளர்ந்து "ஆவியின் கனிகளாக" பலன் தர வேண்டும் என்று அவர் விரும்புகிறார் (கலா. 5:22-23). அதைச் செய்ய ஒரே வழி சோதனைகள் மற்றும் துயரங்களை நம் வாழ்வில் அனுமதிப்பதன் மூலம் மட்டுமே. துயரமான சூழலில், கர்த்தர் மீதான நம்பிக்கை, நம் விசுவாசம் இவற்றின் மீது பொறுமை இழந்து விடாமல், இறைவனுக்கு அடிபணிந்து கனிகள் வளர நாம் அனுமதிக்க வேண்டும். நாம் அறுவடைக்காகக் காத்திருக்கும் "ஆவிக்குரிய விவசாயிகள்".  

உங்கள் இதயம் உறுதியானால் மட்டுமே இந்த வகையான அறுவடையை நீங்கள் அனுபவிக்க முடியும் (யாக். 5:8). 

திருச்சபையின் ஆவிக்குரிய ஊழியத்தின் நோக்கங்களில் ஒன்று இதயத்தை உறுதிப்படுத்துவதாகும் (ரோ. 1:11). புதிதாக இணைந்த கிறிஸ்தவர்களை, அவர்களுடைய விசுவாசத்தில் நிலை நிறுத்துவதற்காக பவுல் தீமோத்தேயுவை தெசலோனிக்கேயாவுக்கு அனுப்பினார் (1 தெச. 3:1-3). அவர்கள் நிலைநிறுத்தப்படுவதற்காக பவுலும் அவர்களுக்காக ஜெபித்தார் (1 தெச. 3:10-13). 

இருதயம் ஸ்திரப்பட வேண்டுமானால், தேவனுடைய வார்த்தையின் தியானமும் ஜெபமும் மிக முக்கியம். நிலைபெறாத இதயம் கனி தராது. 

விவசாயி ஒரு வேலையும் செய்யாது சும்மா சுற்றி வருவதில்லை என்பதை நினைவில் வையுங்கள்: அறுவடையை எதிர்பார்த்தபடியே அவர் தொடர்ந்து வேலையில் இருக்கிறார். துன்பப்படும் இந்த விசுவாசிகளை, வெள்ளை அங்கிகளை உடுத்திக்கொண்டு, ஒரு மலையில் ஏறி, ஆண்டவராகிய  இயேசு திரும்பி வரும்வரை சும்மா காத்திருக்குமாறு யாக்கோபு சொல்லவில்லை. "உழைத்துக் காத்திருங்கள்" என்பது அவரது அறிவுரை. 

''அவன் எசமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுபவன் பாக்கியவான்" (லூக்கா 12:43). 

ஒரு சிறந்த விவசாயி தனது பக்கத்து வீட்டாருடன் சண்டையிடுவது இல்லை. சிறந்த விவசாயிகளின் வழக்கமான அடையாளங்களில் ஒன்று, அவர்கள் ஒருவருக்கொருவர் உதவ விருப்பமாக இருப்பர். பண்ணையில் வேலையில் தீவிரமாக உழைக்கும் எவருக்கும், தமது அண்டை வீட்டாருடன் தகராறு செய்ய நேரமும் சக்தியும் இருப்பது இல்லை. யாக்கோபு இதை மனதில் வைத்திருந்திருக்க வேண்டும், 

"சகோதரர்களே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படதாபடிக்கு  ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதீர்கள்" (யாக். 5:9). 

கர்த்தரிடம் பொறுமையில்லாது இருந்தால், அது பெரும்பாலும் சக விசுவாசிகளிடம் பொறுமையின்மைக்கு வழிவகுக்கிறது. இது நாம் தவிர்க்க வேண்டிய பாவமாகும். ஒருவர் மீது ஒருவர் கத்தியைப் பயன்படுத்தத் தொடங்கினால், அறுவடையைத் தவறவிடுவோம்!

 தீர்க்கதரிசி - The Prophets (5:10:

யாக்கோபு கூறிய இந்த உதாரணத்தை, பழைய ஏற்பாட்டை வாசித்து அறிந்த ஒரு யூத சபை எளிதாகப் புரிந்து கொள்ளும். இயேசு தனது மலைப் பிரசங்கத்தில், தீர்க்கதரிசிகளைத் துன்புறுத்தலுக்கு எதிராகச் செயல்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு உதாரணமாகச் சுட்டிக் காண்பித்தார் (மத். 5:10-12). 

தீர்க்கதரிசிகளின் முன் மாதிரியான வாழ்விலிருந்து என்ன விதமான ஊக்கத்தை நாம் பெறுகிறோம்? 

முதலில், அவர்கள் கர்த்தரின் சித்தத்தின்படி வாழ்ந்தார்கள், அதனால் அவர்கள் துன்பப்பட்டார்கள். அவர்கள் “கர்த்தருடைய நாமத்தில்” பிரசங்கித்தார்கள், ஆனாலும் துன்புறுத்தப்பட்டனர். ஒரு உண்மையுள்ள கிறிஸ்தவனிடம், அவனுடைய துன்பத்திற்குக் காரணமாக, பாவம் அல்லது துரோகத்தின் விளைவு என்று சாத்தான் சொல்கிறான். ஆனால் அவன் உண்மையாக வாழ்வதும்  கூட, துன்பத்திற்குக் காரணமாக இருக்கலாம்! "ஆமாம், கிறிஸ்து  இயேசுவுக்குள் தேவ பக்தியுடன் நடக்கிற யாவரும் துன்புறுத்தப்படுவார்கள்" (2 தீமோ. 3:12). 

கீழ்ப்படிந்தால் போதும், அதனால் வாழ்க்கை எளிதானதாகவும், இன்பமாகவும் இருக்கும் என்று நாம் ஒருபோதும் நினைக்கக்கூடாது. 

நமது ஆண்டவர் கீழ்ப்படிதலுடன் இருந்தார், அது ஒரு சிலுவைக்கு நேராக அவரை வழி நடத்தியது! ஆம் இரண்டாவதாக, கர்த்தருடைய நிமித்தம் நாம் துன்பங்களைச் சந்திக்கும்போது, கர்த்தர் நம்மைப் பார்த்துக் கொள்கிறார் என்பதை நினைவூட்டுவதன் மூலம் தீர்க்கதரிசிகள் நம்மை ஊக்குவிக்கிறார்கள். தேசத்தில் மூன்றரை வருடங்கள் வறட்சி ஏற்படும் என்று பொல்லாத ஆகாப் ராஜாவிடம் எலியா அறிவித்தார். அந்த வறட்சியில் எலியாவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஆனால் கர்த்தர் அவரை போஷித்து, பாகாலின் பொல்லாத ஆசாரியர்களுக்கு எதிராக ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தார். 

"கர்த்தரின் கிருபை உங்களை வைத்திருக்க விரும்பாத இடத்திற்கு நேராக, தேவ சித்தம் ஒருபோதும் உங்களை வழி நடத்தாது" என்று கூறப்படுகிறது.

பல தீர்க்கதரிசிகள் நம்பிக்கையற்ற புற இன மக்களின் கைகளில் மட்டுமல்ல, விசுவாசிகள் என்று கூறுபடுபவர்களின் கைகளாலும் பெரும் சோதனைகளையும், துன்பங்களையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. 

எரேமியா ஒரு துரோகி என்று கைது செய்யப்பட்டு, ஒரு கைவிடப்பட்ட கிணற்றில் தூக்கி எறியப்பட்டார். அந்த சமயங்களில் எரேமியா மரிக்கப் போகிறார் என்று தோன்றியது. ஆனால் எருசலேமின் அந்த பயங்கரமான முற்றுகை முழுவதும் கர்த்தர் எரேமியாவுக்கு உணவளித்து அவரைப் பாதுகாத்தார். எசேக்கியேல் மற்றும் தானியல் இருவரும் தங்கள் கஷ்டங்களின் பங்கை அனுபவித்தனர், ஆனால் கர்த்தர் அவர்களை விடுவித்தார். மேலும் பலர் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் விசுவாசத்திற்காக இறந்தனர். ஆனாலும், அவருக்கு உண்மையாக இருப்பவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும், அந்த விசேஷ வெகுமதியைப் அவர்கள் பெற்றார்கள். 

கர்த்தருடைய நாமத்தினாலே பேசுகிறவர்கள் ஏன் கடினமான சோதனைகளைச் சகிக்க வேண்டும்? 

அது அவர்களின் விசுவாச வாழ்க்கை, பிறருக்குச் சாட்சியாக  உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது. உண்மையுள்ள, தெய்வீக வாழ்க்கையின் தாக்கம் அதிக சக்தியைக் கொண்டுள்ளது. துன்பத்தின் போது நாம் பொறுமையாக இருப்பது நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது என்பதை நாம் நினைவு கூற வேண்டும். ஆனால் பல உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் எந்த அங்கீகாரமும் இன்றி துன்பப்பட்டு இறந்ததில்லையா? ஆம், ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வரும்போது, இந்த "அறியப்படாத நாயகர்கள்" தங்கள் வெகுமதிகளைப் பெறுவார்கள். தீர்க்கதரிசிகள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டனர், ஆனால் இன்றும் அவர்களின் பெயர்கள் போற்றப்படுகின்றன. நம் ஆண்டவர் மீண்டும் வரும்போது, அவர் தம்முடைய வெகுமதியை அவர்களுக்குக் கொண்டு வருவார் (வெளி. 22:12).

யாக்கோபு பயன்படுத்திய இந்த தீர்க்கதரிசிகளின்  உதாரணம், இத்தகைய விசுவாச வீரர்களது வாழ்வை வாசித்து அவர்களோடு உறவாடுவதற்கான ஆவலை நம்மில் உருவாக்க வேண்டும். அதற்காக நாம் திருமறையைத் தியானிக்கவும், அதில்  அதிக நேரத்தைச் செலவு செய்வதற்கும் நம்மை ஊக்குவிக்க வேண்டும். 

"தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையிலும் ஆறுதலிலும் நமக்கு நம்பிக்கை உண்டாகும் படிக்கு, கடந்தகால சம்பவங்களெல்லாம் நமக்குப் போதனையாக எழுதப்பட்டிருக்கிறது” (ரோமர் 15:4).

நாம் திருமறையை எவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு வாழ்க்கையின் கடினமான அனுபவங்களில் கர்த்தர் நம்மை உற்சாகப்படுத்தி வழி நடத்துவார். 

முக்கியமான விஷயம் என்னவென்றால், விவசாயியைப் போலவே, நாமும் தொடர்ந்து வேலை செய்கிறோம். தீர்க்கதரிசிகளைப் போல, சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், வாழ்வில் சாட்சியாக இருக்கிறோம் (5:11–12).

யோபு - Job  (5: 11-12)

"உங்களுக்குத் தெரியும், இதோ விடாமுயற்சியுடன் பொறுமையாக இருப்பவர்களைப் பாக்கியவான்கள் என்று கருதுகிறோமே" (யாக். 5:11). 

ஆனால் உங்கள் வாழ்க்கையில் ஒரு சோதனை இல்லாவிட்டால், நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்க முடியாது. போர்கள் இல்லாமல் வெற்றிகள் இருக்க முடியாது; பள்ளத்தாக்குகள் இல்லாமல் சிகரங்கள் இருக்க முடியாது. உங்களுக்கு ஆசீர்வாதம் வேண்டுமென்றால், நீங்கள் பாரத்தைச் சுமந்துகொண்டு போரிடத் தயாராக இருக்க வேண்டும். 

ஒருமுறை ஒரு இளம் கிறிஸ்தவர் ஜெபிப்பதை நான் கேட்டேன், ''ஆண்டவரே, தயவுசெய்து உமது வார்த்தையின் ஆழமான சத்தியங்களை எனக்குக் கற்றுக் கொடுங்கள்! அங்குள்ள அற்புதமான விஷயங்களைக் கேட்கவும் பார்க்கவும் நான் பரலோகத்திற்கு உயர்த்தப்பட விரும்புகிறேன்!'' 

இது ஒரு உண்மையான பிரார்த்தனை, ஆனால் அந்த இளைஞன் தான் ஜெபிப்பதன் அர்த்தத்தை உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. பவுல் மூன்றாம் வானத்திற்குச் சென்று, வார்த்தைகளுக்கு மிகவும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொண்டார், இதன் விளைவாக, பவுல் தன்னைத் தாழ்மையாக வைத்திருக்கத் தேவன் அவர் சரீரத்தில் ஒரு முள்ளைக் கொடுக்க வேண்டியிருந்தது (2 கொரி. 12:1-10).

கர்த்தர் அருளும் வரங்களைத் தன்னடக்கமும், பொறுப்புகளுடனும், ஆசீர்வாதங்களைக் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதன் வழியாகவும் சமநிலைப்படுத்த வேண்டும், இல்லையெனில் நீங்களும் நானும் கெட்டுப்போன, செல்லம் நிறைந்த குழந்தைகளாகி விடுவோம். 

"ஆசீர்வாதம்" எப்போது அருளப்படும்? அக்கினி சூளையின் மத்தியில்!!! 

அந்த மூன்று எபிரேய வாலிபர்களைப் போலவே சோதனைகளின் நடுவிலும் நாம் கர்த்தரின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம் (தானி.3). ஆனால் நாம் சோதனைகளைச் சகித்த பிறகு ஒரு ஆசீர்வாதம் அருளப்படும் என்பதை யாக்கோபு கற்பித்தார். அதற்கு உதாரணம் யோபு. 

யோபு ஒரு நீண்ட பெரிய தத்துவப் பாடல்கள் நிறைந்த புத்தகம். அதன் அத்தியாயங்கள் மேற்கத்திய மனதுக்கு, நீண்டதும், கடினமான உள்ளார்ந்த  பேச்சுகளால் நிறைந்ததாகத் தோன்றும். முதல் மூன்று அத்தியாயங்களில், யோபின் கடும் துயரம் தரும் சம்பவங்கள் உள்ளது: அவர் தனது செல்வத்தையும், குடும்பத்தையும், மற்றும்  ஆரோக்கியத்தையும் இழக்கிறார் (அவரது மனைவியைத் தவிர, அவரும் அவரை தற்கொலை செய்து கொள்ளச் சொன்னார்). 

யோபு 4ம் அதிகாரம் முதல் 31 ம் அதிகாரம் வரை உள்ள நெடிய பகுதி, யோபு தனது மூன்று நண்பர்களுடன் விவாதம் செய்வதும், அவர்களின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விவாதங்களுமாக உள்ளது. 

யோபு 38 முதல் 42வரை உள்ள அதிகாரங்கள், யோபின் விடுதலையை விவரிக்கிறது: முதலில் கர்த்தர் யோபைத் தாழ்த்துகிறார், பின்னர் அவர் யோபைக் கனப்படுத்துகிறார். அவருக்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகக் கொடுக்கிறார். 

நீங்கள் யோபுவின் அனுபவத்தை வாசிக்கும்போது, கர்த்தருக்கும் சாத்தானுக்கும் இடையில் நடந்த எதையும் யோபு அறிந்திருக்கவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். 

யோபுவின் நண்பர்கள் அவரைப் பாவி, மாய்மாலக்காரன் என்று குற்றம் சாட்டினார்கள். "உமது வாழ்க்கையில் ஏதோ ஒரு பயங்கரமான பாவத்தைச் செய்திருக்க வேண்டும், இல்லையென்றால்,  இப்படிப்பட்ட துன்பத்தை உமது வாழ்வில் ஒருபோதும் கர்த்தர் அனுமதித்திருக்க மாட்டார்" என்பதே அவர்களது வாதம். ஆனாலும், யோபு அவர்களுடன் உடன்படவில்லை. அவரது முழு உரையாடலின் போதும் தனது உண்மையான விசுவாசத்தைப் பாதுகாத்தார். யோபுவின் நண்பர்கள் தவறு செய்தார்கள்: எனினும் கர்த்தருக்கு எதிராக யோபு பேசவில்லை (யோபு 2:3). இறுதியில், யோபைப் பற்றிப் பொய் குற்றம் சொன்னதற்காகக் கர்த்தர் யோபுவின் நண்பர்களைக் கண்டித்தார் (யோபு 42:7).

யோபுவை விட கடும் துன்பத்தை அனுபவித்த வேறு ஒரு  உதாரணத்தைத் திருமறையில் நீங்கள் கண்டுபிடிப்பது கடினம். அவர் தோல்வி அடைந்தார். சூழ்நிலைகள் அவருக்கு எதிராக இருந்தன. அவரது செல்வம், ஆரோக்கியம், தனது அன்பான குழந்தைகள் என அனைத்தையும் இழந்தார். "கர்த்தரைச் சபித்து மடிந்து போ"என அவரது மனைவியும் அவருக்கு எதிராக இருந்தாள் (யோபு 2:9) . அவருடைய நண்பர்கள் அவருக்கு எதிராக இருந்தனர். அவர்கள் அவரை ஒரு நய வஞ்சகர், கர்த்தரின் தண்டனைக்குத் தகுதியானவர் என்று குற்றம் சாட்டினார்கள். கர்த்தர் அவருக்கு எதிராக இருப்பது போல் தோன்றியது! யோபு தன் கேள்விகளுக்குப் பதில் கேட்டு அழுதபோது, பரலோகத்திலிருந்து பதில் வரவில்லை. 

ஆனாலும், யோபு சகித்துக் கொண்டார். யோபு கர்த்தரிடம் பொறுமையிழந்து தன் விசுவாசத்தை விட்டுவிடுவார் என்று சாத்தான் முன்னறிவித்தான், ஆனால் அது நடக்கவில்லை. யோபு கர்த்தரின் விருப்பத்தைக் குறித்து கேள்வி எழுப்பினார் என்பது உண்மைதான், ஆனால் ஒருபோதும் யோபு தேவன் மீது வைத்திருந்த தனது நம்பிக்கையைக் கைவிடவில்லை. 

"அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆயினும், என் வழிகளை அவருக்கு முன்பாக வாதிடுவேன்” (யோபு 13:15). 

கர்த்தரின் செய்கைகள் பரிபூரணமானவை என்பதில் யோபு மிகவும் உறுதியாக இருந்ததால், அவர் என்ன செய்கிறார் என்று அவருக்குப் புரியவில்லை என்றாலும், அவருடன் வாதிடுவதில் விடாப்பிடியாக இருந்தார். அதுதான் சகிப்புத்தன்மை. 

இஸ்ரவேலர்கள் அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் அவர்களை ஆசீர்வதிப்பார் என்று கர்த்தர் உடன்படிக்கை செய்தார் (உபா. 11). 

நீங்கள் செல்வந்தராகவும், வசதியாகவும் வாழ்ந்தால், கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர், ஆனால் நீங்கள் துன்பமாகவும், ஏழையாகவும் வேதனைப் பட்டால் கர்த்தரால் சபிக்கப்பட்டவர் என்கிற எண்ணத்திற்கு இது வழிவகுத்தது. இது தவறானது, வருந்தத்தக்கது. இன்றைக்கும் பலரிடம் அதே தவறான எண்ணம் இருக்கிறது. அதனால்தான் ஐசுவரிய வான் பரலோகத்தில் பிரவேசிப்பது கடினம் என்று இயேசு கூறியபோது, அவரது சீடர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

"அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?" என்று கேட்டார்கள் (மத். 19:23-26). 

ஒருவர் செல்வம் உடையவர் என்றால் அவர்  கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதற்கு அடையாளமாக கருதினர். அவர்களால் இரட்சிக்கப் பட முடியவில்லை என்றால், வேறு யாராலும் இரட்சிக்கப்பட முடியாது! என நம்பினார்கள்.

ஆனால், யோபுவின் புத்தகம் இந்த யோசனையை மறுக்கிறது, ஏனென்றால் யோபு ஒரு நீதியுள்ள மனிதனாக இருந்த போதிலும், அவர் துன்பப்பட்டார் அவரில் எந்தத் தீமையையும் கர்த்தர் காணவில்லை. சாத்தானாலும் எந்த குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. யோபின் நண்பர்களாலும் தாங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. 

பாவத்திற்குத் தண்டனை தருவது என்பதை விட, ஒரு பாவிக்குத் துயரத்தைத் தரும் அனுபவத்தை அனுமதிப்பதில் கர்த்தர் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிருக்கிறார் என்று யோபுவின் புத்தகம் நமக்குக் கற்பிக்கிறது.

யோபுவின் அனுபவம், கர்த்தரின் பரிபூரண குமாரனாகிய இயேசு இவ்வலகில் அவதரிக்க வழி வகுத்தது. அவர் தனது சொந்த பாவங்களுக்காக அல்ல, மாறாக உலகின் பாவங்களுக்காகத் துயரம் அனுபவித்தார்.

யோபின் விஷயத்தில், ''கர்த்தருடைய முடிவான நோக்கம்'' என்ன? 

கர்த்தர் தம்மை இரக்கமும், கனிவான கருணையும் நிறைந்தவராக  வெளிப்படுத்தினார். யோபுவின் அனுபவ பாடத்தில் பிற முடிவுகளும் இருந்தன. கர்த்தர் தனது பரிசுத்தவான்களின் துன்பங்களை ஒரு போதும் வீணாக்குவதில்லை. யோபு கர்த்தரை ஒரு புதிய ஞானம் நிறைந்த வழியில் சந்தித்தார். இறுதியாக, யோபு கர்த்தரிடமிருந்து இரட்டிப்பான ஆசீர்வாதங்களைப் பெற்றார்(யோபு 42:1-6). 

“ஆனால் கர்த்தர் மிகவும் இரக்கமுள்ளவராக இருந்தால், அவர் ஏன் யோபுவை எல்லா துன்பங்களிலிருந்தும் பாதுகாக்கவில்லை?” என்று ஒருவர் வாதிடலாம். ஆம், நிச்சயமாக நமது வரையறுக்கப்பட்ட மனங்களால், கர்த்தரின் செயல்பாட்டை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத பல புதிர்கள் உள்ளன.  ஆனால் உறுதியாகத் தெரியும்: கர்த்தர் மகிமைப்படுத்தப்பட்டார். யோபு இந்த கடினமான அனுபவத்தின் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டார்.

உங்களால் வலியைத் தாங்குவதற்கு முடியவில்லை என்றால், நீங்கள் சகிப்புத் தன்மையைக் கற்றுக்கொள்ள முடியாது. 

இன்று நமக்கு யோபின் கதை என்ன அர்த்தம்? 

வாழ்க்கையின் சில சோதனைகள் சாத்தானின் தூண்டுதலால் ஏற்படுகின்றன என்று புரிந்து கொள்கிறோம். கர்த்தர் தனது பிள்ளைகளைச் சோதிக்கச் சாத்தானை அனுமதிக்கிறார், ஆனால் அவர் எப்போதும் எதிரி சோதிக்கும் சக்தியின் அளவைக் கட்டுப்படுத்துகிறார் (யோபு 1:12; 2:6). 

நீங்கள் நெருப்பைப் போலக் கொதிக்கும் சூழவில் இருக்கும்போது, கர்த்தர் தனது கருணையுள்ள கையை தெர்மோஸ்டாட்டில் வைத்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள்! 

"ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்த பின், நான் பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10).

நாம் கர்த்தர் நடத்தும் வழிகளில் பொறுமையிழந்து, விசுவாசத்தை மறுதலிக்க வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான், ஏனென்றால் பொறுமையற்ற கிறிஸ்தவன் பிசாசின் கைகளில் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். 

யாக்கோபு முதல் அதிகாரத்தின் திருமறை ஆய்விலிருந்து, மோசேயின் பொறுமையின்மை, வாக்களிக்கப்பட்ட புனித தேசத்தில் அவர் நுழைய இயலாத வண்ணம் அவரது வாய்ப்பை தட்டிப் பறித்தது என்பதை நீங்கள் நினைவுபடுத்துவீர்கள்; ஆபிரகாமின் பொறுமையின்மை யூதர்களின் எதிரியான இஸ்மவேல் பிறக்க வழிவகுத்தது; பேதுருவின் பொறுமையின்மை அவரை ஒரு கொலைகாரனாக மாற தூண்டியது. சாத்தான் நம்மைத் தாக்கும்போது, நாம் பொறுமையிழந்து கர்த்தருக்கு முன்னால் ஓடுவதும், அதன் விளைவாகக் கர்த்தரின் ஆசீர்வாதத்தை இழப்பதும் எளிது. 

இதற்குப் பதில் என்ன? "என் கிருபை உனக்குப் போதுமானது" (2 கொரி. 12:7-9)! சரீரத்தில் பவுலின் முள் ஒரு "சாத்தானின் தூதுவர்". பவுல் அதை எதிர்த்துப் போராடியிருக்கலாம், அதன் கீழ் விட்டுக் கொடுத்திருக்கலாம் அல்லது முள் இருப்பதை மறுக்க முயன்றிருக்கலாம்; ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. மாறாக, அவர் தனக்குத் தேவையான கிருபைக்காகக் கர்த்தரை நம்பினார். அவர் சாத்தானின் ஆயுதத்தைத் தனது சொந்த ஆவிக்குரிய வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் ஒரு கருவியாக மாற்றினார். 

நீங்கள் வெப்பம் மிகுந்த சூளையில் இருப்பதாக உணர்ந்தால், உடனே கிருபையின் சிம்மாசனத்திற்கு நேராகச் சென்று, அந்த வேதனையைத் தாங்க வேண்டிய அனைத்து கிருபையையும் கர்த்தரிடமிருந்து பெறுங்கள் (எபி. 4:14-16). இந்த துன்பங்கள் அனைத்திலும் கர்த்தருக்கு ஒரு கிருபையான நோக்கம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் தமக்குச் சித்தமான காலத்தில் அவரது நாம  மகிமைக்காக அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்பதை நினைவூட்டுங்கள். நீங்கள் விதியின் தாடையில் சிக்கிய இயந்திரம் அல்ல. கர்த்தரின் அன்பான குழந்தை, அவரது ஒரு அற்புதமான திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பாக்கியம் பெற்றவர். இயந்திரத்திற்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது! 

யாக்கோபு 5:12-ல் உள்ள அறிவுரை இந்த தியானப் பகுதிக்குப் பொருத்தம் அற்றதாகத் தெரிகிறது, ஏனெனில் துன்பத்தில் வேதனை அனுபவிப்பதற்கும், ''சத்தியம் செய்வதற்கும்' என்ன சம்பந்தம்? 

நீங்கள் எப்போதாவது கஷ்டப்பட்டிருந்தால், இதற்கான பதில் உங்களுக்குத் தெரியும்: நீங்கள் கடினமான சிரமங்களைச் சந்திக்கும் போது, நீங்கள் சொல்லாத விஷயங்களைப் பேசியதாகப் பிறர் உங்களைக் குறித்துச் சொல்வது எளிது. மேலும் கர்த்தரிடம் பேரம் பேசுவதும் எளிது. ஒரு உதாரணத்திற்கு யோபுவின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தைத் தியானிப்போம். யோபு கூறினார், 

''நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன், நிர்வாணியாய் அங்குத் திரும்புவேன்: கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவும் இல்லை,  தேவனைப் பற்றிக் குறை சொல்லவும் இல்லை" (யோபு 1:21-22). 

யோபு தான் பிறந்த நாளை சபித்தார் (யோபு 3:1), ஆனால் அவர் ஒருபோதும் கர்த்தரைச் சபிக்கவில்லை அல்லது முட்டாள்தனமான சத்தியத்துடன் பேசவில்லை. கர்த்தரிடம் பேரம் பேசவும் முயலவில்லை. 

நம்முடைய கர்த்தர் மலைப் பிரசங்கத்தில் போதித்த போதனையை யாக்கோபு இங்கு நமக்கு நினைவூட்டுகிறார் (மத். 5:34-37) . யூதர்கள் தங்கள் பேச்சை உறுதிப்படுத்த பல்வேறு சத்தியங்களைச் செய்வதில் சாமர்த்தியம் மிக்கவர்கள். இருப்பினும், அவர்கள் கர்த்தர் நாமம்  நிந்திக்கப்படாதபடிக்கு, தங்கள் சத்தியங்களில் கர்த்தரின் பெயரைப் பயன்படுத்தாமல் கவனமாக இருந்தனர். எனவே, அவர்கள் வானத்தின் மீதும், பூமியின் மீதும், அல்லது எருசலேம் மீதும், அல்லது தங்கள் தலைகள் மீதும் சத்தியம் செய்வார்கள்! ஆனால் அப்படிப்பட்ட சத்தியங்களில் கர்த்தரைத் தவிர்ப்பது சாத்தியமில்லை என்று இயேசு கற்பித்தார். பரலோகம் அவருடைய சிம்மாசனம், பூமி அவருடைய பாதப்படி, எருசலேம் “மகா ராஜாவின் நகரம்”. உங்கள் தலையில் சத்தியம் செய்வதைப் பொறுத்தவரை, அது என்ன பயன்? "ஒரு முடியைக் கறுப்பாக்கவோ வெள்ளையாக்கவோ முடியாது" (மத். 5:36).

ஒருவர்  உண்மையான கிறிஸ்தவ நற்குணம் உடையவர் என்பதைக் காண்பிக்க சில வார்த்தைகள் போதுமானது என்பது ஒரு அடிப்படைக் கோட்பாடு. 

நம்மை நம்ப வைக்கப் பல வார்த்தைகளை (சத்தியங்கள் உட்பட) பயன்படுத்தும் நபர் தனது குணத்தில் ஏதோ தவறு இருப்பதை மறைக்க, இந்த சத்தியங்களைப் பயன்படுத்தி தனது பலவீனத்தை மறைத்து நம்மை நம்ப வைக்க முயல்கிறார். 

நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவராக, நேர்மையுடன் இருந்தால், நீங்கள் சொல்ல வேண்டியது எல்லாம் ஆம் அல்லது இல்லை, மக்கள் உங்களை நம்புவார்கள். இதைவிட மேலானது தீமையிடமிருந்து வரும் என்று இயேசு நம்மை எச்சரித்தார். 

துன்பத்தின் முக்கிய  நோக்கங்களில் ஒன்று விசுவாசியிடம் நற்குணத்தை உருவாக்குவது. ஆம் நிச்சயமாக.

யோபு துயர நெருப்பின் வழியாகச் சென்ற சிறந்த மனிதராக இருந்தார். (யாக்கோபு இந்த செயல்முறையை நமக்கு  யாக்கோபு 1:2-12 பகுதியில் விளக்கினார்,) 

வார்த்தைகள் நற்குணத்தின் அடையாளம் என்றால், சத்தியம் செய்வது, இன்னும் நம் வாழ்வில் மாற வேண்டிய பகுதிகள் இருப்பதைக் குறிக்கிறது. பேதுரு பணிப்பெண்ணிடம் சத்தியமாகத் தெரியாது எனக் கூறி முற்றத்தில் சபித்த போது (மத். 26:71), அவருடைய குணம் இன்னும் மாற வேண்டிய தேவை இருக்கிறது என்பதற்கு அது ஆதாரமாக உள்ளது. 

இந்த பகுதியை நீங்கள் மதிப்பாய்வு செய்யும்போது, அதன் நடைமுறைத் தன்மையை நீங்கள் காணலாம். துன்ப காலங்களில் பொறுமையோடு விசுவாசத்தைக் காத்துக் கொள்ளும்படியாக நம்மை யாக்கோபு ஊக்குவிக்க விரும்பினார். 

ஒரு விவசாயியைப் போலவே, ஆன்மீக அறுவடைக்காக, கர்த்தரை மகிமைப்படுத்தும் கனிகளைக் கொடுக்க காத்திருக்கிறோம். 

தீர்க்கதரிசிகளைப் போலவே, நாமும் கர்த்தரின் உண்மையைப் பகிர்ந்து கொள்ள, சாட்சி நிறைந்த வாழ்க்கை வாழும் வாய்ப்புகளைத் தேடுகிறோம். 

யோபுவைப் போலவே, கர்த்தர் தம்முடைய அன்பான நோக்கத்தை நம்மில் நிறைவேற்றுவதற்காகக் காத்திருக்கிறோம், அவர் ஒருபோதும் தம் பிள்ளைகளைத் தேவையில்லாமல் துன்பப்படுத்த மாட்டார் என்பதை அறிந்திருக்கிறோம். யோபுவைப் போலவே, நாமும் இறைவனைப் பற்றிய தெளிவான பார்வையைப் பெறுவோம். துன்பத்தின் சூளையிலிருந்ததால் அவரை நன்றாக அறிந்து கொள்வோம். 

"பொறுமையாயிருங்கள், கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது!"


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக