சனி, 20 மே, 2023

யாக்கோபு 1: 19-24

அத்தியாயம்: 4  தொடர்ச்சி

ஏமாற்றாதே! ஏமாறாதே!!.


ஒரு விசுவாசி எவ்விதம் சோதனைகளை எதிர் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து யாக்கோபு முதலாம் அதிகாரம் கற்றுத் தருகின்றது.

ஒரு விசுவாசியைப் பலப்படுத்தி, அவரை மேன்மைப் படுத்துவதற்காக ஆண்டவர் சோதனைகளை (Tests & Trails) அனுமதிக்கிறார் (யாக். 1:1-12).

ஒரு விசுவாசியின் ஆவிக்குரிய மேன்மையை அழிப்பதற்காக, அவரை பாவம் (Temptations) செய்யும்படி தூண்டி, அதன் வழியாகச் சாத்தான் அவரை சிறுமைப் படுத்துகிறான் (யாக். 1:1-12). அவன் இதை வஞ்சனையாகச் செய்கிறான்.

மூன்றாவதாக, ஒருவர் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு (Self-Deception), அதனால் அடையும் ஆவிக்குரிய வீழ்ச்சி. இந்த சுய வஞ்சகத்தைக் குறித்து யாக்கோபு இந்தப் பகுதியில் விவரித்துக் கூறுகிறார் (யாக். 1:19-27). 

இந்த பகுதியில் உள்ள இரண்டு வசனங்களில் குறிப்பிடப்படும் வார்த்தையைக் கவனியுங்கள்.

"அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்கு" (யாக். 1:22); 

"தன் இருதயத்தை வஞ்சித்து" (யாக். 1:26). 

தன்னை தானே வஞ்சித்து கொள்ளுதல் (Self-Deception)

பல கிறிஸ்தவர்கள் தங்களை ஆவிக்குரிய விசுவாசிகள் என எண்ணிக் கொள்கின்றனர், ஆனால் நிதர்சனத்தில் அவர்கள் வேதத்தின் வார்த்தைகளை உண்மையாகப் பின்பற்றி நடப்பதில்லை. இதுவே சுய வஞ்சகம். தன்னை தானே ஏமாற்றிக் கொள்வது. இது மிக மிக ஆபத்தான விஷயம். 

அந்நாளில் பலர் என்னை நோக்கி: ''கர்த்தாவே! கர்த்தாவே! உமது பெயராலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது பெயரால் பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது பெயராலே பல அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?'' என்பார்கள். 

அப்பொழுது, ''நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை: அக்கிரமத்தைச் செய்கிறவர்களே, என்னைவிட்டு அகன்று போங்கள்'' என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத். 7:22-23). 

கிறிஸ்துவின் பண்புகளை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றாத போதும், தங்களை மிகச் சிறந்த ஆவிக்குரியவர்கள் எனப் பலர் கற்பனையாக எண்ணிக் கொள்கின்றனர். இது தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்வது. முதிர்ச்சி அடையாதவர்கள் தான், "தன்னிடம் ஒன்றும் இல்லாத போதும், நான் செல்வந்தனாகவும், பொருளால் பெருகியவனாகவும் இருக்கிறேன்" என்பார்கள் (வெளி. 3:17). 

ஒரு நபர் தன்னைத் தானே நேர்மையாக ஆராய்ந்து, தனது குறைகளை உணர்ந்து, அந்த தவறுகளை ஒப்புக்கொள்வதும், தனது தேவைகளை அறிக்கையிடுவதும் முதிர்ச்சியின் அடையாளமாகும். 

நிதர்சனத்தில், வேத வார்த்தையை ஆராய்ந்து கற்று, அதிலிருந்து தேவனுக்குப்  பிரியமானவற்றை அறிந்து, அதன்படி வாழ முற்படுவதால் ஏற்படும் தேவ உறவே உண்மையான ஆவிக்குரிய வாழ்வாகும். 

வேதம் சொல்லுகிறது: கர்த்தருடைய வார்த்தை சத்தியம் (யோவான் 17:17).  

நாம் தேவனது சத்தியத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு அதில் நிலைத்து இருந்தால், ஒரு போதும் நேர்மை இல்லாதவர்களாக இருக்க முடியாது. பாசாங்குத்தனத்துடன் நடிக்கவும் முடியாது. 

நம்மை நாமே வஞ்சித்து, ஆவிக்குரிய வாழ்வில் வீழ்ச்சி அடையக் கூடாது என்றால், தேவ வார்த்தைக்கும், நமக்கும் இடையே உள்ள உறவு வலிமையாக இருக்க வேண்டும். அதற்கு நாம் நிறைவேற்ற வேண்டிய மூன்று கடமைகள் இருப்பதாக யாக்கோபு கூறுகிறார். 

இந்தப் பொறுப்புகளை நாம் நேர்மையாக நிறைவேற்றினால், தேவனுடனும், மனிதர்களுடனும் சிறந்ததொரு ஆவிக்குரிய வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள முடியும்.

I. தேவ வார்த்தையை ஏற்றுக்கொள்ளுங்கள் - Receive the Word (1:19–21).

தேவனுடைய வார்த்தை நமது "உள்ளதில் நாட்டப்பட்டது" (யாக்கோபு 1:21) என்று யாக்கோபு குறிப்பிடுகிறார். அதாவது, தேவ வார்த்தை நம் இருதயத்தில் விதைக்கப்படுகிறது என்று பொருள். 

இந்த கருத்தை ஆண்டவர் அருளிய விதைப்பவரின் உவமையின் தொடர்ச்சியாகக் கருதலாம். ஆண்டவர் தேவ வார்த்தையை விதையாகவும், மனிதனின் இருதயத்தை நிலத்திற்கும் ஒப்பிட்டார் (மத். 13:1-9, 18-23).

இயேசு அந்த உவமையில், நான்கு வகையான மனித இதயங்களை, நான்கு விதமான நில அமைப்புடன் ஒப்பிட்டு விவரித்தார்: 

கடின இதயம் (Hard heart): வீதியில் விழுந்த விதைகள்; இது தேவ வார்த்தையின் பொருளைப் புரிந்து கொள்ளாத அல்லது உணர்ந்து கொள்ள இயலாத இதயம், அதனால் விதை முளைக்கவே இல்லை. பறவைகள் விதைகளைக் கொத்தித் தின்றன.

மேம்போக்கான இதயம் (Shallow heart): கற்பாறையில் விழுந்த விதைகள்; இது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட இதயம், ஆனால் போதுமான நெகிழ்வுத் தன்மை இல்லாத காரணத்தால் வேர்கள் வேரூன்றி வளர வழியின்றி அழிந்தது.

நெருக்கப்பட்ட இதயம் (Crowded heart): முட்புதர்களில் விழுந்த விதைகள்; இது உண்மையான மனந்திரும்புதல் இல்லாததைக் குறிக்கிறது. பாவம் தருகின்ற அற்ப சுகத்தை விரும்பி, அதை அனுபவிக்க இவர்களது மனம் விழைகிறது. அதனால் அவர்கள் வாழ்க்கை பலனற்றதாக முடிகிறது.

பலனளிக்கும் இதயம் (The fruitful heart): நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்; இது தேவ வார்த்தையை மனதில் ஏற்றுக் கொண்டு, அது ஆழமாக வேர் எடுக்க அனுமதித்து, மிகுதியான பழங்களை அளிக்கிறது. 

அப்படியென்றால், ஒருவர் இரட்சிக்கப்பட்டவர் என்பதற்கான அடையாளம் எது? 

அவரது கனி தரும் வாழ்வு மூலமாக!!!. 

இது அவரது புதிய மாறுதல் அடைந்த வாழ்க்கையில் வெளிப்படுகிறது. 

அவரது கிறிஸ்தவ பண்புகள் மற்றும் நடத்தையில் பார்க்க முடிகிறது. 

அவர்கள் ஆண்டவருக்கு மகிமையாக ஊழியம் செய்வார்கள். 

அவர்களின் கனி தரும் வாழ்க்கை வழியாக அநேக ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்காக ஆதாயப் படுத்துவார்கள் (ரோ. 1:16). 

அவர்கள் பரிசுத்த வாழ்வில் வளர்ச்சியடைவர் (ரோ. 6:22). 

அவர்கள் தங்களது பொருள், உடைமைகளைப் பகிர்ந்து கொள்ளுவர் (ரோ. 15:28). 

நற்செயல்கள் (கொலோ. 1:10), தேவனைப் போற்றுதல் (எபி. 13:15) எனப் பல வகைகளில் அவர்களது ஆவிக்குரிய நற்குணங்கள் வெளிப்படும் (கலா. 5:22-23).

மதச் சடங்குகளை உருவாக்கி அதன் வழியாகவும் சேவைகள் செய்யப்படலாம், ஆனால் அது ஒரு கடமையாக இருக்கிறது. அவற்றில் உயிர்ப்பு இல்லை. அவை தேவனுக்கு மகிமையாக அதிக கனி தரும் மரங்களை உருவாக்குவதில்லை. 

ஆனால், ஒரு உண்மையான விசுவாசி தனக்குள் அதிக கனிகளைத் தரும் மரங்களுக்கான விதைகளைக் கொண்டுள்ளார். அதனால் அவர் தொடர்ந்து பழங்கள், அதிக பழங்கள், அதிக பழங்கள் என அறுவடை தந்து வளர்ந்து பெருகி தேவனுக்கு மகிமையைக் கொண்டு வருகின்றார் (யோவான் 15:1-5). 

ஆகவே, தேவனுடைய வார்த்தைக்கும், நமக்கும் இடையே உள்ள உறவு சரியான முறையில் அமையாத வரை, தேவ நாமத்திற்கு மகிமை தரும் ஒரு வாழ்க்கையை வாழ நம்மால் இயலாது. 

"நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள்" (மாற்கு 4:24) என்று மட்டுமல்ல, "நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்தும் கவனியுங்கள்" (லூக்கா 8:18) என்றார் இயேசு. 

ஆனால் இன்று துரதிருஷ்டவசமாகப் பல விசுவாசிகள் "கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்து கொள்ள இயலாத" பரிதாபமான நிலையில் உள்ளனர் (மத்.13:13). அவர்கள் வேதாகம வகுப்புகள் மற்றும் தேவாலய ஆராதனைகளில் தவறாமல் கலந்து கொள்கிறார்கள், ஆனால் ஒருபோதும் ஆவிக்குரிய வளர்ச்சி அடைவதில்லை. 

இது யார் தவறு? போதகரின் தவறா? அல்லது தேவ செய்தி அளிப்பவர்களது தவறா? ஒருவேளை அது கேட்பவரின் தவறாகவும் கூட இருக்கலாம். 

பல விசுவாசிகளது ஆவிக்குரிய வாழ்க்கையின் சிதைவின் காரணமாக, அவர்கள் "கேள்வியில் மந்தமுள்ளவர்களாக" இருப்பதாலும் இது சாத்தியமாகும் (எபி. 5:11). 

தேவ வார்த்தைக்கும்  நமக்கும் இடையே உள்ள உறவு வலிமையாக இருப்பதற்கு, நாம் தேவனது வார்த்தையைக் கேட்கும், பேசும், பதிலளிக்கும் விதத்தைக் குறித்து யாக்கோபு மூன்று அறிவுரைகளை கற்றுத் தருகிறார். அதற்கு  நாம் கீழ்ப்படிய வேண்டும்.

a. கேட்பதற்குத் தீவிரம் - Swift to hear (வ. 19).

"கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்" (மத். 13:9).

"ஆதலால், விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்" (ரோமர் 10:17). 

ஒரு வேலைக்காரன் தன் எஜமானின் குரலைக் கேட்பதற்கும், ஒரு தாய் தன் குழந்தையின் மெல்லிய அழுகை சப்தத்தைக் கேட்பதற்கும் எப்படிக் கூர்ந்து கேட்கக் கவனமாக இருப்பார்களோ, அதுபோல ஒரு விசுவாசியும் தேவனது வார்த்தைச் சொல்வதைக் கேட்க விழிப்புடன் இருக்க வேண்டும். துரிதமாகச் செயல்படவும் ஆயத்தமாக இருக்க வேண்டும் 

இந்த உண்மைக்கு தாவீது ராஜாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்  அழகிய உதாரணமாக உள்ளது (2 சாமு 23:14-17). அது பெலிஸ்தியர்கள் பெத்லகேமைக் கைப்பற்றி இருந்த சமயம். அப்போது தாவீது மறைந்து வாழ்ந்தார். அச்சமயம் பெத்லகேமில் உள்ள கிணற்றிலிருந்த குளிர்ந்த நீரைக் குடிக்க அவர் மனம் ஏங்கியது. அது அவர் தனது சிறுவயது மற்றும் இளமைப் பருவத்தில் அடிக்கடி சென்று பருகிய நீர். 

அவர் தனது சேவகர்களுக்கு நேரிடையாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை; "என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருகிறவன் யார்?" என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்'' (2 சாமு 23:15). 

ஆனால் அவருடைய வலிமை மிக்க போர் வீரர்களில் மூன்று பேர் தங்கள் ராஜா தண்ணீருக்காகப் பெருமூச்சு விடுவதைக் கேட்டனர். உடனே அவர்கள் அந்த தண்ணீரைப் பத்திரமாகக் கொண்டு வர தங்கள் உயிரையும் பணயம் வைத்தனர். அவர்கள் "கேட்பதில் தீவிரமானவர்கள்."

வேதத்தை வாசிக்கும் போது ஆண்டவரின் பெருமூச்சைக் கேட்டதுண்டா?

b. பதில் அளிப்பதில் பொறுமை - Slow to speak (வ.19).

ஆவிக்குரிய வாழ்வின் மகுடம் பொறுமை. 

நமக்கு இரண்டு காதுகள், ஒரு வாய் உள்ளது. இது நாம் பேசுவதை விட அதிகமாகக் கேட்க வேண்டும் என்பதை நினைவூட்ட வேண்டும். பல முறை நாம் தேவ வார்த்தையுடன் வாதிடுகிறோம். அது பிறர் கேட்கும் படியாக இல்லாவிட்டாலும் கூட, குறைந்தபட்சம் நம் இதயங்களிலும் மனதிலும் ஒலிக்கிறது. 

"தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்" (நீதி. 10:19). 

"அறிவுடையவன் தன் வார்த்தைகளை அடக்குகிறான்" (நீதி. 17:27). 

லூக்கா 10:29ல் உள்ள நியாய சாஸ்திரி பொறுமையிழந்து, “எனக்குப் பிறன் யார்?” என்று இயேசுவிடம் வாதிட்டார். 

ஆதி திருச்சபை ஆராதனைகள் கூட ஒழுங்கற்றவையாக இருந்ததாக வேதம் குறிப்பிடுகிறது. சபையினர் அடிக்கடி போதகர்களுடன் சண்டை போட்டார்கள். சகோதரர்களிடையே சண்டைகளும், கலகங்களும் கூட இருந்தன (யாக்கோபு 4:1).

தேவ வார்த்தை நம்மோடு பேசுவதைப் பொறுமையோடு கேட்க வேண்டும்.

c. கோபத்திற்கு விலகி - Slow to wrath (வ. 19).

வேத வார்த்தை உங்கள் பாவத்தைச் சுட்டிக் காண்பித்தால் அதற்காகத் தேவ வார்த்தையின் மீது கோபம் கொள்ளாதீர்கள்.

"நீடிய சாந்தமுள்ளவன் மாகா புத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப் பண்ணுகிறான்" (நீதி. 14:29). 

தீர்க்கதரிசி நாத்தன், தாவீது ராஜாவிடம் “ஆட்டுக்குட்டி திருடப்பட்ட கதையை” பற்றிச் சொன்னபோது, ​​ராஜா வெகுவாக கோபமடைந்தார். ஆனால் "நீ தான் அந்த மனிதன்" என்று நாத்தன் சுட்டிக் காட்டிய போது, தாவீது உடனே "நான் பாவம் செய்தேன்" என்று கோபத்திற்கு விலகி தனது பாவத்தை அறிக்கையிட்டார் (2 சாமு. 12). 

கெத்சமேனே தோட்டத்தில், பேதுரு கேட்க மெதுவாகவும், பேசுவதற்கு விரைவாகவும், கோபத்திற்கு விரைந்தவராகவும் இருந்தார், விளைவு அவர் கிட்டத்தட்ட ஒரு மனிதனை வாளால் கொல்வதற்கும் முற்பட்டார். 

பல திருச்சபையில் நிகழும் சண்டைகள் அவசர கோபம் மற்றும் பொறுப்பற்ற வார்த்தைகளின் விளைவாகும். அதே சமயம் பாவத்தின் மீது கோபம் கொள்ள முடியாதவனுக்கு அதை எதிர்த்துப் போராடும் சக்தி இல்லை. ஆனாலும் வேதம் கற்றுத் தரும் உயர்ந்த பாடம்;

''நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்.'' (எபே. 4:26).

நாம் கர்த்தரில் அன்பு கூர்ந்தால், தீமையை வெறுக்க வேண்டும் (சங். 97:10). 

ஆனால் ''மனுஷனுடைய கோபம் தேவ நீதியை நடப்பிக்க மாட்டாதே'' (யாக்.1:20). 

நாம் கிறிஸ்துவுக்குள்ளாக முதிர்ச்சி அடைவதற்கு, பொறுமையுடன் செயல் புரிய வேண்டும் எனக் கர்த்தர் விரும்புகிறார். ஆனால் கோபம் அதற்கு நேர் எதிரானது (யாக்கோபு 1:3-4).

ஒருமுறை சுவரில் எழுதப்பட்ட வாசகத்தை நான் வாசித்தேன், "கோபம் என்பது மிகவும் மதிப்புமிக்க விஷயம், அதை இழப்பது அவமானம்!" 

ஆம், நிதானம்தான் நமக்கு எஃகுக்கு ஒப்பான வலிமையைக் கொடுத்து உதவுகிறது. 

கர்த்தருடைய வார்த்தையின் மீது நாம் கோபப்படுவதைக் கண்டித்து யாக்கோபு நம்மை எச்சரிக்கிறார். ஏனென்றால் வேத வார்த்தைகள் நம் பாவங்களை நமக்கு வெளிப்படுத்துகிறது. கண்ணாடியில் தனது உருவம் பிடிக்காததால், அந்தக் கண்ணாடியை உடைத்த மனிதனைப் போல, பல விசுவாசிகள் தேவ வார்த்தைக்கு எதிராகப் பேசி அதை அசட்டை செய்கிறார்கள், ஏனென்றால் அது அவர்களைப் பற்றியும், அவர்களது பாவத்தைப் பற்றியும் உண்மையை நேர்மையுடன் சொல்கிறது.

ஆயத்தமான இதயம் - A prepared heart (வச. 21)

யாக்கோபு மனித இதயத்தை ஒரு தோட்டமாகப் பார்த்தார்; ஒரு தோட்டத்தைக் கவனிக்காது அப்படியே விட்டுவிட்டால், அந்த மண்ணில் களைகளை மட்டுமே விளையும். 

“களைகளைப் பிடுங்கி”, “தேவ வார்த்தைகள் விதைக்கப்படுவதற்கு ஏதுவாக” நிலத்தைத் தயார் செய்யும்படி யாக்கோபு நம்மைத் தூண்டுகிறார்.

அலட்சியம் மிகுந்த மனதில் கட்டுப்படுத்த முடியாத அளவு களைகள் விளைந்து காணப்படும். ஆயத்தமில்லாத இருதயத்தில் தேவ வார்த்தையை விதைக்க முயல்வது முட்டாள்தனம். 

தேவனுடைய வார்த்தைக்காக நம் இதய தோட்டத்தின் நிலத்தை எவ்வாறு தயார் செய்வது? 

முதலில், நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, கர்த்தர் நம்மை மன்னிக்கும்படி கேட்பதன் மூலம் (1 யோவான் 1:9). 

பின்னர், தேவனது அன்பையும், கிருபையையும் தியானித்து, நம் இதயங்களில் உள்ள கடினத்தன்மையை "உடைத்து உழும்படியாக" அவரிடம் வேண்டிக் கேட்பதன் மூலம்: 

"நீங்கள் முட்களுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்" (எரே. 4:3). 

இறுதியாக, நாம் "சாந்தமாய் ஏற்றுக் கொள்ளும்" மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் (யாக். 1:21). 

சாந்தம் என்பது யாக்கோபு 1:19-20 இல் உள்ள "கோபத்திற்கு" எதிரானது. நீங்கள் சாந்தத்துடன் தேவ வார்த்தையைப் ஏற்றுக் கொள்ளும் போது, அதைப் பெற்றுக் கொள்கிறீர்கள். ஆகவே தேவ வார்த்தையோடு விவாதம் செய்யாதீர்கள். அதைக் கர்த்தரின் வார்த்தையாக மதியுங்கள். உங்கள் சிந்தனைக்குப் பிடித்த வகையில் அதைத் திருப்ப முயலாதீர்கள்.

தேவ வார்த்தையை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். பல்வேறு "ஆவிக்குரிய கருத்துக்களை" வாதிட விரும்பும் கிறிஸ்தவர்கள் தங்களை முட்டாளாக்கிக் கொள்கின்றனர். அவர்களின் "கொள்கை விவாதங்கள்" ஆவிக்குரிய வளர்ச்சியை ஊக்குவிப்பதாக நினைக்கலாம். ஆனால் உண்மையில் அவர்களால் களைகளை மட்டுமே வளர்க்க முடியும்.

II. தேவ வார்த்தையைக் கடைப் பிடியுங்கள் - Practice the Word (1:22-25) 

இரண்டாவதாகத் தேவ வார்த்தைக்கும், நமக்கும் இடையே உள்ள உறவு பலப்படுவதற்கு, வார்த்தையைக் கேட்பது மட்டும் போதாது; அதை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். 

ஒரு நல்ல ஆவிக்குரிய செய்தியைக் கேட்பது, வேதாகம வகுப்புகளில் கலந்து கொள்வது, தங்களை ஆவிக்குரியவர்களாக வளரச் செய்து, தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தரும் என்கிற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது. 

வசனத்தைக் கேட்பதினால் அல்ல, அதைக் கடைப்பிடிப்பதுவே ஆசீர்வாதத்தைத் தரும். 

பல கிறிஸ்தவர்கள் தங்கள் வேதாகமத்தில் பல வசனங்களை அடிக்கோடிட்டுக் குறிக்கிறார்கள், ஆனால் அவர்களின் மனங்களில் அவற்றை ஆழமாகக் குறித்துக் கொள்வதில்லை! 

நீங்கள் வார்த்தையைக் கேட்பதுவே போதுமானது என்று நினைத்தால், நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். 

முந்தைய பகுதியில் யாக்கோபு வார்த்தையை விதைக்கு ஒப்பிட்டார், ஆனால் இந்த பகுதியில் அதை ஒரு கண்ணாடியுடன் ஒப்பிடுகிறார். 

திருமறையில் கர்த்தருடைய வார்த்தையைக் கண்ணாடி என்பதற்கு ஒப்பாகக் கூறும் மேலும் வேறு இரண்டு வேத பகுதிகள் உள்ளன; நீங்கள் அந்த மூன்றையும் ஒன்றாக இணைத்துத் தியானிக்கும் போது, ​​தேவ வார்த்தை என்னும் கண்ணாடியின் வழியாக நம்மைப் பார்த்தால், அதன் மூன்று விதமான ஊழியங்களைப் பார்க்க முடியும். அதனால் மூன்று விதமான பயன்களையும் பெற முடியும்.

a. ஆய்வு செய் - Examination (வச. 23-25).

கண்ணாடியை வைத்திருப்பதற்கான முக்கிய நோக்கம்,  அது உங்களை நீங்களே ஆராய்ந்து பார்க்க உதவுகிறது. அதனால் நீங்கள் உங்களை முடிந்தவரைச் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ள முடியும். 

தேவனுடைய வார்த்தை என்னும் கண்ணாடியில் நாம் நம்மை ஆராய்ந்து  பார்க்கும்போது, ​​நம் மனம், சிந்தனை ஆகியவை உண்மையில் எவ்விதமாக இருக்கிறதோ, அதைப் பார்க்க முடியும். 

ஆனாலும், ஒரு விசுவாசி வேத வார்த்தை என்னும் கண்ணாடி வழியாகத் தன்னை பார்க்கும்போது, அவர் செய்யும் பல தவறுகளை யாக்கோபு சுட்டிக் காட்டுகிறார். 

முதலில், அவர்கள் கடமைக்காகப் பார்க்கிறார்கள்!

பலர் வேத வார்த்தையைப் படிக்கும்போது அதன் வழியாக தங்களைக் கவனமாகப் பார்ப்பதில்லை. பல உண்மையுள்ள விசுவாசிகளும் கூட ஒவ்வொரு நாளும் வேதாகமத்திலிருந்து ஒரு அத்தியாயத்தைக் கடமையாகப் படிக்கிறார்கள். அது ஒரு ஒழுங்கான சமயப் பயிற்சி மட்டுமே. அதிலிருந்து அவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த பயனையும் அடைவதில்லை. 

அன்றாட வேத வாசிப்பு இல்லை என்றால் அவர்களது மனசாட்சி அவர்களைத் தொந்தரவு செய்யும். அதற்காகவே படிக்கிறார்கள். 

உண்மையில் அவர்களின் மனசாட்சி, அவர்கள் வேத வார்த்தைகளைக் கவனக்குறைவுடன் படிப்பதற்காக அல்லவா அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டும்?

திருமறையை மேலோட்டமாக வாசிப்பது நமது ஆழ்ந்த தேவைகளை வெளிப்படுத்தாது. இது ஒரு புகைப்படத்திற்கும், உண்மையை அப்பட்டமாக  வெளிப்படுத்தும் எக்ஸ்ரேக்கும் இடையே உள்ள வித்தியாசம். 

இரண்டாவது தவறு, பார்த்ததை உடனடியாக மறந்து விடுகிறார்கள்!

ஒருவர் தனது மனதை, அதன் சிந்தனை ஓட்டங்களை ஆழமாகத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் மட்டுமே, அதன் தன்மையை உணர முடியும், அது மனதில் மறக்க முடியாத அனுபவமாகப் பதியும்! 

திருச்சபையில் நடக்கும் பல ஆவிக்குரிய கூட்டங்களில், மக்களின் தீவிரமான அர்ப்பணிப்புகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் சில காலம் கடந்த பின்பு அந்த விசுவாசத்தில் சிலர் மட்டுமே தொடர்ந்து நடக்கின்றனர். 

ஆனால், ஜான் வெஸ்லி ஒரு பிரசங்க கூட்டத்தைப் பற்றி எழுதினார்: “எனக்கு முன் ஒருவன் மரித்தவனைப் போல விழுந்தான், இப்போது அடுத்த வினாடியில் மற்றொருவன், தொடர்ந்து மூன்றாவது. அடுத்த அரை மணி நேரத்தில் மேலும் ஐந்து பேர் கீழே வீழ்ந்தனர். அவர்களில் பெரும்பாலோர் வன்முறையால் பாதிக்கப்பட்ட வேதனையிலிருந்தனர்" (ஜூன் 22, 1739 க்கான வெஸ்லியின் ஜர்னல்). 

இந்த மக்களை சில உளவியல் ரீதியான காரணங்களால் தான்  விழுந்தனர் என நீங்கள் தீர்மானிப்பதற்கு முன்பாக, திருமறையில் காணப்படும் தேவ மனிதர்கள் தேவ சமூகத்தில் தங்கள் சொந்த மனங்களின் உண்மையான நிலையைக் கண்டவுடன் எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதை வாசித்துப் பாருங்கள். 

ஏசாயா தீர்க்கன் கதறி அழுது, “ஐயோ! நான் அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்” என்றார் (ஏசா. 6:5)! 

பேதுரு, "ஆண்டவரே, என்னைவிட்டு அகன்று போம்,  நான் பாவியான மனிதன்"  என்று அழுதான் (லூக்கா 5:8)! 

யோபு அவருடைய நாளில் பூமியில் மிகவும் நீதியுள்ள மனிதர், ஆனால் அவர்  "நான் என்னை அருவெறுத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்" என அறிக்கை  செய்தார் (யோபு 42:6).

தவறு எண் மூன்று: அவர்கள் கேட்ட வார்த்தைக்குக் கீழ்ப்படியவும், அதைக் கடைப்பிடிக்கவும் தவறுகிறார்கள். 

வசனத்தைக் காதல் கேட்டதும், அதைக் கடைப் பிடித்தது போலப் பலர் கற்பனையாக  நினைக்கிறார்கள். அது அசட்டுத்தனம். கிறிஸ்தவர்களாகிய நாம், செயல் படுவதற்குப் பதிலாக வேதத்தை வாசிப்பது அல்லது வேதத்தைப் பற்றிப் பேசுவதில் திருப்தி அடைகிறோம். 

சுவிசேஷம் அறிவித்தல், திருச்சபை வளர்ச்சி போன்ற தலைப்புகளில் முடிவில்லா குழுக் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்துகிறோம். அதனால் நாம் முன்னேற்றம் அடைந்து விட்டதாக நினைக்கிறோம். மாநாடுகள் மற்றும் செயல் கூட்டங்களில் நிச்சயமாக எந்த தவறும் இல்லை என்றாலும், அவை நடைமுறையில் செயல்படுத்தப் படாவிட்டால், அது பயனற்றது. அது பாவம். 

வேதம் என்னும் கண்ணாடியை நாம் பயன் தரும் வகையில் பயன்படுத்த வேண்டுமானால், அதைக் கவனமாகவும், தீவிர நோக்கத்துடனும் பார்க்க வேண்டும் (யாக். 1:25). 

அவசரமாகப் பார்த்துச் செல்வது பயனற்றது. தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நாம் நம்முடைய சொந்த இருதயங்களையும், வாழ்க்கையையும் ஆராய வேண்டும். 

இதற்கு நேரம், கவனம் மற்றும் நேர்மையான பக்தி தேவை. ஒவ்வொரு நாளும் தேவனுடன் வெறும் ஐந்து நிமிடங்களில் ஆழ்ந்த ஆவிக்குரிய ஆய்வை செய்து  நிறைவேற்ற முடியாது

பல ஆண்டுகளாக என்னைக் கவனித்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் உண்மையில் அதிர்ஷ்டசாலி. 

அவர்கள் ஒவ்வொருவரிடமும் நான் பாராட்டிய இரண்டு நல்ல குணங்கள் உள்ளன: அவர்கள் என்னுடன் போதுமான நேரத்தைச் செலவழித்து இருக்கிறார்கள்.  அவர்கள் அவசரப்படாமல், எப்போதும் என்னிடம் உண்மையைச் சொன்னார்கள். 

பரம மருத்துவரான இயேசு (மத். 9:12) நம்மைப் பரிசோதிக்கும் போது, அவர் தம்முடைய வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அந்த வேலையைச் சிறப்பாகச் செய்ய அவருடன் நாம் போதிய நேரம் செலவிட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

ஒருவேளை நாம் தேவ வார்த்தையை ஆழ்ந்து பார்ப்பதற்குப் பதிலாக அவசர கதியில் பார்ப்பதற்கு, ஒரு காரணம் என்னவென்றால், நாம் நம்மைப் பற்றிய உண்மையைப் பார்க்கப் பயப்படுகிறோம். 

வேதம் நம்மோடு பேசிய உடன், நாம் என்ன செய்ய வேண்டும்? கர்த்தர் என்ன சொல்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் சொல்வதைச் செய்ய வேண்டும். தேவ ஆசீர்வாதம் என்பது வார்த்தைகளை வாசிப்பதில் அல்ல, அதைச் செய்வதில் வருகிறது. "இப்படிப்பட்ட மனிதன் தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்" (யாக். 1:25). 

யாக்கோபு நிருபத்தில் வலியுறுத்தப்படும் கருத்து, விசுவாசத்தைச் செயல்கள் மூலம் நடைமுறை வாழ்வில் செய்து காண்பிக்க வேண்டும். நாம் தேவ வார்த்தையைப் படித்த பிறகு அதன்படி வாழ வேண்டும் (யாக்.1:25; அப். 1:14; 2:42, 46; 13:43; 14:22; 26:22 ). 

யாக்கோபு ஏன் தேவனுடைய வார்த்தையை "சுயாதீனப் பூரணப் பிரமாணம்" (யாக்கோபு 1:25) என்று அழைத்தார்? ஏனென்றால், அது முழுமையானது. நாம் அதற்குக் கீழ்ப்படிந்தால், அது நம்மைப் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிறது.  

''நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே (சுதந்திரமாக) நடப்பேன்" (சங். 119:45). 

"பாவம் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமை" (யோவான் 8:34). 

“நீங்கள் என் உபதேசத்தில்  நிலைத்திருந்தால், மெய்யாகவே என் சீடராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" (யோவான் 8:31-32).

நம் மனம், சிந்தனைகளைத் தேவ வார்த்தை என்னும் கண்ணாடியில் ஆழ்ந்து பார்த்து, நம்மை நாமே உணர்ந்து சீர் செய்து கொள்வது முதல் பயன். தேவ வார்த்தை எனும் கண்ணாடியின் இரண்டாவது பயனும் இருக்கிறது. அது..,


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக