சனி, 6 மே, 2023

யாக்கோபு 1: 17-18

அத்தியாயம் 3 தொடர்ச்சி.



2. கர்த்தர் நல்லவர். -  Consider God's Goodness (1:17):

சாத்தான் தந்திரக்காரன். கர்த்தர் நம்மைக் கட்டுப்படுத்தி அடிமை போல வைத்திருக்கிறார், அவரது வார்த்தையைப் பின்பற்றி வாழ்ந்தால் உலக இன்பங்களை அனுபவிக்க முடியாது, அவர் நம்மை ஆழ்ந்து நேசிக்கவில்லை, அவருக்கு நம்மீது உண்மையான அக்கறை கிடையாது என நம் மனதை ஏமாற்றி, நம்மை நம்ப வைப்பது அவனது சூழ்ச்சியான தந்திரங்களில் ஒன்றாகும்.

இதே விதமாகவே சாத்தான் ஏவாளைத் தேவ அன்பைச் சந்தேகிக்கும்படி வஞ்சகமாகத் தூண்டினான். கர்த்தர், அவர்களை உண்மையாக நேசிக்கவில்லை. அவர்கள் தேவர்களைப் போல மாறுவதை விரும்பவில்லை. ஆகவே தான் அந்த கனியை உண்பதற்குத் தடை செய்தார் என வலை விரித்தான். 

வாசித்துப் பாருங்கள்;    

சர்ப்பம் ஏவாளிடம், "தடை செய்யப்பட்ட அந்த மரத்தின் பழத்தைச் சாப்பிட்டால், நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் தேவர்களைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது தேவனுக்குத் தெரியும்;" என்றது (ஆதி 3: 4-5).

சாத்தான் இயேசுவைச் சோதித்த போதும், தேவ அன்பைச் சந்தேகிக்கவே அவரை ​​வஞ்சகமாகத் தூண்டினான். அவரது பசியைச் சார்ந்து முதல் கேள்வியை எழுப்பினான். "உமது பிதா உம்மை உண்மையாக நேசித்தால், நீர் ஏன் பசியுடன் தவிக்க வேண்டும்?

"நீர் தேவனுடைய குமாரன் என்றால், இந்தக் கற்கள் அப்பங்களாகும்படி சொல்லும்''.

இரண்டாவதாக

"உமது பிதா உம்மை உண்மையாக நேசித்தால், நீர் இந்த தேவாலயத்தின் உப்பரிகையிலிருந்து தாழக்குதியும். அப்போது அவர் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார். அவர்கள் உமது கால் கல்லில் மோதாதபடி தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்''.

இதிலிருந்து நம் ஆழ் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியதொரு சத்தியம் 'கர்த்தர் நல்லவர்’, அவர் எப்போதும் எனக்கு நன்மையையே தருபவர். 

இந்த நம்பிக்கை, நாம் சோதனையில் வீழ்ந்து விடாதபடி நம்மை எச்சரித்துப் பாதுகாக்கும் ஒரு தடுப்புச் சுவராக இருக்கிறது. தேவன் நல்லவர் என்பதால், நம் தேவைகளை நிறைவேற்ற வேறு எந்த ஒரு நபரும் (சாத்தான் உட்பட) நமக்குத் தேவையில்லை. 

தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாக வாழ்ந்து ஆசீர்வாதமாக இருப்பதைவிட, அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பது கடினமாக  இருந்தாலும், அதுவே நல்லது. 

நமக்கு நன்மையையே தரும் கர்த்தரை, நாம் சந்தேகிக்கத் தொடங்கும் போது  சாத்தானின் கவர்ச்சிகளால் ஈர்க்கப்படுவோம். நமக்குள் மறைந்து இருக்கும் இழிவான இச்சைகளால் தூண்டப்பட்டு, அவன் விரிக்கும் வலையில் சிக்கிக் கொள்வோம். 

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இஸ்ரவேலர், கானான் தேசத்தைச் சுதந்தரித்து,  அதன் ஆசீர்வாதங்களை அனுபவிக்கத் துவங்குவதற்கு முன்பாக, கர்த்தர் அவர்களுக்குச் செய்த நன்மைகளை மறந்துவிடக்கூடாது என்று சொல்லி மோசே அவர்களை எச்சரித்தார்.

மேலும், ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு எனும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புகச் செய்யும்போதும், நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும், நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டு நிறைவு கொள்ளும் போதும், நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உன்னை வெளியே அழைத்து வந்த கர்த்தரை மறந்து விடாதபடி கவனமாய் இரு. உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து நட! அவருக்குப் பணிந்து ஆராதனை செய்து, அவர் பெயராலே ஆணையிடு! உங்களைச் சுற்றிலுமுள்ள மக்களின் தெய்வங்களாகிய வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில், உங்களிடையே உள்ள உங்கள் தேவனாகிய கர்த்தர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத ஆண்டவர். இல்லையெனில், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சினம் உங்கள் மேல் மூண்டு, உலகினின்றே உங்களை அழித்து விடலாம். (உபா. 6:10-15).

இன்றும் இந்த எச்சரிக்கை நமக்குத் தேவையாக இருக்கிறது.

இந்த முதல் அதிகாரம் 17வது வசனத்தின் வழியாக, நாம் சபலத்தில் வீழ்ந்து போகாதபடிக்கு, கர்த்தரின் ''நான்கு குணாதிசயங்களை'' நாம் எப்போதும் மறவாமல் நினைவு கூற வேண்டும் என யாக்கோபு கற்றுத் தருகிறார்.

நல்ல கொடைகள் அனைத்தும்,  நிறைவான வரமெல்லாம்,  ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்து கீழே இறங்கி வருகின்றது. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல (யாக் 1:17).

All good giving and every perfect gifts are from above, coming down from the father of lights, with whom there is no alteration or shadow caused by change. (James 1:17)

2.1. கர்த்தர் நல்லவர் - (God is good and he gives only good gifts):

கர்த்தர் நல்லவர். இவ்வுலகில் உள்ள அனைத்து நன்மைகளும் அவரிடமிருந்தே நமக்கு வருகிறது. நாம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்குக் கர்த்தர் தடை செய்கிறார் என்றால், அது நமக்கு நன்மையானது இல்லை எனப் பொருள். ஒரு வேளை தேவனிடமிருந்து அருளப்பட்ட ஒன்றில், நாம் உடனடியாக நன்மை ஒன்றைக் காணாவிட்டாலும், அது நல்லது தான். பவுலின் உடலில் உள்ள முள் கர்த்தரால் தான் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அது ஒரு வித்தியாசமான கிருபை; ஆயினும் அது அவருக்குப் பெரும் ஆசீர்வாதமாகத் தான் அமைந்தது (2 கொரி. 12:1-10).

2.2. கர்த்தர் அருளுபவை நிறைவானது - (The way God gives is perfect):

கர்த்தர் அருளுபவை முழுமையானதாக இருக்கிறது. "நிறைவான வரமெல்லாம்" என்பதை ''ஒவ்வொரு வரமும் நிறைவானது" எனவும் மொழி பெயர்க்கலாம். 

ஒரு மனிதர் நமக்கு அன்பில்லாமல் வெறும் சடங்காக அன்பளிப்பை வழங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரு பரிசு நமக்குக் கொடுக்கப்படும் விதத்தில் தான் அதன் உண்மையான மதிப்பு கூடவும், குறையவும் வாய்ப்பு உள்ளது. 

ஆனால் கர்த்தர் நமக்கு ஒரு ஆசீர்வாதத்தை அளிக்கும் போது, அதை அவர் அன்பாகவும், கிருபையுடனும் மட்டுமல்ல, நிறைவாக அருளுகிறார். அவர் கொடுப்பது, கொடுக்கும் விதம் இவ்விரண்டும் சிறந்ததாக இருக்கிறது.

2.3. கர்த்தர் அருள்பவை முடிவற்றது - (He gives Constantly):

கர்த்தரின் கிருபை காலை தோறும் புதிதாக இருக்கிறது. அவைகள் முடிவற்றவை. "நிறைவான வரம் எல்லாம் ஜோதிகளின் பிதாவிடமிருந்து கீழே இறங்கி வருகின்றது"  என்பது நிகழ்கால தொடர் வாக்கியம்.

"அது தொடர்ந்து கீழே இறங்கி வந்து கொண்டே இருக்கிறது" எனவும் மொழி பெயர்க்கலாம். இறைவன் எப்போதாவது கொடுப்பதில்லை; அவர் எப்பொழுதும் தொடர்ந்து அருளுகிறார். 

சில சமயங்களில் அவருடைய கிருபைகளை நாம் காணாத போதும், அவர் அவற்றை அனுப்புகிறார் என விசுவாசிக்க வேண்டும். இது எப்படி சாத்தியம்? ஏனென்றால் அவர் நமக்கு எப்போதும் நன்மையானதைத் தொடர்ந்து தருவேன் என வாக்கு தந்திருக்கிறார். நாம் அவருடைய வார்த்தையை நம்புகிறோம்.

2.4. கர்த்தர் மாறாதவர் - (God does  not Change):

கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். ஒளியின் தந்தையிடத்தில் நிழல்கள் இல்லை. அவர் பரிசுத்தமானவர், ஆகையால் அவரால் ஒருபோதும் மோசமான இயல்பு உடையவராகச் செயல்பட முடியாது; அவர் ஏற்கனவே பரிபூரணமாக இருப்பதால் இன்னும் சிறப்பானவராகவும் மாற வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

பூமியில் சூரியனது பிரகாசத்தின் அளவு காலை, மதியம், மாலை, இரவு எனப் பல வகைகளில் மாறுபட்டு வீசுகிறது. அதற்குக் காரணம் பூமி சுழல்வது தான். ஆனால் சூரியனோ எப்போதும் மாறாமல் ஒருவிதமாகப் பிரகாசிக்கிறது. ஒரு வேளை நமக்கும் இறைவனுக்கும் இடையே சில சந்தர்ப்பங்களில் நிழல்கள் குறுக்கிட்டால், புரிந்து கொள்ளுங்கள்; அவர் அவற்றை ஏற்படுத்தவில்லை. 

துயரங்கள் அல்லது சோதனைகள் நேரிடும் போது, நாம் ஒருபோதும் அவரது அன்பைக் குறித்து கேள்வி கேட்கவோ அல்லது அவர் அருளும் நன்மையைக் குறித்துச் சந்தேகிக்கவோ கூடாது என்பதே இதன் பொருள்.

ஒரு வேளை தாவீது ராஜா கர்த்தருடைய நன்மையை நினைவு கூர்ந்திருந்தால், அவர் பத்சேபாவை அழைத்து, அந்தப் பயங்கரமான பாவத்தைச் செய்திருக்க மாட்டார். ஆகையால் தான் நாத்தன் தீர்க்கதரிசி ராஜாவிடம் இவ்விதம் சொன்னார்.

“இஸ்ரேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து, நான் உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரேல் வம்சத்தையும் யூதா வம்சத்தையும் கையளித்தேன்; இது மிகக் குறைவாக இருந்திருந்தால், நான் இன்னும் உனக்கு வேண்டியதைக் கொடுத்திருப்பேன்” (2 சாமு. 12:7-8).

இந்த வசனத்தில் ''கொடுத்து/தந்து/கையளித்து'' எனும் வார்த்தையைத் தேவன்  திரும்பத் திரும்பக் கூறுவதைக் கவனியுங்கள். கர்த்தர் நல்லவராக இருந்தார், ஆனால் தாவீது தன்னிலை இழந்து, கர்த்தர் அருளிய நன்மைகளை மறந்ததால் சாத்தானின் தூண்டிலில் சிக்கினார்.

சபலங்களில் வீழ்ந்து விடாமல் நம்மைப் பாதுகாக்கும் முதல் எச்சரிக்கும் தடுப்புச் சுவர் எதிர்மறையானது: அது கர்த்தரின் நியாயத் தீர்ப்பைக் குறித்த பயம்.

இரண்டாவது எச்சரிப்பின் தடுப்புச் சுவர் நேர்மறையானது: அது கர்த்தர் அருளும் நன்மையை மறக்காது, நாம் நன்றியுடன் அதை நினைவு கூர்ந்து வாழ்வது.  

கர்த்தருக்குப் பயப்படுதல் எதிர்மறையாக இருந்தாலும், அது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை தான்,  ஆனாலும் தேவன் மீதுள்ள அன்பு, நன்றியுணர்வு அதைச் சமநிலைப்படுத்த வேண்டும்.

அவர் நம்மை சிட்சித்து தண்டிக்கக்கூடும் எனப் பயந்து அவருக்குக் கீழ்ப்படியலாம், அல்லது அவர் நம் மீது நீடிய பொறுமையுடன் கிருபையாக இரங்கி, நம் வாழ்வை நன்மையால் நிரப்புவதால் அவரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படியலாம்.

இந்த நேர்மறையான அணுகுமுறையே யோசேப்பு தனது எஜமானரின் மனைவியால் சோதிக்கப்பட்டபோது பாவம் செய்யாமல் இருக்க உதவியது.

“இதோ, என் எஜமானர் வீட்டில் எதற்கும் கவலைப்படுவதில்லை, தனக்குச் சொந்தமான அனைத்தையும் என் பொறுப்பில் வைத்திருக்கிறார். இந்த வீட்டில் என்னை விடப் பெரியவர் யாரும் இல்லை, அவர் உங்களைத் தவிர வேறு எதையும் என்னிடம் தடுக்கவில்லை, ஏனென்றால் நீங்கள் அவருடைய மனைவி. அப்படியானால் நான் எப்படி இவ்வளவு பெரிய தீமையைச் செய்து, கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்ய முடியும்? (ஆதி. 39:8-9).

தனது வாழ்வின் ஆசீர்வாதங்கள் அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்தவை என்பதை யோசேப்பு அறிந்திருந்தார். அவைகள் அனைத்தையும் கர்த்தர், தன் எசமானுடைய கைகளின் வழியாக அருளுகிறார் எனும் நன்றி நிறைந்த இதயம் அவர் சபலத்தில் வீழ்ந்து பாவம் செய்யாதபடி தடுத்து நிறுத்தியது.

சாத்தான் கொடுக்கும் சில்லறை சுகங்களை விடக் கர்த்தரின் கிருபைகள் எப்போதும் சிறந்தவை. சாத்தான் ஒருபோதும் எந்தவொரு நல்ல ஆசீர்வாதத்தையும் கொடுப்பதில்லை. அவன் கொடுக்கும் சில்லறை சுகங்களுக்கு நீங்கள் ஆசைப்பட்டால், உண்மையில் அவற்றிற்காக அதிக விலையை அவனுக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்.

"கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தருகிறது; அவர் அதில் எந்த துக்கத்தையும் சேர்க்கவில்லை" (நீதி. 10:22).

ஆகான் தேவனின் எச்சரிக்கையையும் கர்த்தரின் நன்மையையும் மறந்து, தடைசெய்யப்பட்ட செல்வத்தைக் கண்டு, ஆசைப்பட்டு, அதைப் பெற்றான். அவன் பணக்காரர் ஆனான், ஆனால் அதைத் தொடர்ந்து வந்த துக்கம் அவனுடைய செல்வத்தை வறுமையாக மாற்றியது (யோசு. 7).

அடுத்த முறை நீங்கள் சபல உணர்வுகளால் சோதிக்கப்படும்போது, ​​உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் உங்களுக்கு அருளிய நன்மைகளைத் தியானியுங்கள். இந்த பாவத்தைச் செய்து அந்த நல்ல தேவனை நான் துக்கப்படுத்த மாட்டேன் என்பது மனதின் ஆழமான தீர்மானமாக இருக்கட்டும். 

உங்களுக்கு ஏதாவது ஒரு தேவை என்று நினைத்தால், கர்த்தர் அதை வழங்குவதற்காகக் காத்திருங்கள். பிசாசின் தூண்டிலோடு ஒருபோதும் விளையாட வேண்டாம்.

சோதனைக்கான ஒரு நோக்கம் பொறுமையைக் கற்பிப்பதாகும். தாவீது சவுலைக் கொன்று தான் ராஜாவாக விரைந்து முடிசூட்டுவதற்கு இரண்டு முறை சோதிக்கப்பட்டார், ஆனால் அவர் அந்த சபலங்களை எதிர்த்து கர்த்தரின் நேரத்திற்காகக் காத்திருந்தார். தாவீது அப்போது முதிர்ச்சியுடன் செயல்பட்டார்.

3. கர்த்தரின் தெய்வீக இயல்பை கருத்தில் கொள்ளுங்கள் - Consider God's Divine Nature (1:18):

முதலாவது "எதிர்காலத்தை எண்ணிப் பாருங்கள். கர்த்தரின் நியாயத் தீர்ப்புக்குப் பயந்து, பாவத்திற்கு விலகி, எச்சரிக்கையாக இருங்கள்." எனக் கூறினார்.

இரண்டாவதாக, "உங்களைச் சுற்றி நிகழ்வதைக் கவனித்துப் பாருங்கள். கர்த்தர் உங்களுக்கு அருளிய ஏராளமான நன்மைகளைத் தியானித்து, அதன் நிமித்தமாவது பாவத்திற்கு விலகி வாழுங்கள்" என்றார். 

மூன்றாவதாகக் கூறுகிறார், "உங்கள் உள்ளான மனதைக் கவனித்துப் பாருங்கள்’’.  

நீங்கள் யார்? 

நீங்கள் உன்னதத்திலிருந்து அருளப்பட்ட மறுபிறப்பின் அனுபவத்தை அடைந்த கர்த்தரின் தெய்வீகத் தன்மையை உடையவர்கள்.

இச்சையானது பாவத்திற்கும் மரணத்திற்கும் நம்மை அழைத்துச் செல்லும் என்பதை, கர்ப்பமடைதலுக்கு ஒப்பான காட்சியாக யாக்கோபு சித்தரித்தார் (யாக். 1:15).

இப்போதும் அவர் அதேவிதமான உருவகத்தை இங்கும் பயன்படுத்துகிறார்.  ''சத்திய வசனத்தினாலே உங்களை ஜெநிப்பித்தார்'' என்பதில் தேவ வார்த்தையை, ஒரு உயிரைப் பிறப்பிக்கும் விதையாக உருவகப் படுத்தி விளக்குகிறார்.

அப்போஸ்தலர் யோவானும் இதே விதமானதொரு அணுகுமுறையைத் தான் 1-யோவான் 3:9 இல் பயன்படுத்துகிறார்.

''தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான், ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்த படியினால் பாவம் செய்யமாட்டான்’’.

இங்கு "அவருடைய வித்து" என யோவான் குறிப்பிடுவது ஒரு விசுவாசிக்குள் இருக்கும்  கர்த்தருடைய தெய்வீக இயல்புகளைக் குறிக்கிறது.

மறுபிறப்பின் அனுபவம் இல்லாமல் பாவத்தை ஜெயிக்க முடியாது. ஆகவே  மறுபிறப்பைக் குறித்து வேதம் வெளிப்படுத்தும் நான்கு முக்கியமான சிறப்பு இயல்புகளைத் தியானிப்பது மிக முக்கியம்.  

3.1. மறுபிறப்பு: தெய்வீக அருள் - It is divine:

மறுபிறப்பு உன்னதத்திலிருந்து அருளப்படும் ஈவு (யோவான்3:17). நிக்கோதேமு மறுபிறப்பு என்பதை, ஒருவர் முதிர் வயதில் தனது தாயின் கர்ப்பப் பைக்குள் மீண்டும் எப்படி நுழைய முடியும் எனத் தவறாகச் சிந்தித்தார். அவர் உண்மையில் மறுபிறப்பைத் தவறாகப் புரிந்து கொண்டார். 

தெய்வீக மறு பிறப்பு என்பது சரீர முயற்சியால் உருவாகுவது இல்லை. அது  எந்த பெற்றோருக்கு, எந்த தேசத்தில் பிறக்க வேண்டும் என்பதை எப்படி நாம்  முடிவு செய்ய முடியாதோ அது போல, நமது ஆவிக்குரிய பிறப்பையும் நம்முடைய இஷ்டம் போல உருவாக்கிக் கொள்ள முடியாது. அது கர்த்தரின் தீர்மானம்.  

நாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் அந்த தருணத்தில் தெய்வீக அற்புதமாக நிகழ்கிறது. 

3.2. மறுபிறப்பு: கருணை - It is gracious:

மறுபிறப்பைச் சம்பாதித்துப் பெற முடியாது. நாம் அதற்குத் தகுதியானவர்களும் கிடையாது. 

கர்த்தர் தமது சொந்த கிருபை மற்றும் விருப்பத்தின் காரணமாக ஒருவருக்கு இந்த ஆவிக்குரிய புதிய பிறப்பைக் கொடுக்கிறார்.

"அவர்கள் இரத்தத்திலாவது [மனித வம்ச தொடர்ச்சி - human descent], மாம்ச சித்ததினாலவது [சரீர முயற்சி - Flesh efforts], புருஷனுடைய சித்ததினாலவது [மனித முயற்சி human efforts ] பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்" (யோவான் 1:13).

ஒருவரும் உறவு, செல்வம், சுய தீர்மானங்கள், சாதி, மதம் காரணமாக மறுபிறப்பைப் பெற முடியாது. மறுபிறப்பு முழுமையாகக் கர்த்தரின் கருணையால் நிகழ்வது.

3.3. மறுபிறப்பு: கர்த்தருடைய வார்த்தையால் பிறப்பது - It is through God's word:

மனிதப் பிறப்பிற்கு ஓர் தாயும், தந்தையும் தேவைப்படுவது போல, ஆவிக்குரிய பிறப்பிற்கும் தாயும், தந்தையும் இருக்கிறார்கள். அது கர்த்தரின் வார்த்தை மற்றும் பரிசுத்த ஆவியானவர்.

“மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்; ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” (யோவான் 3:6).

"அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே" (1 பேதுரு 1:23).

புதிய பிறப்பின் அதிசயம் நமக்குள் நிகழப் பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் வார்த்தையைப் பயன்படுத்துகிறார். 

தேவனுடைய வார்த்தை "உயிருள்ளது. அது சக்தி வாய்ந்தது" (எபி. 4:12). தேவ வார்த்தையானது, கிறிஸ்துவை நம்பும் பாவியின் இதயத்தில் ஒரு புதிய ஜீவனை உருவாக்க முடியும். அந்த புதிய ஜீவன் கர்த்தருக்குப் பிரியமான பரிசுத்த வாழ்க்கை வாழும் சக்தி வாய்ந்தது. 

ஆக மறு பிறப்பு எனும் புதிய வாழ்க்கை, பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசியின் இதயத்தில் கர்த்தரின் வார்த்தையைப் பதிப்பதன் வழியாக உருவாக்குகிறார். 

3.4. மறுபிறப்பு: படைப்புகளில் ஆகச் சிறந்தது - It is the  finest birth possible:

நாம் "அவருடைய சிருஷ்டிகளின் முதற்பலன்கள்" என்று யாக்கோபு யூத விசுவாசிகளுக்கு எழுதினார். முதற் பலன்கள் என்ற வார்த்தை யூதர்களுக்கு மிக அர்த்தமுள்ளது. 

பழைய ஏற்பாட்டு யூதர்கள் தங்களுடைய விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலை வெளிப்படையாகக் காண்பிக்கும் விதமாகத் தேவனுக்கு முதற்பலனைக் கொண்டு வந்தனர். அது நன்றியின் வெளிப்பாடு.

"உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம் பண்ணு" (நீதி. 3:9).

கர்த்தர் இந்த பிரபஞ்சத்தில் படைத்திருக்கும் அனைத்து உயிரினங்களிலும், உண்மையான சாட்சியுடன் வாழும் கிறிஸ்தவர்களே மிக உயர்ந்த படைப்பு, அதுவே மிகச் சிறந்தது! ஏனெனில், அவர்கள் இறைவனின் பண்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த காரணத்தினிமித்தமே, ஒரு உண்மை கிறிஸ்தவன் சாத்தானின் தூண்டிலில் விழுவது அல்லது பாவமான காரியங்களை விரும்புவது தேவ நாமத்திற்கும், அவரது கண்ணியத்திற்குக் குறைவானது என்பதை உணர வேண்டும். 

உயர்ந்த பிறப்பு என்பது உயர்ந்த பண்புகள் நிறைந்த வாழ்க்கை வாழ்வதன் மூலமாக வெளிப்படுத்த வேண்டும். நமக்கு ஒரு புதிய மறுபிறப்பை அருளுவதன் மூலம், கர்த்தர் பழைய பிறப்பு குறைவானது எனவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிராகரிக்கிறார்.

திருமறை முழுவதும், தேவன் முதல் குழந்தையை நிராகரித்து, இரண்டாவது குழந்தையை ஏற்றுக் கொள்வதைக் காணலாம். 

அவர் ஆபேலை ஏற்றுக் கொண்டார், காயீனை அல்ல; ஈசாக்கை அங்கீகரித்தார், இஸ்மவேலை அல்ல; யாக்கோபை தெரிந்து கொண்டார்,  ஏசாவை அல்ல. அவர் உங்கள் முதல் பிறப்பை நிராகரிக்கிறார். உங்களுக்கு மறுபிறப்பு தேவை என்று அவர் அறிவுறுத்துகிறார்.

இந்த புதிய மறுபிறப்பின் அனுபவம்தான் சோதனையை வெல்ல நமக்கு  உதவுகிறது. ஆதாமிடமிருந்து நமது பழைய சுபாவத்தை (மாம்சீக சுபாவம்) பெற்றோம். அவர் தோல்வியடைந்தார். ஆனால் நாம் புதிய இயல்புக்கு அடிபணிந்தால், வெற்றி பெறுவோம், ஏனெனில் இந்த புதிய இயல்பு கிறிஸ்துவிடமிருந்து வருகிறது. அவர் வெற்றியாளர்.

இந்த கருத்தை ஒரு ஞாயிறு பள்ளிக் குழந்தை எளிய வார்த்தைகளில்  விளக்கியது:

“இரண்டு மனிதர்கள் என் இதயத்தில் வாழ்கிறார்கள்: ஒருவர் வயதான ஆதாம். மற்றவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. சோதனை என் இதயக் கதவைத் தட்டும் போது, ​​அதற்குப் பதில் சொல்ல யாராவது ஒருவரை அனுப்ப வேண்டும். நான் ஆதாமைப் பதில் சொல்ல அனுமதித்தால், பாவம் செய்வேன். ஆகவே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை பதில் சொல்ல அனுப்புகிறேன். அவர் எப்போதும் வெற்றி பெறுவார்!”

நிச்சயமாக, இந்த புதிய இயல்பு உங்களுக்குள் வல்லமையாகச் செயல்பட வேண்டுமெனில் தினமும் கர்த்தருடைய வார்த்தையால் உங்கள் ஆன்மாவிற்கு உணவளிக்கப்பட வேண்டும். அது சபலத்தைத் தூண்டுகின்ற மாம்சீக உணர்வுகளை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான வலிமையை உங்களுக்குத் தரும். 

உங்களுக்கு ஆவிக்குரிய மறுபிறப்பைக் கொடுக்க தேவனுடைய வார்த்தையைப் பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தியது போல, உங்களுக்கு ஆவிக்குரிய பலத்தைத் தருவதற்கும் அதே தேவ வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.  

"மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" (மத். 4:4).

நாம் பாவத்தில் வீழ்வதற்குப் பல சாக்குப்போக்குகளைக் காரணமாகச் சொன்னாலும், உண்மையில் அதில் வீழ்வதற்கு நம்மைத் தவிர வேறு யாரும் காரணம் இல்லை.

நம்முடைய சொந்த ஆசைகளே, நம்மைச் சபலத்திற்கும், பாவத்திற்கும் அழைத்துச் செல்கின்றன. இது கர்த்தரின் குற்றம் இல்லை.

ஆனாலும் பாவத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, தேவன் இந்த மூன்று எச்சரிக்கும் தடுப்புச் சுவர்களை அமைத்துள்ளார். நாம் தடுப்புச் சுவர்களைக் கவனித்து எச்சரிக்கையாகப் பாவத்திற்கும், சபலங்களுக்கும் விலகி வாழ்ந்தால், ஜீவ கிரீடத்தை (Crown) வெல்வோம் (யாக்கோபு 1:12). தடுப்புச் சுவர்களை உடைத்துச் சென்றால், சவப்பெட்டியை (Coffin) காண்போம் (யாக்கோபு 1:15).

மரணமா (Coffin)? ஜீவ கிரீடமா (Crown)?

அது எதுவாக இருக்கும்? Which will it be?


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக