வெள்ளி, 16 டிசம்பர், 2022

சங்கீதம் 3

விடுதலை தருபவர்.


முதல் முறையாக ''சங்கீதம்'' என்கிற வார்த்தையை, இந்தப் பாடல் தலைப்பின் அடிக் குறிப்பில் காண முடிகிறது. இதற்கான எபிரேய வார்த்தை மிஸ்மோர் (Mizmor). அதன் பொருள் "தந்தியை மீட்டு'' (to pluck the Strings). 

இது தாவீதால் எழுதப்பட்ட முதல் ஜெப சங்கீதம். சங்கீதம்-1 முதல் 41வது சங்கீதம் வரை பெரும்பாலும் தாவீதால் எழுதப்பட்டவை (சங். 1, 10 மற்றும் 33 ஐத் தவிர). இரண்டாம் சங்கீதம் தாவீதால் எழுதப்பட்டது என பேதுரு குறிப்பிடுகிறார் (அப். 4:25).

இந்த சங்கீதம் "தனிப்பட்ட புலம்பல் (Personal Lament)" எனும் பிரிவாக வகைப் படுத்தப்பட்டுள்ளது. பிற புலம்பல் சங்கீதங்கள் (சங். 3—7, 13, 17, 22, 25—28, 35, 38—40, 42—43, 51, 54—57, 59, 61, 63—64, 69-71, 86, 88, 102, 109, 120, 130, 140-143). 

தனது குமாரன் அப்சலோம் அரியணையைக் கைப்பற்றிய போது, தாவீது எருசலேமிலிருந்து தப்பி ஓடிய பின்னணியில் இந்த சங்கீதம் எழுதப்பட்டது. ராஜாவும் அவனுடைய பணியாட்களும் யோர்தான் நதியைக் கடந்து மக்னாயீமில் முகாமிட்டிருந்தார்கள் (2 சாமு. 15-18/17:24). அந்த சமயத்தில் அவர் இந்த ஜெப பாடலை ஏறெடுத்தார். 

இது காலையில் பாடப்பட்ட ஜெப சங்கீதம் (வ. 5). இதே நிகழ்வுகளின் போது மாலையில் ஏறெடுக்கப்பட்டது தான் சங்கீதம்-4 (4:8). சங்கீதம்-5 (5:3, 8-10) மற்றும் பிற சங்கீதங்கள்: 42, 43, 61, 62, 63,143 ஆகியவையும் இதே கால கட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம்.  

தாவீது தனது தவறுகளை ஒப்புக்கொள்கிறார் (வ. 1–2):

பேதுரு கடலில் மூழ்கும் போது ''ஆண்டவரே' எனக் கூப்பிட்டதைப் போல (மத். 14:30) இந்த ஜெப சங்கீதமும் சட்டென "கர்த்தாவே" எனும் தாவீதின் கதறலுடன் தொடங்குகிறது. பாரம்பரிய வழிபாட்டு முறைகள் படி, ஆண்டவரது பல்வேறு நாமங்களைக் கூறித், துதித்து, போற்றிப் பாடி  ஜெபிக்கும் சூழல் தற்போது தாவீதுக்கு இல்லை. அவரது சொந்த வாழ்க்கையும், ராஜ்யத்தின் எதிர்காலமும் கடும் நெருக்கடியில் கேள்விக் குறியாக இருந்தது. ஆனாலும் இது போன்ற ஆபத்துக் காலத்தில், கர்த்தர் தன்னை கை தூக்கிக் காப்பாற்றுவார் என்பதை தாவீது நன்கு அறிந்திருந்தார் (46:1). 

அப்சலோம் ராஜ்யத்தைக் கைப்பற்றுவதற்கும், தனது ஆதரவைக் கட்டியெழுப்பவும் நீண்ட காலம் திட்டமிட்டு முயன்றார். அவர் மக்களிடம் இதமாகவும், மென்மையாகவும் பேசினார். அவர்களைப் பிரியப்படுத்தவும், இதயங்களைக் கவரவும் பொய்யாக நடித்தார் (2 சாமு. 15:1-6). அவரை ஆதரிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது (2 சாமு. 15:12-13; 16:7-8; 17:11; 18:7). 

“உண்மை தனது காலணிகளை அணிவதற்கு முன்பாக, பொய் பாதி உலகைச் சுற்றி வந்து விடும்” என ஜேம்ஸ் கலாகன் (James Callaghan) சொல்கிறார். மனித மனதில் ஏதோ ஒன்று மறைந்து இருக்கிறது. அது பொய்களை விரும்பி உண்பதில் (கேட்பதில்) அதிக மகிழ்ச்சி அடைகிறது.

தாவீதின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது. அவரது சத்துருக்கள் அதிகரித்தது மட்டுமல்ல, "தாவீது ஆண்டவரால் கை விடப்பட்டார். அவன் எப்போது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்?" என அவருக்கு விரோதமாகப் பேசினர் (சங். 31:13; 38:19; 41:4-9; 55:18; 56:2; 69:4; 71:10-11).  

எபிரேய மொழியில் உதவி எனக் குறிப்பிடுவதற்குப் பயன் படுத்தப்படும் வார்த்தை யெஷூவா (Yeshua). இந்த வார்த்தை வசனம் 7இல் "இரட்சியும்-Save" என்றும், வசனம் 8 இல் "இரட்சிப்பு-Salvation" என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதே பொருளில் தான் "இயேசு" மற்றும் "யோசுவா" என்ற பெயர்கள் சூட்டப்பட்டன (மத். 1:21). இந்தப் பெயர் 136 முறை சங்கீதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய அவமானமும், இழிவு நிறைந்த சூழலைக் கடவுள் ஏன் தாவீதின் வாழ்வில்  அனுமதித்தார்? ஏனெனில் இந்த தண்டனை அவர் செய்த விபச்சாரம் மற்றும் கொலை பாவங்களின் காரணமாக  அளிக்கப்பட்டது (2 சாமு. 12:1-12). தாவீது தனது பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புக் கொண்டபோது கடவுள் கிருபையாக அவரை மன்னித்தார் (2 சாமு. 12:13-14; சங். 32; 51). ஆனாலும் கர்த்தருடைய நீதி செம்மையானது. தாவீது தனது பாவங்களின் பின் விளைவுகளை அறுவடை செய்யத் தான் வேண்டும். தாவீது மிகுந்த குடும்ப வேதனைகளை அனுபவித்தார். பத்சேபா பெற்றெடுத்த பிள்ளை மரித்தது. மகள் தாமார் கற்பழிக்கப்பட்டாள். மகன்கள் அம்னோன், அப்சலோம் மற்றும் அதோனியா ஆகியோர் படுகொலை ஆனார்கள். தாங்க முடியாத வலி, சொல்ல இயலாத துயரம் (2 சாமு. 12-14).

"சேலா" எனும் சொல் முதல் முறையாக இந்த பகுதியில் அறிமுகமாகிறது (வ. 2, 4, 8). "சேலா" எனும் சொல் சங்கீத புத்தகங்களில் 71 முறையும், ஆபகூக் தீர்க்க தரிசன புத்தகத்தில் மூன்றாம் அதிகாரத்தில் வரும் பாடலில் (3: 3, 9, 13) மூன்று முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

"கைகளை உயர்த்துவது (To Lift up)" அல்லது "அமைதியாக இருப்பது (To be Silent)" எனப் பொருள்படும் வார்த்தைகளிலிருந்து இது வந்ததாகக் கருதப்படுகிறது. எனினும் இதை இஸ்ரேலிய அறிஞர்கள் முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை. 

ஒரு வேளை "கைகளை உயர்த்துவது'' எனும் குறிப்பாக இருந்தால், அது உரத்த குரலில் துதிப்பது அல்லது எக்காளங்களை உயர்த்தி இசைக் கருவிகளை ஊதுவதைக்  குறிக்கக் கூடும். இது இறைவனை நோக்கி கைகளை உயர்த்தி ஜெபிப்பதற்கான சமிக்ஞையாக இருக்கலாம். 

"அமைதியாக இருப்பது'' என இருந்தால் அது ஒரு கணம் அமைதியாக இடை நிறுத்தம் (Pause) செய்தல் அல்லது தியானிப்பதைக் குறிக்கலாம்.

ஒரு பாடலின் சில குறிப்பிட்ட வரிகளைப் பாடும் போது அந்த வரிகளின் பொருளை ஆழமாக உணர்ந்து, அதன் தாக்கத்தில் துதிப்பது அல்லது அமைதி காப்பது எனும் குறிப்பை உணர்த்த "சேலா" பயன்படுத்தப்பட்டது எனப் புரிந்து கொள்ளலாம்.

தாவீது இறைவன் மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார் (வ. 3-4):

தாவீது எளிதில் வீழ்ந்து போகிறவர் அல்ல. சுற்றியிருந்த அச்சுறுத்தும் சூழ்நிலையிலும், பிரச்சனைகளை உதறித் தள்ளாமல், கலங்காமல் அவர் தனது கண்களை உயர்த்தி கர்த்தரை விசுவாசத்தோடு பார்த்தார். 

அவர் ஆபத்தில் இருப்பதை அறிந்திருந்தார். ஆனாலும் கர்த்தரே எப்போதும் அவருடைய கேடயமாக இருந்தார் (ஆதி. 15:1). இஸ்ரேலின் ராஜா "கேடகம்" என்று குறிப்பிடப்பட்டார் (சங். 84:9; 89:18). ஏனெனில் அவர் தேசத்தைப் பாதுகாத்தார். ஆனால் தாவீதோ கர்த்தரையே தன் கேடயமாகச் சார்ந்திருந்தார் (சங். 7:10; 18:2; 47:9; 59:11; 84:11; உபா. 33:29). 

தாவீது தனது சொந்த பாவங்கள் மற்றும் மகனின் துரோகத்தின் காரணமாக அவமானத்தில் குன்றி இருந்தார். அப்சலோம் தன் தந்தையின் "மகிமையை" அவமானமாக மாற்றினான் (4:2). தற்போது கைவிடப்பட்ட சூழல். ஆனாலும் கர்த்தரே தாவீதின் மகிமைக்கு ஆதாரம். ஒரு நாள் அவர் அந்த மகிமையில்  திரும்ப நிலை நிறுத்தப்படுவார். 

தேவன் தன் தலையை உயர்த்தி தன்னை மீண்டும் சிம்மாசனத்தில் திரும்பவுமாக அமர்த்துவார் என்பதை தாவீது அறிந்திருந்தார் (சங். 27:6; 2 சாமு. 15:30). அவருக்குத் தேவன் கொடுத்த வாக்குறுதியில், அருளப்பட்ட உடன்படிக்கையின் மீது விசுவாசம் இருந்தது (2 சாமு. 7). அத்துடன் கர்த்தர்  தன்னை ஒரு போதும் கைவிடமாட்டார் என்பதை அவர் அறிந்திருந்தார்.

புனித சீயோன் மலை மீது இன்னும் ஆலயம் கட்டப்படவில்லை. ஆனால் அங்கே உடன்படிக்கை பெட்டி  இருந்தது (2 சாமு. 15:25). அது கடவுளின் சிம்மாசனம் (80:1). தாவீது சிம்மாசனத்திலிருந்து தள்ளி வீழ்த்தப்பட்டு இருக்கலாம். ஆனாலும், இப்போதும் கர்த்தர் தாமே சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவருடைய கட்டுப்பாட்டில் தான் எருசலேம் இருக்கிறது. மேலும் அப்சலோம் கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவைத் துணிகரமாகத் தாக்கிவிட்டார் (2:2). இது பாவச் செயல். 

கர்த்தர் கடந்த காலத்திலும் தன்னை கைவிட்டதில்லை, இப்போதும் கைவிடமாட்டார் என்பதை அறிந்த தாவீது, ஜெபத்தில் கர்த்தரிடம் அழுது விண்ணப்பித்தார். "இந்த ஏழை கூக்குரலிட்டான், கர்த்தர் அவனுக்குச் செவிசாய்த்தார், அவனுடைய எல்லா கஷ்டங்களிலிருந்தும் நீங்கலாக்கி அவனை இரட்சித்தார்" (சங். 34: 6).

தாவீது வெற்றியை எதிர்பார்க்கிறார் (வ. 5–8):

மறுநாள் காலையில் தாவீது கண் விழித்தார். அப்போது அவருக்கு எழுந்த முதல் எண்ணம் கர்த்தர் தன்னோடு இருக்கிறார். அவர் உடன் இருப்பதால் தான் தானும் தனது பணியாளர்களும் இரவில் பாதுகாக்கப்பட்டோம் என்பதை அறிந்திருந்தார்.

தாவீது கலக்கத்தின் மத்தியிலும் நன்கு உறங்கினார். இது இயேசு புயலின் மத்தியில் உறங்கியதையும் (மாற்கு 4:39), பேதுரு சிறையில் தூங்குவதையும் (அப். 12) நமக்கு நினைவூட்டுகிறது. அவரை நம்பி, அவருடைய சித்தத்தைச் செய்ய நாடினால், நாம் உறங்கும்போதும் கடவுள் நமக்காகச் செயல்படுகிறார் (121:3-4; 127:2). 

தமக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் போர் அணிவகுத்து நின்றாலும், தான் பயப்படமாட்டேன் என்று தாவீது உறுதியளித்தார். ஏனெனில் கர்த்தர் அவருக்கு வெற்றியைத் தருவார் (உபா. 32:30).

ஒரு நாளின் காலை நேரம் தாவீதிற்கு மிக முக்கியமான பொழுது. நமக்கும் அப்படியே இருக்க வேண்டும். அவர் ஒவ்வோர் நாள் காலையிலும்  இறைவனைச் சந்தித்து ஜெபித்தார். ஜெபிப்பதற்கும் (5:3), பாடுவதற்கும் (57:7–8; 59:16), கடவுளின் கருணையால் திருப்தி அடைவதற்கும் (90:14) அவருக்கு நேரம் இருந்தது. 

ஆபிரகாம் அதிகாலையில் எழுந்தார் (ஆதி. 19:27; 21:14; 22:3). மோசே (யாத். 24:4; 34:4), யோசுவா (யோசு. 3:1; 6:12; 7:16; 8:10), சாமுவேல் (1 சாமு. 15:12), யோபு (யோபு 1:5), மற்றும் நம்முடைய ஆண்டவரும் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு, தேவ சமூகத்தில் தரித்திருந்தவர்கள் (மாற்கு 1:35).

“அவருடைய கோபம் ஒரு நிமிஷம் மட்டுமே, அவருடைய தயவோ நீடிய வாழ்வு. சாயங்காலத்தில் அழுகை தங்கலாம், ஆனால் காலையில் மகிழ்ச்சி வரும்” (30:5). 

தேவன் தாவீதை இளைப்பாறச் செய்தது மட்டுமல்லாமல், அவரைக் காப்பாற்றினார். வசனம் 7ல் உள்ள "கர்த்தாவே எழுந்தருளும்" எனும் தாவீதின் ஜெபம் இஸ்ரேல் வனாந்தரத்திலிருந்த வருடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. வழி நடத்தும் மகிமையின் மேகம் நகரத் தொடங்கியதும், இஸ்ரவேலரின் முகாம் புறப்பட்டது. அப்போது "கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறிப்போகட்டும்; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போகட்டும்” என மோசே பாடினார் (எண். 10:35). 

தாவீது உடன்படிக்கைப் பெட்டியை மீண்டும் எருசலேமுக்கு திரும்ப அனுப்பினார் (2 சாமு. 15:24-29). அவர்களோடு உடன்படிக்கைப் பெட்டி இருப்பதால் மட்டுமே கர்த்தரின் பிரசன்னமும் உடன் இருக்கும் என்பதற்கு எந்தவித  உத்தரவாதமும் இல்லை என்பது தாவீதுக்கு நன்கு தெரியும் (1 சாமு. 4). 

இப்போது அவரால் ஆலயத்திற்கும் செல்ல முடியாது. ஆசாரியர்களின் ஊழியத்தில் பங்கு பெற இயலாது. ஆனாலும் அன்பும் கீழ்ப்படிதலும் உள்ள இதயத்தையே கர்த்தர் விரும்புகிறார் என்பதை அறியும் அளவுக்கு அவர் ஆவிக்குரியவராக இருந்தார். அவரோடு உடன்படிக்கைப் பெட்டி இல்லை, ஆனால் உடன்படிக்கைப் பெட்டியின் தேவன் இருந்தார்! அவரால் மிருக பலிகளையோ அல்லது தூபத்தையோ செலுத்த முடியவில்லை. ஆனால் கர்த்தரைத் துதிப்பதற்கு தமது கையை உயர்த்த முடியும் (141:2). தேவமகிமை அவருடன் இருந்தது (வச. 3). கர்த்தரின் ஆசீர்வாதமும் இருந்தது (வச. 8). சத்துருக்கள் பெருகினாலும் கவலையில்லை(வச. 1)! கர்த்தரும் எழும்பி வெற்றியைத் தருவார்!

சில மொழிபெயர்ப்புகள்(KJV, AB, NASB) 7ஆம் வசனத்தில் உள்ள வினைச் சொற்களைக் கடந்த காலத்தில் குறிப்பிடப் படுகின்றன (நீர் என் பகைஞர் எல்லோரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப் போட்டீர்). இது கடந்தகாலத்தில் கர்த்தர் அவருக்குக் கொடுத்த பல வெற்றிகளை அவர் திரும்பிப் பார்க்கிறார் என்பதைக் குறிக்கிறது. 

NIV - மொழிபெயர்ப்பில் நீர் என் பகைஞர் எல்லோரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப் போட்டீரே? எனும் பொருளில் உள்ளது.  இது கடந்த காலத்தில் என் உயிரைக் காப்பாற்றிய நீங்கள் இப்போது ஏன் என்னைக் கைவிடுகிறீர்கள்? எனும் எதிர்கால வெற்றிக்கான பிரார்த்தனையாகப் புரிந்து கொள்ளலாம்.  . 

எப்படியிருந்தாலும், தனக்கு முன்பாகச் சென்று அப்சலோமின் படையைத் தோற்கடிக்கக் கர்த்தர் மீதே தாவீது தன் நம்பிக்கையை வைத்திருந்தார், அதைக் கர்த்தர் நிறைவேற்றினார். 

எதிரியின் கன்னத்தில் அடிப்பது, முகத்தில் அறைவது, ஓர் அவமானப்படுத்தும் செயலாகும். தாவீது கலகக்காரப் படையை விலங்குகளின் கூட்டமாகப் பார்த்தார். அவற்றின் பற்கள் உடைக்கப்பட வேண்டும் (சங். 7:2; 10:9; 17:12; 22:12-13, 16, 20-21; 35:17; 57:4; 58: 6, 8)

யோனா பெரிய மீனுக்குள்ளாக இருந்தபோது வசனம் 8 ஐ மேற்கோள் காட்டி ஜெபித்தார் (யோனா 2:9). அந்த இரட்சிப்பை அனுபவித்தார். 

அப்சலோமின் திட்டங்களை எதிர்ப்பதில் தாவீது புத்திசாலித்தனமான உத்தியைப் பயன்படுத்தினார், இருந்த போதிலும் அவர் வெற்றியின் மகிமையை ஏற்க மறுத்துவிட்டார். கர்த்தர் ஒருவரே மகிமைக்குப் பாத்திரர் என அறிக்கை செய்தார். 

அவர் தனது மக்களுக்கு எதிராகவும் வெறுப்புணர்வு கொள்ளவில்லை. மாறாக, அவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜெபித்தார். இது சிலுவையில் கர்த்தருடைய ஜெபத்தையும் (லூக்கா 23:34) ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படும்போது செய்த ஜெபத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது (அப். 7:60). 

கர்த்தர் தாவீதை மீண்டும் அரியணையில் அமர்த்தினார். அவருக்குப் பின் சாலமோனை அரசராக நியமிக்கவும் தாவீதை ஆயத்தம் செய்தார். ஆலயம் கட்டுவதற்குத் தேவையான செல்வத்தையும் தாவீதுக்கு அருளினார். (1 நாளா. 22-29).

Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

செவ்வாய், 6 டிசம்பர், 2022

சங்கீதம் 2

மேசியாவின் வருகை.



முதலாம் சங்கீதம் கடவுளின் திருச் சட்டத்தின் முக்கியத்துவத்தை கற்றுத் தருகிறது. ஆண்டவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அதை முழு மனதுடன் கடைப்பிடியுங்கள் என்பது அதன் மையக்கருத்து. இரண்டாவது சங்கீதம் ஒரு தீர்க்க தரிசனம். அது மேசியாவின் வருகையை முன்னறிவிக்கிறது. 

முதலாம் சங்கீதத்தில் சுட்டிக்காட்டப்படும் மக்கள் தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் இரண்டாம் சங்கீதத்தில் குறிப்பிடப்படுபவர்கள் திருச் சட்டத்தை எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள். முதலாம் சங்கீதம் யார் பாக்கியவான்? எனத் தொடங்குகிறது. இரண்டாம் சங்கீதம் யார் பாக்கியவான்? எனக் கூறி  நிறைவடைகிறது. 

முதலாம் சங்கீதத்திலிருந்து எந்தவொரு வசனமும் புதிய ஏற்பாட்டில் மேற்கோள்களாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதே சமயம் இரண்டாம் சங்கீதத்திலிருந்து பதினெட்டு முறை அதன் வசனங்கள் மேற்கோள்களாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது (மத். 3:17; 7:23; 17:5; மாற்கு 1:11; 9:7; லூக்கா 3:22; 9:35; யோவான் 1:49; அப்போஸ்தலர் 4:25-26; 13:32; பிலி. 2:11; எபி. 1:2, 5; 5:5; வெளி. 2:26-27; 11:18; 12:5; 19:15). 

இது ஓர் மேசியாவின் சங்கீதம் (Messianic Psalm). மேசியாவின் சங்கீதம் என்பது மோசே மற்றும் தீர்க்கதரிசிகளால் இயேசுவைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்க தரிசன வசனங்கள் அடங்கிய சங்கீதங்கள் (லூக்கா 24:27, 44). பிற மேசியாவின் சங்கீதங்கள் (சங்; 8, 16, 22, 23, 40, 41, 45, 68, 69, 102, 110, 118). 

இது ஓர் இராஜரீக சங்கீதம் (Royal Psalm). மற்ற இராஜரீக சங்கீதங்கள் (18, 20, 21, 45, 72, 89, 101, 110 மற்றும் 144). 

இந்த சங்கீதம் தாவீதால் எழுதப்பட்டது எனப் பேதுரு குறிப்பிடுகிறார் (அப் 4:25-26). தாவீது ராஜாவாக முடிசூட்டப்பட்ட போது பெலிஸ்தர், மோவாபியர், சோபாவின் ராஜா, சீரியர், அம்மோன் புத்திரர், அமலேக்கியர் அதை எதிர்த்தனர். அவர்களது கிளர்ச்சியை இந்த சங்கீதம் குறிப்பிடுகிறது (2சாமுவேல் 5:17-25, 8:1-14, மற்றும் 10:1-19).

எனினும் இந்த இரண்டாம் சங்கீதம் மற்றும் 2 சாமுவேல்-7:1-17; ஆகிய இரண்டு வேதப் பகுதிகளும், தாவீது மற்றும் அவரது சந்ததிகளைக் கடந்து, வரப் போகும் மேசியாவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. சங்கீதம் 2: 6-9 இல், கர்த்தர் தாவீதுடன் ஒரு உடன்படிக்கை செய்கிறார். இந்த உலகைப் பாவத்திலிருந்து மீட்க இரட்சகர் அருளப்படுவார். அவர் என்றென்றும் நிலைத்து நிற்கப் போகும் தேவனுடைய ராஜ்யத்தை நிறுவுவார். தேவ சிங்காசனத்தில் வீற்றிருந்து என்றென்றும் அரசாளுவார். இந்த தீர்க்க தரிசனம் இயேசு கிறிஸ்தில் நிறைவேறியது (மத். 1:1).

கர்த்தர் இஸ்ரேல் மக்களை அவருடைய தீர்க்கதரிசிகள் மற்றும் நியாயாதிபதிகள் மூலம் நேரிடையாக ஆளுகை செய்தார். ஆனால் இஸ்ரவேலரோ, கர்த்தருக்கு விரோதமாக எழும்பி, புற இன மக்களைப் போல தங்களுக்கும் ஒரு ராஜா வேண்டும் என சாமுவேலிடம் முறையிட்டார்கள் (1சாமு. 8). இவ்விதம் கேட்பார்கள் எனக் கர்த்தர் அறிவார். இதை ஆபிரகாமுக்கு முன்னறிவித்திருந்தார் (ஆதி. 17:6, 16; 35:11; எண். 24:7, 17). இஸ்ரேலின் ராஜா எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனும் கட்டளையும் கொடுக்கப்பட்டது (உபா. 17:14-20). 

சவுல் இஸ்ரேல் தேசத்தின் முதல் அரசராக அபிஷேகம் செய்யப்பட்டார். ஆனாலும் அவர் இஸ்ரேல் ராஜ்யத்தை நிறுவ நியமிக்கப்படவில்லை. ஏனெனில் இஸ்ரவேலை ஆளுகை செய்பவர், ''யூதா கோத்திரத்திலிருந்து''  வருவார் என முன்னறிவிக்கப்பட்டது (ஆதி. 49:10). சவுல் பென்யமின் கோத்திரத்தைச் சேர்ந்தவர். கர்த்தர் தாவீதை தெரிந்து கொண்டார். அவர் வம்சத்திலிருந்து மேசியா பிறக்க வேண்டும் என்பது கடவுள் சித்தம் (2 சாமு. 7). 

சில சங்கீதங்கள் மனத் திரையில் காட்சியாகப் பார்க்க முடியும்  (114, 130, 133). சில சங்கீதங்கள் உணர்வுப்பூர்வமானது. (22, 129, 137, 142), ஆனால் இது பேசும் சங்கீதம். இந்த சங்கீதத்தில் நான்கு குரல்கள் பேசுகின்றன. அதைக் கேட்க வேண்டும்.

1.  தேசங்கள் - சதியின் குரல் (Conspiracy; வச: 1–3):

''கர்த்தர் அவர்களுக்குச் செய்த சகல நன்மைகளையும் அனுபவித்த பின்னரும், ​​ஜனங்களால் அவருக்கு விரோதமாக எப்படி கலகம் செய்ய முடிகிறது?” 

இந்தக் கேள்வியை தாவீது ஆச்சரியத்துடன் கேட்டார்! இந்தக் கேள்வி பதிலை எதிர்பார்த்துக் கேட்கப் படவில்லை. ஏனென்றால் இந்தக் கேள்விக்கு உண்மையில் பதில் இல்லை. கர்த்தர் ஜனங்களின் அடிப்படைத் தேவைகளைச் சந்தித்தார் (அப். 2:46-47). வழிநடத்தினார். பாதுகாத்தார். மன்னிப்பையும் நித்திய ஜீவனையும் கொடுப்பதற்கு ஒரு இரட்சகரையும் அனுப்பினார் (அப்போஸ்தலர் 17:24-31; தானி 4:32). 

இருந்த போதிலும், பாபேல் கோபுர காலம் தொடங்கி (ஆதி. 11), கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னரும் (அப்போஸ்தலர் 4:18-31); அர்மகெதோன் போர் வரை (வெளி. 19), அனைத்தையும் படைத்த தேவ சித்தத்திற்கு எதிராகவே, மனுகுலம் செயல்படுகிறது. தேவனுக்கு விரோதமாகச் செயல்பட்ட மனுகுலத்தின் பயனற்ற முட்டாள்தனமான கலகங்களை வேதாகமம் முழுவதும் வாசிக்க முடிகிறது.

ராஜாக்களும், சிறு ஆட்சியாளர்களும் தங்கள் சொந்த இச்சையை நிறைவேற்ற விரும்பி, கர்த்தர் ஏற்படுத்திய உடன்படிக்கையை மீறினார்கள். அதை உடைக்க சதி செய்தார்கள். ''பிடிவாதமாகத் திமிறி எழும்பி; உடலைக் கட்டிய கயிறுகளை அறுத்து; நுகத்தடியை உடைக்க முயலும் அடங்காத விலங்கைப் போல''; அவர்கள் செயல் படும் காட்சியை வேதம் காண்பிக்கிறது (எரே. 5:5; 27:2). ஆனாலும் இத்தகைய கலக முயற்சி பயனற்றது. ஏனென்றால் கடவுளுக்கு அடிபணிந்து அவருடைய சித்தத்தைச் செய்வதே உண்மையான விடுதலை. கட்டுப்பாடற்ற சுதந்திரம் அராஜகம் (Freedom without authority is anarchy). அராஜகம் அழிக்கிறது. 

"அதிகாரம் படைப்பாற்றலை அழிக்கிறது (All authority destroys creativity)" என்று சுவரில் எழுதப்பட்ட ஓர் வாசகத்தை வாசித்தேன். என்னவொரு முட்டாள்தனம். ஒரு இசைக் கலைஞராக இருந்தாலும் சரி, விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும் சரி, ஒரு ஒழுங்கு முறைமைக்குக் கீழ்ப்படிந்து, கட்டுப்பாட்டுடன் பயிற்சி செய்யும் போது தான் அவர்களது படைப்பாற்றல் வெளிப்படுகிறது. எந்த அளவிற்கு அவர்கள் ஒப்புக் கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு மேம்பட்டுப் பிரகாசிக்கின்றனர். நீதி, உண்மை மற்றும் தேவ சட்டத்தின் அதிகாரத்திற்கு அடிபணிந்து நடக்காமல், உண்மையான படைப்பாற்றல் வெளிப்பட முடியாது. "ஒவ்வொரு ஆன்மாவின் முதல் கடமை அதன் சுதந்திரத்தை அல்ல, அதன் எஜமானரைக் கண்டு பிடிப்பதாகும். (The first duty of every soul is to find not its freedom but its Master)" என்கிறார் பிரிட்டிஷ் இறையியலாளர் P. T. Forsythe.

மேசியா என்பது எபிரேய வார்த்தை. அதன் பொருள் "அபிஷேகம் செய்யப்பட்டவர்''. அதுவே கிரேக்க மொழியில் "கிறிஸ்து" எனச் சொல்லப்படுகிறது. பழைய ஏற்பாட்டில்; ராஜாக்கள் அபிஷேகம் செய்யப்பட்டனர் (1 சாமு. 10:1; 2 இரா 11:12). தீர்க்கதரிசிகள் அபிஷேகம் செய்யப்பட்டனர் (2 இரா 19:16). ஆசாரியர்கள் அபிஷேகம் செய்யப்பட்டனர் (யாத். 28:41). 

தேசங்கள் கலகம் செய்வது "கடவுளுக்கு எதிராக இல்லை; உண்மையில்  அவர்கள் கடவுளின் குமாரனாகிய இயேசு கிறிஸ்தை எதிர்த்து கலகம் செய்கிறார்கள். "இவர் எங்களை ஆளுகைச் செய்யக் கூடாது" எனும் ஒரு விஷயத்தில் அவர்கள் ஒத்த மனநிலையுடன் ஒற்றுமையாகச் செயல்படுகின்றனர் (லூக்கா 19:14). 

இந்த உலகம் தம்மை வெறுக்கும் என்பதைக் கிறிஸ்து அறிந்திருந்தார். அவரைப் பின்பற்றுபவர்களையும் வெறுக்கும் என்றும் கூறினார் (யோவான் 7:7; 12; 15, 18-19, 24-25; மத். 24:9; லூக்கா 21:17). 'சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்" என்ற சொற்றொடருக்கு "எதிர்ப்புக்குத் தயாராகுங்கள்" என்று பொருள். இறைவன் மற்றும் கிறிஸ்துக்கு எதிரான இந்த மீறலின் விளைவுகள் ரோமர் 1:18 இல் விவரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தரிசன சங்கீதம் இனிமையானது அல்ல. இது ஒரு எச்சரிப்பின் சத்தம். 

2. தந்தையாகிய கடவுள் - இகழ்ச்சியின் குரல் (Mockery; வச: 4–6):

பரலோகம் ஓர் அமைதி நிறைந்த இடம். ஆனால் பூமி இதற்கு முற்றிலும் மாறுபட்டது. இங்கு எப்போதும் ஆரவாரம், கூச்சல், கலகம், சப்தம். இந்த சங்கீதத்தில் குறிப்பிடப்படும் மக்கள் ஆண்டவருக்கு விரோதமாகக் கொந்தளிக்கிறார்கள். ஆனால் மனிதன் தனக்கு எதிராகக் கலகம் செய்வதால் கடவுள் கவலைப்படவில்லை. பயப்படுவதும் இல்லை. அவர் இகழ்ச்சியாகச் சிரிக்கிறார் (சங். 37:7-13; 59:1-8). 

கடவுளின் பார்வையில் மாம்சமான யாவும் புல்லைப் போலவும், உதிர்ந்து போகும் பூவைப் போலவும் இருக்கிறது. தண்ணீர்களை தமது கைப்பிடியால் அளப்பவருக்கு வலிமை மிகுந்த நாடுகள் ஒரு சிறிய நீர்த் துளி (ஏசா. 40:6-8, 12-17). 

இன்றைக்கும் தேவன் கிருபையோடு ஜாதிகளிடம் பேசுகிறார். தம்முடைய குமாரனை விசுவாசிக்கும் படி அவர்களை அன்புடன் அழைக்கிறார். 

ஆனால் அவர் தம் கோபத்துடன் பேசி, பயங்கரமான நியாயத்தீர்ப்பை உலகத்திற்குக் கொடுக்கும் நாள் ஒன்று வரப் போகிறது  

அந்த நாளில் பாவத்தின் கோரத்தைச் சிலுவையில் தேவன் பரிகரித்தார் எனும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தங்களைப் பற்றியும், தங்கள் பாவங்களைப் பற்றியும் கடவுள் அளிக்கும் நியாயத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும் (வெளி. 6; 12-17). 

இஸ்ரவேலரின் எதிரிகள் கர்த்தரால் தோற்கடிக்கப்பட்டனர். கர்த்தர் தாவீதுக்கு வெற்றிக்கு மேல் வெற்றியை அருளினார். சீயோனில் தாவீதுக்கு கர்த்தர் அரியணையைக் கொடுத்தார். ஆனால் இது முடிவானதல்ல. இனி வரப் போகிற ஒரு பெரிய முடிசூட்டு விழாவின் அறிமுக காட்சி மட்டுமே. 

நித்தியமாக அரசாளப் போகும் ராஜா வர இருப்பதாகக் கடவுள் அறிவிக்கிறார். அவர் இப்போது மகிமையின் சிம்மாசனத்தில் தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார் (மாற்கு 16:19; 1 கொரி. 15:25; எபே.1:19-23). இயேசு கிறிஸ்து மெல்கிசேதேக்கின் வரிசையின்படி ராஜாவாகவும், ஆசாரியாராகவும் இருக்கிறார் (எபி. 5:5-6; 7:1). இப்போது இஸ்ரேலில் ராஜா இல்லை (ஓசியா. 3:4). ஆனால் பரலோக சீயோனில் ஒரு ராஜா இருக்கிறார் (எபி. 12:22-24). 

இந்த சங்கீதத்தில் மேசியாவாக வெளிப்படும் இயேசு கிறிஸ்தை அடையாளம் கண்டு கொள்ள தவறினால், மீட்பின் செய்தியை, அவருடைய மரணத்தை (வ. 1-3, அப் 4:23-28), உயிர்த்தெழுதலை (வ. 7, அப் 13:33), பரத்திற்கு ஏறி சிம்மாசனத்தில் மகிமையோடு அமர்ந்து இருப்பதை  (வ. 6), அவரது இரண்டாம் வருகை மற்றும் நீதியான ஆட்சி (வ. 8-9, வெளி. 2:9, 27; 12:5) என அனைத்தையும் முற்றிலும் இழந்து விடுவோம்.

3. குமாரனாகிய கடவுள் - வெற்றியின் குரல்  (Victory; வச. 7-9)

கிறிஸ்து ராஜாவாகச் சிம்மாசனத்தில் அபிஷேகம் செய்யப்பட்டார். இது ஓர் இறையாண்மை அறிவிப்பு (Sovereign decrees). இது எல்லோரும் ஒன்றாக கூடிப் பேசி, ஓர் ஒருமித்த கருத்தைக் எட்டி அல்லது வாக்களித்து பெரும்பான்மை பெற்றதன் அடிப்படையிலோ அறிவிக்கப் படவில்லை. 

"தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்'' என ஆண்டவர் அறிவிக்கிறார். கடவுள் தனது படைப்பை ஆள்கிறார் எனக் கலகம் செய்பவர்களுக்கு இந்த ஆணையின் மூலமாகத் தெரிவிக்கப் படுகிறது. கடவுளின் கட்டளைகள் நியாயமானவை

வசனம் 7 - இல் கிறிஸ்தின் உயிர்த்தெழுதல் குறிப்பிடப்படுகிறது, அவர் கல்லறையிலிருந்து "உயிர்த்தெழுந்து" மகிமையில் வெளிவந்தார். (ரோம். 1:4-5).

கீழ் தேசத்துப் பாரம்பரியத்தில், அரசர்கள் கடவுளின் மகன்களாகக் கருதப்பட்டனர், ஆனால் உண்மையில் இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் (சங் 89:26–27; 2 சாமு. 7:14. ). நம்முடைய கர்த்தருடைய ஞானஸ்நானத்தின்போது, ​​பிதா இந்த சங்கீதத்தின் 7ஆம் வசனத்தைக் குறிப்பிட்டு, இயேசுவை அவருடைய அன்பான குமாரன் என்று அறிவித்தார் (மத். 3:17; மாற்கு 1:11; லூக்கா 3: 22; எபி. 1:5; 5:5.).

உலக தேசங்கள் அனைத்தின் மீதும் முழுமையான அதிகாரத்தைக் குமாரனுக்குப் பிதா வாக்களித்துள்ளார். அவர் உலகின் அனைத்து ராஜ்யங்களையும் ஒரு நாள் ஆட்சி செய்வார். சாத்தான் தன்னை வணங்கினால் அதற்கு  ஈடாக இதே ஆளுகையைத் தருவதாகக் கூறினான். ஆனால் இயேசு அதற்கு மறுத்துவிட்டார் (மத். 4:8-11). 

கிழக்கத்தியப் பாரம்பரியத்தில் அரசர்கள் போருக்குச் செல்வதற்கு முன் களிமண் ஜாடிகளை உடைக்கும் சடங்கில் கலந்து கொண்டனர். களி மண் பானைகள் எதிரி இராணுவத்தை அடையாளப்படுத்தும். இதன் மூலம்  எதிரிகளைத் தோற்கடிக்கக் கடவுள்கள் நமக்கு உதவுவார்கள் எனும் நம்பிக்கை அடைந்தனர். 

இயேசுவுக்கு அத்தகைய உத்தரவாதம் தேவையில்லை. அவர் தனது எதிரிகளை முற்றிலுமாக அடித்து நொறுக்குகிறார். கிறிஸ்தின் ஆட்சி நீதி நிறைந்தது. உறுதியானது. அவரை எதிர்த்தால் மண் பானைகளைப் போல அவர்கள் அடித்து நொறுக்கப் படுவார்கள். “நொறுக்கிப் போடுவார்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தைக்கு “மேய்ப்பவர்” என்றும் பொருள் கொள்ளலாம். (வெளி. 2;27, 12;5, 19:11; தானி. 2:42-44). 

இயேசுவே கடவுள். இயேசுவே அரசர். இயேசுவே வெற்றியாளர்.

4.  பரிசுத்த ஆவியானவர் - கிருபையின் குரல் (Grace Opportunity: வ. 10-12);

பரலோகத்தில் சிம்மாசனத்தின் மீது அமர்ந்து நியாயத் தீர்ப்பு செய்யும் அதிகாரம் குமாரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பிதாவின் ஆணை. வாக்களிக்கப்பட்ட உடன்படிக்கை. இப்போது மக்கள் ஞானத்துடன் செய்ய வேண்டியது கிறிஸ்திடம் சரணடைந்து அவரை விசுவாசிப்பதாகும். இன்றைக்கும் பரிசுத்த ஆவியானவர் மனுகுலத்துடன் பேசுகிறார். மனந்திரும்பி இரட்சகரிடம் திரும்பும்படி பாவிகளிடம் மன்றாடுகிறார்.

வசனங்கள் 10 மற்றும் 11 இல், ஆவியானவர் முதலில் ராஜாக்கள் மற்றும் தலைவர்களிடம் பேசுகிறார். பின்னர் வசனம் 12 இல், அவர் "அனைவரையும்" குறிப்பிட்டு, குமாரனை நம்பும்படி அவர்களைத் தூண்டுகிறார். 

உலகத் தலைவர்களிடம் ஆவியானவர் தம் முறையீட்டைத் தொடங்குகிறார், ஏனென்றால் அவர்கள் உலகை ஆளும் விதத்திற்காக கடவுளிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் (ரோமர். 13). உண்மையில் மக்கள் அறியாமை நிறைந்தவர்கள். அவர்கள் கடவுளுக்கு எதிராக எழும்பினர். ஏனென்றால் அவர்களை அவ்விதம் செயல்படும்படி அவர்களின் தலைவர்கள் தூண்டினர்.  அவர்கள் இந்த உலகத்தின் ஞானத்தைப் பின்பற்றுகிறார்கள். கடவுளிடமிருந்து வரும் ஞானத்தைப் பின்பற்றுவதில்லை (1 கொரி. 1:18-31). அவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை நினைத்துப் பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால் நித்திய உண்மையைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. 

அவர்கள் எப்படிக் கற்றுக்கொள்ள முடியும்? கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்பிக்கப்பட வேண்டும் (வ. 10). இந்த வார்த்தைக்கு "எச்சரிக்கை" என்றும் பொருள். தம்முடைய கோபம் வெளிப்படு முன் பாவிகளை இரட்சிக்கக் கர்த்தர் விரும்புகிறார். எவ்வளவு கிருபையுள்ளவர்!

ஆவியானவர் மனதிற்கு அறிவுறுத்தியவுடன், அவர் விருப்பத்திற்கு வேண்டுகோள் விடுத்து, கலகக்காரர்களை இறைவனுக்குச் சேவை செய்யவும் பாவத்திற்குச் சேவை செய்வதை நிறுத்தவும் அழைக்கிறார் (வச. 11). உண்மையான விசுவாசிகள் தங்கள் இதயங்களில் பயம் மற்றும் மகிழ்ச்சி இரண்டையும் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன என்பதை அறிவார்கள்.  அன்பு பாவ பயத்தை நீக்குகிறது (1 யோவான் 4:18) ஆனால் தேவ பயத்தை பூரணப்படுத்துகிறது. நாங்கள் எங்கள் தந்தையை நேசிக்கிறோம், ஆனால் அவருடைய அதிகாரத்தை மதிக்கிறோம். 

இறுதியாக முழு மனதுடன் ராஜாவுக்கு அடிபணிந்து அன்பு செலுத்தும்படி அன்பு வேண்டுகோள் வைக்கிறார். பண்டைய உலகில், ஆட்சியாளர்கள் தங்கள் ராஜாவின் கை அல்லது கன்னத்தில் முத்தமிட்டு அவருக்குக் கீழ்ப்படிதலைக் காட்டுவார்கள். தோட்டத்தில் வைத்து யூதாஸ் இயேசுவை முத்தமிட்டார். ஆனால் அது அன்பின் வெளிப்பாடு அல்ல, துரோகம். 

இங்கு ஆவியானவர் முத்தமிட அழைப்பது சமர்ப்பணம் மற்றும் ஒப்புரவின்  அடையாளம். ஆவியானவர் ஒரு எச்சரிக்கை மற்றும் ஆசீர்வாத வார்த்தையுடன் இந்த சங்கீதத்தை நிறைவு செய்கிறார். 

எச்சரிப்பின் செய்தி; இந்த அன்பான ராஜாவும் கோபமடைவார். அறிவிப்பின்றி திடீரென அவருடைய பரிசுத்த கோபத்தை வெளிப்படுத்தலாம் (1 தெச. 5:1-4). அந்த கோபத்தின் கருப்பொருள் தந்தை (வச. 5) மற்றும் மகன் (வ. 9, 12) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முதலாம் சங்கீதம் "ஆசீர்வதிக்கப்பட்டவர்" என்று துவங்குகிறது. இரண்டாம் சங்கீதம் தேவனுடைய குமாரனில் நம்பிக்கை வைக்கும் அனைவருக்கும் வாக்குறுதி அளிக்கப்பட்ட ஆசீர்வாதத்துடன் நிறைவடைகிறது. 

அந்த வாக்குறுதி இன்னும் உள்ளது (யோவான் 3:16-18; 20:31).


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

வியாழன், 24 நவம்பர், 2022

சங்கீதம் 1

 சங்கீதம்-1: இரண்டு மனிதர்கள் - இரண்டு வழிகள். 

 தெய்வீக நியாயத்தீர்ப்பு.


சங்கீத புத்தகத்தின் முதல் திருப்பாடல் ஓர் ஒப்பற்ற ஆபரணம். இந்த சங்கீதம் முதலாவதாக அமைந்து இருப்பது தற்செயலான நிகழ்வு அல்ல. ஆவியானவரால் மிகுந்த ஞானத்துடன் துவக்கப் பாடலாக வைக்கப்பட்டு இருக்கிறது. 

ஏனெனில் இப்பாடல், வேதாகமத்தின் மையக் கருப் பொருளான இரண்டு வழிகளைச் சுட்டிக்காட்டுகிறது. ஒன்று ஆசீர்வாதத்தின் பாதை. மற்றது அழிவின் பாதை. அத்துடன் தெய்வீக நியாயத் தீர்ப்பைக் குறித்தும் எச்சரிக்கை செய்கிறது. 

முதலாம் சங்கீதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள காட்சிகள் பழைய ஏற்பாட்டின் பல சம்பவங்களை நமக்கு நினைவூட்டுகிறது. ஆதியாகமத்தில்; தேவ மக்கள் கடவுளுடன் சஞ்சரிப்பதை நீங்கள் காண்கிறீர்கள் (ஆதி. 5:21-24; 6:9; 17:1). ஏதேன் தோட்டத்திற்குள் நதிகள் பாய்ந்த செல்வது (ஆதி. 2:10-14), கனி தரும் மரங்கள் (ஆதி. 2:8-9) எனக் காட்சிகள் விரிகிறது. 

யாத்திராகம புத்தகத்தில் கர்த்தருடைய நியாயப் பிரமாணம்  மோசேக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவர் உபாகமத்தில் அவற்றைச் சட்டங்களாக  அறிவித்தார். சங்கீதப் புத்தகம்; பிரமாணங்கள், ஆகமங்களையும் இவை இரண்டையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. அத்துடன் கர்த்தரின் வார்த்தைகளை இரவும் பகலும் தியானித்து அதற்குக் கீழ்ப்படிவதன் மூலம் ஆசீர்வாதத்தைக் கண்டடைவது எனும் சத்தியத்தை நினைவூட்டுகிறது (யோசுவா 1:8). 

இரண்டு மனிதர்கள், இரண்டு வழிகள்:

சங்கீதம் இரண்டு வழிகளை முன்வைக்கிறது; ஆசீர்வாதத்தின் வழி மற்றும் சாபத்தின் வழி. இதில் எந்த வழியில் செல்வது என்பதைத் தேர்வு செய்யும் உரிமை (பொறுப்பு) இஸ்ரேல் மக்கள் கரத்திலிருந்தது (உபா. 30:15, 19). 

இந்த இரண்டு வழிகளை கிறிஸ்துவும் குறிப்பிடுகிறார் (மத். 7:13-14). நீங்கள் எதன் மீது வீட்டைக் கட்டப் போகிறீர்கள்? கற்பாறையின் மீதா? அல்லது மணல் மீதா? எனும் உருவகத்தைப் பயன்படுத்தி இந்தக் கேள்வியை எழுப்பினார் (மத். 7:24-27). 

இந்த "இரண்டு மனிதர்கள்" என்ற கருத்தைச் சுற்றியே வேதாகமம் முழுவதும்  பல சம்பவங்கள் விரிந்திருக்கும்: "முதல் ஆதாம்" மற்றும் "கடைசி ஆதாம்" (ரோ. 5:12-19; 1 கொரி. 15:45). காயீன் - ஆபேல், இஸ்மவேல் - ஈசாக்கு, ஏசா மற்றும் யாக்கோபு, ஏலி - சாமுவேல், சவுல் - தாவீது, இறுதியாகக் கிறிஸ்து மற்றும் அந்திக் கிறிஸ்து என உச்சம் பெறுகிறது. 

முதலாம் சங்கீதம் ஒரு ஞான பாடல். கடவுளின் வார்த்தை எவ்வளவு முக்கியம் என இது வலியுறுத்துகிறது. அதைத் தியானித்துக் கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்குக் கடவுளின் ஆசீர்வாதம். அதை எதிர்த்து கலகம் செய்பவர்கள் மீது கடவுளின் இறுதி நியாயத் தீர்ப்பு. 

ஞான சங்கீதங்கள் என சங்கீதங்கள்: 10, 12, 15, 19, 32, 34, 37, 49, 50, 52, 53, 73, 78, 82, 91, 92, 94, 111, 112, 119, 227, 127, மற்றும் 139 குறிப்பிடப்படுகின்றன. 

இந்த ஞான சங்கீதங்கள் உலகில் உள்ள தீமையுடன் யுத்தம் செய்கின்றன. குறிப்பாக, அவருடைய சட்டத்தை நிராகரிக்கும் துன்மார்க்கரின் வாழ்வில், கடவுள் ஏன் செழிப்பை அனுமதிக்கிறார்? எனும் கேள்விக்கு அவை விடை காண முயல்கிறது. 

இந்த சங்கீதம் இரண்டு வழிகளைச் சித்தரிக்கும் போது, ​​அது உண்மையில் மூன்று விதமான நபர்களை அடையாளம் காண்பிக்கிறது. அவர்கள் இறைவனின் ஆசீர்வாதத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என விவரிக்கிறது. 

1. ஆசீர்வாதத்தை அடைய வேண்டிய நபர் (வ. 1–2):

கர்த்தர் இஸ்ரவேலுடன் உடன்படிக்கை செய்தார். அவர்கள் நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம். கீழ்ப்படியாமைக்கு வரும் பலன் நியாயந்தீர்ப்பு (லேவி. 26; உபா. 28). 

யாக்கோபின் மகன்களில் ஒருவரின் பெயர் ஆசேர் (ஆதி. 30:12). இதன் பொருள் பாக்கியவான். இது ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தை. இந்த வார்த்தை பன்மைத் தன்மை உடையது. “ஓ மகிழ்ச்சியே! ஆசீர்வாதமே!" 

இங்கே ஆசீர்வதிக்கப்பட்ட நபர் கர்த்தரின் வார்த்தைகளுக்குக்  கீழ்ப்படிந்தார். எனவே ஆண்டவர் அவரை ஆசீர்வதித்தார். கடவுளின் ஆசீர்வாதத்தை நாம் விரும்பினால், நாமும் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். 

a. நாம் வார்த்தையால் வழி நடத்தப்பட வேண்டும் (வ. 1). 

இஸ்ரேல் ஜனம் தேவனால் தனித்துவமாகப் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம். அவர்கள் மற்ற தேசத்து மக்களுடன் சேர்ந்து வாழலாம் ஆனால் அவர்களால் கறை படக்கூடாது (எண். 23:9; யாத். 19:5-6; உபா. 32:8-10; 33:28). 

இன்று நாமும் அப்படித்தான். நாம் தேவனால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். நாம்  உலகில் இருக்கிறோம். ஆனால் உலகம் நமக்குள் இல்லை (யோவான் 17:11-17). உலகத்துடனான நட்பைக் குறித்து  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேதம் போதிக்கிறது (யாக்கோபு 4:4). உலகத்தால் கறைபடாதபடி வாழ்வதற்கும் (யாக்கோபு 1:27), உலகப் பொருட்களில் மயங்கி வீழ்ந்து விடாதபடி விலகி வாழவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேதம் போதிக்கிறது (1யோவான் 2:15-17). 

இந்த அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை மறுரூபமாதல் என வேதம் சொல்கிறது (ரோமர் 12:1-2). அதே சமயம் மனந்திரும்பாவிட்டால், உலகத்துடன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவோம் என எச்சரிக்கிறது (1 கொரி. 11:32). 

தீய வழி வஞ்சனையானது. அது கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக்  கொள்ளும். லோத்து சோதோமை நோக்கிப் பார்த்தார். அதனால் கவரப்பட்டார். சோதோமை நோக்கிக் கூடாரம் போட்டார். விரைவில் சோதோமுக்குள் சென்றார் (ஆதி. 13:10-12; 14:12). 

லோத்து இரட்சிக்கப்பட்ட மனிதராக இருந்தாலும் (2 பேதுரு 2:6-8), ஆண்டவர் சோதோம், கொமோரோ  நகரங்களை அழித்தபோது தன்னிடம் இருந்த அனைத்தையும் இழந்தார் (ஆதி. 18:17-33, 19). 

பாவம் படிப்படியாக நம்மைக் கீழ்ப்படியாமைக்கு அழைத்துச் செல்லும் (நீதி. 4:14-15; 7:6-27). நீங்கள் தவறான ஆலோசனையைப் பின்பற்றினால், தவறான தோழர்களுடன் நிற்பீர்கள். பின்னர் தவறான கூட்டத்தில் அமர்ந்திருப்பீர்கள். 

இயேசு கைது செய்யப்பட்டபோது, ​​பேதுரு கிறிஸ்துவின் ஆலோசனையைப் பின்பற்றாமல் தோட்டத்திலிருந்து தப்பி ஓடினார் (மாற் 14:50;). பின்னர் பிரதான ஆசாரியரின் முற்றத்திற்குள் நுழைந்தார் (யோவான் 18:15). அங்கு அவர் எதிரியுடன் நின்றார் (யோவான் 18:16). இறுதியில் அவர்களுடன் அமர்ந்தார். (லூக்கா 22:55). இதன் விளைவாக மூன்று முறை கிறிஸ்துவை மறுதலித்தார்.

ஒன்றை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். தேவ பக்தியற்றவர்கள் விருப்பத்துடன் தீய செயல் புரிபவர்கள். அது தவறு எனத் தெரிந்திருந்தாலும் தொடர்ந்து அதைத் துணிகரமாக வேண்டுமென்றே செய்கின்றனர். 

பாவிகள் கடவுள் எதிர்பார்க்கும் தராதரங்களைக் குறித்துக் கவலைப் படுவதில்லை. அவர்கள் கர்த்தரின் கிருபையை தவறவிட்டவர்கள். அகந்தை மற்றும் பெருமை மிக்கவர்கள். தேவனின் சட்டங்களை அலட்சியம் செய்கிறார்கள். புனிதமானதைக் கேலி பேசுகிறார்கள். (நீதி. 1:22; 3:34; 21:24). 

பரிசுத்தமான விஷயங்களைப் பார்த்துச் சிரிப்பதும், புனிதமான சட்டங்களை மீறுவதும் பொழுதுபோக்காக மாறும் போது, ​​மக்கள் உண்மையில் இழிவான கீழ்நிலையை அடைந்து விட்டனர்.

b. நாம் வார்த்தையில் மகிழ்ச்சியடைய வேண்டும் (வ. 2). 

முதல் வசனத்தில் உள்ள எதிர்மறையிலிருந்து இரண்டாம் வசனத்தில் நேர்மறைக்கு நகர்கிறோம். 

தேவ வார்த்தையைத் தியானிப்பதும், அந்த வார்த்தையில் மகிழ்ச்சியடைவதும் ஒன்றாக இணைந்தே இருக்கும் (சங். 119:15-16, 23-24, 47-48, 77-78). ஏனென்றால் எதை நாம் விரும்புகிறோமோ, அதைப் பற்றியே சிந்திக்கிறோம். அவற்றையே மகிழ்ச்சியுடன் பின்தொடர்கிறோம். 

எபிரேய மொழியில் “தியானம்” என்றால் “வாயில் முணுமுணுப்பது'' அல்லது  ''மனதுக்குள் வாசிப்பது” என்று பொருள்படும். கடவுளின் வார்த்தை  அவர்களின் வாயை விட்டு பிரியாமல் உள்ளது (யோசு. 1:8). 

வேத வார்த்தையை ஆர்வத்துடன் வாசித்து, சிந்திக்கும் போது, அது நமக்கு தேவ சத்தியத்தைக் கற்றுத் தரும். நாம் கற்றுக் கொண்ட சத்தியத்தில் நிலைத்திருப்பது அதைவிட மிக முக்கியம் (1 யோவான் 2:14, 24). 

வேதம் அவருடைய வார்த்தை. வேதத்தை நாம் மதிக்கும் விதம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வில் கடைப்பிடிக்கும் தன்மையில் வெளிப்படுத்துகின்றது. 

கடவுளின் மக்களாகிய நாம் உணவை விடக் கடவுளின் வார்த்தையை அதிகமாக விரும்ப வேண்டும் (119:103; யோபு 23:12; எரே. 15:16; மத். 4:4; 1பேதுரு 2:3). அதுவே நம் உறக்கத்திலும், விழிக்கும் போதும் உடனிருக்க வேண்டும் (119:55, 62, 147-148, 164). அதுவே நம் செல்வம் (119:14, 72, 127, 162). அதுவே நம் நண்பன் (சங். 119:24, 51, 95, 119). 

 ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கையை அடைய; முதல் வசனத்தில் குறிப்பிடப் படும் சொற்கள் முடிவுற்ற கட்டளை வினைச்சொற்களாக (Perfect Tense) உள்ளன. 

''நடவாமலும்'', ''நில்லாமலும்'', ''உட்காராமலும்'' எனும் சொற்கள், நடக்கக் கூடாது. நிற்கக் கூடாது. உட்காரக்கூடாது எனும் முடிவுற்ற செயல்களைக் குறிப்பிடுகிறது. 

அதே நேரத்தில் "தியானமாயிருக்கிற மனுஷன்" எனும் வினைச்சொல் (Imperfect Tense) முடிவுறாத தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டியதொரு செயலாகவும்  வலியுறுத்துப் படுகிறது. 

2. ஆசீர்வாதமாக இருக்கும் நபர் (வ. 3):

நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படியாக, தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார் (ஆதி. 12:2-3). ஒரு வேளை ஆசீர்வாதம் நம்முடன் மட்டுமே தங்கி விட்டால், ஆண்டவரை விட அந்த பொக்கிஷங்களே நமக்கு விக்கிரகங்களாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது (எபே. 5:5, கொலோ. 3:5). 

நாம் மற்றவர்களுக்குக் கடவுளின் ஆசீர்வாதத்தைக் கொண்டு செல்லும் வாய்க்கால்களாக மாற வேண்டும். 

ஒரு ஆசீர்வாதத்தைப் பெறுவது மகிழ்ச்சி தான். ஆனால் அதைவிட பிறருக்கு  ஆசீர்வாதமாக இருப்பது இன்னும் பெரிய மகிழ்ச்சி. "வாங்குகிறதைப்  பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்" (அப் 20:35).

வேதாகமத்தில் மரம் என்பது மிகப் பரிச்சயமான உவமை. அது ஒரு ராஜ்ஜியத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது (எசே. 17:24; தானி. 4:10-17;      மத். 13:32). ஒரு தனிமனிதனையும் குறிப்பிடுகிறது (சங். 52:8; 92:12-14; நீதி. 11:30; ஏசா. 44:4; 58:11; எரே. 17:5-8; மத். 7:15-23). 

பிலேயாம், இஸ்ரேல் ஜனங்களை மரங்கள் மிகுதியாகக் கொண்ட ஒரு "நதிக்கரையோர தோட்டமாக" கண்டான் (எண். 24:6). 

தெய்வீகமான நபர், ஒரு மரத்தைப் போல உயிருடையவர். ஒரு மரத்தைப் போல அழகானவர். ஒரு மரத்தைப் போலப் பலனளிக்கிறவர். ஒரு மரத்தைப் போல பயனுள்ளவர். ஒரு மரத்தைப் போல நிலைத்திருப்பவர். 

ஒரு மரத்தின் மிக முக்கியமான பகுதி அதன் மறைக்கப்பட்ட வேர்ப் பகுதியாகும். அதுவே நீர் மற்றும் ஊட்டச்சத்தை ஈர்க்கிறது. 

அது போல விசுவாசிகளின் வாழ்க்கையில் மிக முக்கியமான பகுதி மறைந்திருக்கும் "ஆன்மீக வேர் அமைப்பு" ஆகும். இதைக் ''கிறிஸ்துவின் அன்பிலே வேர் கொண்டவர்களாகவும்'' (எபே. 3: 17; கொலோ. 2:6). "கிறிஸ்துவில் நிலைத்திருப்பது" என்றும் அறியப்படுகிறது (யோவான் 15:1-9). 

வேதத்தில், பரிசுத்தாவியானவர் தாகம் தீர்க்கும் தண்ணீர் எனக் குறிப்பிடப் படுகிறார் (யோவான் 7:37-39; 1 கொரி. 10:4). அதே விதமாகத் தண்ணீர் சுத்தம் செய்வதற்கும் பயன்படுகிறது. அது நம்மைச் சுத்திகரிக்கும் கடவுளுடைய திரு வசனத்தை குறிக்கிறது (சங். 119:9; யோவான் 15:3, எபே. 5:26). 

தண்ணீருக்காகத் தவிப்பது போல, ஆத்துமா ஆண்டவர் மீது தாகமாக இருக்கிறது என ஒரு உருவகமாக வேதம் குறிப்பிடுகிறது (சங். 42:1; 63:1; 143:6; மத். 5:6; வெளி. 22:17). 

மேலும் வேதத்தில் நதி என்பது கடவுள் தனது மக்களுக்கு வழங்கும் ஆன்மீக ஆசீர்வாதத்தைப் பற்றிய ஒரு காட்சியாக உள்ளது (சங். 36:8; 46:4; 78:16; 105:41; யாத். 17:5-6; எண். 20:9-11; எசேக். 47; வெளி. 22:1-2). 

சுய சக்தியினால் நாம் வளர்ந்து செழிக்க முடியாது. கிறிஸ்துவில் வேரூன்றி, அவருடைய ஆவிக்குரிய சக்தியைப் பெற வேண்டும். தேவ வசனத்தைத் தியானிப்பது, ஜெபத்தில் தரித்திருப்பது அத்துடன் தேவ பிள்ளைகளுடன் இனைந்திருப்பது இவையே ஆன்மீக ஆற்றலின் ஆதாரமாகும்.

"மதத்திற்கு ஆழமும் அளவும் கிடையாது, ஏனென்றால் அது மறைக்கப்பட்ட நீரூற்றுகளால் போஷிக்கப்படவில்லை." என்று அலெக்சாண்டர் மக்லாரன் எழுதினார். “Religion lacks depth and volume because it is not fed by hidden springs,”- Alexander Maclaren. 

மரங்கள் நீரின்றி வாடி இறக்கலாம், ஆனால் கிறிஸ்துவில் நிலைத்திருக்கும் விசுவாசி எப்போதும் புதியதாகவும், பசுமையாகவும், பலன் தருபவராகவும் இருப்பார் (சங். 92:12-15).

வேதத்தில் "ஆவியின் கனிகள்" என்பது பலவிதமான ஆசீர்வாதங்களைக் குறிப்பிடுகிறது: மக்களை கிறிஸ்துவிடம் வழி நடத்துவது (ரோ. 1:12-16), பரிசுத்தமாகுதல் - தெய்வீக குணம் (ரோ. 6:22; கலா. 5:22-23), கர்த்தருடைய பணியைத் தாங்குவது (ரோ. 15: 28), நற்கிரியைகள் செய்தல் (கொலோ. 1:10), கர்த்தரைத் துதித்தல் (எபி. 13:15) என ஆவியின் கனிகள் பல விதங்களில் வெளிப்படுகிறது. 

ஒரு விசுவாசி "கிறிஸ்துவில் வேரூன்றாமல்'' அவரைப் புறக்கணித்து வாழ ஆரம்பிக்கும் போது, அது பட்டுப் போன மரமாகி விடும். அது பெரும் வேதனை. 

மரம் தனது பழங்களை தானே உண்பதில்லை. கனிகள் பிறர் உண்பதற்காக. இதை நாம் மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டும். 

அது போல ஒரு மரம் கனிகள் கொடுப்பதோடு முடிவடைந்து விடுவது இல்லை. இதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஓர் பழத்தின் உள்ளே ஏராளமான மரங்களுக்கான விதை உள்ளது. 

கடவுளின் ஜீவன் நமக்குள்ளும், நம் வழியாகவும் பாய்கிறது. அந்த வாழ்விலிருந்து கனி தரும் வாழ்வு வெளிப்படுகிறது. வசனங்கள் 1-3 வரை உள்ள பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள தேவ பக்தியுள்ள நபர் நிச்சயமாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்த ஒரு தீர்க்க தரிசனமாகும். அவரே வழி. வாய்மை. வாழ்வு. (யோவான் 14:6) 

3. ஆசீர்வாதம் தேவைப்படும் நபர் (வ. 4–6):

சங்கீதத்தின் முதல் பாதி தேவ பக்தியுள்ள நபரை விவரிக்கிறது, கடைசி பாதி தேவ பக்தியற்றவர்களின் மீது கவனம் செலுத்துகிறது. 

தேவ பிள்ளைகள் நற்செய்தியுடன் இந்த மக்களைச் சந்திக்க வேண்டும். இவர்களும் கடவுளை அறிந்து கொள்வது அவசியம்! கிறிஸ்துவில் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவது இவர்களுக்கு மிக மிக இன்றியமையாதது.  

துன்மார்க்கர்கள் வேதாகமத்தில் பல வழிகளில் சித்தரிக்கப்படுகிறார்கள். இங்கே பதராகச் சொல்லப்பட்டுள்ளனர். நீதிமான்கள் ஜீவனுள்ள கனி தரும் மரங்கள் என்பதற்கு நேர்மாறாக துன்மார்க்கர் பதர் போன்றவர்கள் என வேதம் விளம்புகிறது. 

தேவ பக்தியற்றவர்கள் ஜீவனற்றவர்கள். வேரற்றவர்கள். ஊதப்பட்டவர்கள். நெருப்புக்கு விதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு எள்ளளவும் மதிப்பில்லை. களத்தில் தானியம் தூற்றப்படும்போது காற்றுப் பதரைப் பறக்கவிடும். எஞ்சியிருக்கும் பதரும் நெருப்பில் எரிக்கப்படும். 

யோவான் ஞானஸ்நானகன், பாவிகளை மனந்திரும்பும்படி எச்சரிக்க, மரம், பழங்கள் மற்றும் கோதுமைகளின் உருவகங்களைப் பயன்படுத்தினார் (மத். 3:7-12). 

பொதுவாக இந்த உலகத்தில் பொல்லாதவர்கள் பணக்காரர்களாகவும், மதிப்பு மிக்கவர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆனால் கடவுளின் பார்வையில், அவர்கள் மலிவானவர்கள். ஆதாரமற்றவர்கள். நியாயத் தீர்ப்புக்கு நியமிக்கப்பட்டவர்கள். (சங். 73.) 

எருசலேமுக்கு வெளியே உள்ள குப்பைக் கிடங்கை (gehenna) நரகத்தின் படமாக ஆண்டவர் பயன்படுத்தியதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் வீணாகிய அழுகிய கழிவுகள் அங்கு தான் தீயில் எரிக்கப்படுகிறது (மாற்கு 9:43-48). 

பதர் தானியத்துடன் இனைந்து உள்ளது. ஆனால் இறுதியில், இரண்டும் பிரிக்கப்பட்டு, பதர் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறது அல்லது எரிக்கப்படுகிறது. ஆனால் அது நிகழும் வரை, அவர்களுக்குச் சாட்சியாக இருக்கவும், அவர்களை கிறிஸ்துவிடம் கொண்டு வரவும் நமக்கு வாய்ப்பு உள்ளது.

நியாயத்தீர்ப்பு நாள் வரப்போகிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் கோதுமையைக் களைகளிலிருந்தும், செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்தும், மரங்களைச் சருகுகளிலிருந்தும் பிரிப்பார். அவிசுவாசிகள் நீதியுள்ள சபையில் நிற்க முடியாது.

6வது வசனத்தில் ''கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்'' என்பதில், கர்த்தர் அவர்களது புண்ணிய செயல்களை அறிந்திருக்கிறார் என்றும், அவர்களுடைய மனதில் தெய்வீகத்தன்மை இருப்பதாகவும் அர்த்தம் இல்லை. மாறாக, கடவுள் அவர்களை முன் குறித்து, தேர்ந்தெடுத்து, அழைத்து, கண்காணித்து, இறுதியாகத் தம்முடைய மகிமைக்குக் கொண்டுவந்தார் என்று அர்த்தம் (ரோம. 8:30). 

ஆமோஸ் 3:2 இல் குறிப்பிட்டுள்ளதைப் போல, "பூமியிலுள்ள எல்லாக் குடும்பங்களிலிருந்தும் உங்களை மாத்திரம் தேர்வு செய்தேன்' என்பது  ஆண்டவரது கிருபையின் முன் குறித்தலை, உடன்படிக்கையைக் குறிப்பிடுகிறது. 

கடைசியில் இறுதி நியாயத்தீர்ப்பில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து  துன்மார்க்கரிடம், “நான் உன்னை ஒருபோதும் அறியவில்லை; அக்கிரமம் செய்பவர்களே, என்னைவிட்டு அகன்று போங்கள்” என்கிறார் (மத். 7:23).

இந்த சங்கீதம் "ஆசீர்வதிக்கப்பட்டவர்" என்று தொடங்கி, "அழிந்து போவார்கள்" என்று முடிவடைகிறது. 

உண்மையான விசுவாசிகள் கிறிஸ்துவில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் (எபே. 1:3). அவர்கள் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு, குறிப்பாக ஒரு நாள் நெருப்பில் எறியப்படும் பதருக்கும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும். 

நம்மால் இயன்றவரை ஒவ்வொருவரையும் இரட்சிப்பிற்குள் வழி நடத்திட, அழிவிலிருந்து ஆத்துமாக்களை மீட்டிட முற்படுவோம்.


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

திங்கள், 21 நவம்பர், 2022

சங்கீதம்: திருப்பாடல்கள் முன்னுரை

சங்கீதம் (திருப்பாடல்கள்)  - அறிமுகம்.




தேவ பிள்ளைகள் அதிகமாக நேசிக்கும் ஒரு புத்தகம் சங்கீதம். இது ஈடு இணையற்றதொரு பிரார்த்தனை நூல். நம்மைப் பக்தி வழி நடத்தும் பாடல்கள் அடங்கிய ஓர் தொகுப்பு. 

இந்த நூலின் எபிரேய தலைப்பு தெஹ்லிம் (tehillim). இதன் பொருள் துதிகளின் புத்தகம். (The Book of Praises). 

இதன் கிரேக்க மொழி பெயர்ப்பில் (Septuagint)  ''Psalomos'' என்கிற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இந்த வார்த்தையின் அர்த்தம் "ஒரு தந்தி இசைக்கருவியின் துணையுடன் பாடப்படும் பாடல்''.

வேதப் புத்தகம் இலத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப் பட்ட போது (Vulgate), அதன் கிரேக்கத் தலைப்பைப் பின்பற்றி ''Psalmorum'' எனும் இலத்தீன் வார்த்தையைப் பயன்படுத்தினார். இதன் அர்த்தமும் “தந்தி கொண்ட கருவியிலிருந்து மீட்டுவது''. 

பின்னர் வேதாகமம் இலத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப் பட்ட போது, அரசர் ஜேம்ஸ் (The King James) ''Psalms'' எனும் இந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டார். 

நமக்குத் தமிழில் ''சங்கீத புத்தகம்/திருப்பாடல்கள்'' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

எழுதியவர்கள் (Writers):

ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு சங்கீதங்களில், அதை எழுதியவர்களது பெயர்கள் அதன் தலைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவற்றுள் தாவீது ராஜா எழுபத்து மூன்று சங்கீதங்களை எழுதியுள்ளார். அவர் ''தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரேலின் சங்கீதங்களை இன்பமாய் பாடினவர்" என வேதம் குறிப்பிடுகிறது (2 சாமு. 23:1). 

தேவாலயத்தில் இசைக்கருவிகள், பாடகர்கள் குழுவுடன் கர்த்தரைத் துதித்து ஆராதனை ஊழியத்தைச் செய்யும் முறையை தாவீது ஏற்படுத்தினார்(1 நாளா. 15:16; 16:7; 25:1). 

தேவாலயத்தில் இசைக் கலைஞர்களாகப் பணியாற்றிய கோகாத்தியர்/கோராகியரின் புத்திரர்கள் பதினோர் சங்கீதங்களை எழுதியுள்ளனர் (சங். 42-49, 84, 85, 87, 1 நாளா. 6:33; 15:17; 2 நாளா. 20:19).

ஆசாப் பன்னிரண்டு சங்கீதங்கள் எழுதியுள்ளார் (சங். 50, 73–83).

சாலமன் ராஜா இரண்டு (சங். 72 மற்றும் 127).

எஸ்ராகியனாகிய ஏத்தான் ஒன்றை எழுதினார் (சங். 89).

மோசே ஒரு ஜெப சங்கீதத்தை எழுதியுள்ளார் (சங். 90). 

இருப்பினும், அனைத்து வேத அறிஞர்களும் சங்கீதங்களின் தலைப்புகளில் சுட்டிக் காட்டப்பட்டவர் தான் அந்தப் பாடலை எழுதியவர் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை.

புத்தகத்தின் அமைப்பு (Organization):

மோசேயின் ஐந்து ஆகமங்களைப் பின்பற்றி சங்கீதப் புத்தகம், ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 
பாகம் I. ஆதியாகமம்       = சங்கீதம்: 1—41, 
பாகம் II. யாத்திராகமம்    = சங்கீதம்: 42—72, 
பாகம் III. லேவியராகமம்  = சங்கீதம்: 73—89, 
பாகம் IV. எண்ணாகமம்     = சங்கீதம்: 90—106, 
பாகம் V. உபாகமம்              = சங்கீதம்: 107—150. 

மேலே குறிப்பிடப்பட்ட முதல் மூன்று பாகங்களிலும், அதன் இறுதி அதிகாரத்தின் கடைசி வசனங்கள் ஒவ்வொன்றும் இரண்டு முறை "ஆமென், ஆமென்" என சொல்லி முடிவடைகிறது (சங். 41:13/ 72: 19/ 89:52). 

நான்காவது பிரிவில் "ஆமென்" மற்றும் "அல்லேலூயா" என்ற வசனத்துடன் நிறைவடைகிறது (சங். 106:48) . 

ஐந்தாவது இறுதி பாகம் "ஹல்லேலூயா" என்ற வார்த்தையுடன் முடிவடைகிறது (சங். 150:6).

சங்கீத புத்தகம் பல நூற்றாண்டுகளாக எழுதப்பட்ட பாடல்கள் அடங்கிய ஒரு தொகுப்பு. இந்த தேவ வார்த்தை நிறைந்த பாடல்களை இயற்றவும், அதை  தொகுக்கவும் பரிசுத்த ஆவியானவர் வெவ்வேறு கால கட்டத்தில் பற்பல தேவ மனிதர்களை மற்றும் தீர்க்கதரிசிகளை வழிநடத்தினார்.

முதல் பாகத்தில் உள்ள நாற்பதொரு சங்கீதங்களில், முப்பத்தேழு சங்கீதங்களை தாவீது எழுதியுள்ளார். இது தொகுப்பின் ஆரம்பம். 

எசேக்கியா ராஜாவின் காலத்திலிருந்த தீர்க்கதரிசிகள் குழு, பல விலையேறப் பெற்ற பழைய ஏற்பாட்டுக் கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்துப் பாதுகாத்தது. சங்கீத புத்தகங்களின் பாகங்கள் II மற்றும் III பகுதிகளை இந்த "எசேக்கியாவின் மனிதர்களால்" தொகுக்கப்பட்டிருக்கலாம் (நீதி. 25:1) . எசேக்கியாவும் ஒரு புனிதமான கவிதையை எழுதியவர் (ஏசா 38: 9-20). 

பாகங்கள் IV மற்றும் V பகுதிகள், அறிஞரான எஸ்ராவின் காலத்தில் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கலாம் (எஸ்ரா 7:1-10). 

நமது நவீன பாடல்களைப் போலவே ''தொகுப்புகளுக்குள் தொகுப்பாக'', "ஆரோகன சங்கீதம்" (120-134), ''ஆசாப்பின் சங்கீதம்'' (சங். 73-83), ''கோராவின் புத்திரர்களின் சங்கீதங்கள்'' (42-49), மற்றும் "அல்லேலூயா சங்கீதங்கள்" (111-113, 115-117, 146-150) எனப் பல உட் தொகுப்புகளும் உள்ளன.

கவிதை அமைப்பு (Poetry):

ஹீப்ரு கவிதை ''சந்தங்களை'' (Rhyming) அடிப்படையாகக் கொண்டது அல்ல. அது "சிந்தனை வரிகளை"  (Thought lines) அடிப்படையாகக் கொண்டது. 

சங்கீதம் 24:1-3 இல் உள்ளதைப் போல, இரண்டாவது வசனம் முதல் வசனத்தின் பொருளை வெவ்வேறு வார்த்தைகளில் திரும்பத் திரும்ப அழுத்தமாகச் சொன்னால் அது இணையான இணை நிலை பாடல் அமைப்பு (synonymous parallelism) எனப்படும். 

சங்கீதம் 1:2 மற்றும் 37:9 இல் உள்ளதைப் போல, இரண்டாவது வசனம் முதல் வசனத்தின் பொருளில் முரண்பட்டால், அது முரண்பாடான இணை நிலை பாடல் அமைப்பு (antithetic parallelism) எனப்படும்.

சங்.19:7-9 இல் உள்ளதைப் போல, இரண்டாவது வசனமானது முதல் வசனத்தை விளக்கி விரிவுபடுத்திச் சொல்லும் போது, பாடலாசிரியர் செயற்கையான இணைச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இது (synthetic parallelism) எனப்படும்.

சங். 29:1 இல் உள்ளதைப் போல, இரண்டாவது வரி முதல் வரியினுடைய பொருளை நிறைவு செய்யும் போது, ​​அது உச்சக்கட்ட இணை நிலை (climactic parallelism) என வகைப்படுத்தப்படும்.

சங். 93 :1-2 இல் உள்ளதைப் போல, இரண்டாவது வசனம், முதல் வசனத்தின் எண்ணத்தை மீண்டும் கூறுகிறது. அதே எண்ணத்தைச் சங்கீதம் 103:19 இல் வாசிக்கிறோம். இவ்விதம் திரும்பத் திரும்ப ஒரே பொருள் தரும் வரிகள் கொண்டுள்ள சங்கீதங்கள் இணைத் தன்மை (iterative parallelism) என வகைப்படுத்தப்படும்.. 

இந்த தொழில்நுட்ப வகைப் படுத்துதலை நீங்கள் பிரசங்கத்தில் சொல்லி விளக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் ஒரு சங்கீதத்தை வாசிக்கும் போது அது எந்த வகைப் பாடல் எனப்  புரிந்து படிக்கும் போது, அந்த சங்கீதத்தின் தெளிவான அர்த்தத்தையும், அது எதைக் கற்றுத் தர விரும்புகிறது எனும் சிறந்த புரிதலையும் உங்களுக்கு அளிக்கும். 

சங்கீதம் 103:3இல், கர்த்தர் ஒவ்வொரு நோயையும் குணப்படுத்துவதாக  வாக்குறுதி அளிக்கிறார். இந்த வசனத்தின் இணையான இணைச்சொல் சங். 41:4இல் உள்ளது. இங்கு நோய் என்பது பாவத்தைக் குறிக்கிறது. இவ்விதமாக ஒரு வசனத்தின் இணையான இணைச்சொல்லைப் புரிந்து வாசிக்கும் போது தான் உண்மையான பொருளைப் புரிந்து கொள்ள முடியும். 

சங்கீதங்கள் பல விதமான உணர்வுகளின் பின்னணியில் எழுதப்பட்டவை. ஆனாலும், ஒரு தேவ மனிதரால் இக்கட்டான சூழலில் எழுதப்பட்டதொரு புலம்பல் சங்கீதத்தை, வெறும் அந்தச் சூழலுக்காக மட்டுமே எழுதப்பட்ட பாடல் என எடுத்துக் கொள்ளக் கூடாது. அது தீர்க்கதரிசனமாகக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்தை முன் குறித்துச் சுட்டிக்காட்டும் மேசியாவின் சங்கீதங்களும் எனப் புரிந்து கொள்ள வேண்டும். 

பொதுவாகச் சங்கீதங்கள் துதி மற்றும் நன்றியின் வெளிப்பாடாக இயற்றப்பட்டவை. அவற்றுள் அரசர்கள் இயற்றிய சங்கீதங்கள், ஞான சங்கீதங்கள், மனஸ்தாபப்பட்டு ஏறெடுக்கப்பட்ட புலம்பல் சங்கீதங்கள், எதிரியின் மீது கடவுளின் கோபம் வெளிப்பட வேண்டி ஜெபிக்கும் சங்கீதங்கள், உறுதிமொழி மற்றும் நம்பிக்கையின் சங்கீதங்கள் எனப் பல விதமான உணர்வு பின்னணியில் எழுதப்பட்டுள்ளன. 

இந்த வகைகளில் ஒவ்வொன்றையும் குறித்து, சங்கீத புத்தகத்தை ஆராய்ந்து கற்றுக் கொள்ளும் போது இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்வோம்.

மதிப்பு (Value):

சங்கீதங்களின் புத்தகத்திலிருந்து, நானூற்றுக்கும்  மேற்பட்ட மேற்கோள்கள் அல்லது குறிப்புகள் புதிய ஏற்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தும், சங்கீதப் புத்தகத்திலிருந்து பல வசனங்களை மேற்கோள் காட்டினார் (மத். 5:5/சங். 37:11; மத். 5:36/சங். 48:2; மத். 6:26/சங். 147:9; மத். 7:23/சங். 6:8; மத். 27:46/சங்.22:1; யோவான் 15:25/சங். 69:4). 

ஒரு புதிய அப்போஸ்தலரைத் தேர்ந்தெடுக்க எருசலேம் தேவாலயத்தில் சீடர்கள் கூடி ஜெபித்தனர். அப்போது ​​கர்த்தர் சங்கீதப் புத்தகத்திலிருந்து அவர்களை வழிநடத்தினார் (அப். 1:20/சங். 69:25; 109:8). 

சபையின் துவக்கக் காலத்தில், தேவாலய தலைவர்கள் சங்கீதங்களைப் பயன்படுத்தி அவர்களது போதனையை உறுதிப்படுத்தினர் (அப்போஸ்தலர் 2:31/சங். 16:10). துன்புறுத்தல் காலங்களில் ஊக்கம் (அப். 4:23-31/சங். 2) பெற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கீதங்களைப் பாடுவது அவர்களது வழிபாட்டின் ஒரு பகுதியாக இருந்தது (எபே. 5:19; கொலோ. 3:16; 1 கொரி. 14:26). இன்றும் சங்கீத புத்தகம் தேவாலயத்தின் வழிபாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. 

சங்கீதக்காரர்களின் பார்வையில் தேவ மக்களின் வரலாற்றைப் படிப்பது பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது: படைப்பு (8) கர்த்தருடைய  சத்தம் (29), முற்பிதாக்கள் (47:4, 47:9, 105:9, ), யோசேப்பு (105:17), வனாந்தர பயணம் (114), வனாந்தர அலைவுகள் (68:7, 106), சிறைபிடிப்பு (85, 137) என இஸ்ரவேலரின் வரலாறு சங்கீதங்கள் வழியாக உறுதிப்படுத்தப்படுகிறது.

சங்கீதங்கள் முதன்மையாகக் கர்த்தருக்கும் அவரது படைப்புகளுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றிக் குறிப்பிடுகிறது. குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அவரை விசுவாசித்தவர்கள் இடையில் காணப்பட்ட ஆழமான உறவைப் பாடுகிறது. கர்த்தர் ஒரு சக்திவாய்ந்த கடவுளாகவும், அதே சமயம் கனிவான இதயம் கொண்ட தந்தையாகவும் பார்க்கப்படுகிறார். அவர் தமது உடன்படிக்கையைக் காப்பாற்றி, தாம் வாக்குத்தத்தம் அளித்த மக்களை அன்புடன் பாதுகாக்கிறார். 

அத்துடன், சங்கீதங்கள் அவரைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளையும், அவர்கள் விசுவாசம், சந்தேகங்கள், வெற்றிகள், தோல்விகள் மற்றும் கர்த்தர் வாக்களித்த மகிமையான எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துகின்றன. 

இந்தப் புத்தகத்தில் பல தரப்பட்ட மக்களைப் பல விதமான சூழ்நிலைகளில் சந்திக்கிறோம். கடவுளிடம் கூக்குரலிடுவது, அவரைப் புகழ்ந்து போற்றுவது, தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு அறிக்கையிடுவது, அவரை முழு இதயத்துடன் அர்ப்பணித்து வணங்குவது எனப் பல உணர்வு நிலைகள் வெளிப்படுகின்றன. 

சங்கீத புத்தகத்தில், நீங்கள் படைப்பின் கடவுளைச் சந்திக்கின்றீர்கள். மலைகள், பாலைவனங்கள், சூரிய ஒளி, புயல்கள், கோதுமை, பருப்பு, மரங்கள், பூக்கள் ஆகிய படைப்புகளிலிருந்து பல ஆன்மீக உண்மைகளைக் கற்றுக்கொள்கிறீர்கள். 

குதிரைகள், கழுதைகள், நாய்கள், நத்தைகள், வெட்டுக்கிளிகள், தேனீக்கள், சிங்கங்கள், பாம்புகள், செம்மறி ஆடுகள், பறவைகள், மிருகங்கள்,மற்றும் புழுக்கள் போன்ற அனைத்து வகையான உயிரினங்களிலிருந்தும் நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். 

முழு உள்ளத்துடன் கர்த்தரைத் தேடவும், எல்லாவற்றையும் உண்மையாக  அறிக்கையிடவும் சங்கீதங்கள் நமக்குக் கற்பிக்கின்றன. ஆசீர்வாதத்தைக் கொடுப்பதற்காக மட்டுமல்ல, அவர் சர்வ வல்லவர் என்பதை உணர்ந்து விசுவாசிக்கவும், கீழ்ப்படியவும் சங்கீதங்கள் படிப்பிக்கின்றன. 

சோதனைகளை எவ்வாறு எதிர் கொள்வது மற்றும் அவற்றை எப்படி வெற்றிகளாக மாற்றுவது என்பதையும் அவை நமக்குக் காட்டுகின்றன. மேலும் நாம் தோல்வியுற்றால், எப்படி மனந்திரும்பி கடவுளின் கிருபையான மன்னிப்பைப் பெறுவது என்பதையும் கற்றுத் தருகின்றன. 

சங்கீதப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள கர்த்தர் அறிந்து கொள்ள முடியாத உன்னதமான இடத்தில் வாசம் செய்பவர். ஆனால் அவர் உள்ளத்திலும் இருக்கிறார். நம் அறிவுக்கு எட்டாத மிகவும் உன்னதமான இடத்தில் வாசம் செய்தாலும், தனிப்பட்ட முறையில் நமது உலக வாழ்க்கைப் பயணத்தில் நம்முடன் இருக்கிறார். அவர் “உன்னதமான கடவுள்” ஆனால் அதே வேளை “இமானுவேல்'' - ஆக நம்முடன் கூடவும் இருக்கிறார்.”


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படம்:  இணையத்திலிருந்து நன்றியுடன் …,

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

(அப் 21:27-40): யூதர்கள் பவுலின் ஊழியத்தை தவறாக புரிந்து கொண்டனர்

 எருசலேம் தேவாலயத்தில் பவுலின் சாட்சி.


21: 27-30 பரிசுத்த இடம்:

எருசலேம் தேவாலயத்தின் உள்ளே ஒரு தடுப்புச் சுவர் உள்ளது. அதுவே யூதரையும் புறவின மக்களையும் பிரிக்கும் எல்லை. அந்த சுவரைத் தாண்டி செல்ல புறவின மக்களுக்கு அனுமதி இல்லை (எபே 2:14). 

அந்த சுவரில் இப்படி எழுதப்பட்டிருக்கும். 

"No foreigner may enter with the barricade which surrounds the sanctuary and enclosure. Anyone caught doing so will himself to blame for his ensuring death."

'தேவாலயம் மற்றும் அதன் சுற்றுச்சுவரைச் சுற்றியிருக்கும் இந்த தடுப்புச் சுவரைத் தாண்டி எந்த வெளி இனத்தவரும் உள்ளே நுழையக்கூடாது. மீறினால் பிடிபடும் எவரும் அவரது மரணத்திற்கு அவர் தாமே காரணம்." ரோம அரசாங்கம் இந்தச் சிறப்பு உரிமையை யூதர்களுக்கு வழங்கியிருந்தது. 

தேவாலயத்தில் கலவரம் வெடிக்க, பவுல் கைது செய்யப்பட இந்த சட்டம் ஒரு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. 

பவுல் நான்கு நசரேய விரதமிருந்த யூதர்களுடன் அவர்கள் பலிகளுக்கான  செலவைச் செலுத்தி பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஏழு நாட்கள் அமைதியாகக் கடந்தது. 

அப்போது சில ஆசியர்கள் பவுலை தேவாலயத்தில் பார்த்தனர்.  எபேசுவிலிருந்து வந்திருந்த யூதர்களுக்கு துரோப்பீம் நன்கு தெரியும். பவுல் எங்குச் சென்றாலும் அவரது புறவின நண்பர்களை உடன் கூட்டிச் செல்வது உண்டு. 

இப்போது பவுல் ஆலயத்தில் இருக்கிறார். ஆகவே நிச்சயம் அவரது புறவின நண்பர்களைத் தேவாலயத்திற்குள் அழைத்துக் கொண்டு வந்திருப்பார் என அவசரமாக முடிவு செய்தனர். அந்த நம்பிக்கையில், ''பவுல் கிரேக்கர்களை உள்ளே அழைத்துக்கொண்டு வந்து பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப் படுத்தி விட்டார்'' எனக் கூக்குரலிட்டனர். 

உடன் பெரும் கூட்டம் கூடியது. பவுலைப் பிடித்து தேவாலத்திற்க்கு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர். ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டது. அவர்கள் பவுலை கொலை செய்ய முயற்சி செய்கையில் ரோமர் படை உள்ளே நுழைந்தது.

இந்த சம்பவம் எபேசுவில், ''தியான்னாள் ஆலயத்தில்'' இதே விதத்தில் நிகழ்ந்த கலவரத்தை நினைவு படுத்துகிறது. இந்த வசனங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

அப் 19:29 பட்டிணம் முழுவதும் கலகம். அவர்கள் ஒருமனப்பட்டுப் பாய்ந்து கொண்டு ஓடினார்கள்.

அப் 21:30 நகரம் முழுவதும் கலக்கம். மக்கள் கூட்டமாய் கூடி பவுலை இழுத்துக்கொண்டு போனார்கள்.

அப் 19:32 கூட்டத்தில் அமளி. சிலர் இப்படியும் சிலர் அப்படியும் பேசினார்கள். தாங்கள் கூடி வந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியவில்லை.

அப் 21:34 மக்கள் பல விதமாகச் சத்தமிட்டனர். சந்தடியினாலே எதற்காக இந்த கலவரம் என நிச்சயமாக அறிய முடியவில்லை.

"Every mob, in its ignorance and blindness and bewilderment , is a League of Frightened Men that   seeks reassurance in collective action" - Max Lerner wrote in "The Unfinished Country"

"கலவர கும்பல் என்பது பயந்த கோழைகளின் கூட்டம் ஆகும். அறியாமை, புரிந்து கொள்ளாத குருட்டுத்தன்மை மற்றும் கட்டுக்கடங்காமல் செயல் புரிவது அந்த கூட்டத்தின் இயல்பு. ஒரு கும்பலாக மட்டுமே அவர்கள் இத்தகைய நடவடிக்கையில்  ஈடுபடுவர்."

Benjamin Franklin said that a mob was "a monster with heads enough, but no brains."

கலவர கும்பல் என்பதில் ''தலைகள் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும். ஆனால் அது மூளை செயல்படாத ஓர் வெறி பிடித்த கூட்டம்.'' 

1: 31-40 -கிலவுதியு லீசியா (Claudius Lysias):

லீசியா வந்தவுடன் பவுலை அடிப்பது நிறுத்தப்பட்டது. பவுலை குற்றம் கூறியவர்கள் நழுவி ஓடிவிட்டனர். ஏனெனில் அவர்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என அறிந்தவுடன் ஓடிவிட்டனர். பவுலுடன் புறவின நண்பர்கள் ஒருவரும் இல்லை.

லீசியா விசாரித்த போது ஒருவராலும் தெளிவான குற்றச்சாட்டைச் சொல்ல முடியவில்லை. அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை அறியும் படிக்கு விசாரணை செய்யக் கோட்டைக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டார். மக்கள் கூட்டத்தின் நிமித்தம் போர் வீரர்கள் பவுலை படிகளில் தூக்கிச் சென்றனர். மக்கள் ஆவேசமாக 'இவனை அகற்றும்' என உக்கிரமாகக் கத்தினர்.  

இப்போது பவுலை எதற்காக அடித்தார்கள் எனக் கூடியிருந்த யாருக்கும் தெரியவில்லை. குற்றம் இன்னதென்று விசாரிக்காமலே பவுல் இரண்டு சங்கிலிகளினால் கட்டப்பட்டார் (அப் 21:11).

இந்த சம்பவம் ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவை விசாரித்த சூழலை  நினைவு படுத்துகிறது 

ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவை கைது செய்த பின்பு அவர் மேல் என்ன குற்றம் சாட்டுவது என ஆலோசனை செய்தனர்!!! 

அவர் பொது மக்கள் மத்தியில் அழைத்து வரப்பட்ட போதும், இவ்விதமாகவே  மக்கள் ''சிலுவையில் அறையும்'' என கூக்குரலிட்டனர் (லூக்கா 23:18, 21 & யோவான் 19:15)  

பவுல் லீசியாவுடன் கிரேக்க மொழியில் பேசினார். கிரேக்க மொழியில் பேசியதைக் கேட்டதும் அந்த நாட்களில் பெரும் கலகம் விளைவித்த ஒரு எகிப்தியன் என பவுலை நினைத்தார். 

ஆனால் பவுல் தாம் ஓர் யூதன் என்றார். மக்களுடன் பேச விரும்புவதாகக் கூறினார். லீசியா பேசுவதற்கு அனுமதி அளித்தார். அதன் மூலம் அவர் செய்த குற்றம் என்னவென்று அறிய விரும்பினார். ஆனால் லீசியாவால் கடைசி வரை அதை அறிய முடியவில்லை (அப் 23:23-30).


Message taken from : "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

சனி, 22 அக்டோபர், 2022

அப் 21: 18-26 எருசலேம் தலைவர்களின் தவறான புரிதல்.

 பவுல் - எருசலேம் சபைத் தலைவர்கள் சந்திப்பு.




அப் 21:18-26

பவுல் எருசலேம் சபை மக்கள் இடையிலான முதலாவது சந்திப்பு ஒருவருக்கொருவர் நலம் விசாரிக்கும் வகையிலிருந்தது. மறுநாளில் பவுல்  ஆண்டவராகிய இயேசுவின் சகோதரர் யாக்கோபு  தலைமையில் நிகழ்ந்த கூட்டத்தில் பங்கு பெற்றார். ஆண்டவர் கிருபையால் ஊழியத்தில் நடைபெற்ற பணிகள் ஒவ்வொன்றாக விவரித்துச் சொன்னார் (1 கொரி 15:10). 

புறவின மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய  பவுலிற்கு எருசலேம் சபை முன்னதாகவே அங்கீகாரம் அளித்திருந்தது (கலா 2:7-10). 

ஆகவே எருசலேம் சபைத் தலைவர்கள் பவுல்  மூலமாக உருவாக்கப்பட்ட புதிய சபைகளைக் குறித்துக் கேள்விப்பட்டவுடன் மகிழ்ந்து கர்த்தரை மகிமைப் படுத்தினார்கள். 

எனினும் பல ஆயிரம் யூத விசுவாசிகள் எருசலேம்  சபையிலிருந்தனர். அவர்கள் கிறிஸ்துவைப்  பின்பற்றினாலும் நியாயப்பிரமானத்தை  வைராக்கியமாகக் கடைப்பிடித்தனர். அவர்களுக்கு பவுல் மேல் கடும் கோபம் இருந்தது.

ஏனெனில் பவுல் மோசேயின்  கட்டளைகளைக்  கடைப்பிடிக்கத் தேவையில்லை என எங்கும் போதிப்பதாகக் கேள்விப்பட்டிருந்தனர்.  

எருசலேம் திருச்சபைத் தலைவர்களுக்கும் பவுல் மீது யூதர்களுக்கு உள்ள கோபம் தெரியும்.

உண்மையில் பவுல் அளித்த செய்தி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. பவுல் ஒரு போதும் யூத விசுவாசிகளிடம் மோசேயின் கட்டளைகளைக் கடைப் பிடிக்க வேண்டாம் என போதிக்கவில்லை. 

மாறாக எபேசுவில் வசித்த யூதர்கள் நிமித்தம்  தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்தார் (அப் 16:1-3). இரண்டாவது மிஷனரிப் பயணம் முடிந்த பின்னர் தமது பிரார்த்தனையை நிறைவேற்றும்படி தலை முடியைச் சவரம் செய்து கொண்டார் (அப் 18:18).

ஆனால் அதே சமயம் பவுல் இரட்சிப்பிற்கு நிபந்தனையாக யூத சமய சடங்குகள்  புறவின மக்கள் மேல் திணிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். 

இரட்சிப்பு கிருபையால் அருளப்படுவது என்பது பவுலின்  அடிப்படை போதனை (எபே 2;8). 

சடங்குகளை ஆசரித்தல், குறிப்பிட்ட உணவு  பழக்கத்தைக் கடைப்பிடித்தல், குறிப்பிட்ட நாளை விசேசமாக அனுசரித்தல் என யூத சமய பாரம்பரியத்தை இரட்சிப்பிற்கு நிபந்தனையாக.  விதிக்கப்படுவதை எதிர்த்தார். 

ஆனால் ஒருவர் அவற்றை விருப்பத்தோடு கடைப்பிடித்தால் குற்றம் சாட்டுவதோ அல்லது குறை கூறுவதோ கூடாது எனப் போதித்தார். 

ஒவ்வொருவருக்கும் அவரவர் விரும்பும் வகையில் இறைவனை வணங்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை இப்படித்தான் வழிபட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக்கூடாது (ரோமர் 14:1-8) என்பது  பவுலின் உபதேசம்.

இதனால் யூத சமய தீவிரப் பற்றாளர்கள்  பவுலை அழித்துவிடக் காத்திருந்தனர். யூத கிறித்துவர்களின் எதிர்ப்பை எருசலேம் சபைத் தலைவர்களும் சம்பாதித்துக்கொள்ள விரும்பவில்லை. அதே சமயம்  பவுலை யூதர்களும் ஏற்றுக்கொள்ளுவதற்கு என்ன செய்வது என ஆலோசனை செய்தனர். 

பவுலும் யூத சமய ஒழுங்குகளைக்  கடைப்பிடிப்பவர் எனக் காண்பிக்க முடிவு செய்தனர். இதனால் தீவிர யூத சமய பற்றாளர்கள் கோபம் குறையும், அமைதி பிறக்கும் என நம்பினர். 

ஆகவே அவர்கள் பவுலை, பிரார்த்தனை செய்து கொண்ட நான்கு பேருக்கான சமயச் சடங்குகளுக்கான செலவை ஏற்றுக் கொள்ளும். அப்போது உம்மைப் பற்றிக் கேள்விப்பட்டவை தவறான செய்திகள், நீரும் நியாயப்பிரமானத்தை  கடைப் பிடிப்பவர் என எல்லோருக்கும் தெரிய வரும் என ஆலோசனை அளித்தனர். 

பவுல் அவர்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். அப்படியே அவர்கள் ஒவ்வொருவருடைய பலி செலுத்தும் செலவை  பவுல் செலுத்தி வந்தார். ஏழு நாட்கள் கடந்தது. 

அவர்கள் திட்டமிட்டபடி காரியங்கள் அமைதியாகச் செல்வது போலத்  தோன்றியது. ஆனால் முடிவில் அவர்கள் எண்ணியபடி நடக்கவில்லை. அவர்கள் எதிர்பார்த்த அமைதிக்குப் பதிலாக ஓர் பெரிய கலவரம் வெடித்தது. பவுல் சிறை பிடிக்கப் பட்டார்.


Message taken from : "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

வெள்ளி, 21 அக்டோபர், 2022

அப் 21: 1-17 - நண்பர்களின் தவறான புரிதல்.

எருசலேம் நோக்கி பவுலின் பயணம்.

Is it so bad, then, to be misunderstood?  - Ralph Waldo Emerson. 

தாங்கள் வாழ்ந்த காலத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்ட, தண்டிக்கப்பட்ட அறிஞர்கள் பட்டியல் நீளமானது. பித்தாகரஸ், சாக்ரடீஸ், லூத்தர், கலீலியோ, கோப்பர்நிக்கஸ், நீயுட்டன், என.., அந்த பட்டியல் நீளும்.

அப்படியே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். பவுல் வாழ்க்கையிலும் அவ்விதமாகவே நிகழ்ந்தது.

அப்போஸ்தல நடபடிகள் புத்தகம் 21:1 - 22:29 உள்ள பகுதியில் பவுல் அவரது நண்பர்களால், திருச்சபை தலைவர்களால், யூதர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதை விவரிக்கிறது.

1. பவுலின் திட்டத்தை, நோக்கத்தை அவரது நண்பர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். (Paul's Friends Misunderstood His Plans - 21:1-17).

2.எருசலேம் திருச்சபை தலைவர்கள் அவரது செய்தியைத் தவறாகப் புரிந்து கொண்டனர். (The Jerusalem Church Misunderstood His Message - 21:18-26)  

3. யூதர்கள் அவரது ஊழியத்தை தவறாகப் புரிந்து கொண்டனர். (The Jews Misunderstood His Ministry 21:27- 22:29) 

1. பவுலின் நண்பர்கள் அவரது திட்டத்தைப் புரிந்து கொள்ளவில்லை.(Paul's Friends Misunderstood His Plans - 21: 1-17):

பயணம் (21:1-2):

பவுல் விரைவாக எருசலேம் திரும்ப விரும்பினார். பண்டிகைக்கு முன்பாக எருசலேமில் இருக்க விரும்பினார். தர்ம சகாய பணத்தை வறுமையில் வாடும் பரிசுத்தவான்களிடம் விரைந்து ஒப்படைக்க விரும்பினார்.

முதல் நாள் மிலேத்துவிலிருந்து கோஸ்தீவு (Miletus to Cos) பயணம். இரண்டாவது நாள் ரோது (Rhodes) தீவு. மூன்றாம் நாள் பத்தாரா (Petera). ஊள்ளூர் கப்பல் ஆதலால் ஒவ்வொரு துறைமுகத்திலும் சரக்குகளை ஏற்றி இறக்கி தாமதம் ஆனது. ஆகவே பவுல் நேரிடையாக நீண்ட தொலைவு செல்லும் பெனிக்கே (Phonenicia) தேசத்தின் கப்பலைக் கண்டு அந்த கப்பலில் தீரு நோக்கிப் பயணப்பட்டார். அது ஏறக்குறைய 650 Km நீண்ட பயணம்.

தீருவில் பவுல் - Paul in Tyre - பவுலின் மன பாரம் (21:3-6):

பவுல் முதல்முறையாக தீரு விசுவாசிகளைச் சந்திக்கிறார். இந்த சபை சிதறடிக்கப்பட்ட  எருசலேம் விசுவாசிகளால் துவங்கப்பட்டதாக இருக்கலாம் (அப் 11:19). அது ஓர் சிறிய சபை. பவுலின் உடன் ஊழியர்கள் அந்த சபை மக்களை தேடிக் கண்டு பிடித்தனர். தீரு துறைமுகத்தில் கப்பலிலிருந்த சரக்குகளை ஏற்றி இறக்க ஏழு நாட்கள் ஆனது. ஆக அந்த ஏழு நாட்களும் பவுல் அவர்களோடு தங்கியிருந்தார். அவர்கள் பவுலை முதன் முதன் முதலாக பார்க்கின்றனர். ஆனாலும் நீண்ட காலம் அறிமுகமானவர் போல பவுலை நேசித்து அன்பு பாரட்டுகின்றனர்.

பவுலுக்கோ மனதில் சபையைக் குறித்து மிகுந்த கவலையும், பாரமும் இருந்தது. குறிப்பாக யூதர்கள் மற்றும் புற இனமக்கள் இடையே இருந்த பிளவு அவரை வருத்தியது. பவுல் ஊழியம் செய்த இடங்களிலெல்லாம் யூத சமய தீவிர பற்றாளர்கள் அவரை கடுமையாக எதிர்த்தனர். புதிய விசுவாசிகளை யூத சமய பாரம்பரியங்களைக் கைக்கொள்ளும்படி வற்புறுத்தினர் (அப் 15:1).

பவுல் இரு பிரிவு மக்கள் கூட்டமும் இணைந்து செயல்பட விரும்பினார். தமது மூன்றாவது மிஷனரிப் பயணத்தில் புறவின மக்களை எருசலேமில் வாழும் ஏழை சீடர்களுக்குப் பொருள் உதவி செய்யும்படி வேண்டிக் கொண்டார். புறவின மக்கள் யூத மக்களிடம் இருந்து ஞான நன்மைகள் பெற்றுக் கொண்டனர். எனவே கிறிஸ்தைப் பின்பற்றிய ஏழை யூத விசுவாசிகளின் பணத் தேவைகளைப் புற இன மக்கள் பொறுப்பேற்க வேண்டிய கடமை உள்ளது என பவுல் போதித்தார் (ரோம 15:25-27).

அதேநேரம் யூத சமயத்தில் வைராக்கியம் உடைய தீவரப் பற்றாளர்கள் பவுலை சிறை பிடித்துத் தண்டிக்க, காவலில் போடக் காத்திருந்தனர். ஆகவே தீருவில் இருந்த சீடர்கள் பவுலை எருசலேம் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். ஆனால் பவுல் அதற்குச் சம்மதிக்கவில்லை.

தான் எருசலேம் செல்வது அபாயம் என பவுலுக்கு நன்கு தெரியும். ஆகவே யூத சமய தீவிர பற்றாளர்களிடமிருந்து பாதுகாக்கப்பட, தமது தர்ம சகாயம் எருசலேம் சபை தலைவர்களால் அங்கீகரிக்கப்பட ஜெபிக்கும்படி விசிவாசிகளை வேண்டுகிறார் (ரோமர் 15:31-32).

பவுலின் நோக்கம் எருசலேம் சபை தலைவர்களால் தமது தர்ம சகாய பணி அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் மூலம் யூத கிறிஸ்தவர்களும் புறவின கிறிஸ்தவர்களும் இணைந்து செயல்பட வழி பிறக்கும் என நம்பினார். அகவே பவுல் எருசலேம் விரைந்து செல்ல தீவிரம் காட்டினார். 

செசரியா (Caesarea) - மன்னிப்பின் மாண்பு (21:7-14):

பவுல் பிலிப்புவை செசரியாவில் வைத்துச் சந்திக்கிறார். இது ஓர் உணர்வுப்பூர்வமான சந்திப்பு. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு பவுல் கிறிஸ்தவ சீடர்களை துன்பப்படுத்தினார். விசுவாசிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தார். சபைகளை அழித்தார்(அப் 8:1-3). 

பிலிப்புவின் நெருங்கிய நண்பர் ஸ்தேவான். அவர்கள் இருவரும் இணைந்து ஊழியம் செய்தனர் (அப் 6:1-6). ஸ்தேவான் கொலை செய்யப்படும்போது பவுலும் உடன் இருந்தார். பவுல் செய்த கொடுமைகளுக்குப் பயந்து பிலிப்பு எருசலேமை விட்டுத் தப்பி ஓடி சமாரியாவில் ஊழியம் செய்தார் (அப் 8:4-5).

பின்பு காசா வானந்திரத்தில் தேவ பணி செய்தார் (அப் 8:26). அங்கிருந்து புறப்பட்டு ஆசோ நகரத்தில் பணி செய்தார். அதைத் தொடர்ந்து செசரியாவில் சபையை நிறுவினார் (அப் 8:40).

இப்போது இருபது வருடங்களுக்குப் பிறகு பவுலை ஒரு அப்போஸ்தல ஊழியராக பிலிப்பு சந்திக்கிறார். பவுலை அன்போடு தமது வீட்டில் ஏற்றுக் கொள்கிறார். பிலிப்புவின் ஏற்றுக் கொள்ளும் அன்பு யோசேப்பை நமக்கு நினைவூட்டுகிறது (ஆதி 45;5-7). அன்பைக் குறித்து பவுல் உலகப் புகழ் பெற்ற வரிகளை கொரிந்தியருக்கு எழுதிய நிருபம் 13 ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். அவை பவுலின் சொந்த அனுபவத்திலிருந்து பிறந்த வார்த்தைகள். அன்பு சகலத்தையும் தாங்கும். 

பவுல் செசரியாவில் அகபுவை சந்திக்கிறார். அகபு ஒரு தீர்க்கதரிசி. பதினைந்து  வருடங்கள் முன்பாகவே பவுலை அறிந்தவர். எருசலேமில் கொடிய பஞ்சம் வரப் போவதை முன் அறிவித்தவர். அந்தப்படியே எருசலேமில் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது எருசலேமில் இருக்கும் சகோதரரருக்கு பண உதவி செய்யும் படி பர்னபாவும் பவுலும் இணைந்து செயல் பட்டனர். பவுலின் மிஷனரிப் பயணத்திற்குத் தொடக்கமாக அது அமைந்தது (அப் 11:27-30).

இப்போது பவுல் எருசலேமில் அனுபவிக்கப் போகும் சிறை அனுபவங்களை அகபு தீர்க்க தரிசனமாக முன் அறிவிக்கிறார். இது பவுலின் இரண்டாவது வகை ஊழியத்திற்கு தொடக்கமாக அமையப் போகிறது. பவுல் எருசலேம் தேவாலயத்தில் சாட்சி கொடுக்கப் போகிறார். ஆலோசனை சங்கத்தில் சாட்சி கொடுக்கப் போகிறார். அரசர்கள் முன்பாக சாட்சி கொடுக்கப் போகிறார். 

பவுல் அனுபவிக்கப் போகும் துயரங்களை அறிந்த நண்பர்கள் அவரை எருசலேம் செல்ல வேண்டாம் என அழுது கெஞ்சிக் கேட்கின்றனர். ஆனால் பவல் அதை ஏற்க மறுத்தார். சிறையில் அடைக்கப்படுவது மட்டுமல்ல ஆண்டவருக்காக உயிரையும் இழக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.  

புறவின மக்கள் சபை, அவர்களது எதிர்காலம் குறித்த பவுலின் பாரத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பவுல் பிடிவாதமாகத் தாமாகவே துயரத்தில் சிக்கிக் கொள்வதாக எண்ணினார்கள்.

ஆனால் பவுலின் மனம் புற இன விசுவாசிகளை எருசலேம் சபை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வாஞ்சித்தது. எதிர்காலத்தில் எருசலேம் சபை அவர்களை வழி நடத்த வேண்டும் என விரும்பினார். 

அதற்காகத் தாமே நேரில் சென்று எருசலேம் சபைத் தலைவர்களிடம் ஊழியத்தில் உருவான சபைகளைப் பற்றி, விசுவாசிகள் குறித்தும் விளக்க விரும்பினார். அதற்காக உயிரையும் கொடுக்க தயாராக இருந்தார். பவுல் எருசேலம் நோக்கிப் பயணப்பட்டார்.

Message taken from : "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

புதன், 19 அக்டோபர், 2022

ஏன் வேதத்தை முறையாகக் கற்க வேண்டும்?

வேதத்தைக் கற்பது அவசியம்


1. பக்தி உணர்வில் நிலை பெற வேண்டும். (எபேசியர்: 3: 16-19). 

மனதில் பக்தி எனும் தீபம் சுடர்விட வேத வார்த்தைகள், இறை வேண்டல் எனும் எண்ணெய் தொடர்ந்து ஊற்றப்பட வேண்டும். வேதத்தை முறையாக கற்றுக் கொள்வதன் வழியாகச் சிந்திக்கும் திறன் வலிமை அடைகிறதுஇறை வேண்டுதல் செய்வதன் மூலம் சிந்தித்ததைச் செயல் படுத்தும் ஆற்றல்  கிடைக்கிறது. எனவே  இறை பக்தி மனதில் நிலை நிற்க வேதத்தை ஆவலுடன் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும்.  

2. மனம் தூய்மை அடைய வேண்டும். (ரோமர்:12: 1-2).

மனம் மாசற்றதாக உருமாற்றம் அடைய உழைப்பதே வாழ்வின் மிக மேன்மையான செயல்மனித உள்ளம் இயல்பாகவே பெருமை, பேராசை, பொறாமை, கோபம், பிறர் பொருளை விரும்புதல், பிறரை அடக்கி ஆள முற்படுதல்.., போன்ற பல தீய  உணர்ச்சிகளுக்கு அடிமையாக இருக்கிறது. இத்தகைய தீய உணர்வுகளின் கட்டுப்பாட்டிலிருந்து உள்ளம் விடுதலை அடைய வேண்டும். 

அன்பு, உண்மை, பொறுமை,சாந்தம், கருணை, இரக்கம், சகிப்புத்தன்மை,பணிவு, அடக்கம், பிறர் நலம் விரும்புதல், நல் நம்பிக்கை, சந்தோஷம், இச்சையடக்கம், மனநிறைவு.., போன்ற நல்ல உணர்வுகள் மனதை ஆளுகை செய்ய வேண்டும். 

வேத வசனங்கள் மனதில் தொடர்ந்து விதைக்கப்படும் போது தீய பண்புள் அகல்கிறது. நற்பண்புகள் பிறக்கின்றது. எனவே வேதத்தைத் தொடர்ந்து கற்க வேண்டும்.

3. இறை பிரசன்னத்தில் வாழ வேண்டும். (யாத்: 33:15).

அதிகாரம், பணம், பொருட்கள், உறவுகள் அளிக்கும் மகிழ்ச்சி நிரந்தரமல்ல. அவை இருக்கும் வரை மட்டுமே சந்தோஷம் தரும். ஆகவே இவற்றைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனும் கவலை மனதை விடாமல் அலைக்கழிக்கும். இழந்து விடுவோமோ என்கிற அச்சம் விடாமல் துரத்தும்.  

உண்மையான மகிழ்ச்சி என்பது வெளியில் தேடி, ஓடி அடைவதல்ல. அது உள்ளத்தில் உணர்வது. உள்ளம் இறை பிரசன்னத்தில் நிலைத்து நிற்பதே நிலையான இன்பம். அந்த மகிழ்ச்சி சூழ்நிலைகளால் மாறாது.  

இறைமை என்பது ஓர் அனுபவம். இறைபிரசன்னத்தில் வாழ்வதை விட மேலான ஆசீர்வாதம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.வேத வசனங்கள் கடவுளை வெளிப்படுத்துகிறது. அவை மன மகிழ்ச்சியைத் தருகிறது. கடவுளின் அன்பை உணர்ந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலைகள் மறையும். மனதின் பாரம் குறையும். நம்பிக்கை பெருகும்.

வேதத்தின் வார்த்தைகளைத் தொடர்ந்து தியானித்து வருவதன் மூலம் தேவ பிரசன்னம் எப்போதும் நம்முடன் இருக்கும். இந்த தெளிந்த புத்தியை அடைய வேதத்தை முறையாக் கற்பது அவசியம்.

4. பற்றுறுதி - வைராக்கியம் வளர வேண்டும். (எபிரேயர் 12:1). 

ஆழ்ந்த பக்தியில் நிலைத்திருப்பது எளிதானதல்ல. மனதைத் தூய்மையாகப் பாதுகாத்திட கடும் பிரயத்தனம் தேவைப்படுகிறது. எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்வதற்கு முயற்சி தேவையில்லை. ஆனால் உயர்ந்த வாழ்க்கை வாழ கடும் உழைப்பு தேவை. அர்ப்பணிப்பு அவசியம். 

விளையாட்டு வீரர்களைக்  கவனித்துப் பாருங்கள். எவ்வளவு கவனமாகப்  பயிற்சி பெறுகின்றனர். நேர்த்தியான பயிற்சியாளர். உணவில் கட்டுப்பாடு. உடலைப் பராமரிப்பதில் கடும் உழைப்பு. துல்லியமான நேர நிர்வாகம். இலக்கு நோக்கி பயணம்.

இறை வாழ்க்கை வாழ இத்தகைய பயிற்சி தேவை. மனதில் வைராக்கியம் வேண்டும். பிடிவாதம் என்பது சுய ஆசையை நிறைவேற்ற விரும்புவது. வைராக்கியம் என்பது ஒரு உன்னத குறிக்கோளை அடைவதற்காக அர்ப்பணித்து வாழ்வது. மனதில் வைராக்கியம் இருந்தால் தோல்விகளால் துவண்டு விட மாட்டோம். மனம் சோர்வில்  மூழ்கி விடாது. வீழ்ந்தாலும் மீண்டும் எழும். வேத வசனங்களை இடைவிடாது கற்றுக் கொள்வதன் மூலம் மனதில் வைராக்கியம் உண்டாகும்.

5. உரையாடலில் தெளிவு இருக்க வேண்டும். (1 தீமோ: 6:3-5).

சமய உரையாடல்கள் அன்பை விதைக்க வேண்டும். நம்பிக்கையை உருவாக்க வேண்டும். பிறர் நலம் விழைய வேண்டும். வாழ்வை நேர்மையான முறையில் வாழ ஊக்கம் தர வேண்டும். 

நமது உரையாடல்கள் நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சமயம் சார்ந்து பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். இறை உபதேசங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் சமய  உரையாடல்களில் ஈடுபடக் கூடாது. அவை ஒருபோதும் வெறுப்பு, துவேஷம் இவற்றைத் தூண்டக்கூடாது. பல அடிப்படை வாத சமய உரையாடல் கடும் அழிவை ஏற்படுத்தி இருக்கிறது. 

வேதத்தின் கருத்துக்கள் அறிவியல் போலத் தர்க்க ரீதியாக ஆய்வு செய்து எழுதப்பட்டது கிடையாது. அவை விசுவாசம், அனுபவம் சார்ந்து எழுதப்பட்டவை. அன்பு எனும் அஸ்திவாரம் மேல் கட்டப்பட்டது. அவை நீதி, நியாயம் என்கிற வெளிச்சத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அறம் அதன் மையம். இரக்கம், கருணை அதின் செயல் வடிவம்.

வேதத்தை முறையாகக் கற்று அதைக் கடைப்பிடித்து வாழ்பவர்களுக்கு மட்டுமே வேதத்தின் உண்மைப் பொருள் வெளிப்படும். அர்ப்பணிப்பு மிக்க வாழ்வு வாழ்ந்தவர்களால் எழுதப்பட்ட விளக்கங்கள் வேதத்தைப் புரிந்து கொள்ள உதவும். அத்துடன் தாழ்மை உணர்வுடன் வேதத்தைக் கற்றுக் கொள்வது மிக முக்கியமான ஒன்று.

6. வளர்ச்சி அடைய வேண்டும். (1 பேதுரு: 2-3). 

ஒவ்வொரு நாளும் நமக்கு அருளப்படும் ஓர் கொடை. மேலும் கற்பதற்கு ஓர் வாய்ப்பு. கற்பதன் வழியாக மனம் மேம்படுகிறது. மனவளம் அடைகிறது. தீய உணர்வுகள் அகல்கின்றன. நல் உணர்வுகள் பெருகுகிறது. மனதின் எண்ணங்கள் நேர்மறையாக உதிக்கின்றது. எனவே வாழ்வு வளர்ச்சி பெற வேதத்தை அனுதினமும் கற்க வேண்டும். தியானிக்க வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும்.


படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,