சனி, 3 ஜூன், 2023

யாக்கோபு 2: 1-13

அத்தியாயம் ஐந்து:   

பணக்காரன் - ஏழை. 

(Rich Man - Poor Man)



ஒரு முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர் சோதனையை எதிர் கொள்வதில் பொறுமையாக இருக்கிறார் (யாக்.1). அத்துடன் சத்தியத்தை பின் பற்றி வாழ வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். இதுவே யாக்கோபு  இரண்டாம் அதிகாரத்தின் மையக் கருத்து. 

முதிர்ச்சியடையாதவர்கள் தங்கள் நம்பிக்கைகளைப் பற்றி வீணாகப் பேசி அலப்புகிறார்கள். நிறைகுடம் தளும்பாது என்பது போல ஒரு முதிர்ந்த நபர் தனது விசுவாசத்தை வாழ்ந்து காட்டுகிறார். 

ஆகவே நாம் நினைவில் நிறுத்த வேண்டியது: தேவ வார்த்தையைக் கேட்பதும், அந்த வார்த்தையைக் குறித்துப் பேசுவதும், ஒருபோதும் வசனத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்வதற்கு மாற்றாக அமைந்து விட முடியாது (யாக். 1:22-25). 

ஒவ்வொரு விசுவாசிக்கும், அவரது நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு விசுவாச அறிக்கை அல்லது அதைப் பற்றிய ஒரு தனிப்பட்ட புரிதல் இருக்கிறது. பெரும்பாலான தேவாலயங்களின் ஆராதனை முறைமைகளில் இது போன்ற விசுவாச அறிக்கைகள்  இடம் பெற்றுள்ளன. அந்த விசுவாச பிரமாணத்தைத்  திருச்சபை உறுப்பினர்கள் கூட்டாக அறிக்கையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெரும்பாலும், கர்த்தருடைய திருவிருந்தை அனுசரிக்கும் போது இத்தகைய "விசுவாச பிரமாணங்கள்" சொல்லப்படுகின்றன. 

தேவாலய ஆராதனை முறைமைகள் மற்றும்  விசுவாச அறிக்கைகள் நல்லவை மற்றும் பயனுள்ளவை தான், ஆனால் வெறும் கிளிப்பிள்ளை போல அவற்றைச் சொல்வதால் மட்டுமே தேவ வார்த்தையை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதாக நினைக்கக் கூடாது. 

பல கிறிஸ்தவர்கள், தேவாலயத்தில் விசுவாச உடன்படிக்கையை அறிக்கை செய்து விட்டு, அதன் பின்னர் அவர்கள் தங்களது அன்றாட அலுவலக பணிகளில் ஈடுபடும்போது, அந்த உடன்படிக்கைக்கு முற்றிலும் முரணான வழிகளில் செயல்படுவதை, ஒரு போதகராக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். 

அப்படியெனில்; 

  • நாம் தேவனுடைய வார்த்தையை வாழ்க்கையில் உண்மையாகக் கடைப்பிடிக்கிறோமா? 
  • அதை எப்படிக் கண்டறிவது?  

இதற்கு யாக்கோபு உதவுகிறார். ஒரு எளிய பரிசோதனை செய்வதன் வழியாக இதை நாம் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார். அந்த பரிசோதனையைச் செய்து பார்க்கும் படியாக நம்மை அழைக்கிறார். 

ஒரு தேவாலய ஆராதனை நடைபெறுகிறது. அப்போது இரண்டு விசுவாசிகள் வருகின்றனர். ஒருவர் பணக்காரர் மற்றவர் ஏழை. இப்போது  திருச்சபையினர், அவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பார்க்கும்படியாக யாக்கோபு கூறுகிறார். 

நாம் மனிதர்களை நடத்தும் விதத்திலிருந்து, இறைவனைக் குறித்த நமது உண்மையான விசுவாசம் எத்தகையது என வெளிப்படுகிறது! (The way we behave toward people indicates what we really believe about God).

மனித உறவுகள், தெய்வீக கூட்டுறவு; இந்த இரண்டையும் பிரிக்க முடியாது. துணியவும் கூடாது. (We cannot - and dare not - separate human relationships from divine fellowship). 

"தேவனிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான்?" (1 யோவான் 4:20). 

இந்த தியானப் பகுதியில், நாம் மற்றவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதின் வெளிச்சத்தில், கிறிஸ்தவத்தின் நான்கு அடிப்படை கோட்பாடுகளைக் குறித்து யாக்கோபு விளக்குகிறார்.

1. கிறிஸ்துவின் தெய்வீகம் - The Deity of Christ (2:1–4)

"அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, நம் மகிமை மிக்க கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் விசுவாசிகளாயிருக்கும்போது, பாரபட்சமாக இருக்காதீர்கள்." (யாக். 2:1, Easy to read  version). 

அன்றைய யூத மக்கள் அங்கீகாரத்திற்கும், மரியாதைக்கும் மிகுதியாக ஆசைப்பட்டனர். ஒருவரோடு ஒருவர் புகழ்ச்சிக்காகப் போட்டியிட்டனர். இந்தப் பிரச்சனையைப் பற்றி லூக்கா 14:7-14 இல் உள்ள பகுதியில் நம் ஆண்டவர், உவமைகளுடன் விளக்குகிறார். மத்தேயு 23 இலும், இத்தகைய புகழ்ச்சியை விரும்பும் மாயக்காரராகிய பரிசேயர்களை அவர் கடுமையாகக் கண்டனம் செய்வதை வாசிக்கலாம்.

இன்றைய திருச்சபையிலும் இத்தகைய பிரச்சனை இருக்கிறது. அரசியல், தொழில், சமூகம் மட்டுமின்றி, தேவாலயத்திலும் கூட அதிகார உச்சியில் ஏறி அமர வேண்டும் என விரும்புபவர்கள் நம் மத்தியில் உள்ளனர். ஏறக்குறைய ஒவ்வொரு தேவாலயத்திலும் ஒரு செல்வாக்கு மிக்க குழு உள்ளது. புதிதாக இணையும் கிறிஸ்தவர், அந்த குழுவிற்குள்ளே நுழைவது மிகக் கடினம். 

சில சபை உறுப்பினர்கள், தங்கள் முக்கியத்துவத்தைக் காண்பிக்க அவர்களது பதவி மற்றும் பொறுப்புகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிருபத்திலும் கூட அநேக விசுவாசிகள் போதக ஊழியத்தைச் செய்ய விரும்பி அதற்காக முயன்றனர் என யாக்கோபு குறிப்பிட்டு அதற்காக அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டியிருந்தது (யாக். 3:1). 

நாம் ஆண்டவரைப் பின்பற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். நமது ஆண்டவர் வாழ்க்கையிலிருந்து சில நிகழ்வுகளைத் தியானிப்போம்

1.1. இயேசு முகதாட்சன்யம் அற்றவர் - Jesus did not respect persons

இயேசுவிடம் பாரபட்சம் கிடையாது. அவரது இந்த பண்பை அவருடைய எதிரிகள் கூட ஒப்புக்கொண்டனர்.

தங்கள் சீடரை ஏரோதியருடன் அனுப்பி, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் தேவனுடைய நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்." (மத். 22:16, பொது மொழிபெயர்ப்பு). 

நமது ஆண்டவர் ஒருவரது புறத் தோற்றத்தைப் பார்ப்பது இல்லை; அவரது இதயத்திலிருந்து புறப்படும் சிந்தனைகளைப் பார்க்கிறார். ஒருவரது செல்வம் அல்லது அவரது சமூக அந்தஸ்தால் அவர் ஈர்க்கப்படவில்லை. தனது தற்பெருமையைக் காண்பிப்பதற்காக, ஒரு பெரும் விருந்தைக் கொடுத்த பணக்கார பரிசேயனை விட, இரண்டு காசு கொடுத்த ஏழை விதவையே அவருடைய பார்வையில் பெரியவளாக இருந்தாள். 

அத்துடன், அவர் பாவிகளின் வாழ்வில் மறைந்திருக்கும் திறமையை, அவர்களது எதிர்காலத்தைக் கண்டார். வளைந்து நெளியும் பேதுருவில், ஒரு பாறையைக் கண்டார். வரி வசூலித்து கணக்கு எழுதுபவரான மத்தேயு, ஒரு நாள் உண்மையுள்ள சீடராக மாறி, நான்கு சுவிசேஷங்களில் ஒன்றை எழுதுவார் என்பதை அறிந்திருந்தார். சீகார் கிணற்றுக்கு அருகில், அந்தப் பாவியான பெண்ணுடன் இயேசு பேசுவதைக் கண்டு, அவரது சீடர்கள் வியப்படைந்தனர். ஆனால் இயேசுவோ, ஒரு பெரிய விளைச்சலை அறுவடை செய்வதற்கான கருவி, அவளிடம் மறைந்து இருப்பதைக் கண்டார். 

நாம் மக்களை, அவர்களின் கடந்த காலத்தை வைத்து மதிப்பிடுகிறோம், அவர்கள் எதிர்காலத்தில் எப்படி இருப்பார்கள் என்பதைப் பார்ப்பது இல்லை

தர்சு பட்டனத்தின் சவுல் மனம் மாறியபோது, ​​எருசலேம் தேவாலயம் அவரை ஏற்றுக்கொள்ளப் பயந்தது! சவுலின் மனமாற்றத்தில் நம்பிக்கை கொண்ட பர்னபாஸ் அவர்களது மன பய சுவர்களை இடிக்க வேண்டியதாயிற்று (அப். 9:26-28). 

நாம் ஒருவரது இதயத்தின் உள் மனப்பான்மை எவ்விதம் உள்ளது என்பதைக் காட்டிலும், அவரது வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டு, அவரை மதிப்பீடு செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. சில குறிப்பிட்ட நபர்களுடன் தேவாலயத்தில் அமர்ந்திருப்பது நமக்கு மகிழ்ச்சி தருவதில்லை, ஏனென்றால் அவர்கள் "நமக்குச் சமமானவர்கள் இல்லை". இயேசு பாவிகளின் நண்பராக இருந்தார், ஆனாலும் அவர் பாவங்களை ஏற்கவில்லை. பாவிகளுடன் பழகுவது சமரசம் செய்து கொள்வது அல்ல; ஆனால் கரிசனை. அதுவே ஆண்டவர் பாவிகளை நேசிக்கக் காரணமாக இருந்தது. அவர்கள் அவரை விசுவாசித்த போது, ​​இரட்சிப்பைப் பெற்றனர்.  

1.2. இயேசு இகழ்ந்து நிராகரிக்கப்பட்டார் -  Jesus was despised and rejected

ஏசாயா 53:1-3 இல் இந்த உண்மை தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்டது. சுய நீதி எனும் நோயால் பீடிக்கப்பட்ட தேசத்தில், அவர் ஒரு நிராகரிக்கப்பட்ட "ஏழை மனிதர்". 

நரிகள் மற்றும் பறவைகளுக்குக் கூட தங்கும் இடம் இருந்தது ஆனால், அவருக்கென ஒரு வீடு இல்லை. 

அவர் இகழ்வாக எண்ணப்பட்ட நாசரேத் எனும் நகரில் பிறந்து, வறுமையின் பிடியிலிருந்த வீட்டில் வளர்ந்தார். 

ஒருவேளை, அவர் பூமியில் ஊழியம் செய்து கொண்டிருக்கும் போது, நீங்களும் நானும் அவரைச் சந்தித்திருந்தால், நம்மைக் கவரும் வகையில் உடல் அமைப்பிலோ அல்லது பொருள் ரீதியாகவோ மதிப்புமிக்க ஒன்றையும், நாம் அவரிடம் பார்த்திருக்க மாட்டோம். 

இருப்பினும், அவர் தேவனின் மகிமை! பழைய ஏற்பாட்டில், தேவனது மகிமை முதலில் கூடாரத்திலும் (யாத். 40:34-38) பின்னர் தேவாலயத்திலும் (1 இராஜா. 8:10-11) தங்கியிருந்தது. 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தபோது, ​​அந்த தேவனுடைய மகிமை அவரில் தங்கியிருந்தது (யோவான் 1:14). இன்று, அந்த தேவனுடைய மகிமை, ஒவ்வொரு விசுவாசிக்குள்ளாகவும் (1 கொரி. 6:19-20) திருச்சபையில் கூட்டாகவும் வெளிப்படுகிறது (எபே. 2:21-22). 

கிறிஸ்துவின் நாளிலிருந்த மத அறிஞர்கள், தங்களது மனித தராதரங்களின் படி அவரை நியாயந்தீர்த்தனர். அவரை நிராகரித்தனர். அவர் அற்பமாக எண்ணப்பட்ட நகரமான கலிலேயாவிலுள்ள நாசரேத்தில் இருந்து வந்தவர் என்றனர். அவர்கள் அங்கீகரித்த வேத பாடசாலைகளில் அவர் பயிலவில்லை. அவருக்கு அதிகாரத்திலிருந்த சமயத் தலைவர்களின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லை. அவரிடம் செல்வம் இல்லை. அவரைப் பின்பற்றியவர்கள் கல்வியறிவற்ற, சமூக மதிப்பற்ற  கும்பல். அதில் எளிய பொதுமக்களும் பாவிகளும் அடங்குவர். ஆனாலும் அவர் கர்த்தரின் மகிமையாக இருந்தார்! 

"வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பு அளிக்காதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்" (யோவான் 7:24 பொது மொழிபெயர்ப்பு) என்று இயேசு மதத் தலைவர்களை எச்சரித்ததில் ஆச்சரியமில்லை. 

ஆனாலும், வருத்தத்துடன் சொல்ல வேண்டியதாக உள்ளது, நாமும் கூட அதே தவற்றை அடிக்கடி செய்கிறோம். நமது தேவாலயங்களுக்குள் விசுவாசிகள் வரும்போது, ​​அவர்கள் இருதயத்தின் உள்ளாக இருப்பதைக் காட்டிலும், வெளிப்புறமாக இருப்பதையே பார்த்து, அவர்களை மதிப்பிட முனைகிறோம். 

ஆடை, தோலின் நிறம், அலங்காரம் மற்றும் பிற மேலோட்டமான விஷயங்கள் அவர்களின் வாழ்க்கையில் வெளிப்படும் ஆவியின் கனியை விட அதிக மதிப்பைக் கொண்டுள்ளன. நாம் பணக்காரர்களுக்குச் சேவை செய்கிறோம், ஏனென்றால் அவர்களிடமிருந்து ஏதாவது கிடைக்கும் என்று நம்புகிறோம். ஏழைகள் நம்மைச் சங்கடப்படுத்துவதால் அவர்களைத் தவிர்க்கிறோம். ஆனால் இயேசு இதைச் செய்யவில்லை. அவரால் அவ்விதமாக நடந்து கொள்வதை அங்கீகரிக்க முடியாது. 

நமது மனித உறவுகளில், கிறிஸ்துவின் இந்த தெய்வீகத் தன்மையை எவ்வாறு கடைப்பிடிப்பது? 

இது மிகவும் எளிமையானது: கிறிஸ்துவின் கண்களைக் கொண்டு  பாருங்கள். 

வருபவர் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், கிறிஸ்து அவரில் வாழ்வதால் நாம் அவரை ஏற்றுக்கொள்ளலாம். அவர் ஒரு கிறிஸ்தவராக இல்லாவிட்டால், கிறிஸ்து அவருக்காக மரித்ததால் நாம் அவரை நேசிக்கலாம். 

நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள உறவின் இணைப்பாகக் கிறிஸ்து இருக்கிறார். அது அன்பின் இணைப்பு. 

மற்றவர்களுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவிற்கு இயேசு கிறிஸ்துவே ஆதாரம். அவர் எப்படி ஒவ்வொரு உறவுகளுடன் பழகினாரோ அதுவே நமக்குச் சிறந்த வழிகாட்டுதல். அதைத் தவிர்த்து வேறு எந்த விதமான முறைமைகளும் உறவை மேம்படுத்தாது. 

கர்த்தர் தமது நாமத்திற்கு மகிமையைக் கொண்டுவர, எந்த ஒரு தகுதியுமற்ற நபரைக் கூட பயன்படுத்த முடியும். அவர் பேதுருவை, சகேயுவை, மாற்குவை பயன்படுத்தினார். நாம் நிராகரிக்கக்கூடிய அந்த ஏழையையும் அவரால் பயன்படுத்த முடியும். ஆகவே எவரையும் அற்பமாக எண்ணாதீர்.

2. தேவ கிருபை - The Grace of God (2:5–7)

இங்கு வலியுறுத்தப்படுவது கடவுளின் தெரிவு (God's Choosing). இது தேவனின் கிருபையோடு இணைந்தது. இரட்சிப்பு தகுதியின் அடிப்படையில் இருந்தால், அது தேவனின் அருளாக இருக்காது. கிருபையை, சம்பாதித்துப் பெற முடியாது. தகுதியற்றவர்களை அவர் தமது இறையாண்மையால் தேர்வு செய்து இரட்சிப்புக்கிறார் (எபே. 1:4-7; 2:8-10). 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய தேவ சித்தத்தின் அடிப்படையில் கர்த்தர் நம்மை முழுவதுமாக இரட்சிக்கிறார். நம்மிடம் உள்ள அல்லது நாம் வைத்திருக்கும் வேறு எதன் காரணமாகவும் அல்ல.

கர்த்தர் தேச வேறுபாடுகளை (National difference) புறக்கணிக்கிறார் (அப் 10:34). புற ஜாதியைச் சேர்ந்த கொர்னேலியுவின் வீட்டிற்கு பேதுரு சென்றார். அவர்களுக்கு சுவிஷேஷத்தைப் பிரசங்கித்தார். அவர்களுடன் கூட சாப்பிடுவதைப் பார்த்த யூத விசுவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். 

முதல் திருச்சபை மாமன்றத்தின் விவாதம், "ஒரு புறஜாதியைச் சேர்ந்தவர், கிறிஸ்தவராக மாற வேண்டுமெனில், முதலாவதாக அவர் யூதராக மாற வேண்டுமா?" (அப். 15). அதற்குபு பரிசுத்த ஆவியானவர் தந்த பதில், "தேவையில்லை!" 

தேவனின் பார்வையில், நியாயத்தீர்ப்பு (ரோமர். 2:6-16) அல்லது இரட்சிப்பு (ரோமர். 10:1-13) என்று வரும்போது, யூதருக்கும் புறஜாதிக்கும் எந்தவொரு வித்தியாசமும் கிடையாது.

கர்த்தர் சமூக வேறுபாடுகளையும் (social difference) புறக்கணிக்கிறார். எஜமானரும், அடிமைகளும் (எபே. 6:9) பணக்காரரும், ஏழைகளும் அவருக்கு ஒன்றே. சமமானவர்களே. 

கர்த்தரின் கிருபை பணக்காரனை ஏழையாக்குகிறது, ஏனென்றால், அவன் தனது செல்வத்தைச் சார்ந்திருக்காமல் வாழ்வதற்காக.

அதே கிருபை ஒரு ஏழையைச் செல்வந்தனாக மாற்றுகிறது ஏனென்றால், அவன் கிறிஸ்துவில் கிருபையின் ஐசுவரியத்தைச் சுதந்தரித்துக் கொள்கிறான். (யாக். 1:9-11ஐப் பார்க்கவும்.) 

“ஆண்டவர் ஏழையாக்குகிறார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்; புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்; குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்; உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்!” (1 சாமு. 2:7-8).

மனிதக் கண்ணோட்டத்தில், இறைவன் பணக்காரர்களுக்குப் பதிலாக ஏழைகளைத் தேர்ந்தெடுக்கிறார். 

“எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைப் பேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர் ஆனால், கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.” (1 கொரி. 1:26-27). 

இவ்வுலகின் ஏழைகள் விசுவாசத்தில் ஐசுவரிய வான்களாகிறார்கள்; ஆண்டவரின் பிள்ளைகளாக, அவர்கள் தேவ ராஜ்யத்தின் செல்வத்தைச் சுதந்தரித்துக் கொள்கின்றனர். 

இவ்வுலகில் ஏழையாகவும், மறுமையில் பணக்காரனாகவும், அல்லது இவ்வுலகில் பணக்காரனாகவும், மறுமையில் ஏழையாகவும் இருக்க முடியும் (1 தீமோ. 6:17-18). அல்லது, நீங்கள் இம்மையிலும் மறுமையிலும் ஏழையாக இருக்கலாம் அல்லது இம்மையிலும் மறுமையிலும் பணக்காரராக இருக்கலாம். இது அனைத்தும் கிறிஸ்துவுடன் இணைந்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அவர் உங்களுக்கு வழங்கிய பொருள் செல்வத்தை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. 

ஆண்டவர், “தம்மை நேசிப்பவர்களுக்கு” தேவ ராஜ்யத்தை வாக்களிக்கிறார் ​​(யாக். 2:5). இந்த உலகத்தையும் அதன் செல்வத்தையும் நேசிப்பவர்களுக்கு அல்ல.

யாக்கோபு ஒரு கடுமையாக எச்சரிக்கிறார்: "நீங்கள் ஏழையை இகழ்ந்து, இரட்சிக்கப்படாத பணக்காரர்களைப் போல நடந்துகொள்கிறீர்கள்'' (யாக். 2:6-7).

அந்த நாட்களில், பணக்காரர்கள் ஏழைகளைச் சுரண்டுவது, நீதிமன்ற தீர்ப்புகளில் செல்வாக்கு செலுத்துவது, தங்களைப் பணக்காரர்களாக ஆக்கிக் கொள்வது மிக எளிதாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, இன்றும் அதே பாவங்களைச் செய்கிறோம்; இத்தகைய பாவங்கள் கிறிஸ்துவின் பெயரையே தூஷிக்கின்றன. நம்முடைய ஆண்டவர் ஏழையாக இருந்தார். அவரும் அவருடைய நாளின் செல்வாக்கு மிக்க தலைவர்களால் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பலியானார். 

நாம் உண்மையிலேயே கர்த்தரின் கிருபையின் கோட்பாட்டை விசுவாசித்தால், தேவனது திட்டத்தின் அடிப்படையில் மக்களுடன் தொடர்பு கொள்ள அது நம்மைத் தூண்டுகிறது. மனித தகுதி அல்லது சமூக அந்தஸ்தின் அடிப்படையில் அல்ல. 

ஒரு "சிறந்த சபை" என்பது தேவ கிருபையை விடப் பெரிதாகக் கட்டப்பட்ட தேவாலயம் அல்ல. அவர் இறந்தபோது, ​​யூதர்களையும் புறஜாதிகளையும் பிரிக்கும் சுவரை இடித்தார் (எபே. 2:11-22). 

இயேசு தம் பிறப்பு மற்றும் வாழ்வின் வழியாக, பணக்காரர், ஏழை, இளைஞர்கள், பெரியவர்கள், படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் இடையே இருந்த சுவர்களை உடைத்தார். அந்தச் சுவர்களை நாம் மீண்டும் கட்டுவது தவறு; கர்த்தரின் கிருபையை நாம் நம்பினால் அவற்றை மீண்டும் உருவாக்கக் கூடாது.

3. தேவ வார்த்தை - The word of God (2:8-11)

சமீபத்திய ஆண்டுகளில், விசுவாசிகள் கர்த்தருடைய வார்த்தையின் உத்வேகம் மற்றும் அதிகாரத்தை எதிர்ப்பவர்கள் மீது போர்களை நடத்தி வருகின்றனர். நிச்சயமாக, கர்த்தருடைய வார்த்தையின் சத்தியத்தைப் பாதுகாப்பது ஒரு நல்ல விஷயம், ஆனால் நம்முடைய வாழ்க்கையும் ஊழியங்களுமே சிறந்த பாதுகாப்பு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. டி.எல். மூடி, “ஒவ்வொரு வேதாகமமும் ஷூ லெதரில் கட்டப்பட வேண்டும்! (Every Bible should be bound in shoe leather)” என்று அடிக்கடி கூறினார். 

யாக்கோபு பழைய ஏற்பாட்டில் உள்ள தேவனது சட்டங்களில் ஒன்றான, "உன்னில் நீ அன்பு கூருவதுபோல் பிறனிலும் அன்பு கூருவாயாக"  என்பதைப் பயன்படுத்தி பட்சபாதம் செய்யக்கூடாது என எச்சரிக்கிறார் (லேவி. 19:18). 

நல்ல சமாரியன் உவமையில், நமது உதவி தேவைப்படுபவர்கள் நமக்குப் பிறன் என்று இயேசு சொன்னார் (லூக்கா 10:25-37). இவர் எந்த பிரிவைச் சார்ந்தவர் என்பது முக்கியம் அல்ல, ஆனால் சேவை செய்யும் வாய்ப்பு. 

நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி, “எனக்குப் பிறன் யார்?” என்பதல்ல ஆனால், "நான் யாருக்குப் பிறனாக இருக்க முடியும்?" 

"உன்னைப் போல் பிறனை நேசி" என்பது, ஏன் "ராஜரீக பிரமாணம்" என்று அழைக்கப்படுகிறது? 

முதலாவது, அது ராஜாவால் கொடுக்கப்பட்டது. பிதாவாகிய தேவன் அதை நியாயப்பிரமாணத்தில் கொடுத்தார். குமாரனாகிய தேவன் அதை தம் சீடர்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்தினார் (யோவான் 13:34). ஆவியானவர் நம் இதயங்களைத் தேவ அன்பால் நிரப்புகிறார், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் (ரோமர் 5:5). 

உண்மையான விசுவாசிகள் "ஒருவரையொருவர் நேசிக்கும்படி தேவனால் கற்பிக்கப்படுகிறார்கள்" (1 தெச. 4:9). 

இரண்டாவது காரணம்: "உன்னைப் போல் பிறனை நேசி" என்பது மற்ற எல்லா சட்டங்களையும் ஆளுகிறது. 

"அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது" (ரோமர் 13:10). 

ஒவ்வொரு குடிமகனும் தன் அண்டை வீட்டாரை உண்மையாக நேசித்தால், ஆயிரக்கணக்கான சிக்கலான சட்டங்கள் தேவைப்படாது.

ஆனால் இது "ராஜரீக பிரமாணமாக" இருப்பதற்கு முக்கியக் காரணம், அதைக் கடைப்பிடிப்பது உங்களை ராஜாவாக மாற்றும். வெறுப்பு ஒரு மனிதனை அடிமையாக்குகிறது, ஆனால் அன்பு நம்மை சுயநலத்திலிருந்து விடுவித்து ராஜாக்களைப் போல ஆட்சி செய்ய உதவுகிறது. கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவும், தேவன் நமக்குக் கட்டளையிட்டபடி மக்களை நடத்தவும் அன்பு நமக்கு உதவுகிறது. நாம் அவருடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறோம், பயத்தினால் அல்ல, அன்பினால். 

மனிதர்களை அளவுக்கு அதிகமாக நேசித்து மரியாதை காட்டுவது, கர்த்தருடைய எல்லா சட்டங்களையும் மீறுவதற்கு நேராக வழிநடத்தும். நீங்கள் ஒரு நபரின் சமூக அல்லது செல்வத்தை அதிகமாக மதிக்கிறீர்கள் என்றால், தேவ கட்டளைகளை  உடைப்பதற்கான வழிகளைக் காண்பீர்கள்.  

ஒருவர் மீதான அளவு கடந்த மரியாதை உருவ வழிபாட்டிற்குச் சமம். அவர்களைத் திருப்தி செய்ய உங்களைப் பொய் சொல்ல வைக்கும். பெற்றோரை மதிப்பு குறைவாக நடத்துவதற்கும் வழிவகுக்கும். மனிதர்களை மதித்து, தேவனுடைய வார்த்தையை நிராகரிப்பதன் அடிப்படையில் நாம் செயல்பட ஆரம்பித்தவுடன், நாம் சிக்கலை நோக்கிச் செல்கிறோம். 

மேலும் நாம் குற்றவாளியாகத் தேவ சட்டம் அனைத்தையும் மீற வேண்டியதில்லை. ஒரே ஒரு சட்டமியற்றுபவர் இருக்கிறார். அவரது சட்டங்கள் அனைத்தும் அவருடைய மனதிலிருந்தும் இதயத்திலிருந்தும் வந்தவை. நான் ஒரு சட்டத்தை மீறினால், மற்ற அனைத்து சட்டத்திற்கும் நான் கீழ்ப்படிய முடியாது;  ஏனெனில், நான் ஏற்கனவே தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்துவிட்டேன். 

கிறிஸ்தவ அன்பு என்பது, நான் ஒரு நபரை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும், அவருடன்  எல்லாவற்றிலும் உடன்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. அவருடைய நடவடிக்கைகள், பேச்சு அல்லது பழக்கவழக்கங்கள் எனக்குப் பிடிக்காமலிருந்தால் அவர் எனது நெருங்கிய நண்பராக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. 

கிறிஸ்தவ அன்பு என்பது கர்த்தர் என்னை நடத்திய விதத்தில், நான் மற்றவர்களை நடத்துவதாகும். இது எனது செந்த விருப்பத்தின் செயல். நான் வலிந்து உருவாக்க முயற்சிக்கும் உணர்ச்சி அல்ல. கர்த்தரை மகிமைப் படுத்துவதே எனது நோக்கம். இந்த வழிமுறையானது உள்ளே உள்ள ஆவியானவரின் சக்தியாகும் ("ஆவியின் கனி அன்பே"). நான் மற்றவரிடம் அன்பாகச் செயல்படும்போது, ​​நான் அவரிடம் மேலும் மேலும் ஈர்க்கப்பட்டதைக் காணலாம். அவரிடம் (கிறிஸ்து மூலம்) முன்பு எனக்கு மறைந்திருந்த நல்ல குணங்களைக் காணலாம். 

மேலும், கிறிஸ்தவ அன்பு ஒருவரோடு பழகிவிட்டு, எளிதாக அவரை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு விலகுவதில்லை. ஏழை சிறப்பான நிலையை அடைய உதவ வேண்டும்; கர்த்தர் கொடுத்த வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தப் பணக்காரரின் அன்பு உதவ வேண்டும். அன்பு எப்போதும் கட்டியெழுப்புகிறது (1 கொரி. 8:1); வெறுப்பு எப்போதும் உடைத்து விடும். 

நாம் எந்த அளவிற்கு வேதத்தைக் கடைப்பிடிக்கிறோமோ அந்த அளவிற்கே நமது விசுவாசமும் இருக்கும். “உன்னைப் போலவே பிறனை நேசி” என்கிற மிக அடிப்படையான தேவ கட்டளைக்கு நாம் கீழ்ப்படியத் தவறினால், வேத வார்த்தையின் மற்ற சிறிய உபதேசங்களுக்கும் செவி சாய்த்து எந்த நன்மையும் நாம் செய்ய மாட்டோம். சிறிய விஷயங்களில் கவனமாகவும், அடிப்படை உபதேசங்களில் கவனக்குறைவாகவும் இருப்பது பரிசேயர்களின் வெளிப்படையான தவறு (மத். 23:23). தாங்கள் பாதுகாப்பதாக நினைத்த தேவ சட்டத்தை அவர்களே உடைத்தார்கள்!

4. நியாயத் தீர்ப்பு - The Judgement (2:12-13)

ஒவ்வொரு மரபு சபையின் (orthodox churches) விசுவாச அறிக்கையும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மற்றும் இறுதி நியாயத் தீர்ப்பு பற்றிய அறிக்கையுடன் முடிவடைகிறது. அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இந்த விசுவாச அறிக்கையின் விவரங்களை ஒப்புக்கொள்வது இல்லை, ஆனால் அவற்றில் செல்லப்படும் வருங்கால நிகழ்வுகளை யாரும் மறுக்கவில்லை. இறுதித் தீர்ப்பின் முக்கியத்துவத்தையும் யாரும் மறுக்க மாட்டார்கள். 

ஆண்டவராகிய இயேசு (யோவான் 5:24), மற்றும் அப்போஸ்தலனாகிய பவுல் (ரோமர் 8:1) இவ்விருவரும், கிறிஸ்தவ விசுவாசிகள் தங்கள் பாவங்களுக்காக ஒருபோதும் நியாயந்தீர்க்கப்பட மாட்டார்கள், ஆனால் அவர்களுடைய செயல்கள் நியாயந்தீர்க்கப்பட்டு வெகுமதி அளிக்கப்படும் என்றனர் (ரோ. 14:10-13; 2 கொரி. 5:9–10). 

4.1. நம்முடைய வார்த்தைகள் நியாயம்  தீர்க்கப்படும் - Our words will be judged

யாக்கோபு 2:3-ல் இரண்டு விதமான விசுவாசிகளிடமும் பேசப்பட்ட வார்த்தைகளைக் கவனியுங்கள். நாம் பிறரிடம் என்ன சொல்கிறோம், அதை எப்படிப் பேசுகிறோம் என்பது கர்த்தருக்கு முன்பாக வரும். நாம் கவனக் குறைவாகப் பேசும் வார்த்தைகளும் நியாயந்தீர்க்கப்படும் (மத். 12:36). நிச்சயமாக, நாம் பேசும் வார்த்தைகள் இதயத்திலிருந்து வருகின்றன; எனவே கர்த்தர் வார்த்தைகளை நியாயந்தீர்க்கும்போது, ​​அவர் நமது இதயத்தை ஆராய்கிறார் (மத். 12:34-37). மலைப் பிரசங்கத்தில், நாம் பேசும் விதத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சில உபதேசங்களில் இயேசு வலியுறுத்தினார் (மத். 5:21–26, 33–37; 7:1–5, 21–23). 

4.2. நம்முடைய செயல்கள் நியாயம் தீர்க்கப்படும் - Our deeds will be judged

கூடுதல் நுண்ணறிவுக்கு கொலோசெயர் 3:22–25ஐப் படியுங்கள். நாம் செய்த பாவங்களை இனி நமக்கு எதிராகக் கர்த்தர் நினைவுகூரமாட்டார் என்பது உண்மைதான் (எரே. 31:34; எபி. 10:17), ஆனால் நாம் செய்த பாவங்கள் நம் குணத்தையும்,செயல்களையும் பாதிக்கிறது. நாம் கொஞ்சமாகப் பாவம் செய்து கொண்டே உண்மையாகச் சேவை செய்ய முடியாது. நம்முடைய பாவங்களை அவரிடம் ஒப்புக்கொள்ளும்போது கர்த்தர் நம்மை மன்னிப்பார், ஆனால் அவற்றின் விளைவுகளை அவரால் மாற்ற முடியாது. 

4.3. நமது மனப்பான்மை நியாயம் தீர்க்கப்படும் - Our attitudes will be judged (வ. 13).

யாக்கோபு இரண்டு அணுகுமுறைகளை வேறுபடுத்திக் காட்டினார்: ஒன்று மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுதல், மற்றது கருணை காட்ட மறுத்தல். 

நாம் மற்றவர்களிடம் கருணை காட்டினால், கர்த்தர் நம்மீது கருணை காட்ட முடியும். இருப்பினும், இந்த உண்மையை நாம் பொய்யாகத் திரிக்கக்கூடாது. இரக்கம் காட்டுவதன் மூலம் நாம் கருணை சம்பாதிக்கிறோம் என்று அர்த்தமல்ல, ஏனென்றால் கருணையைச் சம்பாதிக்க முடியாது. சம்பாதித்தால் அது கருணையல்ல! 

நாம் "பாவம் செய்பவரோடு மென்மையாக இருக்க வேண்டும்" என்றும் பிறரது பாவத்தை ஒரு போதும் நியாயந்தீர்க்கக்கூடாது என்றும் இது அர்த்தப் படுத்துவதில்லை. "நான் யாரையும் தண்டிக்கமாட்டேன், ஆகவே கர்த்தர் என்னைத் தண்டிக்க மாட்டார்" என்று ஒரு மனிதர் என்னிடம் கூறினார். அவர் எவ்வளவு தவறு செய்தார்! 

கருணை மற்றும் நீதி இரண்டும் தேவனிடமிருந்து வந்தவை, எனவே அவை போட்டியாளர்கள் அல்ல. மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் எங்கே கண்டாலும், கர்த்தர் இரக்கம் காட்ட வல்லவர்; கலகத்தையும், அவநம்பிக்கையையும் கண்டால், அவர் நீதியை வழங்க வேண்டும். 

பாவியின் இதயம் தான் அவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சையைத் தீர்மானிக்கிறது. மத்தேயு 18:21-35ல் உள்ள நமது ஆண்டவரின் உவமை இந்த உண்மையை விளக்குகிறது. இந்த உவமை இரட்சிப்பை விளக்கவில்லை, ஆனால் சக மனிதர்களிடையே மன்னிப்பு மிக முக்கியம் என்பதைக் குறிக்கிறது. நாம் நம் சகோதரர்களை மன்னித்தால், கர்த்தரின் மன்னிப்பை நோக்கித் திறந்த இதயம் நமக்கு இருக்கும்.

நாம் "சுயாதீனப்பிரமாணத்தால்" நியாயந்தீர்க்கப்படுவோம். 

கர்த்தருடைய சட்டத்திற்கு யாக்கோபு ஏன் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்? 

ஒன்று, தேவனின் சட்டத்திற்கு நாம் கீழ்ப்படிந்தால், அது நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்து, சுதந்திரமாக நடக்க உதவுகிறது (சங். 119:45). மேலும், சட்டம் நம்மைச் சுதந்திரத்திற்குத் தயார்ப்படுத்துகிறது. 

வாழ்க்கையின் முடிவுகளையும், எதிர்பார்ப்புகளையும் கையாளும் அளவுக்கு ஒரு குழந்தைக்கு முதிர்ச்சி கிடையாது, ஆதலால், அவர்கள் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் பயிற்சி பெற வேண்டும். அந்த குழந்தைகள் உள்ளார்ந்த ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வதற்காக, அவர்களுக்கு வெளிப்புற கட்டுப்பாடும், ஒழுக்கமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் ஒரு நாள் அந்த விதிகளிலிருந்து விடுவிக்கப்படுவர். 

சுதந்திரம் என்பது உரிமம் (License) அல்ல. உரிமம் (நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதைச் செய்வது) மிக மோசமான அடிமைத்தனம். சுதந்திரம் என்றால் நான் இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருந்து செய்யக் கூடிய எல்லாமும். உரிமம் என்பது அடைப்பு; விடுதலை என்பது நிறைவு. 

இறுதியாக, தேவ வார்த்தை "சுதந்திரத்தின் சட்டம் (law of liberty)" என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் கர்த்தர் நம் இதயங்களைப் பார்க்கிறார். நாம் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால், நாம், என்ன செய்திருப்போம் என்பதை அவர் அறிவார். பள்ளியில் விதிகள் இருப்பதால் மட்டுமே கீழ்ப்படியும் கிறிஸ்தவ மாணவர் உண்மையில் முதிர்ச்சியடையவில்லை. பள்ளியை விட்டு வெளியே வந்ததும் அவர் என்ன செய்வார்? 

கர்த்தருடைய வார்த்தை நம் இதயங்களை மாற்றி, தேவ சித்தத்தைச் செய்வதற்கான விருப்பத்தை நமக்குத் தருகிறது, இதனால் நாம் வெளிப்புறக் கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படியாமல் உள்ளான நிர்ப்பந்தத்திலிருந்து கீழ்ப்படிகிறோம். 

இந்த தியானப் பகுதியில் ஒரு தெளிவான செய்தி உள்ளது: 

நமது நம்பிக்கைகள் நமது நடத்தையைக் கட்டுப்படுத்த வேண்டும் (our beliefs should control our behaviors). 

இயேசு தேவனுடைய குமாரன் என்றும், கர்த்தர் கிருபையுள்ளவர் என்றும், அவருடைய வார்த்தை உண்மையானது என்றும், ஒரு நாள் அவர் நம்மை நியாயந்தீர்ப்பார் என்றும் நாம் உண்மையாக நம்பினால், நம்முடைய நடத்தை நம் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும். 

மரபுவழிக் கோட்பாடு இல்லாத திருச்சபை விசுவாசிகளைக் குறை சொல்வதற்கு முன்பாக, நாம் பாதுகாக்கும் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும். 

யோனாவுக்கு அற்புதமான இறையியல் அறிவு இருந்தது, ஆனால் அவர் மக்களை வெறுத்தார். தேவன் மீது கோபமாக இருந்தார் (யோனா 4). 

நம்முடைய விசுவாசத்தின் உண்மையின் சோதனைகளில் ஒன்று, நாம் மற்றவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதுதான். தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா?


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக