சனி, 24 ஜூன், 2023

யாக்கோபு 3: 1-8

அத்தியாயம்:7

உருவத்தில் மிகச் சிறியவர், ஆனால் 
பிரச்சனைகளை உருவாக்குவதில் மிகப் பெரியவர்.  
(The World's smallest but largest trouble maker).



முதிர்ச்சி நிறைந்த கிறிஸ்தவர் வெளிப்படுத்தும் இரு பண்புகளைக் குறித்து இது வரை தியானித்தோம்: முதலாம் அதிகாரத்தில், அவர்கள் சோதனையில் பொறுமையோடு செயல்படுவார்கள் எனவும், இரண்டாம் அதிகாரத்தில் அவர்கள் தேவனுடைய சத்தியத்திற்கு கீழ்ப்படிந்து அதை உறுதியாகப் பின்பற்றுவார்கள் என்றும் தியானித்தோம்.

இந்த மூன்றாம் அதிகாரத்தில், முதிர்ச்சி நிறைந்த விசுவாசியின் மூன்றாவது பண்பாக யாக்கோபு நமக்கு கற்றுத் தருவது: அவர்கள் நாவடக்கம் உள்ளவர்கள். 

எனது போதக நண்பர், தமது தேவாலய உறுப்பினர் ஒருவரைப் பற்றிக் கூறிய நிகழ்வு இது:

அந்தப் பெண்மணி தொலைப்பேசியிலே எப்போதும் பொழுதைக் கழிப்பவர். மோசமான வதந்திகளைப் பேசுவதில் விருப்பம் உடையவர். நாள் முழுவதும் தான் கேட்ட கிசுகிசு செய்திகளைப் பிறருடனும் கூடுதல் சுவாரஸ்யமாக மாற்றிப் பகிர்ந்து கொள்வது அவரது வாடிக்கை. 

ஒரு நாள் அந்த பெண், இவரிடம் வந்து, “ஐயா, நான் கிசுகிசு செய்திகளைப் பேசுவது பாவம் என்பதை ஆண்டவர் எனக்கு உணர்த்தி விட்டார். என் நாக்கு மற்றவர்களையும், என்னையும் கூட சிக்கலில் சிக்க வைக்கிறது'' என்றாள்.

அவள் உண்மையாக மனஸ்தாபப்பட்டு அதைச் சொல்லவில்லை. இது என் நண்பருக்கும் தெரியும். ஏனெனில் அவர் பல முறை இது போலச் சொல்லி உள்ளார். 

ஆகவே போதக நண்பர் கவனமாகக் கேட்டார், "சரி, இப்போது நீங்கள் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்?"

அவள் பயபக்தி நிறைந்த ஆர்வத்துடன், "நான் பலிபீடத்தின் மீது என் நாக்கை வைக்க விரும்புகிறேன்" எனப் பதிலளித்தாள்,. 

என் நண்பர் அமைதியாகப் பதில் சொன்னார், "அவ்வளவு பெரிய பலிபீடம் இங்கு இல்லையே"!! 

அவளை யோசிக்க விட்டுவிட்டார்.

இந்த நிருபத்தில் காணப்படும் விசுவாசிகளுக்கு நாவடக்கம் இல்லை. ஆகையால் சபைக்குள் கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டது. இதைக் குறித்துப் பல வசனங்கள் வழியாக யாக்கோபு எச்சரித்தார்; 

"கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுகிறதற்குப் பொறுமையாகவும், கோபிக்கிறதற்குத் தாமதமாகவும்" (யாக். 1:19). 

ஒருவருக்கு நாவடக்கம் இல்லை என்றால், அந்த விசுவாசி உண்மையான தேவ பக்தி உடையவர் அல்ல (யாக்.1:26). 

நாம் ஏற்கனவே கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பை எதிர் கொண்டவர் போல் பேசவும், செயல்படவும் வேண்டும் (யாக். 2:12). 

யாக்கோபு 4:1, 11-12 போன்ற பகுதிகளை வாசிக்கும்போது, ​​இந்தச் சபையில் சில தேவையற்ற, ஆனால் வதந்தி பேசுபவர்கள் விரும்பிய சுவாரஸ்யமான கூட்டங்கள் நடந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது!

கர்த்தர் நமக்குக் கொடுத்த வரங்களில் மிகச் சிறந்தது பேச்சு; வல்லமை மிக்க பேச்சு. இந்த நாவினால், ஒரு மனிதர் கர்த்தரைத் துதிக்கவும், ஜெபிக்கவும், அவரது வார்த்தையைப் பிரசங்கிக்கவும், தேவனை ஆராதிக்கவும், வழி தவறிச் சென்றவர்களை கிறிஸ்துவை நோக்கி வழி நடத்தவும் முடியும். என்ன ஒரு பாக்கியம்! 

ஆனால் இதே நாவால், பொய்களைப் பேசி ஒருவர் நற்பெயரைக் களங்கப் படுத்தவும், நேசிப்பவர்களது இருதயத்தை உடைக்கக்கூடிய வார்த்தைகளைப் பேசவும் முடியும். 

பேச்சுத் திறன் மற்றவர்களைக் கவர்ந்து ஈர்க்கும் ஆற்றல் படைத்தது. அது மிகப் பெரிய பணிகளைச் செய்து முடிக்கும். ஆனாலும் நாம் இந்த திறனை மிக அலட்சியமாகக் கருதி அசட்டை செய்கிறோம்.

ஆகவே கட்டுப்பாடான பேச்சின் முக்கியத்துவத்தையும், கட்டுப்பாடற்ற வார்த்தைகள் ஏற்படுத்தும் பெரும் விளைவுகளை, உணர்ந்து கொள்வதற்காக, யாக்கோபு நாக்கை ஆறு உதாரணக் காட்சி சித்திரங்களாக வரைந்து காண்பித்தார்: கடிவாளம், சுக்கான், நெருப்பு, விஷ ஜந்து, நீரூற்று மற்றும் அத்தி மரம். 

இந்த ஆறு வகை காட்சி சித்திரங்களிலிருந்து, மூன்று வகையான பொருள் பொதிந்த நாவின் வல்லமை மிக்க பண்புகளை யாக்கோபு கற்றுத் தந்தார். நாம் நாவின் இந்த மூன்று வல்லமை மிக்க பண்புகளைக் கவனமாக மனதில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இயக்கும் சக்தி - Power to Directகடிவாளம் மற்றும் சுக்கான் (3:1–4)

"என் சகோதரர்களே, அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து , உங்களில் அநேகர் போதகர்களாகச் செயல்படக்கூடாது" (யாக். 3:1). 

இந்த சபையில் உள்ள பலர் போதகராகவும், போதிக்க வேண்டும் எனவும் விரும்பினர். யாக்கோபு அவர்களை எச்சரிக்க வேண்டியிருந்தது: 

அவர்கள் போதக ஊழியத்தின் அதிகாரம் (Authority) மற்றும் கௌரவத்தால் (Prestige) ஈர்க்கப்பட்டார்கள். ஆனால் அதே சமயம், நிறைவேற்ற வேண்டிய மிகப் பெரிய கடமை (Responsibility) மற்றும் பொறுப்புணர்வை (Accountability) மறந்து விட்டார்கள்! வேதம் சொல்கிறது: தேவ வார்த்தையைக் போதிப்பவர்கள் கடுமையான தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டும். 

ஆகவே போதகர்கள் வேதத்தின் உண்மையை வெளிப்படுத்தக் கவனமாக தங்கள் நாவன்மையைப் பயன்படுத்த வேண்டும். நாவினால் பாவங்களைச் செய்வது எளிது. அத்துடன் மிக முக்கியமானது; போதனை செய்பவர்கள் தாங்கள் கற்பிப்பதைக் கடைப்பிடிக்க வேண்டும், இல்லையெனில் அவர்களின் போதனை போலித்தனம். அது மாய்மாலம்.

ஒரு போதகர் ஆயத்தமில்லாமல் தேவ செய்தியை அளிப்பது, மற்றும் அவரது தரமற்ற ஆவிக்குரிய வாழ்க்கை; இவை சபைகளில் ஏற்படுத்தும் அழிவைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால் போதகர்கள் மட்டுமே சபலங்களால் தூண்டப்பட்டு பாவம் செய்யவில்லை; "நாம் அனைவரும் பல வழிகளில் தடுமாறுகிறோம்" (யாக். 3:2).  இதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒப்பக் கொள்ள வேண்டும்.

பாவப் பட்டியலில், நாவால் செய்யும் பாவம் முதன்மையாக உள்ளது. ஒரு மனிதருக்கு நாவை அடக்கும் திறன் இருந்தால், அவர் தனது முழு உடலையும் கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு அது சாட்சி. அது அவர் ஒரு முதிர்ச்சி அடைந்த மனிதர் என்பதை நிரூபிக்கிறது.

நாவால் செய்யும் பாவங்களை "முழு உடலும்" பாவம் செய்வதாக யாக்கோபு தவறாகச் சொல்கிறாரா? 

இல்லை, ஏனென்றால்  பொதுவாக வார்த்தைகள் செயல்களுக்கு வழிவகுக்கும். இரண்டாம் உலகப் போரின் போது ''LOOSE LIPS SINK SHIPS!'' என்ற பதாகைகளைப் பார்த்துப் பழகிவிட்டோம்! ஆனால் கட்டுப்பாடற்ற உதடுகள் வாழ்க்கையைச் சிதைத்து அழிக்கின்றன. ஒரு நபர் அவசரப்பட்டுப் பேசும் தேவையற்ற வார்த்தை ஒரு சண்டையில் கொண்டு போய் அவரை சேர்க்கிறது. அந்த நாவடக்கமற்ற பேச்சால் அவரது உடலின் ஒவ்வொரு பகுதிகளும் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிப் போராட வேண்டி உள்ளது.

இந்தக் கருத்தை விளக்க யாக்கோபு, இரு பொருட்களை உதாரணங்களாகத் தெரிவு செய்து கற்பிக்கிறார்; அவை கடிவாளம் மற்றும் சுக்கான். இவை இரண்டும் உருவத்தில் சிறியதாக இருந்தாலும், நாவைப் போலவே அதிக சக்தி உடையவை. சிறிய  கடிவாளம் பெரிய குதிரையைக் கட்டுப்படுத்தி சவாரி செய்ய உதவுகிறது. சிறிய சுக்கான் பெரிய கப்பலை இயக்க மாலுமிக்கு உதவுகிறது. நாக்கு உடலில் ஒரு சிறிய உறுப்பாக இருந்தாலும், பெரிய காரியங்களைச் செய்யும் வல்லமை கொண்டது.

கடிவாளம் மற்றும் சுக்கான் இரண்டும் அதை ''எதிர்க்கும் சக்திகளை (controversial forces)'' கடக்க வேண்டும். கடிவாளம் குதிரையின் காட்டுத் தன்மையைக் கடக்க வேண்டும். சுக்கான் காற்றையும், கடும் நீரோட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும். அதனால், கப்பல் அதன் போக்கில் செல்லாமல் தடுக்கப் படும். அது போல மனித நாவும் எதிர்த்துப் போராடும் சக்திகளை வெல்ல வேண்டும். 

நாவின் மூலமாகப் பாவம் செய்யத் தூண்டும் பழைய பாவ இயல்பு நம்மிடம் உள்ளது. இது தேவையற்ற விஷயங்களைப் பேச நம்மைத் தூண்டுகிறது. வெளி உலக சூழ்நிலைகளும் நம்மை நிதானம் தவறிப் பேசத் தூண்டுகின்றன. உள்ளுக்குள் இருக்கும் பாவ சுபாவமும், வெளியில் உள்ள சூழ்நிலை அழுத்தங்களும் நாவை கட்டுப்படுத்த முயல்கின்றன.

இதன் பொருள் கடிவாளம் மற்றும் சுக்கான் இரண்டும் வலுவான கையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஒரு நிபுணத்துவம் வாய்ந்த குதிரைவீரன் தனது குதிரையின் வலிமைமிக்க சக்தியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறான், ஒரு அனுபவம் வாய்ந்த மாலுமி தைரியமாகப் புயலில் கப்பலைச் செலுத்துகிறார்.

அது போல நமது  நாவை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கும் போது, ​​நாம் தவறான விஷயங்களைப் பேசி விடுவோமோ எனப் பயப்பட வேண்டியதில்லை - அல்லது சரியானதைத் தவறாகச் சொல்லி விடுவோம் என்று கூட!  

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது” என்று சாலொமோன் எச்சரித்தார் (நீதி. 18:21). 

ஆகவே தாவீது இவ்விதமாக ஜெபித்ததில் ஆச்சரியமில்லை.

''கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.” (சங். 141:3). சரியாக பேசுவதற்கு இதயம் திறவுகோல் என்பதை தாவீது அறிந்திருந்தார். 

"இருதயத்தின் நிறைவிலிருந்து வாய் பேசுகிறது" என்றார் நமது ஆண்டவர் (மத். 12:34).  ஆக இயேசு கிறிஸ்து நம் இதயத்தின் ஆண்டவராக இருந்தால், ​​அவரே நம் உதடுகளுக்கும் ஆண்டவர்.

கடிவாளம் மற்றும் சுக்கான்; குதிரையும், கப்பலும் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியைக் கொண்டுள்ளன. கட்டுப்பாடற்ற குதிரை அல்லது கப்பல் ஏற்படுத்தும் விபத்து மற்றவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. அவை பாதசாரிகள் அல்லது பயணிகளுக்குக் காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும். அது போல நாம் கட்டுப்பாடின்றி பேசும் வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. 

ஒரு நீதிபதி, "குற்றவாளி!" அல்லது "குற்றவாளி இல்லை!" என அளிக்கும் தீர்ப்பின் வார்த்தைகள், ஒரு கைதி, அவரது குடும்பத்தினர், அவரது நண்பர்களின் எதிர்காலத்தை முடிவு செய்கிறது. 

அமெரிக்காவின் ஜனாதிபதி சில வார்த்தைகள் பேசுகிறார், சில காகிதங்களில் கையெழுத்திடுகிறார், தேசம் போரில் ஈடுபட்டு உள்ளது. 

பெற்றோரின் உதடுகளிலிருந்து பிறக்கும், ''ஆம் அல்லது இல்லை'' என்பது கூட குழந்தைகளது வாழ்க்கையின் திசையைப் பெரிதும் பாதிக்கலாம்.

நீங்கள் பேசும் அல்லது பேசாத வார்த்தைகளால் கொடுக்கும் வழிகாட்டுதலை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். இயேசு கிணற்றடியில் ஒரு பெண்ணிடம் பேசினார், அவளது வாழ்க்கையும், அவளுடைய அண்டை வீட்டாரின் வாழ்க்கையும் ஒரு அற்புதமான மாற்றத்தை அனுபவித்தது (யோவான் 4). பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு பிரசங்கித்தார்.மூவாயிரம் ஆத்துமாக்கள் கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம் இரட்சிக்கப் பட்டனர் (அப் 2).

ஏப்ரல் 21, 1855 அன்று, எட்வர்ட் கிம்பால் ஒரு பாஸ்டன் ஷூ கடைக்குள் சென்று இளம் ட்வைட் எல் மூடியை கிறிஸ்துவிடம் அழைத்துச் சென்றார். முடிவு: வரலாற்றின் மிகப் பெரிய சுவிசேஷகர்களில் ஒருவர் உருவானார். அவருடைய ஊழியம் இன்றும் தொடர்கிறது. மற்றவர்களைச் சரியான பாதைகளுக்கு வழிநடத்தும் சக்தி நாவுக்கு உண்டு.

நீதிமொழிகள் புத்தகத்தை அடிக்கடி படிப்பது, குறிப்பாக எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது என்பதைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளது. அதைக் கூர்ந்து வாசிப்பது நம் அனைவருக்கும் நல்லது. 

"மென்மையான பதில் கோபத்தைத் தணிக்கும்: கடும் சொற்கள் கோபத்தைத் தூண்டும்" (நீதி. 15:1). 

"பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவை" (நீதி. 12:22). 

"அதிகமாகப் பேசுகிற ஒருவன் துன்பத்திற்கு ஆளாகிறான். ஞானம் உள்ளவன் அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்கிறான்." (நீதி. 10:19). 

ஆம், நாவும் கடிவாளம் மற்றும் சுக்கான் போன்றது: அதற்கு இயக்கும் ஆற்றல் உள்ளது. நம் நாவை கட்டுப்பாடுடன் பயன்படுத்தி மக்களைச் சரியான வழியில் வழிநடத்துவது எவ்வளவு முக்கியம்!

அழிக்கும் சக்தி - Power to Destroy: தீ மற்றும் விஷம் (3:5–8)

நான் லண்டனில் உள்ள சேரிங் கிராஸ் சாலையில் உள்ள பயன்படுத்தப்பட்ட பழைய புத்தகங்களை விற்கும் கடைகளுக்குச் சென்ற போது, அங்கு நான் எதிர்பார்த்த அளவிற்குக் கடைகள் இல்லை என நண்பர் ஒருவரிடம் பகிர்ந்தேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என அவர் பதிலளித்தார். இரண்டாம் உலகப் போரின்போது ஒரு இரவில், அந்தப் பகுதி தீக் குண்டுகளால் தாக்கப்பட்டன. அந்த தீயில் குறைந்தது ஒரு மில்லியன் புத்தகங்கள் அழிக்கப்பட்டன!

மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு நண்பர் கலிபோர்னியாவில் உள்ள அழகான காடுகளுக்கு என்னையும், என் மனைவியையும் அழைத்துச் சென்றார். அங்கு நாங்கள் எரிந்து, தீய்ந்து போன ஒரு கோரமாகப் பகுதிக்கு வந்தோம். இயற்கையின் முகத்தில் வடுக்கள் மட்டுமல்ல, பல மில்லியன் டாலர் மதிப்புள்ள மரங்களும் அழிக்கப்பட்டன. "யாரோ சிகரெட்டைப் பற்ற வைத்தார்கள்," என நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், அந்த கருமையான பூமியைக் கடந்தோம்.

ஒரு சிறிய தீப்பொறியுடன் நெருப்பு தொடங்கலாம், ஆனால் அது ஒரு நகரத்தையே அழிக்கும். அக்டோபர் 8, 1871 அன்று இரவு 8:30 மணிக்கு சிகாகோவில் உள்ள ஓ'லியரி கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது; மேலும் அந்த தீ பரவியதால், 1,00,000க்கும் அதிகமான மக்கள் வீடற்றவர்களானார்கள், 17,500 கட்டிடங்கள் அழிக்கப்பட்டன, 300 பேர் இறந்தனர். இதைச் சீரமைக்க $400 மில்லியன் செலவாகும்.

நம் வார்த்தைகளும் தீயை மூட்டலாம். 

"நெருப்புக்கு விறகு இல்லாவிட்டால் அது அணைந்துபோகும். இதுபோலவே கோள்  சொல்லுகிறவன் இல்லாவிட்டால் சண்டைகளும் முடிந்துபோகும். கரி நெருப்பை எரிய வைக்கிறது. விறகும் நெருப்பை எரிய வைக்கிறது. இது போலவே வம்பை விரும்புகிறவர்கள் வாதங்களை விடாமல் வைத்துள்ளனர்” (நீதி. 26:20-21). 

சில தேவாலயங்களில், தங்கள் நாவைக் கட்டுப்படுத்த முடியாத சபை உறுப்பினர்கள் அல்லது பொறுப்பாளர்கள் உள்ளனர். அதன் விளைவு சபை அழிவு. அத்தகைய நபர்கள் வெளியே செல்லட்டும். பதவியிலிருந்து மாற்றப்படட்டும். ஒரு அழகான நல்லிணக்கம் மற்றும் அன்பின் ஆவி சபைகளில்  பெருகட்டும்.

நெருப்பைப் போல, நாவும் “உஷ்ணப்படுத்த” முடியும். தாவிது எழுதினார்,

''நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து, என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன். கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை, நான் என் வாயைக் கடிவாளத்தால் பாதுகாப்பேன்.” 

நான் பேசாமல் ஊமையாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் இருந்தேன். ஆனால் என் வேதனை அதிகரித்தது; 

என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது; நான் தியானிக்கையில், அது நெருப்பாய்ப் பற்றிக்கொண்டது; அப்பொழுது என் நாவினால் இதைப் பேசினேன்:” (சங். 39:1, 3). 

இந்த அனுபவம் உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டது உண்டா? நிச்சயமாக இருக்கும். சிவந்த முகம் மற்றும் பற்றி எரியும் இதயம். அப்போது கடுமையான வார்த்தைகளைப் பேசுவதற்குத் தூண்டப்படலாம். ஒரு வேளை பேசி விட்டால் பின்னர் கடுமையாக வருத்தப்படுவோம். ஆகவே தான், தனக்கு ஏற்பட்ட கடுமையான கோபத்தைக் கட்டுப்படுத்த, கர்த்தரின் உதவிக்காகத் தாவிது  மன்றாடினார்.

சாலொமோன் இவ்விதமாக எழுதியதில் ஆச்சரியமில்லை,

அறிவுள்ளவர்கள் வார்த்தைகளை அடக்குகிறார்கள்; புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் சாந்தமாயிருக்கிறார்கள்.” (நீதி. 17:27). 

"பொறுமையுள்ளவன் மிகவும் புத்திசாலி. விரைவில் கோபப்படுபவன் முட்டாள் என்பதைக் காட்டிக்கொள்கிறான்." (நீதி. 14:29).

நெருப்பு சிறியதாகத் தொடங்கி வளர்வது மட்டுமல்ல, கடும் வெப்பத்தை உருவாக்குகிறது; அந்த இடத்தை கோரப்படுத்துகிறது. எனது நண்பர் ஒருவர் அவரது வீட்டின் அடித்தளத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டார். புகை மற்றும் தீ சேதம் வீட்டின் மாடியையும் சேதப்படுத்தியது. அந்த வீட்டைச் சீரமைக்கும் போது குடும்பம் வெளியேற வேண்டியிருந்தது. அது போல நாம் கக்கும் வார்த்தைகள் ஒரு வீட்டை, ஒரு தேவாலயத்தை, ஒரு ஞாயிறு பள்ளி வகுப்பை, தீட்டு படுத்தும். அந்த அசுத்தத்தைக் கழுவக்கூடிய ஒரே விஷயம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம். 

நெருப்பு எரிப்பது மட்டுமல்ல; தீக்காயங்களையும் ஏற்படுத்துகிறது. நமது வார்த்தைகளும் பிறரை எரித்துக் காயப்படுத்தலாம். நம்முடைய ஆண்டவர் பூமியில் ஊழியம் செய்த போது, அவர் தாங்க வேண்டிய துக்கங்களில் ஒன்று, அவருடைய எதிரிகள் அவரைப் பற்றி பேசிய விதம். 

அவர் பாவியான மக்களுடன் உணவு உண்பதற்கான அழைப்பை மனதார ஏற்றுக்கொண்டதால், அவர்கள் அவரை "பெருந்தீனி பிடித்தவர் மற்றும் மதுபான பிரியன்" (மத். 11:19) என்று அழைத்தனர். 

அவர் அற்புதங்களைச் செய்தபோது, ​​சாத்தானுடைய வல்லமையால் செய்வதாகச் சொன்னார்கள். அவரை சிலுவையில் அறைந்த போதும் எதிரிகள் விடவில்லை. அவருடைய முகத்திற்கு நேராகக் கொடிய நிந்தையான பேச்சுக்களைப் பேசினார்கள்.

நெருப்பு பரவுகிறது. நீங்கள் எவ்வளவு எரிபொருளைக் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு வேகமாகவும், தூரமாகவும் நெருப்பு பரவும். நாக்கும் போகிற போக்கில் எரித்துச் செல்கிறது, "அவரது வாழ்க்கையின் முழு ஆயுள் கால சக்கரத்தையும் அழித்து விடுகிறது"(யாக். 3:6). வாழ்வின் நிகழ்வுகள் ஒரு சக்கரத்தைப் போல ஆரங்களால் இணைக்கப்பட்டுள்ளன, எனவே ஒரு செயல் மற்ற நிகழ்வுகளைப் பாதிக்காமல் இருக்க முடியாது என்றார் யாக்கோபு


ஒரு நபரின் முழு வாழ்க்கையையும் நாக்கால் கறைப்படுத்தலாம், காயப்படுத்தலாம், அழிக்கலாம். நாவால் செய்த பாவங்களைக் காலம் சரி செய்யாது. நாம் பேசிய பாவங்களைத் தவறு என ஒப்புக் கொள்ளலாம், ஆனால் நெருப்பு தொடர்ந்து பரவுகிறது. அது பரவும்போது, ​​நெருப்பு அழிக்கிறது, நாம் பேசும் வார்த்தைகள் அழிக்கும் ஆற்றல் பெற்றவை. 

ஹிட்லரின் Mein Kampf என்ற புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் இரண்டாம் உலகப் போரில் 125 உயிர்கள் பலியாகின. நம்முடைய சொந்த வார்த்தைகள் போர்களையோ அல்லது சிதைந்த நகரங்களையோ ஏற்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் அவை இதயங்களை உடைத்து நற்பெயரைக் கெடுக்கும். அவர்கள் ஆத்துமாக்களைக் கிறிஸ்து இல்லாமல் நித்தியத்திற்கு அனுப்புவதன் மூலம் அவர்களை அழிக்க முடியும், நமது உரையாடல் "எப்பொழுதும் கனிவானதாயும் ஞானமுள்ளதாயும் இருக்கட்டும்" (கொலோ. 4:6).  

நாக்கு நெருப்பு போன்றது மட்டுமல்ல, ஆபத்தான விலங்கும் கூட. அது அமைதியற்றது. ஆள முடியாது (அடங்காதது). அது தன் இரையைத் தேடி, பின்னர் பாய்ந்து கொல்லும். நானும் என் மனைவியும் ஒருமுறை சஃபாரி பூங்கா உள்ளாக வாகனத்தை ஓட்டிச் சென்றோம். விலங்குகள் அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் நடமாடுவதைப் பார்த்து ரசித்தோம். ஆனால் பூங்கா முழுவதும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருந்தன: உங்கள் காரை விட்டு வெளியேறாதீர்கள்! உங்கள் ஜன்னல்களைத் திறக்காதீர்கள்! அந்த "அமைதியான விலங்குகள்" பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை. கொல்லவும் கூடும்.

சில விலங்குகளின் விஷம் போல சில நாக்குகள் விஷத்தைக் கக்குகின்றன.  

விஷம் ஏமாற்றும். அது ரகசியமாகவும் மெதுவாகவும் பரவிச் செயல்படுகிறது. பின்னர் கொல்லும். 

ஒருவருக்குத் தீங்கிழைக்க விரும்பும் நபர் தனது உரையாடலில் சிறிது சிறிதாக விஷத்தைச் செலுத்துகிறார், அது எப்படியும் பரவி இறுதியில் அவர்  காயப்படுத்த விரும்பிய நபரைச் சென்று சேர்ந்து விடும் என்று நம்புகிறார்.

ஒரு போதகராக, இத்தகைய விஷ நாக்குகள் தனிநபர்கள், குடும்பங்கள், போதனை வகுப்புகள், ஏன் முழு தேவாலயத்திற்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். உங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனையில் பசியுள்ள சிங்கங்களையோ அல்லது கோபமான பாம்புகளையோ விடுவிப்பீர்களா? நிச்சயமாக இல்லை! ஆனால் கட்டுக்கடங்காத நாக்குகள் அதே விளைவுகளைச் சபைகளில், குடும்பங்களில் நிறைவேற்றுகின்றன.

ஆனாலும், யாக்கோபு விலங்குகளைப் பழக்கி அதை அடக்க ஆள முடியும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். அது போல நெருப்பையும் அடக்க முடியும். நீங்கள் ஒரு மிருகத்தை அடக்கினால், அழிவை ஏற்படுத்துபவருக்குப் பதிலாக ஒரு உதவியாளர் கிடைப்பார். நீங்கள் நெருப்பைக் கட்டுப்படுத்தும் போது, ​​​​சக்தியை உருவாக்குகிறீர்கள். 

நாவை மனிதனால் அடக்க முடியாது, ஆனால் கர்த்தரால் அதை அடக்க முடியும். உங்கள் நாக்கு "நரக அக்கினியால் மூட்டப்பட வேண்டியதில்லை" (யாக். 3:6). பெந்தெகொஸ்தே நாளில் அப்போஸ்தலர் மீது ஊற்றப்பட்டதை போல, பரலோகத்திலிருந்து மூட்டப்படலாம்! கர்த்தர் நெருப்பை ஏற்றி அதைக் கட்டுப்படுத்தினால், நாக்கு வழி தவறியவர்களை வழி நடத்துவதற்கும், திருச் சபையைக் கட்டியெழுப்புவதற்கும் ஒரு வலிமையான கருவியாக மாறும். 

மிக முக்கியமான விஷயம்; நிச்சயமாக, அது இதயம்.

ஏனென்றால் "இருதயத்தின் நிறைவால் வாய் பேசுகிறது" (மத். 12:34). 

இதயத்தில் வெறுப்பு நிறைந்திருந்தால், சாத்தான் நெருப்பை மூட்டுவான். இதயம் அன்பினால் நிறைந்திருந்தால் கர்த்தர் தீபத்தை ஏற்றுவார்.


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக